Uncategorizedஇணைய இதழ் 112கட்டுரைகள்

அன்னா: தாய்மன நினைவுகளும் நிலமும் – ஏர் மகாராசன்

கட்டுரை | வாசகசாலை

மனித வாழ்வின் கதைப்பாடுகளைப் பல்வேறு கோணங்களிலும் வடிவங்களிலும் வெளிப்படுத்தியிருக்கும் தமிழ் இலக்கிய மரபு, புதிய புதிய கதைகூறல் முறைகளையும் உள்வாங்கிப் புலப்படுத்தும் பாங்கைக் கொண்டிருக்கக் கூடியது. அதற்கான அண்மைய இலக்கியச் சான்றாவணம்தான் திரு வாசு முருகவேல் எழுதிய ‘அன்னா’ எனும் குறுங்கதை நூல்.

‘இலக்கியம் என்பது கருத்துக்களைத் தெரிந்து கொள்ளுதல் இல்லை. கற்பனை செய்தல். சொற்கள் வழியாக ஒரு மெய்யுலகைக் கற்பனை செய்து, அந்த மெய்யுலகிலே சென்று வாழ்ந்து, உண்மையாகவே வாழ்ந்த வாழ்க்கைக்கு நிகரான அனுபவங்களையும் புரிதல்களையும் அடைவதற்குப் பெயர்தான் இலக்கியம்’ எனும் சொற்களைத் திடமாக நம்பியிருக்கும் வாசு முருகவேல், தமது ‘அன்னா’ படைப்பின் வாயிலாக அதனை மெய்ப்பித்தும் காட்டியிருக்கிறார்.

படைப்பென்னும் கற்பனையுலகத்திற்குள் நிஜமென்னும் மெய்யுலகைக் காண்பித்து விவரிக்கும் கதை கூறல் மொழியும் நடையும் புதியதான வாசிப்பு உணர்வைத் தந்திருக்கின்றன. கதையுலகும் கவிதையுலகும் கலந்திருக்கும் படைப்பாக்க வடிவம் மிக நேர்த்தியாய் வாசகரின் வாசிப்புலகத்தை எட்டியிருப்பதோடு, கதையுலகின் மெய்யுணர்வை மிக ஆழமாகவே புலப்படுத்தி இருக்கிறது அன்னா.

தமிழ் இலக்கிய மரபில், ஈழ நிலத்தின் வாழ்வும் வலியுமான படைப்புகள் உயிர்ப்பு மிக்கவையாகத் திகழ்வதற்கான அடிப்படைக் காரணம், அதன் படைப்புலக மெய்யுலகின் உண்மைத் தன்மைதான். அரை நூற்றாண்டு கால ஈழ நிலத்தின் மனிதப் பாடுகளை நினைவுக் குதிர்களுக்குள்ளிருந்து சொற்தானியங்களைச் சிந்தாமல் சிதறாமல் படைப்புமொழிக்குள் தூவிச் செல்லும் பெரும் பணியை ஈழத்துப் படைப்பாளிகள் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார்கள். அவ்வகையில், வாசு முருகவேல் அண்மையில் எழுதியிருக்கும் ‘அன்னா’வும் ஈழ நிலத்தின் வலியைப் பெண் வலியாய்ப் பதிவு செய்திருக்கும் படைப்பாய் வெளிவந்திருக்கிறது.

‘2009-ஆம் ஆண்டு ஈழப் போரின்போது, ஈழத்தின் தலைநகராக அதிகாரப்பூர்வமாக இயங்கி வந்த கிளிநொச்சி நகரைக் கைவிடவேண்டிய நெருக்கடியான சூழல் போராளிகளுக்கு ஏற்பட்டது. கிளிநொச்சியை ஒருபோதும் போராளிகள் கைவிடமாட்டார்கள் என்றே அனைவரும் நம்பினார்கள். ஆனால், நடந்தவை அதற்கு முற்றிலும் வேறாகவே இருந்தன.

இலங்கை அரசின் படைகள் அங்கு நுழைந்தபோது கிளிநொச்சி வெறிச்சோடிக் கிடந்தது. போராளிகள், பொதுமக்கள் அனைவரும் தாங்கள் கொண்டுபோக முடிந்த அனைத்தையும் எடுத்துக்கொண்டு அந்த நகரை விட்டு ஏற்கனவே முற்றிலும் வெளியேறி இருந்ததால், இராணுவம் பலத்த ஏமாற்றம் அடைந்தது. பாரிய யுத்தத்தை எதிர்கொள்ளப் போகும் நகராக விளங்கிய கிளிநொச்சி அனைவருக்கும் பலத்த ஏமாற்றத்தையே தந்தது. அதற்கு இலங்கை இராணுவமும் விதிவிலக்கல்ல.

யாருமற்ற அந்தச் சூனியமான ஓர் இரவில் தனிமைப்பட்டு நின்ற அன்னாவின் இரத்தமும் சதையுமான நினைவுகளும் குரல்களுமே இந்த நாவலின் மையமாகும். போரில் இவையெல்லாம் சாத்தியமா என்ற கேள்வியைப் போரில் வென்றவர்களும் – தோற்றவர்களும் எழுப்புவதில்லை. அசாத்தியங்களால் நிரம்பியதுதான் போர்.

இந்தக் குறுநாவலின் மையமாகப் பெண்ணே இருக்கின்றார். மனித வாழ்க்கையில் மட்டுமல்ல, போராட்டங்களிலும் பெண்கள்தான் மையமாக இருந்திருக்கின்றார்கள். அதனால் பேரிழப்புகளையும் அவமானங்களையும் சந்திப்பதும் பெண்கள்தான் என்பது மறுக்க முடியாத கசப்பான உண்மை’ எனக் கதைக்களத்தின் பின்புலத்தைத் தமது முன்னுரையில் பதிவு செய்து விடுகிறார் வாசு முருகவேல்.

‘போருக்குப் புதல்வரைத் தந்த தாயாக வானம் அழுதுகொண்டே இருந்தது…’ எனத் தொடங்கும் தமிழினி கவிதைக்குள் உலவும் தாய் மனத்தின் நினைவுகள்தான் அன்னாவில் சொற்களாய் விரிந்து கிடக்கிறது.

அரை நூற்றாண்டுகால ஈழ விடுதலைப் போராட்டத்தில் களத்தில் நின்று சண்டை செய்த போராளிகளின் ஈகத்துக்கு நிகரானது ஈழத்துத் தாய்மார்களின் ஈகமும். விடுதலை வாழ்வுக்காக ஒரு தாயக நிலம் எவ்வளவு கனவுகளையும் துன்பங்களையும் வலிகளையும் இழப்புகளையும் பேரழிவையும் சந்தித்ததோ, அதே கனவுகளையும் துன்பங்களையும் வலிகளையும் இழப்புகளையும் தவிப்பையும் ஏமாற்றத்தையும் ஈழத்தின் தாய்மார்கள் இன்னும் நினைவுகளில் சுமந்தலைகிறார்கள்.

சொற்களில் விவரிக்க முடியாத துயர் கவ்விக் கிடக்கும் வலிகளை நினைவுகளின் கூடாரத்துக்குள் எத்தனை காலம்தான் அடைத்து வைத்திருக்க முடியும்? நினைவுத் துயரங்களை இறக்கி வைக்கவும், அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அத்துயரங்களைக் கைமாற்றிக் கடத்துவதற்குப் பின்னால் வெறும் ஆறுதல் மட்டும் அடைவது நோக்கமல்ல; தாயக நிலத்தின் தவிப்பையும் உயிர்ப்பையும் தக்க வைக்கும் வேட்கையும் கூடவே சேர்ந்திருக்கிறது. அதனால்தான், புலம்பெயர் வாழ்க்கையினூகப் புலப்படும் ஈழத் தமிழ்ப் படைப்புகள் யாவும் தாயக நிலத்தை நினைவுச் சொற்களால் உயிர்ப்பித்துக் கொண்டிருக்கின்றன.

தாயக நிலத்திற்கான விடுதலைப் போராட்டத்திற்குப் பங்களிக்கும் போராளிகளைத் தலைமைகள் மட்டுமே உருவாக்கி விடுவதில்லை; தமிழ் இளைஞர்களும் இளைஞிகளும் தாமாகவும் மட்டும் போய் இணையவுமில்லை. தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் நியாயங்களையும் தேவைகளையும் உணர்ந்த ஒவ்வொரு தாய்மாரும் தம்மளவிலான பங்களிப்புக் கைமாறினை ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு வழங்கியிருக்கிறார்கள். அதனால்தான் மிக நீண்ட நெடியதொரு போராட்டத்தை புலிகள் இயக்கத்தால் முன்னெடுக்க முடிந்திருக்கிறது. ஒவ்வொரு தாய்மார்களின் உளப்பூர்வமான ஒத்துழைப்போடும் உதவியோடும் உத்வேகத்தோடும் உறுதியோடும்தான் ஒவ்வொரு போராளியும் களம்நோக்கி அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

இன்னும் கூடுதலாக, போராளிகளைப் போன்று தத்தமதளவிலும் தத்தமது ஊர்களிலும் களப்பணிகள் பலவும் மேற்கொண்டிருக்கிறார்கள். விடுதலைப் படைக்கான ஆட்சேர்ப்பு, இயக்கத்தின் மறைமுகப் பணிகளுக்கான அடைக்கலம், போராளிகளைப் பராமரித்தல், இயக்கத்திற்கான வேவு பார்த்தல், படையணி ஆட்சேர்ப்புக்கான பரப்புரை எனப் பல்வேறு வேலைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்கெடுத்துக்கொண்ட எண்ணற்ற தாய்மார்களுள் அன்னா, அன்னம்மா, அன்னத்தா என அழைக்கப்பட்டவரும் ஒருவராவார்.

இறுதிப் போர்க் காலகட்டத்தில் போராளிகள் மற்றும் பொதுமக்கள் யாவரும் கிளிநொச்சியைக் கைவிட்டு நகர்ந்துபோன பின்னாலும், கிளிநொச்சி நிலத்தை விட்டுப் போகாமல் அங்கேயே உலவித் திரிகிறார் அன்னா.

‘காடளந்த புலியின் நிதானத்துடன் அடி எடுத்து வைத்து ஊரை வலம் வந்தாள் அன்னா. விலங்குகள் காட்டில் உலவுவது உணவுக்காக மட்டுமல்ல; அதுதான் அதன் வாழ்வின் சாரம். இருண்ட ஊரில் இவளுக்கு மட்டும் இரண்டு கண்களிலும் ஒளி இருந்தது. வெறிச்சோடிக் கிடக்கும் தெருக்களில் கொஞ்சம் கண்களை மூடியும் நடந்து பார்த்தாள். அங்கும் ஒளி இருந்ததுதான். காலத்தின் இருள் மட்டும் மிச்சலனமாக நிறைந்திருந்தது.

இயக்கத்தின் கணக்குப்படி இராணுவம் இப்போதே கிளிநொச்சிக்குள் அடியெடுத்து வைத்திருக்க வேண்டும். நகரத்தில் யாரும் இல்லை. அனைவரும் இயக்குத்துடன் வெளியேறி விட்டார்கள் என்ற செய்தியை யாராவது அறிவித்திருக்கலாம். ஆனாலும், இராணுவம் விடியும் வரை காத்திருக்கும் என்று அன்னா நம்பினாள். அவள் ஒருத்தி இன்னும் அந்த நிலத்தில்தான் நிற்கிறார் என்பதை இயக்கம் கூட நம்பும் என்று அவள் நம்பவில்லை’ எனத் தொடங்குகிறது அன்னாவின் நினைவு அத்தியாயங்கள்.

இருளும் வெறுமையும் தோல்வியும் இழப்பும் தழுவிய ஓர் இரவுப் பொழுதில் அன்னாவின் கால் நூற்றாண்டு கால நினைவுகள் கசிந்து கசிந்து போராட்ட காலங்களை மறு சுழலுக்குள் தளிர்க்கச் செய்துகொள்கின்றன. எந்தச் சலனமும் சஞ்சலமும் இல்லாமல் தானும் இயக்கத்தினோடு ஏதோ ஒரு தொடர்பில் இருந்துகொண்டு, போராளிகளுக்கு ஏதோ ஒரு வகையில் உதவிக்கொண்டு, தமது கணவரையும் இரண்டு பிள்ளைகளையும் இயக்கத்திற்கு அனுப்புவித்து, அவர்களையும் வீரச்சாவுக்கு ஒப்புக்கொடுத்து, ஊரில் உள்ள மற்ற பிள்ளைகளையும் இயக்கத்தில் சேர்க்கும் பரப்புரைப் பணியையும் மேற்கொண்டிருந்த அன்னாவின் நினைவுகளில் வடிந்திருந்த மெய்யுலக வாழ்வைக் குறுங்கதை அத்தியாயங்களில் எழுதியிருக்கும் வாசு முருகவேல், கால் நூற்றாண்டு கால ஈழப் போராட்டத்தை முன்னெடுத்த இயக்கத்தின் உயிர்ப்பை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த தாயக நிலத்தின் உணர்வோட்டத்தையும், தாய்மார்களின் உளப்பூர்வ வகிபாகத்தையும் கதையுலகிற்குள் மெய்யுலகாய்க் கட்டமைத்திருக்கிறார்.

மிகக் குறைவான பக்கங்கள், குறுங்குறு அத்தியாயங்கள், கூல் கிளிண்டன், முகமூடி ராசன், லீலா, கபிலன், பாலு என மிகக் கொஞ்சமான கதைப் பாத்திரங்கள் என்றாலும், சிங்கள இராணுவத் தாக்குதல்கள், புலிகள் இயக்கத்தின் போராட்டப் பங்களிப்பு, போர்கள், வீரச்சாவுகள், மாத்தையாவின் துரோகப் பின்புலம் தொடங்கி, பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் மீதான இராணுவத் தாக்குதல், தலைவரைப் பாதுகாத்தலுக்கான சண்டைகள், இறுதிப் போர் நிலவரம் எனப் பலவும் அன்னாவின் நினைவுச் சொற்களில் விரிந்திருக்கும் கதையுலகானது, ஈழ நிலத்தின் ஆத்மாவையும், ஈழத்துத் தாய்மார்களின் ஆத்மாக்களையும் படைப்புலகில் உயிர்ப்பித்துக் காண்பித்திருக்கிறது.

நிலத்தைத் தாயாகவும், தாயை நிலமாகவும் உருவகிக்கும் தமிழ் மரபில், ஈழ நிலத்தையும் – அந்நிலத்துத் தாய்மார்களின் தனிமையையும் வெறுமையையும் பெண் வலியோடும் மொழியோடும் நினைவுகளினூடாகச் சொல்லும் அன்னாவானது, ஈழத்தின் தவிப்பை மொழியில் சுமந்திருக்கும் இலக்கிய சாட்சியுமாகும். அன்னாவைப் போன்ற எண்ணற்ற தாய்மார்களின் வலியும் மொழியும் தமிழில் இன்னும் இன்னும் பதியத்தான் போகிறது. அவற்றின் வலியும் மொழியும் ஈழத் தாயகத்தின் வேட்கையை அணையாமல் பார்த்துக் கொள்ளத்தான் போகின்றன.

வயிற்றிலும் மார்பிலும் மடியிலும் தோள்களிலும் மட்டுமல்லாது, நினைவுகளிலும் பிள்ளைகளைச் சுமக்கும் தாய்களின் கனவைப் போலவே, தாயக நிலத்தை மொழியில் சுமந்தலையும் அன்னா போன்ற படைப்புகளைத் தோளேந்தி ஆறுதல் படுத்துவதும் ஆற்றுப்படுத்துவதும் தமிழர் கைமாறாகும். அன்னம்மாக்களின் ஆத்ம நினைவுகளைப் புதியதான கதைகூறல் வடிவத்தில் தந்திருக்கும் வாசு முருகவேல் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்தும் அன்பும்.

நூல் குறிப்புகள் :

அன்னா (குறுங்கதை),

வாசு முருகவேல்,

பக்கங்கள் 72, விலை:ரூ 130/-

முதல் பதிப்பு, சனவரி 2025,

எதிர் வெளியீடு, பொள்ளாச்சி.

தொடர்புக்கு: 942511302.

(கட்டுரையாளர்: முனைவர் ஏர் மகாராசன், தமிழ்ச் சமூகப் பண்பாட்டு ஆய்வாளர்.)

maharasan1978@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button