இணைய இதழ் 114கவிதைகள்

ராஜேஷ்வர் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

ஆல்கஹாலின் காதல் வாசம்!

இளைப்பாறுதல்
இடைமறிக்கும் பெருஞ்சித்திரம்
தோலுரிக்கும் புதுவானம்
க்ளோரோஃபில் நிரப்பப்பட்ட
முல்லை நிலம்
ஜெலட்டின் குச்சிகளாய்
வெடித்துச் சிதறும் தனிமை
யாவும் அவள் நினைவுகளின்
கிரகணத்துப் பசி!

இதழ் வலிக்கப் பருகும்
லிப்ஸ்டிக் சாயங்களில்
அமிலம் வேறு அவள் வேறாய்
கலைத்துவிடுகிறது
ஒரு கப் உறக்கத்தின்
உதட்டுச் சூடு!

இளைப்பாறுதல்
இன்புறுதல்
கிராமஃபோன் லூப் இசையில்
செத்து மடிதல்
பிணமாகி
நள்ளிரவு தாகத்தில் உயிர்த்தெழுதல்
மதுரம் பருகி
மற்றொரு கிரகணத்தின்
விரதம் முடித்தல்
யாவும்
ஆல்கஹாலின் காதல் வாசம்!

காற்றோடு மலர் வேய்ந்த கூடுகள்!

முல்லை விழுங்கும் திசைகளில்
ஆரோகணம்
ஒன்றிரண்டு மலர் சொரியும்
மணம் பரப்பி
காற்றின் கூடுகளை வேயும்

எங்கோ
தூரத்துக் கிளை முறியும்
மென் அதிர்வில்
மற்றொரு கணம்
வனம் விழித்துக்கொள்ளும்

பின்னிரவில்
கூடு திரும்பும் பறவைக்கு
முறிந்த கிளை
எவ்வகை நியாயம் கூறும்

காற்றோடு
மலர் வேய்ந்த கூடுகள்
மெல்ல சிணுங்கும்!
திறந்து கிடந்த முல்லையில்
ஏனோ
முகாரி ராகம்!

ஈரம் அவிழாத இத்யாதிகள்!

அர்ஜுனன் தேர் பத்து
என்றுதான் துவங்கும்
அந்நாட்களில்
ஓர் மழை இரவின்
பிரபந்தம்

சுவரெங்கிலும்
நிழல் ஓவியம்
சாளரங்களில்
துணுக்குகளாய் கசியும்
நீலப் பிரபஞ்சம்
சுவர் ஏறி
நிறம் சேர்க்கும்

ஒரு கைப்பிடி வெளிச்சம்
இருள் பசியாறும்
பிம்பங்களின்
நிரல் விரியும்

மழை ஓய்ந்த பின்னிரவில்
நீர் கூடி
நிலவை மடித்து
நிறை கூடும் நிலம்
மற்றுமொரு
சூரியப் பொழுதின்
திறவுகோல்!

rajeshp62471996@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button