இணைய இதழ் 114சிறுகதைகள்

கத்திரிப்பூ கலர்ப் பெயிண்ட் அடித்த வீடு – கலித்தேவன்

சிறுகதை | வாசகசாலை

மெடிக்கல் காலேஜ் ரோட்டில் முதல் கேட்டிற்கருகே வரும் போது செல்போன் அழைத்தது. நல்ல வெய்யில் நேரம், மே மாத சூரியன் தன் முழுவீச்சை வெளிப்படுத்தும் நேரம், உச்சி வெய்யிலின் தாக்கத்தை விட சுற்றுப்புற அனலின் தாக்கம் அதிகமாயிருந்தது. வண்டியை நிழலான இடத்தில் நிறுத்தலாமென்றால், ரோட்டில் இருந்த மரத்தையெல்லாம் விரிவாக்கம் என்ற பெயரில் வெட்டியதால் கண்ணுக்கெட்டிய தூரத்தில் மரங்களே இல்லை.

முதல் கேட்டினுள்ளே நுழைந்தால் வலது புறம் பெரிய ஆலமரம், விழுதுகள் ஊன்றி நிழல் அளித்ததைக் கண்டு அதன் எல்லையில் நிறுத்தினான் திருப்பதி, அதற்குள்ளாக செல்போன் அழைப்பு நின்றிருந்தது.

செல்போனை எடுத்து அழைத்தது யார் என்று பார்த்தால் புதிய எண்ணாக தெரிந்தது. இதற்கு முன்பு இந்த எண்ணிலிருந்து அழைப்பு வந்ததாக நினைவில் இல்லை. பொதுவாக அழைப்புகள் வரும் எண்களையும் பேசுபவர்கள் குரலையும் ஞாபகம் வைத்துக் கொள்ளவது வழக்கம். அந்த எண்ணிற்கு அழைத்தான் பிசியாக இருந்தது. சரி காத்திருப்போம் என அமேசானில் உலாவி புதியதாக வந்திருக்கும் டூல்ஸ்களை பார்வையிட்டான். மீண்டும் அதே எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

“சார், அதிர்ஷ்டம் கடையில ஒங்க நம்பர் கொடுத்தாங்க. நீங்க திருப்பதிதான? வாசிங் மிஷினுக்கு சரியா தண்ணீ வரமாட்டேங்குது. தொவக்க லேட்டாவுது. வந்து என்னான்னு பாக்க முடியுமா? இப்போ வர முடியுமா?”

“ஓகே பத்துடலாம். டேங்குல தண்ணீ ஃபுல்லா இருக்கா?”

“பார்த்துட்டேன் சார். மோட்டார போட்டு தண்ணிய ஃபுல்லா ஏத்தியும் பாத்துட்டேன். ரெம்ப கம்மியா வருது போல. தொவக்க ரெம்ப நேரம் ஆவுது. இதுக்கு முன்னாடி இது மாறி ஆனதில்ல. கொஞ்சம் சீக்கிரம் வாங்க. வெளிய போகனும்”

“சரி, அட்ரச சொல்லுங்க. வந்துர்றேன்.”

“அருளானந்த அம்மாள் நகர், புஷ்பம் காலனி, ஆறாவது தெரு, மொத மாடி வீடு, கத்தரி பூ கலர்ல பெயிண்ட் பண்ணது.”

“மெடிக்கல் காலேஜ் ரோட்டுல இருக்கேன். நேரா அங்கதான் வரனும் வந்துர்றேன்.”

தினமும் தஞ்சாவூரையே சுற்றி வருவதால் முகவரி நன்றாகத் தெரிந்தது. மனதிற்குள் அதற்குள் போக வேண்டிய பாதை வரைபடமாக விரிந்து வழிகாட்டியது. ஞாபக அடுக்குகளில் தெரு, கடைகள், திருப்பங்கள் எல்லாம் எப்படி பதிகிறது.. திரும்பவும் எடுக்கப்பட்டு பயன்படுகிறது என மனதின் வன்மையை நினைத்து வியப்படைத்தான்.

வாகனத்தை மெதுவாக இயக்கி பண்ணிரெண்டு நிமிடத்தில் புஷ்பம் காலனி ஆறாவது தெருவையடைந்தான். வீட்டைக் கண்டுபிடிப்பது சுலபமாக இருந்தது. தெருவின் முதல் வீடே அவர்களதுதான், வாகனத்தை நிறுத்திவிட்டு டூல்ஸ் பையுடன் கேட்டின் கதவருகே நின்று உள்புறமாக அழைத்தான்.

“சார், சார். வீட்டுல நாயிருக்கா?”

“இதோ வர்றேன் சார்” – என்றபடி முப்பத்தியைந்து வயதுடைய பெண் நைட்டியில் வந்தார்.

“வாங்க சார், நாய் கிடையாது. பயப்படாம வாங்க.”

“ஒகே, ஒகே. ரெண்டு மூனு தடவ கடி வாங்கி ஊசி போட்டதுல கொஞ்சம் பயம். அதான் கேட்டுக்கிட்டேன். வாசிங் மிஷின் எங்க இருக்கு?

“மொதல் மாடியில் இருக்கு. வாங்க காட்றேன்”

போர்டிகோவை ஒட்டி ஏறிய மாடிப்படியின் வழியே முதல் மாடியில் வலது புறம் இருந்த மிகப்பெரிய அறையைக் காட்டினார். “இதுல இருக்கு. நீங்க பாருங்க. நா காலேஜ்க்கு போவனும். டிரஸ் மாத்திட்டு வந்துடுறேன்” என்றவருக்கு நல்ல திருத்தமான முகம். மேக்கப் இல்லாமலே அழகாக இருந்தார். நன்றாகப் படிய வாரிய தலைமுடி பின்னால் பின்னி இடுப்புவரை தொங்கியது. நைட்டியிலேய உடலின் வளைவுகளும் திண்மையும், இளமையும் தெரிந்தது. சாந்தமான முகமும் புன்னகையும் ஒரு முறை பார்த்தவர்கள் மறக்க முடியாத வன்னமிருந்தது. கழுத்தில் தாலியும், காலில் மெட்டியுமில்லை. கற்பனையில் மனம் பறந்தது.

வாசிங் மிஷின் அறையில் உள்ளே அதன் அட்டாச்சுடு பாத்ருமை ஒட்டி நன்றாக வழிவிட்டு வெளியே இருந்தது. முதலில் மிஷினுடன் இணைந்த  குழாயின் வால்வை மூடிவிட்டு ஹோசை கழற்றினான். மீண்டும் வால்வைத் திருகினான். தண்ணீர் நன்றாக வேகமாக வந்தது. ஹோசின் மறுமுனை, மிஷினின் பின்புறம் இருந்ததைக் கழற்றிப் பார்த்த போது, சிறிய வலையில் அதிக அளவில் காய்ந்த தேக்குமரப் பூக்கள் நிறைய வடிகட்டும் வலையில் சிக்கி அடைத்திருந்தால் தண்ணீர் கொஞ்சமாத்தான் செல்லும். சுத்தமாக சிறிய வட்ட வலையை கழுவி சரியாகப் பொருத்தி பழையபடி ஹோசை மாட்டிவிட்டு வால்வைத் திறந்த போது நல்ல வேகமாகத் தண்ணீர் வந்தது. மிஷினை ஆன் செய்து பார்த்தான்.

தண்ணீர் உடனே வேகமாகப் பாய்ந்ததால் மிஷின் பழையபடி வேலை செய்தது. இப்போது விரைவாகத் துணிகளை துவைத்துவிடும் . பாத்ரூமில் கைகால்களை கழுவி வெளிவந்து டூல்ஸ்பையை எடுத்து சரிபார்த்து அறைக்கு வெளிய வந்தான்.

மேலும் ஐந்து நிமிடத்திற்கு பிறகே அழைத்த பெண் மாடிக்கு வந்தார்.

மிகப்பிரகாசமான ஒளிபரவ குறுகிய கால எளிய மேக்கப்பில் ஜொலித்தார். நெருங்கிய உறவினரைப் பார்பது போல தெரிந்தது. பெண்ணுக்கேயுரிய உடல் அமைப்பும் அதற்கேற்றார் போல உடையும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டியது. ஏதோ ஒரு விஷயம் மட்டும் உறுத்தியது. அது என்னவென்று சொல்லத் தெரியவில்லை.

“என்ன சார், சரியா இருக்கா இப்ப? என்னாச்சி என்ன காரணம் தண்ணீ சரியா வராததுக்கு?”

மேல இருக்குற தண்ணீர் டேங்க்குல, காஞ்ச தேக்குமர பூ கொட்டுறது உள்ள விழுந்து கீழ வர்ற பைப்பு வழியா வந்து, வாசிங் மிஷின்ல பில்டர்ல அடைச்சிகுது. அதுனால தண்ணீ உள்ள வேகமா வராம துணிய தொவைக்க ரெம்ப லேட்டாவது. அதான் காரணம்.”

“ஓ அப்டியா, ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா? மாடியில இருக்கும் டேங்க்க பார்த்துட்டு சொல்லுங்க. சுத்தப் படுத்திடலாம்.”

ஒரு வினாடி யோசித்தவன், “சரி, ஏறி பாத்துடுவேன். ஆனா, கிளீன் நா பண்ண மாட்டேன்.”

“ம். ஓகே சார்.”

மொட்டை மாடியில், வீடு கிழக்கு பார்த்த வாசல் என்பதால் இடது புறம் மூலையில் டேங்க் சிமெண்ட் செங்கல் , கலவையில் கட்டப்பட்டிருந்தது. பின் கட்டில் இடமிருந்ததால். நிறைய தேக்குமரங்கள் இருந்தன, இரண்டு மாடி தாண்டி வளர்ந்தவை. டேங்கின் மேல் ஏறிப் பார்த்தான். பிளாஸ்டிக் மூடியாததால் உடைந்திருந்தது. பாதிக்கும் மேல் திறப்பாக இருந்த பகுதி வழியே பூக்களும் இலைகளும் விழுந்து தண்ணீரில் குப்பையாக, அழுக்காக இருந்தது. கீழே வந்து. அப்பெண்ணிடம், “டேங்க் மூடி ஒடஞ்சிருக்கு. அத மாத்தனும், தொட்டிய சுத்தம் செய்யனும். ஒடஞ்ச பக்கமா தேக்குமர பூவும் இலையும் கொட்டி குப்பையா இருக்கு” என்றான்.

“ஒரு உதவி செய்யுங்க. நீங்க கிளீன் பண்ணிட்டு அதுக்கும் சேர்த்து காசு வாங்கிக்கோங்க” என்றார்.

“ஸாரி, அந்த வேலை என்னால முடியாது. வேற தெரிஞ்ச ஆள் இருக்கு நம்பர் அனுப்புறேன். சொன்னீங்கன்னா வந்து கிளீன் பண்ணிட்டு மூடியும் புதுசா போட்டு குடுத்துட்டுப் போவாரு. இந்த தடவ இரும்பு மூடியா போட்டுங்க.” என்றபடி நம்பரை அனுப்பினான்.

“சரிங்க நம்பர் தாங்க. பேசிக்குறேன். உங்களுக்கு ஜீபே இருக்கா? இருந்தா நல்லது. உடனே பணம் அனுப்பிடுவேன். கேஷ் வச்சிகிறது இல்ல, ஸாரி” என்றார்.

“அதபத்தி பேசுனா அரசியலாய்டும். பொதுவா நா பணம்தான் வாங்குவேன் .முடியலன்னா ஜீ பே பண்ணுங்க. உங்க பேர சொல்லுங்க. பணம் வந்துட்டா செல்லிர்றேன்” என்றபடி கூலித் தொகையையும் சொன்னான்.

“ஒகே, நீங்க நோட் பண்ணிக்குங்க. எம்பேரு அனுஸ்ரீ” என்று சொல்லியடி போனிலிருந்து பணம் அனுப்பினார்.

கேட்ட தொகையை அனுப்பியிருந்தார்.

“பணம் வந்துடிச்சிங்க. தாங்க்ஸ். அனுப்பின நம்பர்ல கூப்பிட்டு தொட்டிய பாத்துட்டு ,கூலிய பேசிட்டப்புறம் வேலை பாக்க சொல்லுங்க. அதான் நல்லது. சரி நா கெளம்புறேன்.”

“ஓகே, நானும் காலேஜிக்கு போனும்” என்று கீழிறிங்கினார். திருப்பதியும் பின்னால் இறங்கினான். ஏதோ உறுத்தலாகவே உணர்ந்தான். வீட்டின் வாசலில் வைத்த வாகனத்தை எடுக்கும் போது சிமெண்ட் கலர் குவாலிஸ் அர்பன் குருஸ்னர் வந்து நின்றது. அதிலிருந்து மாநிறத்தில் குள்ளமான நபர் இறங்கி திருப்பதியை பார்தபடி வீட்டினுள் போனார்.

“யாரு வந்துட்டுப் போறது? நா இல்லாத போது கண்ட ஆளெல்லாம் கூப்புடாதேன்னு எத்தன தடவ சொல்றது?” என்ற சப்தமாகப் பேசுவது கேட்டது. லேசாக மனதிற்குள் வெம்மையை உணர்ந்தான்.

“வாசிங்மிஷின் ரிப்பேர்னு சொல்லி ஒரு வாரமாவுது. நீங்க பாக்குற மாறி தெரியல. அதான் அதிர்ஷ்டம் கடையில் அவரோட நம்பர குடுத்தாங்க. வரச் சொல்லி சரி பண்ணினேன். அதுக்கு இப்ப என்னா? நீங்க செய்ய மாட்டீங்க.. செஞ்சா குத்தம் சொல்றது. சரி, எனக்கு நேரமாவுது” என்ற கோபக் குரலும் கேட்டது. ‘இது குடும்ப வெவகாரம். நாம தலையிடக் கூடாது’ என ஒன்றும் பேசாமல் புறப்பட்டுவிட்டான் திருப்பதி.

மூன்று நாட்களுக்கு பிறகு அனுஸ்ரீ போன் செய்தார்.

“சார், நீங்க கொடுத்த நம்பருக்கு போன் பண்ணேன். சிவானந்தம்னு வந்தாரு. டேங்க்க நல்லா சுத்தம் பண்ணதோட, புது இரும்பு மூடிய வாங்கிட்டு வந்து சிமெண்டால பூசி குடுத்துட்டுப் போனாரு. ரெம்ப தேங்க்ஸ்” என்றார்.

“அதுக்கு ஏங்க தேங்க்ஸ்? எங்க வேலையில் அதுவும் ஒன்னு.. அவ்ளோதான். உங்களுக்கு திருப்தினா சரிதான்”

“ஒகே சார். வச்சிடுறேன் பை” என்றார்.

அப்போதே  வாட்சப்பில் பூங்கொத்தும், ஸ்மைலியும் , ஹார்ட்டும் தேங்க்ஸும் வந்தது. அன்றிலிருந்து  தினமும் காலை வணக்கமும் , இரவு வணக்கமும் பத்து நாட்களுக்கும் மேலாக அனுப்பியிருந்தார். திருப்பதிக்கு உறுத்தலும், தவிப்பும் ஏற்பட்டு ஒரு மாதிரியானான். பதிலுக்கு எதுவும் அனுப்புவதில்லை.

கடையிலும், வெளியிலும் வேலையில்லாத நேரம். அம்மாதிரியான காலத்தில் புத்தகம் படிப்பதில் இறங்கும் பழக்கம். நாஞ்சிலாரின் இடமோ வலமோ தொகுப்பை படிக்கத் தொடங்கினான் திருப்பதி,

தவசிப்பிள்ளை, கும்பமுனியை வைத்து நகைச்சுவையுடன் நிதர்சனமான உண்மையைக் கலந்து தரப்பட்ட பதிவுகள். பாதிக்கும் மேல் படித்துவிட்டான். முகம் முழுவதும் புன்னகையுடனும் மனமும் நிறைத்திருந்தது. செல்போன் அழைப்பு வந்தது , சற்றே சலிப்புடன் போனை எடுத்தான். அழைத்தது அனுஶ்ரீ. மணி பன்னிரெண்டாகியிருந்தது

“சொல்லுங்க , என்னாச்சி?”

“வீடு முழுக்க எல்லா பைப்பிலும் தண்ணீர் வர மாட்டேங்குது. கொஞ்சம் அவசரம். உடனே வர முடியுமா?”

“எல்லா பைப்பிலும் வரலியா? பத்து நாளுக்கு முன்னாலதானே சுத்தம் பண்ணோம். திடீர்னு வரலயா?” என்றான்.

“ஆமாங்க காலையில கூட பாத்திரம் கழுவினேன். அப்பல்லாம் வந்ததே! வாசிங் மிஷின்ல துணிய தொவச்சி மாடியில காயப்போட்டேனே.” என்றார்.

“சரிங்க. ஒடனே வர்றேன்”

டூல்ஸ் பையுடன் வாகனத்தில் ஏறி உடனே அவர்கள் வீட்டிற்கு புறப்பட்டான்.

வீட்டை நெருங்கி வாகனத்தை சுற்றுச் சுவரின் அருகே பெரிதாக வளர்ந்திருந்த புங்க மரத்தினடியில் நிறுத்தி பூட்டினான். புங்க மரத்தின் நிழலும், பசுமையும், பச்சை வாசனையும் அற்புதமான குளுமையுடன் பரந்து விரிந்திருந்தது. தெருவில் நடமாட்டமின்றி அமைதியாக இருந்தது. வீட்டின் கேட்டைத் திறந்து உள்ளே நுழைந்தான். கூப்பிட்டுப் பார்த்தான். பதிலில்லை. ஹாலைக் கடந்து இடது புறமிருக்கும் படுக்கையறைக்கும் சாமி அறைக்கும் நடுவில் நின்று மீண்டும் அழைத்தான். பதிலில்லை, படுக்கையறையிலிருந்து பிளாஸ்டிக் வாளியை நகர்த்தும் சப்தம் மட்டும் மெலிதாகக் கேட்டது.

மீண்டும் குரல் கொடுத்தான்.

படுக்கையறைக் கதவை மெதுவாக தயக்கத்துடனே தள்ளித் திறந்தான். அறையில் யாரும் இல்லை. பெரிய அறை. அலங்காரமான தேக்கு கட்டிலும் தலைப்பக்கம் விளக்குகள் வைத்து பிளஸ்டிக் பூக்களால் அலங்கரித்து அழகுடன் இருந்தது. ஒரு அடி உயரமுள்ள ஸ்பிரிங் மெத்தை மேலே காட்டன் போர்வையால் போர்த்தியிருந்தது. படுக்கையின் எதிரே ஐம்பத்தி மூன்று இஞ்ச் டிவியும் மரத்தால் அழகுற வடிவமைக்கப்பட்ட மையத்தில், முன்னும் பின்னும் இழுத்தும் ,சுவரில் சமமாக வைக்கும் விதத்தில் மாட்டியிருந்தனர். அறையின் இடது புற சுவரின் நடுவில் ஏசியும், மூன்று புற சுவரின் நடுவில் வண்ணமயமான விளக்குகளும் , வித்தியாசமான வடிவமைப்பில் சீலிங் பேனும் இருந்தது. வலது மூலையில் பாத்ருமின் கதவு லேசாகத் திறந்திருப்பதை இங்கிருந்தே பார்க்க முடிந்தது.

மேலும் உள்ளே நுழைவதற்குள் பாத்ரும் கதவு திறக்கப்பட்டு முழங்கால் மூட்டு தெரிய தூக்கி மார்புப் பகுதி வரை கட்டியிருந்த உள் பாவாடையும், தோள் மேல் போர்த்தியிருந்த பெரிய தேங்காய் பூ துண்டுடன் அனுஸ்ரீ வெளியே வந்தார். திருப்பதியை பார்த்ததும் புன்னகைத்து, “வாங்க, பாதி குளிக்கும் போது திடீர்னு தண்ணீ வரல.. அதான் போன் பண்ணேன்” என்றார்.

வெட்கமும் பதற்றமுமடைந்த திருப்பதி திகைத்தான்.

“ஸாரி, கூப்பிட்டு பார்த்தேன். பதிவில்லை. அதான் உள்ளார வந்துட்டேன்.”

“அது பராவாயில்ல. என் தப்புதான். வெளியே இருந்துக்கனும். நீங்க இவ்ளோ சீக்கிரம் வருவீங்கன்னு எதிர்பார்க்கல”

“வேலையில்லாம சும்மா புத்தகம் படிச்சிட்டிருந்தேன். அதான் உடனே வந்துட்டேன்.”

“புத்தகமெல்லாம் படிப்பீங்களா?”

“ம் , படிப்பேன். சரி, வந்த வேலைய பாக்கலாமா?”

கலகலவென சப்தமாகச் சிரித்தார்.

“ஓ..சாரி. வாங்க.. வந்த வேலைய பாருங்க” என்று பாத்ரூமுக்கு வழி விட்டார்.

பாத்ருமிற்குள் புகுந்து குழாய்களைத் திருகிப் பார்த்தால் சுத்தமாக தண்ணீரே வரவில்லை. சரி மாடி டேங்கில் தான் பார்க்க வேண்டுமென முடிவுக்கு வந்து திரும்பும் போது, தேங்காய்ப்பூ துண்டில்லாமல், மார்புப் பகுதியில் கைவைத்து முடிச்சிட்ட பாவடையை அவிழ்த்து கால்கள் வழியே நழுவ விட்டு அனுஸ்ரீ நிர்வாணமாக நெருங்கினார். சாதாரணமாக நல்ல உடையணிந்தாலே அழகாகத் தெரிவார். உடையில்லாமல் தினசரி பயிற்சி செய்த உடல் வனப்புடனும் ஈர்ப்புடனும் இருந்தார். எந்த ஆண்மகனும் தடுமாறும் நிலையில் மாசு மருவற்ற துல்லியமான, அருவருப்பில்லாத முழு உடல். சட்டென்று முதல் நாள் வேலைக்கு வந்த போது உறுத்தலாக உணர்ந்தது ஞாபகம் வந்தது. கண்கள் இரண்டும் வெகு ஆழமான, உறுதியான, சோகம் கலந்த அழைப்பு விடுத்ததை மனம் அறிந்தது வெளிப்பட்டது.

அந்நிலையில் திருப்பதியை கட்டிப் பிடித்தார்

ஒரு கணம் சபலம், மறுகணம் பதற்றமும் பயமும் தொற்றியது , திண்மையான மதர்த்த உடலின் அருகாமையும், ஹாமாம் சோப்பும் ஒருவித உடலின் வாசனையும் கலந்து தினறடித்தது, கைகளில், உடலின் உணர்ச்சியின் எழுச்சியால், உணர்ந்த திண்மையால் பாலுணர்வு தூண்டப்பட்டாலும் சில நொடிகளில் மனதை கட்டுப்படுத்தினான்

“விடுங்க.. என்ன இது? இப்படி உங்க வீட்டுக்காரர் பாத்தாருன்னா ரெண்டு பேருக்கும் கஷ்டம். எனக்கு கெட்டபெயரும் வந்துடும். கடைக்குத் தெரிஞ்சா வேலைக்கும் ஆபத்து, விட்டுங்க” என உதறினான். உதறுவது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. நல்ல பலமான பிடியாகத் தெரிந்தது. கைகளை உயர்த்தி விட்டுவிடும் படி கெஞ்சினான். ஒரு நிமிடம் வரை அவரின் இறுகிய பிடி விலகாமலிருந்தது. கையைத் தூக்கியபடியே திருப்பதியும் வெகு அமைதியாக நின்றான்.

என்ன நினைத்தாரோ சட்டென்று முற்றிலும் விலகியவர், கண்ணீருடன் பெரும் குரலெடுத்து அப்படியே பாத்ரும் தரையில் அமர்ந்து உடல் குலுங்க தலை குனிந்து அழுதார்.

“பிளிஸ்.. எனக்கு உதவி செய்யுங்க. உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு!” என அழுதபடி இருந்தார்.

வெளியே போகலாமா வேண்டாமா என்ற முடிவுக்கு வர முடியாமல் தடுமாறினான் திருப்பதி . வெளியே வந்தவன் ஒரு முடிவெடுத்தான். போர்வையை எடுத்துக கொண்டு பாத்ருமிற்குள் நுழைந்து அனுவை முழுக்க போர்த்தி எழுப்பி ஆறுதலாக தட்டிக் கொடுத்து படுக்கையறைக்குள் மெத்தையில் அமரவைத்து, “நா வெளியே ஹால்ல சேர்ல உக்காத்திருக்கேன். டிரஸ் போட்டுகிட்டு வாங்க” என படுக்கையறையை விட்டு வெளியேறி ஹாலில் சேரில் அமர்ந்து என்னவாயிருக்கும் என்று சிந்திக்க ஆரம்பித்தான்.

இரண்டு நிமிடத்திற்குள் பெரிய பூப்போட்ட இறுக்கமான நைட்டியில் முகத்தை துடைத்தபடி வெளிவந்தவர், “உங்களுக்கு டீ யா, காபியா?” என்றார்.

“இப்பவா.. ம், சரி காபி போடுங்க. ப்ளாக் காபியா போடுங்க. சக்கரை பாதியா இருக்கட்டும்” என்றான்.

ஹாலிலிருந்து சமையலறை தெளிவாகத் தெரியும்படி கட்டப்பட்டிருந்தது. காபி போடுவதற்காக ஆயத்தம் செய்து கொதிக்கும் நீரை மௌனமாக உற்றுப் பார்ப்பது தெரிந்தது. ஆவி பறந்து முகத்தில் படிவதும் சில் அவுட் ஆக போட்டோ ப்ரேம் போலத் தெரிந்தது. ஆவி பறக்கும் காபியோடு வந்து முன்னாலிருந்த டீபாயில் வைத்து எனக்கு எதிரில் இருந்த சேரில் அமர்ந்தார்.

“எனக்கும் ப்ளாக் காபியா போட்டுகிட்டேன். இன்னிக்கு குடிச்சி பாக்குறேன். டேஸ்டு எனக்கு ஓகேன்னா இனி ப்ளாக் காபிதான்” என்றார்.

சங்கடமான புன்னகையுடன், “கொஞ்சம் கசப்பாக இருக்கும். பழகிட்டம்னா நல்ல பலன் தரும். பால் கலக்காத காபி ரெம்ப நல்லது” என்றான்.

சற்றே கலகலப்பான சூழ்நிலை உருவானது . மெல்ல பேச ஆரம்பித்தார்

“நீங்க நெனக்கிறது போல அவர் என்னாட புருஷன் இல்ல. நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து வாழுறோம். அஞ்சி வருடத்துக்கு முன்னாடி ரெண்டு பேரும் ஒரே கம்பெனியில சென்னையில வேலை பாத்தோம். புடிச்சி போய் எங்களுக்குள்ள பேசி ஒப்பந்தம் போட்டுக்கிட்டோம். கல்யாணம், குழந்தைங்க வேணாம். சேர்ந்து வாழலாம். நமக்குள்ள தோனுனா கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவெடுத்தோம். ரெண்டு பேருக்கும் சென்னை புடிக்கல. வேலை நேரமும் முன்னாடி பின்னாடி இருந்திச்சி. அவரோட சொந்த ஊர் மன்னார்குடி. இங்க தஞ்சாவூர்ல அவருக்குத் தெரிஞ்சவங்க காலேஜ்ல எனக்கு வேலையும், அவரு ஒர்க் ப்ரம் ஹோமும் வாங்கிகிட்டு மூனு வருசத்துக்கு முன்னாடிதான் தஞ்சாவூர் வந்தோம்.

வந்த புதுசுல ஒன்னும் பிரச்சன இல்ல. நல்லாத்தான் இருந்தாரு. இப்ப கொஞ்சநாளா எம்மேல சந்தேகப்படுறாரு. கல்யாணமும் , குழந்தையும் வேணாம் கடைசி வரை இப்படியே இருப்போம்ன்னு சொல்றதோட, சில சமயம் கடுமையா செயல்படுறாரு. வர வர நம்பிக்கை இழந்துட்டேன். நீங்க வேலைக்கு வந்துட்டு போன நாளா என்னோட போன எடுத்து பாக்குறாரு. அன்னக்கும் எனக்கும் அவருக்கும் சண்டை. சொல்லிப் பாத்தேன். நம்பவே இல்ல. நா என்னா பண்றது? அப்பா அம்மாவ விட்டுட்டு இவர நம்பி வந்துட்டேன். ரெம்ப கஷ்டம். இவரோட இனி இருக்க முடியுமான்னு தெரியல. அவரு பாக்கனும்னுதான் தெனம் உங்களுக்கு மெசேஜ் போட்டேன். சென்னைக்கு போயிருக்காரு. வர ஒரு வாரம் ஆகும்.”

“சரி, அதுக்கு எங்கிட்ட ஏன் இப்படி நடத்துக்கனும்? போன்ல கேட்டுருக்கலாம், வாட்சாப்புல மெசேஜ் போட்டுருக்கலாம்” என்றான்.

“செஞ்சிருக்கலாம். ஆனா, நீங்க வந்துட்டு போனதும் ஏற்பட்ட சண்டையும் , நீங்க எங்கிட்ட நடந்துகிட்ட விதமும் புடிச்சிப் போச்சி. பத்து நாளா உங்களப் பத்தி விசாரிச்சேன். உங்க வயசு, வீடு, பொண்டாட்டி , புள்ளங்க எல்லாம் தெரிஞ்சிகிட்டேன். உங்க முழு விவரமும் இப்ப எனக்குத் தெரியும். பழைய கம்பெனிக்கும் பேசிட்டேன் வேலை தர்றேன் சொல்லிட்டாங்க. அவருக்குத் தெரியாம ஏற்பாடு செஞ்சிருக்கேன்.

அதுக்கு உங்களுக்கும் என்ன சம்பந்தன்னு யோசிக்கிறது தெரியுது.

நா உங்ககிட்ட கேக்க போறது ஒன்னே ஒன்னுதான். கொஞ்ச நாள்ல வெளியூர் போய்டுவேன். உங்கள உட்பட யாருக்கும் தெரியாத ஊருக்கு. எனக்குத் தேவை வாழ்க்கையில ஒரு நல்ல பிடிப்பும் வாழ வேண்டிய உத்வேகமும் தர்ற நல்ல விஷயம். சரி, புருவத்த சுருக்கி மண்டை காய வேண்டாம். பத்துநாளுக்கு மேலா யோசிச்சி இந்த முடிவுக்கு வந்தேன். உங்க மூலமா எனக்கு குழந்தை வேணும், குழந்தை உருவானவுடனே நா கெளம்பிடுவேன். அப்புறம் ஒங்க கண்ணுலயே படமாட்டேன். இது உறுதி. ஒரு தடவ பண்ண தப்ப இன்னொரு தடவ செய்ய மாட்டேன். உங்களயும் பிரச்சனையில இழுத்து வுடமாட்டேன்” என்றார். பெருமூச்சு விட்டபடி சேரில் சாய்ந்து ஆசுவாசமாக தளர்ந்து கண்ணை மூடினார். மனதிலிருந்தவைகளை கொட்டியதால் முகம் மேலும் பிரகாசமாக ஒளிர்ந்தது. எதிர்பார்ப்புடன் நிறைவாக, புன்னகையுடன் இருந்தது.

ஆழ்ந்து அனுவை பார்தபடி காபியை குடித்து முடிந்து டீபாயில் வைத்து கைளை கோர்த்து நெற்றியில் தட்டிக் கொண்டவன், பத்து நிமிடங்களுக்கு மேலாக ஒன்றுமே சொல்லாமல் மனதிற்குள் நடக்கும் போராட்டங்களை ரசித்துப் பார்த்து முடிவெடுக்க முடியாமல் தடுமாறினான்.

மெல்ல தலை நிமர்ந்தவன் அனு அவனயே பார்த்தபடி இருந்ததை கண்டு வெட்கமடைந்து எழப்போனான்.

“இருங்க.. எங்க கெளம்புறீங்க? ஒடனே பதில் சொல்லனும்னு இல்ல. ரெண்டு நாள் கழிச்சி சொன்னாலும் போதும். சமயத்த பயன்படுத்தாத ஆண்பிள்ள நீங்கதான். வேற யாராவது இருந்தா இந்நேரம் வேல முடிஞ்சி போயிருப்பாங்க. உங்க திடமான மனசும் உடலும் எனக்கு ஒரே ஒரு தடவை போதும். வாழ்நாள் முழுக்க வாழ்த்துடுவன். நல்ல முடிவா சொல்லுங்க. மூணு நாள் காத்திருப்பேன். அப்புறம் நீங்க நெனச்சாலும் என்ன பாக்க முடியாது..!”

“சரி, நா கெளம்புறேன்” என்றபடி டூல்ஸ் பையுடன் வெளியே வந்து வாகனத்தில் அமர்ந்து மணி பார்த்தான். இரண்டரை ஆகியிருந்தது. பசியே அப்போதுதான் தெரிந்தது. மனதின் யோசனையாலும் அனுவின் பேச்சைக் கேட்டதாலும் ஒடுங்கியிருந்தது முழு வீச்சாய் கிளம்பியது. வீட்டிற்கு வண்டியைத் திருப்பி வந்து சாப்பிட்டான். மனம் மட்டும் போராட்டத்தில் இருந்தது. மனைவி கூட, “என்ன பலமான யோசனை.. சாப்பிடுங்க” என்றாள்.

என்ன சொல்வது, எப்படி சொல்வது புரியாமல் தவித்தான். இரண்டு நாட்கள் இருக்கிறதே பார்ப்போம் என்று நினைத்தான்.

மூன்று மாதம் கழித்து அனுவிடமிருந்து போன் வந்தது. “வெளியூர் கிளம்புறேன். என்னால தெந்தரவு நிச்சயமா இருக்காது. குழந்தை பிறந்ததும் நல்லா வளர்த்து படிக்க வைப்பேன். நீங்கதான் அப்பான்னு சொல்ல மாட்டேன். உங்க மனவிக்குத்தான் தேங்க்ஸ் சொல்லனும். அவங்களோட சம்மதம்தான் எனக்கு ஆசிர்வாதம். இந்த நம்பர் இனி வேல செய்யாது. பை”

ஆழ்ந்த மெளனத்தில் பதில் சொல்ல முடியாமல் தவித்தான், அதுவும் நல்லதே என மனதை திடப்படுத்த ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டான் திருப்பதி .

-kaliyaperumalveerasamy@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button