
பதிவுகள்
வாழ்வின் மீது
பச்சை நரம்பாய்
படர்ந்தோடிக் கிடக்கும்
வெறுமையை
விரித்து வைத்துப்
புகைப்படமாக்கிப் பதிவிடுகிறேன்
பறக்கும் இதயங்கள்
வருடிச் செல்கின்றன
சில வலிகளை…
பிழைகளைப்
பிழிந்தெடுத்த பின்
சக்கையில்
அங்கும் இங்குமாய்
மின்னிமறையும் காதலை
இதோ…இதோ…என்று
காட்டிவிட
கவிதை ஆக்கினேன்
காணாத அருந்ததியைக்
கண்டதாய்ச் சில பின்னூட்டங்கள்
ஆறிடச் செய்கின்றன
சில காயங்களை
விரலிடுக்கில் வழிந்தோடும்
காலத்தை வார்த்தைச் சிப்பிக்குள்
முத்தாக்கிப் பல
முத்துச்சரங்களை
அணிந்துகொண்டு
வருத்தங்களின் வாயிழுத்துப்
புன்னகைக்க வைத்தபடி…
துயரங்களின் மூக்கில்
சிவப்பு பலூன் ஒட்டிவிட்டு
ஆசுவாசமாய் அமர்ந்து இசைக்கிறேன்
விருப்பக் குறிகளால்
விதிப்பள்ளம் நிறைகிறது.
•
கடல் சுமந்து
கடலின் பெருங்குரலைச்
சூல் கொண்ட வெண்சங்கு ஒன்று
என்னிடம் இருந்தது
பல்லாயிரம் ஆண்டு
ரகசியத்தில் ஊறிய
நினைவேக்கத்தை
ஊதியபடியே சுருண்டிருக்கும்
வலமோ… இடமோ…
அது எதையும் அறிந்ததில்லை
கடல் தன் கைகளால்
அழுந்தப் பற்றிய ரேகைத் தடங்கள்
பதிந்தோடிக் கிடந்தன
சிறு உயிருக்குள் கடல் தேங்கிக்
கிடக்கும் மெல்லுடலி
மலை சூழ்ந்த ஊரில்
எனது கடல் ஏக்கம் தீர்த்தது
அதுதான்.