இணைய இதழ் 113சிறுகதைகள்

குலைக்கிற நாய் கடிக்காது – வா.மு.கோமு

சிறுகதை | வாசகசாலை

கமலவேணி அவளது முழுப்பெயர். ஊருக்குள்ளும், வீட்டிலும் அவளை கமலா என்றுதான் சுருக்கமாக அழைக்கிறார்கள். கமலா பத்தாம் வகுப்பு வரை உள்ளூர்ப் பள்ளியில் வாசித்தவள். மேற்கொண்டு அவளுக்கு படிப்பின்மீது பெரிய நாட்டமில்லை. அதற்கு ஊரும் ஒரு காரணம்தான். அவள் இருக்கும் கிராமமான தளவாய்பாளையத்தில் தொன்னூறு வீடுகள் இருந்தன.

வசதி அதிகம் உள்ளோர் பிள்ளைகள் காலேஜ் என்றோ, பாலிடெக்னிக் என்றோ செல்கிறார்கள்தான். கமலவேணியின் குடும்பம் வசதியான குடும்பமல்ல. அண்ணன்கள் இருவருமே கூட பத்தாவது படித்தவர்கள்தான். பெரிய அண்ணனுக்கு ஆறுமாதம் முன்பாக திருமணம் முடிந்திருந்தது. அவனுக்கு இந்த வீட்டில் தனியறை இல்லாக் கொடுமையால் ஊருக்குள்ளேயே ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்துப் போய்விட்டான். சின்ன அண்ணன் குறுநகரில் செல்போன் கடையில் பணியிலிருந்தான்.

அப்பா சிப்காட்டில் வாட்ச்மேனாக நான்கைந்து வருடங்களாக சென்று வந்து கொண்டிருந்தார். முன்பாக அவர் கட்டிட வேலைகளுக்கு சென்றவர். மேஸ்திரியாகும் முனைப்பில்லாமல் வெட்டியாய் போனவர். அவருக்கு கமலவேணி என்றால் பாசம் அதிகம். கமலவேணி படித்து முடித்த கையோடு உள்ளூர்ப் பெண்களோடு இணைந்து பனியன் கம்பெனியில் கைமடிக்கும் வேலைக்குச் சேர்ந்துவிட்டாள். ஆயிற்று இப்போது மூன்று வருடம்.

சின்ன அண்ணனிடம் சொல்லி மூன்று மாதம் முன்பாக ரெட்மீ அலைபேசி வாங்கிக் கொண்டாள் கமலவேணி. ஜியோ சிம்மில் மூன்று மாதத்திற்கு ரீச்சார்ஜ் செய்து யூடியுப் வீடியோக்களை ரசிக்கும் வழக்கம் அவளுக்குத் தொற்றிக் கொண்டது. கம்பெனி பேருந்து காலையில் எட்டுமணிக்கு ஊருக்குள் வருகிறது. கம்பெனியில் செல்போன் வைத்திருக்கலாகாது என நிர்வாகம் சொல்கிறது.

ஆனாலும் எல்லோரும் தங்கள் இதயமே அதுதான் என்பது போல பத்திரமான இடங்களில் தங்கள் அலைபேசிகளை மறைத்து வைத்து அவ்வப்போது மேனேஜர் தட்டுப்படாத நேரங்களில் குசுகுசுவென பேசுகிறார்கள். கம்பெனியில் போனை காதுக்கு அருகாமையில் வைத்துக் கொண்டு குசுகுசுவென பேசுமளவு தோழிகளோ தோழர்களோ இவளுக்கு இல்லை என்பதால் அந்தத் தொல்லை இன்னும் ஆரம்பமாகவில்லை. மாலையில் ஐந்து மணிக்கு ஷிப்ட் முடிந்து ஊருக்குத் திரும்ப கம்பெனி பேருந்து ஏறுகையில் கையில் போனை எடுத்து அதனை உயிர்ப்பூட்டிக் கொள்வாள். வீடு வந்து சேர்ந்து, இரவு பத்துமணி வரை போனும் கையுமாகத்தான் இருப்பாள்.

ஞாயிறு ஒரு நாள் விடுமுறை. முழுநாளும் அவளுக்கு கொண்டாட்டம்தான். வாழ்நாளில் தியேட்டருக்குச் சென்று ஒரு திரைப்படம் காணாதவள் இந்தக் கிராமத்துக்காரி. ஒரு திரைப்படம் காண பத்து கிலோமீட்டர் அல்லவா பயணப்படும் தூரமிருக்கிறது. முன்பாக டிவியில் பார்ப்பதோடு சரி. இப்போது புதிய படங்களை வலைதளங்களில் டவுன்லோடி பார்க்க ஆரம்பித்துவிட்டாள். இப்படியாக செல்போன் பைத்தியமாக மாறிப்போனாள் கமலவேணி.

‘இப்பிடி அதையவே உத்து உத்து பார்த்துட்டு இருந்தீன்னா கண்ணு கெட்டுப் போயிரும் சாமி!’ என்று அம்மா சொல்கையில் அதை பெரிதாய் அவள் எடுத்துக் கொள்வதில்லை. இப்படியிருக்க, சென்ற மாதம் இவள் போனிற்கு ஒரு அழைப்பு வந்தது இரவு நேரத்தில்.

பேசிய நபரின் குரலை இவளால் யூகித்து அறியமுடியவில்லை. பேசிய நபரின் குரலும் ‘யாருன்னு கண்டுபிடி பாக்கலாம் கமலவேணி!’ என்றே அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தது. மத்தபடி, ‘சாப்ட்டாச்சா?, இன்னும் தூங்கலையா?, தெனமும் உன்னை ஸ்டாப்ல பார்த்த பின்னாடிதான் நான் கிளம்புவேன், நேத்து நீ போட்டிருந்த நீல சுடிதார் அடேங்கொன்னியா.. உனக்கு சூப்பரா செட்டாயிருந்துச்சு!’ இப்படியே இருக்க இவளுக்குள் சின்ன கிளுகிளுப்பும் அப்போது வந்தே விட்டது. போனில் கேட்கும் குரல் அப்படியொன்றும் மோசமாகவும் இவளுக்குப் படவில்லை.

தொடர்ந்து அந்த மனிதன் தானாகவே பேசிக்கொண்டிருக்க, கொஞ்சம் நேரத்தில் கமலவேணிக்கு எரிச்சலாகவும் இருந்தது. பெயரைச் சொல்லாமல் ‘நொய் நொய்’யென மொக்கை போடும் இவன் யாரு? இத்தனைக்கும் இவள் அவனிடம் வார்த்தைகள் பேசியிருக்கவில்லை. அந்த அழைப்பை தடை செய்யவுமில்லை. பேச்சில் வடியும் ஜொள்ளானது செல்போன் வழியாகவே காதுக்குள் நுழைந்து விடுமோ என்ற அச்சத்தில் ‘அண்ணா யாருங்க நீங்க? எந்தூர்ல இருந்து பேசுறிங்கண்ணா? ராங் நெம்பர்னு நினைக்கிறேன்!’ என்று சொல்லவும் எதிர்முனை சிறிது நேரம் அமைதியில் ஆழ்ந்து விட்டது. இத்தனை பேசி ’சீதைக்கு ராமன் சித்தப்பன்’ என்று சொன்ன கதையாகிவிட்டதே என்று யோசிக்கிறதோ என்னவோ!

“என்ன அண்ணனா நானுனக்கு?” என்று எதிர்முனை கேட்கவும்தான் இவள் தன் அலைபேசியை அணைத்துவிட்டாள். இவன் யாரோ உள்ளூர் லூசாய் இருக்குமென நினைத்துக் கொண்டாள். பின்பாக அடுத்த நாள் காலையில் கம்பெனி பேருந்திற்காக ஸ்டாப்பிங்கில் காத்திருக்கையில் அவள் கண்கள் அங்குமிங்கும் நோட்டமிட்டன. டீக்கடையைப் பார்த்தாள். ஊருக்குள் செல்லும் பாதையையும் பார்த்தாள். அப்படி யாரும் தன் அழகைக் காண ஓடியோடி வந்து தவம் கிடக்கவில்லை, என்று உணர்ந்து நிம்மதியானாள்.

மேலும் இரண்டு நாட்களுக்கு உள்ளூர் லூசுவின் அழைப்பு இவளுக்கு இரவில் வரவில்லை. என்றாலும் இவளுக்கு அந்த அழைப்பின்மீது அதீத ஈடுபாடு வந்திருந்தது. என்ன இருந்தாலும் இத்தனை காலத்தில் தன்னைப் பற்றி ஒரு ஆடவனும் வியந்து போற்றவில்லையே! இவன்தானே முதலாக போற்றினான். போனில் யார் பேசுகிறோம்? என்று சொல்லாமல்கூட ஒருவன் பேசுவானா?

ஆவலுடன் இவள் எதிர்பார்த்த அந்த அழைப்பு மூன்றாம்நாள் இரவில் வந்தது. எடுத்தவுடன், ‘சொல்லுங்கண்ணா!’ என்று துவங்கினாள்.

“இதப்பாரு கமலவேணி.. மொதல்ல என்னை அண்ணான்னு கூப்பிடறதை நிப்பாட்டிடு. எனக்கு ஒரு தங்கச்சி ஏற்கனவே இருக்கா! அவ ஒருத்தி அண்ணான்னு கூப்பிட்டாவே போதும். ஊருல இருக்குற அத்தனை பொண்ணுங்களும் அண்ணான்னு என்னை கூப்பிட்டா நானெப்போ காதல் பண்ணுறது? அப்புறம் யாரை கல்யாணம் கட்டிக்கிறது? சொல்லு நீயி!”

“நானெனத்தீங்கண்ணா சொல்றது?” ’அம்மா யாரோ ராங் நெம்பராட்ட இருக்குதும்மா!’ (வேண்டுமென்றே அம்மா அருகில் இருப்பது போல பாசாங்காய் குரல் கொடுத்தாள் கமலவேணி) எதிர்முனை அதற்கெல்லாம் அசரவேயில்லை.

“உனக்கு மஞ்சுளாவைத் தெரியும்ல?”

“ஆமா, பொன்னாக்கா புள்ளெ. எங்கூடத்தான் கம்பெனிக்கி வர்றா. அவளுக்கென்ன?”

“அவளுக்கு ஒரு அண்ணன் இருக்கான்ல!”

“ஆமா! திங்களூர்ல போல்ட்டு, நட்டு விக்குற கடை போட்டிருக்கிறதா சொன்னா அவ!”

“என்னது போல்ட்டு நட்டு விக்குற கடையா? டிஸ் ஏண்டனா மாட்டி விடறோம், டீவி சேல்ஸ் பண்றோம் தெரிஞ்சிக்க.. நட்டு விக்கிறாங்களாம்! போன மாசம் உங்க வீட்டுல சன் டிடிஹச் மாட்டிக் குடுக்க வந்தேன்ல! நீ கூட ஹார்லிக்ஸ் வச்சுக் கொண்டுவந்து கொடுத்தியே! அன்னிக்கு நீ நைட்டில இருந்தே! அசிங்கமா இருந்துச்சு அந்த ட்ரெஸ் உனக்கு. சொல்லலாம்னு நினைச்சேன். ஆனா, நீ அழகா இருந்தங்காட்டி எனக்கு பேச வாய் வரலை!”

“முருகவேல் அண்ணனா நீங்க. மஞ்சுளாவுக்கு இப்படியொரு வட்டுக் காஞ்ச அண்ணனா இருப்பீங்கன்னு நானென்ன கனாக் கண்டனா?”

“கமலவேணி!”

“சொல்லுங்க! கேட்டுட்டுத்தான் இருக்கேன்!”

“அண்ணான்னு என்னை கூப்பிடாதேன்னு சொல்லிட்டே இருக்கன்ல!”

“சரிங்க முருகவேலு! எதுக்காக அண்ணான்னு கூப்பிட கூடாதுங்கறீங்க?”

“ஏன்னா நான் உன்னை விரும்புறேன்.”

“விரும்பிக்கோங்க முருகவேலு.. நானென்ன வேண்டாமுன்னா சொல்றேன்? ஆனா, எதுக்காக விரும்புறீங்கன்னு தெரியிலியே!”

“அதெல்லாம் எப்பிடி சொல்றது நானு உனக்கு! எனக்கு உன்னைப் பார்த்தா விரும்பணும்னு தோணுது. பார்த்துட்டே இருக்கணும்னு தோணுது. படுத்தாலும் உன்னோட நினைப்புத்தான் வருது. வண்டீல திங்களூர் போறப்ப.. கடையில இருக்கப்பன்னு எந்த நேரமும் உன் நினைப்புத்தான் எனக்கு. அதனாலதான் மனசுலயே எத்தனை நாளைக்கு வச்சிருக்கிறதுன்னு உனக்கு போன் போட்டேன்!”

“என் நெம்பரை மஞ்சுளாதான் குடுத்திருக்கணும்.. அவளுக்கு இருக்குது நாளைக்கி கச்சேரி! அண்ணனுக்கு ஆள் பிடிச்சுக் குடுக்குற வேலை பாக்குறாளா அவ!”

“கமலவேணி.. நெம்பரை அவகிட்ட வாங்கலை நானு”

“பின்ன என்னோட சின்ன அண்ணன் தங்கச்சிக்கு ஆள் புடிக்க உங்களுக்கு குடுத்தானா?”

“ஏன் இப்படி ஒரு மாதிரியா பேசுறே? உன் நெம்பரை யாரு குடுத்தா என்ன? எப்படியோ உன் நெம்பரை பிடிச்சுட்டேன்! சொல்லு! என்னை நீயும் விரும்புறியா இல்லையா?”

“எதுக்காக விரும்புறீங்கன்னு கேட்டதுக்கே ஒழுக்கமா பதிலே சொல்லலை நீங்க!”

“எதுக்காகன்னா.. கல்யாணம் கட்டிக்கிறக்குத்தான்!”

“ஓ! அப்ப நீங்க உங்கப்பா அம்மாட்ட சொல்லிடுங்க! ’இந்த மாதிரி உள்ளூர்ல காட்டுப்பாளையத்தாரு புள்ளை கமலவேணியை கட்டிக்கறேன்’னு. அவங்க நல்லநாள் பார்த்து எங்க வீடு வந்து எங்க அப்பா அம்மாட்ட பொண்ணு கேக்கட்டும்! சம்மதம், சம்மதமில்லைன்னு எதாச்சிம் எங்க வீட்டுல பதில் சொல்லுவாங்கதானே!”

“இந்தக் காலத்துல நீ எப்படி இப்படியெல்லாம் பேசக் கத்துக்கிட்டே? அவ அவ தனக்கொரு ஆளு கிடைப்பானான்னு ஏங்கீட்டு சுத்துறாங்க இந்தக் காலத்துல!”

“ஆளு கிடைப்பான்னு ஏங்கீட்டு இருந்தா புவ்வாக்கு வழி என்னங்க முருகவேலு? எனக்கு அதுக்கெல்லாம் நேரமில்லைங்க முருகவேலு. லவ் பண்ணுற பொண்ணுங்க கம்பெனில சிலபேரை நான் இந்த மூனு மாசமா பார்த்திட்டிருக்கேன். எவளாச்சிம் நிம்மதியா இருக்காளுங்களா? முசுக்கு முசுக்குனு மூக்கைச் சிந்தீட்டேதான் இருக்காளுங்க! கேக்குறதுக்கு முன்னாடியே ஒப்பாரி வைக்கிறாளுங்க! ஒருத்தி இன்னிக்கி.. அவ பழகுனவன் கழட்டி உட்டுட்டு போயிட்டான்னு சொல்லி கத்திரிகோல்ல அவ கையையே குத்திக்கிட்டா! ரத்தம் கொப்பளிச்சுட்டு ஊத்துது! அவன் ஏமாத்திட்டு போனா இவ ஏன் கையை கிழிச்சிக்கிறாள்னே தெரியல! பைத்தியம்! ஒருத்தி என்னடான்னா.. திடீர்னு சிரிச்சு பேசிட்டு இருந்தவ உம்முன்னு மூஞ்சியை வச்சிக்கிறா ஒம்போது நாளைக்கி. கேட்டா பதிலும் சொல்றதில்ல. பத்தாம் நாளு தலயில பூவு வெச்சிட்டு, முகத்துல பவுடரை கொட்டீட்டு, செண்ட்டெல்லாம் அடிச்சுட்டு, வாயெல்லாம் பல்லா கம்பெனிக்கி வர்றா! ஏன்னு கேட்டா ‘எங்களுக்குள்ள சின்ன சண்டையாயிப்போச்சு.. பத்து நாளா நான் போன் அடிச்சாக்கூட எடுக்கல அவன். பயந்துட்டேன். நேத்திக்கி அவனே கூப்பிட்டு ’சாரி செல்லம்’னு பேசீட்டான்! என்னோட ஆள் எப்பவும் என்னோட ஆள் தான்னு குதிக்கறா! பைத்தியம்!’ ஆமா, புதூரு தெய்வானை விசயம் என்னாச்சுங்க போன வாரத்துல?”

“அதையும் நீயே சொல்லு கமலவேணி.”

“என்ன சுறுசுறுப்பே காணமே உங்க பேச்சுல! ஓ! நீங்க விரும்புறேன்னு சொன்னதும் நான் சந்தோசமா ஓகே சொல்லியிருந்தா நீங்க சந்தோசமா பேசுவீங்க! அதெப்படி நீங்க நினைக்கிற காரியமெல்லாம் உடனே நடந்துடனும்னு யோசிக்கறீங்க? கேட்டதெல்லாம் உடனே கிடைச்சிடணும்னு நினைக்கறீங்க! எனக்குப் புரியல! நானெல்லாம் பொறந்தாப்புல இருந்து எத்தனை எத்தனைக்கி ஆசைப்பட்டிருக்கேன் தெரியுமா? எதுவும் ஆசைப்படறப்ப கிடைச்சதேயில்ல. நானென்ன பணக்கார வீட்டுலயா பொறந்தேன்? கேட்டவுடனே எல்லாமும் கிடைக்க?”

“சரி, நீ என்ன இப்ப ஆசைப்படறே? அதை எப்பாடு பட்டாலும் நான் உனக்கு வாங்கித் தர்றேன்!”

“எனக்கு இப்பெல்லாம் ஆசையே எந்தப்பொருள் மேலயும் இல்லயே! ஒரு சுடிதார் வாங்க முடியலயேன்னு ஆசைப்பட்டேன் நாலு வருஷம் முன்னே! இப்ப என்கிட்ட பத்து இருக்கு. ஒரு செல்போன் வாங்க ஆசைப்பட்டேன் ரெண்டு வருஷம் முன்னால. இப்பத்தான் நானே சம்பாதிச்சு வாங்கியிருக்கேன். இப்படித்தான். எனக்கு புருஷன் வேணும்னு நான் ஆசைப்படலை. அது வர்றப்ப பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன். எப்பவும் நானா ஆசைப்பட்டாத்தான் உண்டு. யாரும் கொண்டாந்து திணிக்க முடியுமா? என்னோட சின்னண்ணனே அவன் வேலைக்கிப் போற கடையில இருந்து செகண்ட் ஹேண்ட் செல்போன் ஒன்னு எங்கிட்ட கொண்டு வந்து வச்சிக்கோன்னு குடுத்தான் நான் கம்பெனிக்கி போன மொத வருஷசத்துலயே! ’ஆறாயிரம் ரூபா வருதுடி..நீயி மாசா மாசம் ஆயிரம் ரூவா குடு’ன்னான். ‘நான் உன்கிட்ட எனக்கு செல்போன் வேணும்னு கேட்கவே இல்லையே’ன்னுட்டேன்.”

“உன்னோட பழகுறதுன்னா யோசனை பண்ணி யோசனை பண்ணி பத்திரமா பழகணுமாட்ட இருக்கே! சரி புதூரு தெய்வானைன்னு சொல்ல வந்தியே.. அதைச் சொல்லு.. அந்தப்பொண்ணு நம்மூரு நல்லசிவனை லவ் பண்ணுச்சு. நல்லசிவனும் அந்தப் பொண்ணும் ஓடிப்போயி கல்யாணம் கட்டிக்கிட்டு தலைமறைவா பெருந்துறையிலயோ எங்கியோ இருந்தாங்க. அப்புறம் ஸ்டேசனுக்கு ரெண்டு குடும்பமும் கூட்டிட்டு போயி நாயம் பேசி பிரிச்சி அந்தப் பொண்ணை கூட்டிட்டு போயிட்டாங்கன்னு பேசிக்கிட்டாங்க! அவ்ளோதான் எனக்குத்தெரியும்!”

“அவ்ளோதான் உங்களுக்குத் தெரியும்! நல்லசிவம் இப்ப அவன் பாட்டுக்கு வேலைக்கு போயிட்டிருக்கான். ஸ்டேசன்ல ஜட்டியோட உக்கார வச்சி மிதிச்சாங்களாம்! இதெல்லாம் கேவலம்தானே! தெய்வானையோட அம்மா ஸ்டேசன்ல அவளைப் பார்த்ததீமே ஓடிப்போயி அவ கழுத்துல இருந்த மஞ்சக்கயிறை இழுத்து அத்து வீசிட்டுதாம். அந்தப் பொண்ணு மேஜரே ஆகலைன்னு சொல்லி கூட்டிட்டு போயிட்டாங்க! வீட்டுக்குப் போன பொண்ணு மருந்து குடிச்சிட்டுது. அப்புறம் செலவு பண்டி காப்பாத்தி அவங்களுதுலயே சம்சாரம் செத்துப்போன ஒரு மனுசனுக்கு கட்டிக்குடுத்துட்டாங்க! இதெல்லாம் என்னங்க முருகவேலு? எதுக்கு அவங்க லவ் பண்ணாங்க? கல்யாணம் பண்ணாங்க? ஒரு வாரம் மறைஞ்சி வாழ்ந்தாங்க? ஸ்டேசன் போனாங்க? இதுல அந்தப் பொண்ணுக்கு எவ்ளோ மன உளைச்சல் இருந்திருக்கும்? யப்பா! நினைச்சுப்பார்க்கவே தலை கிர்ருனுன்னு சூடாகுது எனக்கு”

“நீ பயப்படுறயா கமலவேணி? இப்படியெல்லாம் நமக்கும் நடந்துட்டா என்ன பண்ணுறதுன்னு? அப்படியெல்லாம் ஆகாது கமலவேணி நமக்கு!”

“நானெதுக்கு பயப்படறேன்.. இதென்ன வம்பா இருக்குது உங்ககூட? எங்கம்மா என்னை அப்படியெல்லாம் தொட்டதுக்கெல்லாம் பயப்படறாப்ல புள்ளப்பூச்சியா வளர்த்துல தெரிஞ்சிக்கங்க!”

“சரி பயப்படவும் மாட்டே.. பின்ன என்ன குழப்பம் உனக்கு கமலவேணி?”

“குழப்பம் உங்களுக்குத்தான்! நான்தான் தெளிவா சொல்லிட்டனே! உங்க அப்பா அம்மாவோட வந்து பொண்ணு கேளுங்க எங்க வீட்டுல! உங்க அப்பா இதுகெல்லாம் ஒத்துக்கவா போறாங்க? நாங்க வேற முருகவேலு. நீங்க வேற. யாரும் ஒத்துக்க மாட்டாங்க! எந்த நேரமும் என் ஞாபகமாவே இருக்குன்னு சொல்றதெல்லாம் கேட்டு சந்தோசப்படற நிலையில நான் இல்லை. வேற பொண்ணுங்க இருக்கலாம். என்னோட குடும்ப நிலமை அப்படி பேச வைக்குதுங்க முருகவேலு. தொழிலை நல்லா கவனிச்சுக்கங்க! இன்னும் நாலு ஊர்ல கடை போட்டு முன்னேறுற வழியை பாருங்க! நானில்ல.. இன்னும் அழகான பொண்ணு உங்களுக்கு கிடைப்பா!”

“அப்ப நீ என்னை வேணாம்னு ஒதுக்குறியா? என்னைப் பிடிக்கலையா?”

“நான் யாருங்க உங்களை ஒதுக்க? யோசிச்சு பாருங்க.. நாம பழகினா பின்னாடி என்னென்ன பிரச்சனைகள் வரும்னு இப்பவே! நான் ஏதோ இப்பத்தான் கம்பெனில செட்டில் ஆகி டெய்லரிங் கத்துக்கிட்டு இருக்கேன். அதை கத்துக்கிட்டா மாசத்துல இன்னும் கொஞ்சம் கூடவே சம்பாதிக்கலாம். ஆனா, நீங்க பேசுற பேச்சு எனக்கு மன சங்கடத்தைத்தான் பின்னாடி குடுக்கும். ஒருநாள்கூட லீவ் போடாம போயிட்டு வந்துட்டு இருக்கேன். சினிமாக்கு போலாம், டேமுக்கு போலாம், கோவிலுக்கு போலாம்னு கூப்புடுவீங்க! ‘என்ன வந்தாலும் பாத்துக்கறேன் பயப்படாதே’ன்னு சொல்லுவீங்க! நானும் நம்பி வருவேன். பின்னாடி பிரச்சனை வந்துட்டா நான்தான் வீட்டுல மூலையில கிடந்து மண்டையை பிச்சுக்கணும். எங்கப்பா என்னை சாமி சாமீன்னு அப்பிடி கூப்பிடுறாரு இப்ப! புள்ளை இப்படி காரியம் பண்ணிட்டு வந்திருக்குதுன்னு காதுல கேட்டாருன்னா.. எங்கம்மாளை அவரு திட்டுறாப்ல என்னையும் கசாமுசான்னு திட்டி மிதிச்சாலும் மிதிச்சிடுவாரு! போதாதுக்கு அண்ணங்காரங்க ரெண்டு பேரும் சேர்ந்து என்னை கொன்னே போடுவாங்க!”

“அப்படியெல்லாம் ஆகாது கமலவேணி. எனக்கு உன்னை ரொம்பப் பிடிக்கும்! உன்னை நான் பத்திரமா பாத்துக்குவேன்!”

“பட்டுத்தான் திருந்துவேன்னு பிடிவாதம் பிடிக்கறவங்களை ஒன்னுமே பண்ண முடியாதுங்க முருகவேலு. எனக்கு உங்ககிட்ட பிடிச்ச விசயம் என்னன்னா.. என்னை யாருமே முழுசா என் பேரைச்சொல்லி கூப்பிடவேயில்லை இத்தனை காலத்துல! ஸ்கூல்ல படிச்சப்பத்தான் டீச்சர் அட்டனென்ஸ் எடுக்குறப்ப ‘கமலவேணி’ன்னு கூப்பிடுவாங்க! நீங்கதான் என் பெயரை முழுசாச்சொல்லி கூப்பிட்டீங்க! அதைக்கேட்கவே எனக்கு சந்தோசமா இருக்கு!”

“அப்ப இனிமே நான் கூப்பிட்டா பேச மாட்டியா கமலவேணி!”

“ஏங்க.. நீங்க என்ன சின்னப் பையனா? ‘காய்’ விட்டுட்டியா? ‘டூ’ விட்டுட்டியான்னு கேக்குறாப்ல கேக்கறீங்க?” என்று சொல்லி போனை அணைத்துக் கொண்டாள்.

பின்பாக படுக்கையில் வீழ்ந்த பிறகாக முருகவேலு அவள் மனதில் வந்து நின்றான். பொதுவாகவே ஊரில் இருக்கும் பையன்கள் எல்லோரையுமே ’அண்ணா’ என்றுதான் கமலவேணி கூப்பிடுவாள். இந்த முருகவேலு அடிக்கடி இவள் கண்ணுக்கு சிக்குபவனல்ல. அவன் பிழைப்புண்டு அவனுண்டு என்றிருப்பவன். அவன் மீது சின்ன மதிப்பும் வைத்திருந்தாள் இவள்.

இதே ஊருக்குள் சிலர் தங்கள் பெண்ணை உள்ளூர் மாப்பிள்ளைக்கே கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். அதுவும் அவர்கள் காதலித்தார்கள் என்பதை அறிந்தே. ஒன்றிரண்டு ஜோடி வெளியில் சென்று திருமணம் முடித்து ஊர் வந்து சேர்ந்திருக்கிறது. எல்லோருமே வாழ்க்கையை அவரவர் போக்கில் ஓட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். குறிப்பிடுச் சொல்லும்படியான முன்னேற்றம் என்றுதான் ஒன்றுமில்லை.

காதலித்தார்கள், கல்யாணம் கட்டிக்கொண்டார்கள், பிள்ளை குட்டி பெற்றார்கள், அவர்களை கட்டிக் கொடுத்தார்கள் என்றுதான் இருக்கிறது. போன வருடத்தில் ஊருக்குள்ளேயே உறவு முறையில் தங்கையாகும் பெண்ணை ஒருவன் வெளியில் கூட்டிப்போய் திருமணம் செய்து கொண்டான். இரண்டு நாட்கள் இழவு விழுந்த வீட்டுக்கு துக்கம் விசாரிக்கச் செல்வது போல இரு வீட்டுக்கும் ஊரே போய் தெரிந்ததை பேசிவிட்டு வந்தது. அந்தக் குடும்பங்களும் வேறு வழியில்லாமல் அந்த முறைதவறிய திருமணத்தை ஏற்றுக்கொண்டது. இப்போது அந்தப்பெண்ணுக்கு கையில் ஒரு குழந்தை.

முருகவேலுவை இவள் காதலிப்பதாலோ, கல்யாணம் கட்டிக்கொள்வதாலோ இந்த ஊரில் எந்த மாற்றமும் வந்துவிடப் போவதில்லை. இவர்கள் திருமணத்தால் நான்கு பெண்கள் ஊரை காலி செய்துவிட்டு ஓடிவிடப்போவதில்லை. நான்கு ஆண்கள் ஒருவார காலம் சோறு உங்காமல் கிடக்கப் போகிறார்களே என்கிற கவலையுமில்லை. வடக்கே பார்த்து அமர்ந்திருக்கும் மாரியாத்தா கோபித்துக் கொண்டு கிழக்கே பார்த்து மாறி உட்கார்ந்துகொள்ளப் போவதுமில்லை. ஊருக்கு திடீர்ப் பெயர் மாற்றமும் வந்துவிடப் போவதில்லை. நான்கு நாட்களுக்கு ஊரே ’இப்படியாமா!’ என்று பேசும். நான்கு நாட்கள் கழிந்ததும் அதனதன் பிழைப்பைப் பார்த்துக்கொண்டு அமைதியாகிவிடும்.

பின்பாக இரண்டு நாட்கள் அமைதியாக ஓடியது கமலவேணிக்கு. மூன்றாவது நாளில் கம்பெனி பேருந்துக்காக நிறுத்தத்தில் காத்திருக்கையில் மஞ்சுளா எப்போதும்போல இவள் அருகில் வந்து நின்றவள், இவள் கையைச் சுரண்டி நான்காக மடிக்கப்பட்ட காகிதம் ஒன்றை நீட்டினாள்.

“என்னடி கம்பெனிக்கு இன்னிக்கி வரலையா? மேனேஜர்கிட்ட லீவ் லெட்டர் குடுக்கணுமா? ஆனா, நீ பேக்கோடதான வந்திருக்கே பஸ்சுக்கு?” என்றாள் கமலவேணி.

“லீவெல்லாம் போடல நானு.. எங்கண்ணன் உன்கிட்ட குடுக்கச்சொல்லி இந்த லெட்டரைக் குடுத்தான்” என்று மஞ்சுளா சொன்னதுமே இவளுக்கு ‘சுர்ர்’ரென கோபம் வந்தது. ஒருதடவை சொன்னால் அந்த மரமண்டையிலெல்லாம் ஏறாதா? முருகவேல் ஒவ்வொரு ஆளாக விஷயத்தை பறப்பிக்கொண்டே போகிறான். ‘புடிடி!’ என்றாள் மஞ்சுளா.

“எனக்கா இருக்காது.. விஜயலட்சுமி அங்க நிக்கறாள்ல.. அவளுக்குத்தான். கொண்டுபோய் குடு” என்றாள் இவளும்.

“அவளுக்கில்ல.. உனக்குத்தான்!”

“எனக்கு எந்த லெட்டரும் வேண்டியதில்ல.. உங்கொண்ணன் கிட்டவே திருப்பிக் குடுத்துரு”

“குடுக்காம போனா என்னை கண்டபடி பேசுவாண்டி அந்த பைத்தியகாரன். வேணுக்குன்னே குடுக்கலைன்னு அடிக்க வருவான் பல்லை கிஞ்சீட்டு!”

இவள் அவள் சொல்வதை கவனிக்காதவள் போல டீக்கடையை பார்த்தபடி நின்றிருந்தாள்.

“நீ வாங்கலைன்னா உன் மூஞ்சீல ஏசிட் வீசீருவாண்டி அவன்”

“எதே! அண்ணனும் தங்கச்சியும் என்ன என்கிட்ட வேடிக்கை பண்றீங்களா? போடி உன்ற லெட்டரை கொண்டுட்டு..” பேருந்து வந்ததால் மற்ற பெண்களோடு இவளும் ஏறினாள்.

கம்பெனியில் வேலையில் இருக்கும்போது கூட மஞ்சுளா இவளை முறைத்துப் பார்த்த வண்ணமே இருந்தாள். இவளுக்கு அவளின் நடவடிக்கைகளைப் பார்த்தால் வேடிகையாய் இருந்தது. பார்த்தால் இவர்கள் வீட்டில் எல்லோருமே பைத்தியம் தானாட்ட இருக்கே! கூடப்பிறந்த அண்ணங்காரன் லவ் லெட்டரை கொண்டு போய் குடுன்னு நீட்டுறான். இந்தப் பைத்தியம் அதையும் வாங்கிட்டு வந்து நீட்டுது. அதை வாங்கிக்காததால சண்டைக்காரி மாதிரி முறைப்பு வேறு. அட சாமீ! என்றே நினைத்தாள் கமலவேணி.

எதிர்பார்த்த மாதிரியே அன்றிரவு முருகவேல் இவளை அலைபேசியில் அழைத்தான். ‘சொல்லுங்கண்ணா!’ என்றாள் இவள் போனை எடுத்ததும்.

“உனக்கு ஏத்தமாடி? அழகா இருக்கீன்னு ஏத்தமா? ஏண்டி என் தங்கச்சி குடுத்த லெட்டரை வாங்கிக்கலை நீயி?”

“டேய், மரியாதையா பேசுடா.. வாய் இருக்குதுன்னு அடி புடீங்கறே? இவன் லெட்டர் குடுத்தானாம்.. நான் வாங்கிக்கலையாம்.. என்னடா வேணும் உனக்கு இப்போ?”

“உன்னோட அழகு என்னத்துக்கு ஆகப்போகுதுன்னு பாக்குறியாடி?”

“நீ என்னத்தடா பண்ணிடுவே?”

“உன் மூஞ்சீல ஏசிட்டை அடிக்கப் போறேண்டி.. வாங்கிட்டு வந்துட்டேன்! காலையில பாருடி என்ன நடக்குதுன்னு!”

“டேய்! நீ ஆம்பளைன்னா காத்தல வாடா! வந்து ஏசிட் அடிடா! பைத்தியகாரன்தாண்டா நீயி.. உன்னை எப்பிடிடா ஊட்டுல வச்சிருக்காங்க? நீ என்கிட்ட பேசினதெல்லாம் என் போன்ல ரெக்கார்டா ஆயிருக்குதுடா.. இப்பச் சொன்னியே.. காத்தால ஏசிட் அடிக்கப் போறேன்னு.. எல்லாம் பதிவுல இருக்கு.. என் சின்னண்ணன் வந்துடுவான் இப்ப.. நேரா ஸ்டேசனுக்கு போய் உன்மேல கம்ளெய்ண்ட் எழுதிக் குடுத்துட்டுத்தான் மறுவேலைடா! ஓ.. இவன் ஏசிட் ஊத்துவான்னு பயந்துட்டு நாங்க ஊட்டுக்குள்ள ஒளிஞ்சிக்கணுமா.. போனை வெய்யிடா பைத்தியகாரா!”

“யாரை சாமி சத்தம் போட்டுட்டு இருக்கே?” திண்ணையில் அமர்ந்திருந்த அம்மா கேட்டது. இவளாக எழுந்து போய் அம்மாவின் அருகில் அமர்ந்தாள். அப்போதுதான் சின்னண்ணன் வடிவேலு தன் பைக்கில் வந்து வாசலில் நிப்பாட்டி இறங்கினான். இருவரையும் அமரவைத்து முருகவேல் விஷயத்தைச் சொன்னாள். இறுதியாக ஸ்டேசனுக்கு போய் எழுதிக் குடுத்துட்டு வந்துடலாமென்ற விஷயத்தையும் சொன்னாள். கொஞ்சம் நேரம் அமைதியாய் இருந்தான் வடிவேலு.

“சரி, நானும் அம்மாவும் நேரா பெரியண்ணன் வீட்டுக்குப்போய் அவனை கூட்டிட்டு உள்ளூர் கோவில் மணியகாரரை பார்த்து விஷயத்தை அவர்கிட்ட பேசுறோம்.”

“அண்ணா.. நீ சொல்றது எனக்கு ஏனோ பிடிக்கலைண்ணா.. ஊரு பூராவும் ஒன்னுமே இல்லாத விஷயத்துக்கு காது, கண்ணு வெச்சு நாளைக்கி பேச ஆரம்பிச்சுடுவாங்கண்ணா..”

“சரி.. நாளைக்கி கோவில் மணியகாரரு ‘என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லாம ஸ்டேசனுக்கு போயிட்டீங்களே’ன்னு நம்மளை கேக்கக் கூடாதில்லையா.. இதென்ன டவுனா கமலா? நாளையும் பின்னியும் ஊருக்குள்ள நாலு சனத்தோட முகத்துல நாம முழிக்கணும்ல! நைட்டே மணியகாரரை கூட்டிட்டு அவன் வீடு போய் பேசி முடிச்சுட்டு வர்றேன் கமலா! உன்னோட வழிக்கே அவன் வரமாட்டான். நீ இரு!” அம்மாவை கூட்டிக்கொண்டு வடிவேலு கிளம்பினான்.

அவர்கள் வீடு திரும்பி வர இரண்டு மணி நேரமாயிற்று. இவள் திண்ணையிலேயேதான் அவர்கள் வரும் வரை செல்போனில் யூடியூப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தாள். பெரிய அண்ணன் மாணிக்கனும் கூடவே வந்திருந்தான். எல்லோருமே திண்ணையில் வந்து அமர்ந்தார்கள். அவர்களாக விஷயத்தை துவங்குவார்களென இவள் அமைதியாய் இருந்தாள்.

“இங்க பாரு சாமி.. அந்தப்பையன் இனி உன்னோட வழிக்கே வரமாட்டான்! அந்தப்பையனோட அப்பன் அப்பவே வீட்டை விட்டு அவனை முடுக்கி உடறதுலயே நின்னாரு. அந்தப்பையன் அவரு கால்ல உழுந்து ‘நான் சும்மா மெரட்டுனனப்பா… மன்னிச்சுருப்பா!’ன்னு அழுவுறான். எங்க கிட்டேயும் மன்னிப்பு கேட்டுட்டான்!” என்றது அம்மா. இந்த விஷயம் இப்படித்தான் முடியுமென முன்பே யூகித்திருந்தாள் கமலவேணி. ஏனென்றால், ’குலைக்குற நாய் கடிக்காது’ங்கற பழமொழியை அவள் சின்ன வயசிலிருந்தே காதில் கேட்டிருந்தாளே!

-vaamukomu@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button