சிறுகதைகள்
Trending

இச்சை – ஹரிஷ் குணசேகரன்

சிறுகதை | வாசகசாலை

போரூர் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் அமைந்த நிறுவனத்தில் பணிபுரிபவன், சனி ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு தன் சொந்த ஊரான கோவைக்கு வந்திருந்தான். தன் வாழ்க்கை தனிமையால் நிறைந்து பெண் வாசனை என்றால் என்னவென்றே தெரியாமல் சுயமைதுனம் எனும் வடிகாலால் ஆறுதல்பட்டு, காமோ சோமோ ரீதியில் கழிவதை வெறுத்தான்.

தனக்கான துணையைத் தேடிக் கொள்வதில் அவன் முனைப்பு காட்டாமல் இல்லை. உண்மையில் தனக்குப் பெண் தோழிகள் இல்லாமல் போனதற்கு என்ன காரணமென்று யோசித்து யோசித்து அயர்ந்தான். அல்ஜீப்ராவும் ஆர்கானிக் கெமிஸ்ட்ரியும் எப்படி தனக்கு கைவரவில்லையோ, அதுபோலவே காதலும் சேரவில்லையென கல்லூரி நாட்களில் முடிவுக்கு வந்து கலங்கினான். சட்டென ஈர்த்து பிடித்துப் போன, பசங்கள் பார்வையால் மொய்த்து தள்ளிய ரேஷ்மாவை ஒருதலையாக காதலித்தான். யாரோ ஒருவனோடு வெளி பேருந்தில் பயணித்தவளை முத்தமும் சிரிப்புமாக கண்டதும் வெறுக்கத் தொடங்கினான். தன் தகுதிக்கு மீறிய, இத்தனை அழகான பெண் பின்னால் போனால் இதுதான் கதி என்று நினைத்து வனஜாவை காதலிக்கத் தொடங்கினான். வனஜா அத்தனை லட்சணமில்லை, ரேஷ்மாவைப் போல வட்ட முகம் கொண்டிருக்கவில்லை, முக்கியமாக பசங்கள் அவளைக் கண்டு கொள்ளவில்லை, தனக்குப் போட்டியே இல்லை என்று காரணங்களை அடுக்கி தினசரி வகுப்பறையில் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தான்.

கல்லூரி விடுதியில் ஒரு ஜிபி மெமரி கார்ட் முழுக்க ஆபாசப் படங்கள் சுற்றலில் இருக்க, கெஞ்சிக் கேட்டு வாங்கி தன் மொபைலில் போட்டான். அவனுடைய ஃபோன் பழைய மாடலாக இருந்ததால், அவ்வளவு மெமரியை ஏற்றுக் கொள்ள முடியாமல் புகைந்து போனது. அதற்கு வைரஸ்தான் காரணமென்று வலுவாக சந்தேகப்பட்டு அடுத்த நாளே வீட்டில் அடம்பிடித்து பத்தாயிரம் மதிப்புள்ள புதுவரவு கைபேசியை வாங்கி, புது மெமரி கார்டில் ஆபாசப் படங்களை ஸ்கேன் செய்த பின் ஏற்றி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டான். அதன் பிறகு யாருக்கு என்ன படம் வேண்டுமென்றாலும் அவனையே தேடி வந்தார்கள். ஆசை ஆசையாக பெற்றோர் வைத்த ஷங்கர் எனும் பெயருக்கு முன்னால் ‘பிட்டு’ சேர்ந்து கொண்டது. பிட்டு ஷங்கர், பிட்டு ஷங்கரென யாராவது கேலி செய்தால் “ஒக்காளி இர்றா உன்னை..” கிரிக்கெட் மட்டையை ஆவேசத்தில் எறிவான். ஒருமுறை அப்படி எறிந்தபோது அறை வாசலில் படுத்திருந்த நாய் பதறியடித்து ஓட, அந்த வழியாக வந்த வார்டன் அந்நாய் குரைத்ததில் பயந்து செருப்பு தடுக்கி விழுந்தார்.

அவர் தடுமாறி எழுவதைப் பார்த்ததும் அவனுக்கு சிரிப்பு வந்து விட்டது. இருந்தும் சமாளித்து மட்டையை அவர் பார்ப்பதற்குள் அப்புறப்படுத்தி, “சுச்.. சுச்.. என்னச்சு சார்?” என ஒன்றும் தெரியாதவன் போல முகத்தை வைத்துக் கேட்டான்.

“தம்பி.. அதென்ன கைல?” முட்டியைத் தேய்த்துக் கொண்டு கேட்டார்.

“சார்.. ப்ளீஸ்..” அவன் கெஞ்சுவதைப் பொருட்படுத்தாமல் கைபேசியைப் பிடுங்கி அடுத்த காலையில் கல்லூரி முதல்வரிடம் ஒப்படைத்தார். விடுதியில் செல்பேசி வைத்திருக்கக் கூடாது என்பது விதி!

பெயருக்கு சம்பிரதாயமாக இதுபோன்று சில ரெய்டுகள் நடக்கும் என்பதை அறிந்திருந்தான். என்றாலும் பாஸ்வேர்ட் போட்டு லாக் செய்திருக்கிறோமா இல்லையா? மாட்டிக் கொண்டால் என்ன செய்வது என்கிற பயத்தில் பதற்றத்தில் இரண்டு வாரங்களைக் கழித்தான். நடையாக நடந்ததன் பலனாக ஃபோனை திருப்பித் தந்தார்கள். திறந்து பார்த்தவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மெமரி காட்டாததால் சந்தேகித்து பின்னால் கழற்றிப் பார்த்தபோதுதான் தெரிந்தது, மெமரி கார்டை யாரோ உருவி விட்டார்கள்!

“அடப்பாவிங்களா… படம் பாக்கணும்னா கேட்ருக்கலாமேடா. பிக்காளித்தனமா பண்ணிட்டு இருக்கீங்க”, அமைதியாக புலம்பினான்.

போதாக் குறைக்கு இவனைப் பார்க்கும்போதெல்லாம் அந்த நாய் விடாமல் குரைத்தது. “ஒக்காளி டே… நாயை என்னடா பண்ண?” – அவன் அறை நண்பர்கள் கேலி செய்து விழுந்து விழுந்து சிரித்தனர்.

“உன்னை ஏன் எல்லாரும் பிட்டு ஷங்கர்னு கூப்டுறாங்க..? காப்பி அடிப்பியா?” ஒருநாள் இன்ஜினியரிங் லேபில் வைத்து வனஜா கேட்டதும் சுற்றிலும் சிரிப்பு சத்தம் கிளம்பியது.

“ஆமாமா.. காப்பி பேஸ்ட் அடிப்பான்” யாரோ ஒருவன் கிண்டலடிப்பது கேட்டது.

அவமானம் தாங்க முடியாமல் விடுதியை விட்டு ஒரு வாரமாக அவன் நகரவே இல்லை. ஃபோன் மெமரியில் எஞ்சியிருந்த ஆபாசப் படங்களை அழித்து விட்டு ஜன்னல் பக்கம் உட்கார்ந்து மழை மண்ணை முத்தமிடுவதை, மண் வாசணை நாசியை நிறைப்பதை, சாரல் முழங்கையில் தெறிப்பதை அனுபவித்தான். தனக்கு சமாதானம் சொல்லிக் கொண்டு, மனதை ஒருமுகப் படுத்தி புதிதாக ஏற்றிய சாமி பாடல்களை சத்தமாக வைத்துக் கேட்டான்.

“டே.. பிட்டுப் படத்தை எல்லாம் எங்க ஒளிச்சு வெச்சிருக்க? சொல்லிடு” – பக்கத்து அறை வெங்கட் கோபமும் தவிப்புமாக கேட்டதும் குபீர் சிரிப்பு சத்தம்!

**குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்..** பாடல் ஒலிக்கத் தொடங்கியதும் வெங்கட், “அடங்கோ.. ரீட்டா ரெக்கார்ட் டேன்ஸ்தான இது?” என்றான். அறையில் இருந்த எல்லோரும் வெடித்து சிரித்தனர்.

விடாமல் தன்னை இந்த அவப்பெயர் துரத்துவதால் எரிச்சலுற்று நெற்றி நிறைய பட்டையடித்துக் கொண்டு வகுப்பறைக்குச் சென்று முதல் வரிசையை நிறைத்தான். அன்று முழுக்க வனஜா தன்னை பார்த்துக் கொண்டே இருந்ததை உணர்ந்ததும் வெட்கம் கலந்த சிரிப்பை உதட்டில் தவழ விட்டு சகஜ நிலைக்குத் திரும்பினான். அடுத்த வாரத்தில் தன்னை நோக்கி வனஜா தயங்கி தயங்கி வருவதைக் கண்டதும் இவன் இதயம் படபடத்தது.

“ஓய்… உன்கிட்ட கொஞ்சம் பேசணும். நீ தப்பா எடுத்துக்கலைன்னா…”

முகம் மலர்ந்து “சொல்லுங்க..” என்று அவள் கண்களையே பார்த்தான். அத்தனை அழகான பிரகாசமிக்க கண்களை ஏறிட்டு அவனால் பார்க்கவே முடியவில்லை. அவனுள் காதல் பொங்கி வெட்கமாக வெளிப்பட்டது.

“தப்பா எடுத்துக்காத நான் வந்து பேசுறதால. பொண்ணுங்கள்ல விட பசங்கள்லதான் எனக்கு ஃப்ரெண்ட்ஸ் ஜாஸ்தி”

“…”

“ஆனா நம்ம கிளாஸ்ல உன்கிட்ட மட்டும்தான் பேசிட்டு இருக்கேன்… ஏன்னு தெரில”, உதட்டைப் பிதுக்கினாள்.

“ஹ்ம்ம்..” அவனது இதழ்களில் புன்னகை வழிந்தது.

“எங்க ஹாஸ்டல்ல இருக்க பொண்ணுங்க நீ வெச்சிருக்க படம் வேணும்னு கேக்றாங்க. நீ என்கிட்ட நல்லா பேசுறதால கேக்க சொல்லி கம்பெல் பண்றாங்க.”

அவன் அதை சற்றும் எதிர்பார்க்க வில்லை. முகத்தில் சலனத்தை காட்டிக் கொள்ளாமல், “நான் உன்னை லவ் பண்றேன்.. உனக்கும் அப்படி ஒரு ஃபீல் இருக்குமோன்னு நெனச்சேன். ப்ச்ச்..” என்று பெருமூச்சு விட்டான். பெரிய பாரத்தை இறக்கி வைத்தது போல உணர்ந்தான். அவ எதுவும் சொல்லாம போயிட்டா கூடப் பரவாயில்லை, என்றுதான் நினைத்தான்.

“வாட்.. ச்சீ..”, வெடுக்கென்று திரும்பி தன்னுடைய இருக்கை நோக்கிச் சென்றாள்.

அதன் பிறகு அவன் எந்தப் பெண்ணிடமும் காதலை சொல்லவில்லை. சொல்ல நினைத்தாலும், “ச்சீ..” குறிலல்ல நெடில் என நீண்டு ஒலித்ததை மறுபடி மனத்திரையில் ஓட்டி, பின்வாங்கி சோர்ந்தான். ஒருவேளை தன்னுடைய பெயர் கெடாமல் இருந்திருந்தால், வனஜா தன்னை ஏற்றுக் கொண்டிருப்பாள் என்று உறுதியாக நம்பி அடிக்கடி வருத்தப்படுவான்.

ஆபாசப் படங்களை அவனுக்கு பத்தாம் வகுப்பு சிறப்பு வகுப்பின்போது, சுபயோக சுபமுகூர்த்த தினத்தில் அறிமுகப்படுத்திய ஸ்கூல் சீனியர்களை சபித்தான். முதல்முறை கலவியை திரையில் கண்டபோது இண்டர்நெட் கஃபேவை விட்டெழுந்து துரித கதியில் சைக்கிளை வீடு நோக்கி செலுத்தினான். வருகிற வழியில் உயிர் ஜனனம், கலவி இன்பம் குறித்து யோசித்து தனக்குள் நகைத்தான். தமிழ் சினிமாவில், சீரியல்களில் காட்டுவது போல கட்டிப் பிடித்து புரண்டால் குழந்தை பிறந்துவிடும் என்கிற இத்தனை நாள் நினைப்பில், சம்மட்டி அடி விழுந்தது. உப்பிய தடித்த மார்பகங்களும் பீய்ச்சி அடிக்கப்பட்ட விந்துகளும் அவன் சிந்தையை விட்டு அகலாததால் உடல் கொதித்தது.

அன்று அவனைப் பிடித்த ஜுரம் இன்றும் விடாமல் வாட்டி வதைக்கிறது! அடுத்த தினம் அதே இண்டர்நெட் கஃபெவில் ஒரு மணி நேரத்திற்கு நாற்பது ரூபாயை செலவழித்து சீனியர்கள் காட்டிய இணையதளங்களை தேடிக் கண்டடைய முடியாமல் வருந்தினான். சரி போகட்டுமென்று அப்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்த ஆர்க்குட்டில் கணக்கு தொடங்கி உடன் படிக்கும் பெண்களுக்கு, முகம் தெரியாத பெண்ககுக்கு கலந்து கட்டி நட்பு அழைப்பு விடுத்தான். ஷாலினி என்று தேடி மது ஷாலினி, ஷாலினி பேபிமா, ஷாலி ஷாலி, ஷாலு ஜார்ஜ், ஷாலினி சைனி எல்லாருக்கும் பாராபட்சம் பார்க்காமல் ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் தந்தான். இன்பாக்ஸ் கதவை மீண்டும் மீண்டும் தட்டியும் ஒரு பிரயோஜனமும் இல்லை!

படிப்பு ஏறாத அந்த சீனியர்கள் சீக்கிரத்தில் தடபுடலாக திருமணம் செய்து கொண்டனர். தன்னுடைய திருமணம் குறித்து பெற்றோர் எப்போதுதான் முடிவெடுப்பார்களோ? உள்ளுக்குள் ஏங்கினான். வேலை இல்லாதவனுக்கு யார் பெண் தருவார்கள்?

ஒருநாள் வீட்டு ஹாலில் மறைவாக உட்கார்ந்து, ஹெட் ஃபோன் மாட்டி கிளுகிளுப்பான கவர்ச்சி பாடல்களை ரசித்துக் கொண்டிருந்தான். திடீரென்று முகத்தின் முன்னால் ஆஜரான அப்பா முறைத்ததும்தான் அவனுக்கு விளங்கியது, ஹெட் ஃபோன் கழண்டு போயிருந்தது.

**கட்டிக்கவா.. ஒட்டிக்கவா.. கட்டிக் கவா, கவா கவா**

திட்டிக்கவா.. திட்டிக்கவா.. திட்டிக் கவா, கவா.. – பாடாமலேயே அவர் ஏசியதில் ரோஷம் பொத்துக் கொண்டு சென்னைக்கு பேருந்து ஏறி தீவிரமாக வேலை தேடி, சோற்றுக்கு சிங்கி அடித்து பிறகு சாஃப்ட்வேர் டெவலப்பராக பணியில் சேர்ந்தான்.

சிறப்பாக திறமையாக செயல்பட்டு அலுவலகத்தில், ஏன் வீட்டிலும் கூட நன்மதிப்பைப் பெற்றான். அவனுக்கு செவ்வாய் தோஷமும் ராகு கேதுவும் இருப்பதால் திருமணமாக நாள் பிடிக்குமென்று ஜோசியர் சொன்னதைக் கேட்டு இடிந்து போனான். இன்னும் எத்தனை நாள்தான் தன் கையே தனக்கு உதவி என்று வாழ்வதாம்? இவனுங்களுக்கு மனசாட்சியே இல்லை. ஜாதி பாத்து தோஷம் பாத்து அந்தஸ்து பாத்து கல்யாணம் பண்றதுக்குள்ள எத்தனை டிஷ்யூ பேப்பரை நனைக்க வேண்டி இருக்குமோ? நினைத்து நினைத்து மனதுக்குள் புழுங்கினான். இவர்களை நம்பினால் பிரயோஜனம் இல்லை, தன் துணையைத் தானே தேடி முயங்குவதுதான் உயிர்களின் இயல்பென்று சிந்தித்து ஆஃபிஸ் டைரக்ட்ரியில் இருந்து பிடித்த பெண்களின் எண்களை எடுத்து வாட்ஸப் செய்தான். ஒருத்தரும் கண்டுகொள்ளாததால் துவண்டு போய் மறுபடியும் ஆபாச இணையதளத்தின் பக்கம் கரை ஒதுங்கினான். உடல் பசியிலும் வயிறு பசியிலும் தூக்கம் வராது நடுநிசியில் புரண்டு படுத்தான்.

மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக தினவெடுத்து பணியிடம் செல்லாமல், அறையிலேயே முடங்கி ஒமேகிளில் முகம் காட்டாமல் சட்டையைக் கழட்டி அரட்டையடித்தான். அதில் நிர்வாணமாக பேசிய பெண்ணிடம் மயங்கி ஸ்கைப் ஐடி வாங்கி, முகம் காட்டாமல் இவனும் ஆடைகளைத் துறந்தான். இரண்டு நாட்கள் சென்றதும் அவள் தன்னை முடக்கியது கண்டு கவலைப்பட்டான்.

போனால் போகட்டும் போடா, என்று இந்தமுறை க்ரெய்க்ஸ் லிஸ்டில் சல்லடை போட்டு, பழக தோழிகளை தேடினான். விபச்சார தரகர்களின், மாடல் அழகிகளின் விளம்பரங்களைக் கண்டு அதிர்ந்தான். இருந்தும் முயற்சி செய்து பார்க்க எண்ணி, ப்ரியா ஸ்வீட்டியின் எண்ணை அழைத்தான்.

தன் கணவரிடம் பேசிக் கொள்ளும்படி சொல்லி ஃபோனை கை மாற்றியதும் ஒருத்தன், “ஹலோ.. பாஸ் மூவாயிரத்தி ஐந்நூறு ரூபா. எங்க எடத்துல..”.

தயங்கி தயங்கி, “ஒன் ஹவருக்கா?” என்று கேட்டான்.

“எதே.. டேய்.. ஒரு ஷாட்டுக்குடா அது. உட்டு ஆட்டணும்னா காசு தரணுன்டா. வாய்க்கு தனி..”

கணவனே மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவானா? அவர்கள் சொல்லும் இடத்திற்கு எப்படி நம்பி செல்வது?  குப்பென்று வியர்த்து விட்டது அவனுக்கு. தான் தவறான பாதையில் பயணிப்பது நல்லதல்ல என்று சிந்தித்து, மீண்டும் போகட்டும் கழுதையென்று ஆபாச இணையதளத்தில் மிகுதியான நேரத்தை செலவழித்தான். கணக்கு வழக்கு இல்லாமல் சுயமைதுனம் அனுபவிப்பதால் நரம்பு புடைப்பதாகவும் குறி கோணலாவதாகவும் கருதி குற்றவுணர்ச்சி கொண்டான். முத்தாய்ப்பாக சேலம் சித்த வைத்தியர் ஒருவர், “பேராண்டிகளா.. ஏன்பா இப்படி பொண்ணுங்க வாழ்க்கைல விளையாட்றீங்க? நீங்க எல்லாம் ஏன் கல்யாணம் பண்ணிக்றீங்க? கொழந்தை பாக்கியம் இல்லாம என் பேத்திங்க கஷ்டப் படுறதை தெனமும் பாக்றேன். தயவு செஞ்சு சுய இன்பம் – மாஸ்ட்ருபேஷன் செய்றதை விடுங்க. உங்களை எல்லாம் பேரனா நெனச்சி கேட்டுக்றேன். உங்களுக்குப் புண்ணியமா போகும். எங்களை கிளினிக்ல வந்து ஒடனே பாருங்க..” என்று பேசிய காணொளியைப் பார்த்ததும் பேயறைந்தது போல உறைந்தான். கடைசியில் சிட்டுக் குருவி லேக்கியம் சாப்பிடும் நிலைக்குத் தான் தள்ளப்பட்டால் என்ன செய்வது? பயம் தொற்றிக் கொண்டது.

இனி சுயமைதுனமே அனுபவிக்க கூடாதென்று முடிவு செய்தான். ஆமாம், ஆனால் நேரடியாக ஒருமுறையாவது கலவி இன்பத்தில் திளைக்க எத்தனித்தான். வேறு வழியில்லை என்பதால் விலை மாது ஒருத்தியின் எண்ணை மீண்டும் இணையத்தில் கண்டடைந்து அழைத்தான். அன்று தான் பெங்களூரில் இருப்பதாகவும், தன்னுடைய ஒரு இரவிற்கான ஃபீஸ் இருபதாயிரம் என்றும் சொன்னாள். நேரில் இவளைப் பார்த்தது கூடக் கிடையாது. எப்படி நம்பி இவள் கேட்கும் பாதி முன்பணத்தை செலுத்துவது? மலைத்துப் போய், தான் என்னென்ன செய்ய அனுமதிப்பாள் என்று கேட்டான். வாய் வழிப் புணர்ச்சியில் ஈடுபடும்படி தன்னை நிர்ப்பந்திக்க கூடாதென்றும் நிரோத் கட்டாயம் அணிய வேண்டுமென்றும் சொன்னாள். அவள் இருப்பை சந்தேகித்ததும், நான்கைந்து புகைப்படங்களை மின்னஞ்சல் செய்தாள். அவள் அழகில், சதைப்பிடிப்பான உடலில், தேஜஸான முகத்தில் மயங்கினான். அவள் ஏர் ஹோஸ்டஸாக இருக்க கூடுமென்று கருதி, பணம் செலுத்துவதற்கான அக்கவுண்ட் நம்பரை கேட்டான். இணைய சேவையைப் பயன்படுத்தி அந்த வங்கிக் கணக்கை தனது பயனாளராக சேர்த்த போதுதான், அந்த அக்கவுண்ட் கமல் மிஷ்ரா என்பவருக்கு சொந்தமானது என்பதை அறிந்தான். அவளுடன் ஹேங்-அவுட்டில் ஆங்கிலத்தில் உரையாடினான்..

“பேபி.. கமல் மிஷ்ரா யாரு?”

“ஓ.. அவரு.. அவரு என் ஹஸ்பண்ட்”

“ஓரு ஹஸ்பண்டே எப்படி வொய்ஃபை இந்த வேலை செய்ய அனுப்புவாரு? எனக்கு இதுதான் புரியவே மாட்டேங்குது உங்க கிட்ட. அடக் கடவுளே..”

“…”

சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு அவள் அழும் சத்தம் கேட்டது.

“பேபி.. ஸாரி. ஐ ஆம் ஸாரி!”

தொடர்பைத் துண்டித்து விட்டு, தாங்கள் வேலை செய்த நிறுவனம் சம்பள பாக்கி வைத்திருப்பதாகவும் வேறு வழியில்லாததால் வறுமை காரணமாக இதை செய்வதாகவும் சொல்லி குறுஞ்செய்தி அனுப்பினாள். பத்தாயிரத்தை அந்த வங்கி கணக்கில் செலுத்திவிட்டு அவளை மீண்டும் அழைத்தான். அவள் அழைப்பை நிராகரித்ததும் அவனுக்கு பகீரென்று இருந்தது. சில மணி நேரங்களுக்குப் பிறகு, தன்னுடைய நிர்வாண புகைப்படத்தை பகிர்ந்து, தான் வாடிக்கையாளருடன் இருந்ததாக சொல்லி மன்னிப்பு கேட்டாள்.

“ஹாய்.. அட்வான்ஸ் பணம் கட்டிட்டேன். எப்ப மீட் பண்ணலாம். சீக்கிரம் மீட் பண்ணலாம், ப்ளீஸ்”

“பணம் வந்துடுச்சான்னு கமல்ஜி பாத்துட்டு சொல்லுவாரு. அது வரைக்கும் இதை வெச்சுக்கோ..” என்று அந்தரங்க உறுப்பிலிருந்து நீர் வழியும் புகைப்படத்தை அனுப்பினாள். மீண்டுமொரு முறை சுயமைதுனம் அனுபவித்து விட்டு உறங்கிப் போனான்.

எழுந்ததும் குளித்து கிளம்பி, பெங்களூர் செல்வதற்காக துணிகளை ட்ராலியில் அடுக்கி, அவளை அழைத்தான். அவள் யாருடனோ பேசிக் கொண்டிருக்கிறாள் என்று தெரிய வந்ததும் பத்து நிமிடம் கழித்து மீண்டும் அழைத்தான். அவளுடைய எண் அணைத்து வைக்கப் பட்டுள்ளதாய் சொல்லப்பட, தலையில் அடித்துக் கொண்டு அழுதான். பத்து முறையாவது அழைத்திருப்பான், ஆனால் வீண்தான். பணம் இழந்ததைக் காட்டிலும், அவள் ஏமாற்றியதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. போலீசை அணுகும் எண்ணம் அவனுக்கு இல்லவே இல்லை. இந்த விஷயத்தில் ஏமாந்ததாக பெற்றோர், உற்றார் உறவினர்களுக்குத் தெரிந்தால் அதை விட அவமானம் ஏதுமில்லை என்பதால் நவதுவாரங்களையும் பொத்திக் கொண்டு ஆஃபிஸ் கிளம்பினான்.

சொல்லாமல் கொள்ளாமல் ஒரு வாரம் காணாமல் போனதால் மேனேஜர் செம காண்டில் இருந்தார்.

“ஏன்பா.. லீவ் கூட அப்ளை பண்ணலை, ஃபோன் பண்ணா எடுக்கலை.. நீ அப்ஸ்காண்ட் ஆகிட்டன்னு நெனச்சோம். வேற ஆளை எடுத்துட்டோம்பா” என்று கை விரித்தார்.

அப்பாவுக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்ய நேர்ந்ததால், என்ன செய்வதென்று தெரியாமல் அலைந்து திரிந்த நெருக்கடியில் ஃபோன் எடுக்க முடியவில்லை என்று புளுகினான். உச்சு கொட்டிய மேனேஜர், தான் எதுவும் செய்ய முடியாதென்றும் அந்த மாதத்தில் வேலை செய்த பத்து நாட்களுக்கு கம்பெனி பாலிஸிபடி சம்பளம் வாங்கித் தருவதாகவும் சொல்லி அனுப்பி வைத்தார்.

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என்கிற கதையாக வேறு வேலை தேடிக்கொண்டு அடக்கி வாசித்தான். அவசரமாக போரூர் நிறுவனத்தில் சேர நேர்ந்ததால், அவன் போதிய சம்பள உயர்வை வாங்க முடியவில்லை. கிட்டத்தட்ட பழைய சம்பளத்தில் தேங்கும் சூழலுக்குத் தான் மட்டுமே காரணமென்பதால் தன்னை நொந்தான்.

குடும்பத்திடமிருந்து தன்னை தனிமைப் படுத்திக் கொண்டு சமீபத்தில் கேள்விப்பட்ட, உடன் வேலை செய்பவன் அறிமுகப்படுத்திய விஸ்பர் செயலியை நோண்டிக் கொண்டிருந்தான். அநாமதேயமாக புகைப்படங்களையும் காணொளிகளையும் பகிர்ந்து கொள்ளக் கூடிய அந்த செயலியில் அந்தரங்க உரையாடலில் ஈடுபட்டு ஆறுதலடைந்தான். பிரியா ஸ்வீட்டிகளையும், மது கேண்டிகளையும் நிஜமென்று நம்பி தொடர்பு எண்ணை அனுப்பி ஓய்ந்தான்.

அவனுக்கு மறுபடியும் கிலேசம் பிடித்தது. தன்னைச் சுற்றி ஐந்து மைல் தொலைவினுள் இருக்கும் பெண்களின் பதிவுகளைத் தேடும்போது, தாராவை கண்டடைந்து அளவளாவினான். அவள் சென்னையில் ஒரு கல்லூரியில் மூன்றாமாண்டு படிப்பதாகவும், தன்னைப் போலவே விடுமுறைக்காக கோவை வந்திருப்பதாகவும் சொன்னாள். சனிக்கிழமை முழுவதும் பேசி பிடித்துப் போய் ஞாயிற்று கிழமை புகைப்படங்களையும் வாட்ஸாப் எண்ணையும் பறிமாறிக் கொண்டனர். அவளுடைய முகம் பார்க்க அழகாக இல்லையென்றாலும் கொழுத்த தேகத்தை பசியால் அல்லாடும் நாவினால் தீண்ட ஆசை கொண்டான். அவளோடு உலவிரவு செல்லும் ஆசையை சொல்லவும் செய்தான்.

“ஹே பேபி.. டேட் போலாமா. எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு”

“அச்சோ.. எனக்கு ஆல்ரெடி பாய் ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்களே”

“அய்யோ.. நானும் இருந்துக்றனே, ப்ளீஸ்”

“ஹா ஹா.. அப்ப இன்னைக்கே மீட் பண்ணலாமா?”

“நான் சென்னைக்கு கெளம்பிட்டு இருக்கனே! ட்ரெய்ன் டிக்கெட் கூடப் போட்டாச்சு”

“கேன்சல் பண்ணு மேன்.. அழகான பொண்ணு கூடப் போறியா, இல்லை தனியா சீட்டை தேய்ச்சிட்டு போறியா?”

அழகான பொண்ணு என்பதில் அவனுக்கு உடன்பாடில்லை என்பதால், “அடடே.. அந்த அழகா இருக்றவங்க யாரு?” கேட்டான்.

“நான் தான்டா.. கடைசி வரை நீ சிங்கிள் தான். ஹாஹா..”

அவள் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு வருவது போல, கட்டியணைப்பது போல, கைகோர்ப்பது போல கற்பனை செய்து வெட்கப்பட்டு அசடு வழிந்தான்.

“ஹய்யோ.. வெட்கப் படுறியா? ஹா ஹா..”

விடுமுறை தினத்தில் கோவையிலிருந்து சென்னை செல்லும் தனியார் பேருந்துகளின் டிக்கெட் விலை இரண்டு மடங்காக கூடியது கண்டு அரசாங்கத்தை திட்டினான். அவ்வளவு பணம் செலவு செய்ய விருப்பமில்லாததால் சுமாரான பேருந்தொன்றில் சாய்ந்து உட்கார்ந்து செல்லும்படியாக அருகருகே சீட்டுகளைப் போட்டான்.

சரியாக பேருந்து கிளம்பும் நேரத்தில் வாட்ஸப்பில் கூப்பிட்டு, “சாரி டா.. என் பெஸ்ட் ஃப்ரெண்ட் ஒருத்தன் கூட திருப்பூர் வந்தேன். நான் அவிநாசில ஏறிக்றேன்..” என்றாள்.

‘என்ன இவ.. எப்ப பாரு பசங்க கூடயே சுத்திட்டு இருக்கா? சரி இல்லையே இவ. செலவு வெச்சிடுவாளோ? ஜாக்கிரதையா இருக்கணும்டா’ நினைத்துக் கொண்டான்.

கருமத்தம்பட்டி வந்ததும் அவன் இதயத் துடிப்பு அதிகரித்தது.

“என்ன இன்னும் பஸ்ஸை காணோம்? தொல்லை ஒழிஞ்சதுன்னு விட்டுட்டு போய்ட்டியா?” வாட்ஸாப் வழியே கேட்டாள்.

“இல்லை இல்லை.. அடுத்து அவிநாசி தான்.”

“ம்..”

“லவ் பண்ணலாம் தோழி..”

“ஹா ஹா..”

கதவை திறந்து கொண்டு கண்கள் அலைபாய ஒருத்தி வந்தாள். அவள் அனுப்பிய புகைப்படங்களில் எழுபது சதவீதம் ஒத்துப் போனதால், “தாரா.. இங்க..” என்று கையசைத்து கூப்பிட்டான். அவள் எடை இன்னும் கூடியிருந்தது.

சீட்டில் இருந்து எழ முயற்சித்தவனை பாதி அணைத்து ஹாய் சொன்னாள்.

இத்தனை நாள் பெண் வாசனைக்காக ஏங்கியவன் அவளினின்று கிளம்பிய சுகந்தம் பிடிக்காமல் முகம் சுழித்தான். ‘என்ன எழவு பெர்ஃப்யூம்டா இது.. ஓசில இவளுக்கு கெடச்சிருக்குமோ, இந்த சீட் மாதிரி’ என்கிற எண்ணம் வந்து போனது.

“சோ.. ஹவ் ஆர் யு”

“ம்.. நல்லாருக்கேன். ஹவ் அபவுட் யு?”

“செமய்யா இருக்கேன்.. நீயே பாரு” என்று சொல்லி தோளளவு கூந்தலை ஒதுக்கினாள்.

அவள் மேலங்கிக்குள் பார்வை வீசி மார்பகங்களை வெறித்தான். அவள் அதைக் கண்டு கொண்டு சமாளித்து “கமான்..” நெஞ்சிள் தட்டினாள்.

ஃபோனை எடுத்து “ஓரு செல்ஃபி எடுத்துக்கலாமா..” – கேட்டாள்.

முகத்தை அவளருகே கொண்டு சென்றதும், “சீஸ்..” என்றாள்.

“நம்ம பேசி ரெண்டு, மூணு நாள் தான் இருக்கும். அதுவும் ஆன்லைன்ல தான் மீட் பண்ணோம். ஆனா ரொம்ப நாள் பழகுன மாதிரி இருக்குல்ல..” பேசிக் கொண்டே போனாள்.

“எக்ஸாக்ட்லி.. ட்ரூ..”

“ஏன் வெக்கப்படுற.. இங்க வா” என்று இடுப்பைக் கிள்ளினாள்.

“கிச்சிலிக்கா பண்ணா சிரிப்பு வருமே.. ஹா, ஹா..”

“எதே.. இது என்ன புது வெஜிட்டபிளா இருக்கு? ஹா ஹா..”

சரியாக சீட்டில் சாய்ந்து படுத்ததும் குளிருக்குப் போர்த்தியிருந்த சால்வையில் அவளுக்கு இடம் தந்தான். நடத்துநர் விளக்கை நிறுத்தி கதவை சாத்தி முன்பக்கமாக ஓட்டுநரிடம் பேச்சு கொடுக்க சென்றார். அவள் கண்களையே பார்த்துக் கொண்டிருந்ததால் பெருகிய போதையில் சொக்கிப் போனான்.

“என்ன சார்.. என்னாச்சு” ஹஸ்கி குரலில் கேட்டாள்.

“…”

அவன் கரங்களைப் பற்றி சால்வைக்குள் முகம் புதைத்தாள்.

நிகழ்வதை அவனால் நம்பவே முடியவில்லை. தொடுதலுக்காக, இந்த கதகதப்புக்காக பல இரவுகள் ஏங்கி வறட்சியில் வாடி சுயமைதுனம் செய்து இருக்கிறான். ஆனால் சட்டென்று அது கிடைத்து விட்டதை நினைத்து மகிழ்ந்தான்.

‘அவள் சமிக்ஞை தந்து இருக்கிறாள், நாம் ஏதாவது செய்தாக வேண்டுமே. ரொம்பவும் அவசரம் காட்டக் கூடாது.’ நினைத்தபடி மெதுவாக கழுத்தை சுற்றி கை போட்டான்.

முகத்தைத் தோளில் சாய்த்து கண் மூடினாள். இன்னும் முன்னேறும் நோக்கில் இடையில் கை வைத்தான். வளைவின்றி தடித்து சமமாக இருந்ததால் உடனே மார்பை நோக்கி விரல்களை நகர்த்தினான்.

அவள் வெடுக்கென வலது கையால் தடுத்து கண்களை நோக்கினாள். அந்த இருட்டிலும் மின்னிய அவளது கண்களைப் பார்த்து கிறங்கிப் போனான். அவளை இறுக்கமாக அணைத்து முத்தமிட ஆசை கொண்டான். ஆனால் அவனுக்கு தைரியம் வரவில்லை. இது போன்ற அவஸ்தையை முதன்முதலாக அனுபவிப்பதும் அவனுக்குப் பிடித்திருந்தது. அவள் அக்குளில், லேசான வியர்வையில் வெளிப்பட்ட வாசனையை முகர ஏங்கினான்.

விளக்கை யாரோ போட்டதும் சுதாரித்து தன் கரத்தை விடுவித்து, சால்வையை முழுவதுமாக அவள் மீது போர்த்துவது போல பாவனை செய்தான். ஆண்கள் சாலையோரம் சிறுநீர் கழிப்பதற்காக சில நிமிடங்கள் பேருந்து நிறுத்தப்பட்டது. மீண்டும் வெளிச்சத்தில் கைகோர்த்து, “வாட்..” என்றாள்.

அலைபேசியை காதில் வைத்தபடி கடந்து சென்ற ஒருத்தனை, வட இந்திய இளைஞன் போல இருந்தவனை முறைத்தாள்.

“என்னாச்சு? எனி பிராப்ளம்..” கேட்டான்.

“அவன் என்னை ஃபோட்டோ எடுத்த மாதிரி இருந்துச்சு. அதான்..”

“அப்டியா பண்ணான்.. அவனை..”

மணிக்கட்டைப் பிடித்து தடுத்து, “விடு.. இன்னொரு தடவை வந்தா பாத்துக்கலாம்” என்றாள்.

பேருந்தை எடுத்ததும் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். விளக்கு வெளிச்சத்தில் நெஞ்சிலும் வயிற்றிலும் கிள்ளி விளையாடினாள். தொடுதலிலும் வாசனையிலும் கவரப்பட்டு அவன் எழுச்சியாக இருந்தான். அவள் அதைக் காண்பதை கண்டுகொண்டு வெட்கம் மேலிட்டு போர்வைக்குள் மறைந்தான். இருள் நன்றாக கவிந்ததும், அவளது கரத்தை வாரி நெஞ்சு முடிகளுக்குள் சேர்த்தான். கழுத்தை வலக்கையால் வளைத்து இடையோடு நிறுத்தி திருப்தி கொண்டான். உள்ளுக்குள் பற்றியெறியும் மோகத்தால் மேலும் முன்னேற உந்தப்பட்டு உதட்டை கவ்வ சென்றான். அவள் விழித்துக் கொண்டதும் பயத்தில் கழுத்தண்டை அடைக்கலமானான். அவள் தூங்குவது போல நடித்தாலும் அந்த ஸ்பரிசத்தை ரசித்தாள்.

காலை விடிந்ததும், அவள் மடியில் முகம் வைத்து தூங்கினவனை எழுப்பி, “ஷங்கர்.. தண்ணி வேணும், வாங்கிட்டு வரியா?” என்றாள்.

“நீயும் வா, போலாம்..”

“இல்லை, நீ போ.. ப்ளீஸ்”

“வண்டி பத்து நிமிஷத்துக்கு நிக்கும் போல.. ரெஸ்ட் ரூம் யூஸ் பண்ணிக்கோ, இதோட சென்னை தான் அப்றம். சொல்லிட்டேன்”

அவள் ரெஸ்ட் ரூமை விட்டு வருவதற்குள் பிஸ்கட், வொண்டர் கேக், தண்ணீர் போத்தல் வாங்கி காத்திருந்தான்.

சென்னை வந்து சேரும் வரை அவளை அவன் நெருங்கவே இல்லை. ஒப்பனை கலைந்து சோர்ந்திருந்த முகத்தில் ஆங்காங்கே பருக்களையும் ஊத்தைப் பல்லையும் கண்ட பின், அவனது அடங்கா கிளர்ச்சியும் திடீரென்று காணாமல் போனது. பொறுப்பான அவனின் கவனிப்பால் நெகிழ்ந்து வழியெல்லாம் புன்சிரிப்புடன் வந்தவள், அவனை அணைத்து பிரியாவிடை தந்தாள்.

ஒன்றாக எடுத்துக் கொண்ட சுயமியில் ஹார்ட்டும் அம்பும் வைத்து வாட்ஸப்பில் அவள் அனுப்பினாள். அதை அவன் ரசிக்கவில்லை. கோபமும் பயமும் ஒருசேர அவனை அழுத்த, ஆஃபிஸ் இருக்கையை விட்டு எழுந்து ரெஸ்ட் ரூமுக்கு விரைந்தான்.

கண்ணாடிமுன் நின்று ‘ஏகப்பட்ட பசங்க கூட பழக்கத்துல இருக்ற இவளை எப்படி வவ் பண்றதாம்? கொஞ்சம் உஷாரா தான் இருக்கணும்..’ என்று பேசிக் கொண்டான்.

அவளை அழைத்து, “எனக்கு நீ அனுப்ன பிக்சர் பிடிக்கலை.. டெலீட் பண்ணிடு ப்ளீஸ்.” என்றான்.

“அதுல என்ன உனக்குப் பிடிக்கலை” என்றாள்.

அதைக் கேட்டு தடுமாறி, பிறகு “இவ்ளோ சீக்ரத்துல நீ என்னை லவ் பண்றியா? பயமா இருக்கு..” என்றான்.

“அய்யோ.. சாரி.. அது வெறும் பிக்சர் தான். நான் இப்பவே டெலீட் பண்றேன்”

அன்றிரவு எவ்வளவு தூங்க முயற்சித்தும் முடியாமல் ஃபேஸ்புக்கும் வாட்ஸாப்பும் டிண்டருமாக திரிந்தான். அளவளாவ தோழிகள் இல்லாததால் மீண்டும் விஸ்பர் செயலியில் அநாமதேயமாக உலவிய பெண் ஐடிகளிடம் பேச்சு கொடுத்தான். தாரா அளவுக்கு யாரும் பேசாததால், மீண்டும் வாட்ஸப் வந்து அவளை அழைத்தான்.

அவள் தூக்கக் கலக்கத்தில், “லோ.. என்னடா. தூங்கலையா டார்லிங்” என்றாள்.

கொஞ்சும் குரலை ரசித்த பின், “ம் ம்.. சாரி டி.. ஆஃபிஸ் டென்ஷன்ல இருந்தனா, அதான். தப்பா எடுத்துக்காத ப்ளீஸ்” என்றான்.

“சே சே.. நான்தான் அவசரப் பட்டுட்டேன். உன்னைப் பத்தி என் அண்ணி கிட்ட நாள் பூரா பேசிட்டே இருந்தேன். என்னை எப்டி கவனிச்சிக்டான் அவன் தெரியுமான்னு..”

“ஹே.. இட்ஸ் நத்திங்.”

“நாம கிஸ் பண்ணிருக்கணும்..” என்றாள் வெட்கம் கலந்து.

“நீ தான் தூங்கிட்ட.. ப்ச்ச்..”

“நீ கிஸ் பண்ண வர்றதை பாத்தேன். பயந்து பயந்து வந்துச்சா, அதான்..”

“நான் அப்பவே நெனச்சேன்.. ஹாஹா..”

“யூ ஆர் நாட் லைக் அதர் பாய்ஸ்.. ஐ லைக் யு” என்றாள்.

வேலைப் பளு அதிகமாக இருந்ததால் ஒரு வாரமாக அவளிடம் பேச முடியாமல் தவித்தான். நடுவில் அவள் அனுப்பிய புதுப் புகைப்படங்களை மீண்டும் மீண்டும் பார்த்து, ‘இவளை நமக்குப் பிடிச்ச மாதிரி கற்பனை கூடப் பண்ண முடிலையே. அவளைப் பாத்தாலும் பாவமா இருக்கே..’ என நினைத்தான்.

“லவ் பண்ணலாம் தோழி..”, ஆரம்பித்தான்.

“ஹாஹா.. நீ தான் லவ் வேணாம்னு இருக்கியே..”

“நான் அந்த லவ் சொல்லலை.. பஸ்ல உக்காந்துட்டு பண்ணோமே, அந்த லவ்!”

“சீ.. மோசம்டா நீ” ராகம் சேர்த்து சிணுங்கினாள்.

ஒரு வேகத்தில் “ஐ ஃபீல் எராட்டிக் சீயிங் யு..” என்று அனுப்பினான்.

அவளிடமிருந்து ஒரு பதிலும் வராததால், ‘சே.. அவசரப் பட்டுட்டியேடா. லூசாடா நீ, கிறுக்கா..” என்று திட்டிக் கொண்டான்.

“தெரியும்.. பஸ்ல பக்கத்துல பாத்துட்டுதான் இருந்தேன். அதான் எனக்கு பயம் ஆகிடுச்சு. கிஸ் பண்ணலாம்னு இருந்தவளை, நீ தான் பயமுறுத்திட்ட. ஹா ஹா..”

அறையின் அத்தனை இருட்டிலும் அவன் முகத்தில் வெட்கம் பளிச்சிட்டது.

“லவ் பண்ணலாம் தோழி..”

“நீ அங்க இருந்தா எப்படி பண்ண முடியும்?”

“ஹ்ம்ம்.. இட்ஸ் ஹாட் ஹியர்”

“எப்படி நம்புறது?”

“வீ வில் மீட்..”

பேசி முடித்ததும் சடாரென்று குறியைப் புகைப்படமெடுத்து அனுப்பி வைத்தான்.

“சீ.. கண்ணு கூசுது..” என்றாள்.

அடுத்தடுத்து பேசும்போது ஊர் சுற்றுவது பற்றியும் ஒரே மாதிரி மேட்சிங் ட்ரெஸ் எடுப்பது பற்றியும் சொல்லிக் கொண்டே இருந்தாள்.

“ஒவ்வொரு பையன் கூடப் போகும்போதும் மேட்சிங் ட்ரெஸ் எடுக்க சொல்லுவியா?”

“ஆமா.. ஐ லைக் இட் தட் வே. நீ வா, நாம ஊர் சுத்துவோம். ப்ளூ ஜீன்ஸ் பிளாக் ஷர்ட் தான் நம்ம மேட்சிங் ட்ரெஸ்”

ஃபேக் ஐடிகளையும் இணையத்தில் காமம் விற்ற விலை மாதரையும் நேரில் சந்திக்கத் துடித்து ஏமாந்தவன், நிஜத்தில் ஒரு பெண் வலிந்து பழகக் கூப்பிட்டும் தவிர்க்கலானான். கலவி, காமம் தொடர்பாக வாட்ஸாப்பில் கதைக்க மட்டும் அவன் தவறவில்லை. நாட்கள் செல்லச் செல்ல அவளும் அவனை வாட்ஸப்போடு நிறுத்தி விட்டாள்.

கடைசி இரண்டு, மூன்று தினங்களாக அவளை வாட்ஸப்பில் காணாததால் தொடர்பு எண்ணை அழைத்தான். அவள் எங்கு இருக்கிறாள், எப்படி இருக்கிறாளென்று கேட்காமல் எடுத்த எடுப்பிலேயே “ஐ ஃபீல் எராட்டிக்.. வாட்சப் வரியா?” என்றான்.

“என்னடா நெனச்சிட்டு இருக்கீங்க ஆளாளுக்கு… செருப்பு பிஞ்சிடும் நாய்ங்களா. அம்மாவுக்கு ஒடம்பு சரியில்லைன்னு ஹாஸ்பிடல் வந்தா அக்கடான்னு இருக்க விட்றீங்களா. ஆளாளுக்கு அரிப்பெடுத்துக்குது…”

“சாரி.. சாரி.. டேக் கேர். அம்மாவைக் கேட்டதா சொல்லு”

ஃபேஸ்புக் மெசெஞ்சரில் அனுப்பியிருந்த, “லவ் பண்ணலாம் தோழி..” குறுஞ்செய்தியை அழித்தான்.

அதன்பிறகு ஃபேஸ்புக், வாட்ஸாப், விஸ்பர் என்று எல்லா தளத்திலும் இது மாதிரி பையன்களை அவள் முடக்கினாள்.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போனதை நினைத்து வருந்தினான் இவன். சில மாதங்கள் சென்றதும் எதேச்சையாக இன்ஸ்டாகிராமில் தாராவின் ப்ரொஃபைலை கண்டான். முன்பு அவள் சொன்னது மாதிரி அயர்லாந்தில் படிக்கச் சென்றிப்பதை புகைப்படங்கள் பார்த்து தெரிந்து கொண்டான். ‘அவளை அரவணைத்து நல்ல முறையில் அன்பு செலுத்தியிருந்தால் இந்நேரம் நம்முடன் பேசியிருப்பாளே… ச்சே…’, என்று நினைத்து பெருமூச்செறிந்தான்.

வழக்கம்போல் தனிமையில் தவித்தவன் ஆபாச இணையதளங்கள் தடைசெய்யப்பட்டது கண்டு அதிர்ந்தான். “சே.. இவனுங்க ஜாதியையும் ஊழலையும் ஒழிப்பானுங்கன்னு பாத்தா, பிட்டுப் படத்துல கை வெக்றானுங்க, படுபாவிங்க..” புலம்பினான்.

அவளுடன் பேருந்தில்வந்த போது ஒன்றாகப் போர்த்தியிருந்த சால்வையில், இன்னும் துவைக்கப்படாத அந்த சால்வையில் அவளின் வாசத்தை முகர்ந்தபடி தூங்கினான்.

***

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button