இணைய இதழ் 114தொடர்கள்

காலம் கரைக்காத கணங்கள்- 19; மு.இராமனாதன்

தொடர் | வாசகசாலை

வாக்குகள் சீட்டாக இருந்த காலம்

வாக்குப் பதிவிற்கு இயந்திரங்கள் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். ஏனெனில், இந்த இயந்திரத்தை மனிதர்களாலும் செயற்கை நுண்ணறிவாலும் கொந்த (hack) முடியும். – சமீபத்தில் இப்படிச் சொன்னவர் ஓர் அறியப்பட்ட ஆளுமை. அவர் இந்தியாவின் எந்த எதிர்க்கட்சித் தலைவரும் அல்லர். அவர் அமெரிக்கர், தொழில்நுட்ப ஜாம்பவான்- எலான் மஸ்க்.

வாக்குப்பதிவு இயந்திரத்தை உருவாக்கும்போதோ சீர்திருத்தும்போதோ உள்ளேயிருக்கும் ‘சிப்பு’களில் நிரல்களை ஏதேனும் ஒரு கட்சிக்கு சாதகமாக எழுதிவிடலாம் என்பது நாள்பட்ட குற்றச்சாட்டு. கொந்தல் சாத்தியங்கள் சமீபகாலங்களில் பரவலாக முன் வைக்கப்படும் குற்றச்சாட்டு. இப்போது எலான் மஸ்கே சொல்லுகிறார்.

1982-இல் கேரளத்தின் பரவூர் இடைத் தேர்தலில் மெல்லப் புகுந்தது இந்த இயந்திரம். அன்று முதல் நாளது வரை இதைக் குறித்த ஐயங்களுக்குக் குறைவில்லை. விளக்கங்கள், உறுதிமொழிகள், குற்றச்சாட்டுகள், வழக்குகள்- எவையும் நின்றபாடில்லை. இதற்கிடையே, இந்த இயந்திரம் படிப்படியாகக் கால் பரப்பி, புத்தாயிரமாண்டில் நாடு முழுக்க பயன்பாட்டிற்கு வந்துவிட்டது.

நாம் அளிக்கிற வாக்குதான் இயந்திரத்தில் பதிவாகிறதா, பதிவாகிற வாக்குதான் எண்ணப்படுகிறதா என்று அறிந்துகொள்ள இந்த இயந்திரத்தில் எந்த முகாந்திரமும் இல்லை. தில்லுமுல்லு நடந்தால் கண்டறிய முடியாது. ஆகவே, வழக்காடவும் முடியாது. அதனால் இதைக் கறுப்புப் பெட்டி என்று அழைப்பவர் உண்டு. இதற்காக ஒரு காகிதச் சரிபார்ப்பு (Voter Verified Paper Audit Trial- VVPAT) முறை வந்தது. ஒருவர் வாக்களித்ததும் அது ஒரு காகிதத்தில் அச்சாகி கண்ணாடிச் சில்லின் வழி வாக்காளருக்கு ஒரு சில நொடிகள் காட்சி தரும். பிறகு அதை இயந்திரம் விழுங்கி விடும். இந்தக் காகித வாக்குகளை வாக்குச் சீட்டுகளாகக் கருதி அவற்றையே எண்ணலாம். ஆனால் அதற்குத் தேர்தல் ஆணையம் ஒப்பவில்லை. குறைந்தபட்சம் ஒரு இயந்திரத்தில் எத்தனை காகித வாக்குகள் பதிவாகியிருக்கின்றன என்பதையாவது எண்ணலாம். அந்த எண்ணிக்கையை இயந்திரத்தில் பதிவாகியிருக்கிற  எண்ணிக்கையோடு ஒப்பு நோக்கலாம். 2016 மாநிலத் தேர்தல்களில் சில தொகுதிகளில் ஆணையம் இதைச் செய்து பார்த்தது. சில தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகளில் ஒரேயொரு வாக்குச் சாவடியில் மட்டும் இந்தச் சோதனை நடந்தது. இந்த மாதிரியின் அளவு நிகழ்தகவு (propablity) சித்தாந்தத்தின்படி மிகக் குறைவு என்றனர் வல்லுநர்கள். ஆனால், ஆணையம் கேட்கவில்லை. பெரும் செலவில் வாக்குப் பதிவு இயந்திரத்தோடு இணைக்கப்பட்ட VVPATஆல் குறிப்பிடத்தக்க பலன் என்னவென்று தெரியவில்லை. ஆட்டம் தொடர்கிறது.

இந்த வாதப் பிரதிவாதங்களுக்கு அவசியமில்லாத ஒரு காலம் இருந்தது. வளர்ந்த நாடுகள், வளராத நாடுகள் என்கிற வேறுபாடில்லாமல் எல்லா நாடுகளும் பயன்படுத்துகிற வாக்குச்சீட்டு நமது நாட்டிலும் பயன்பாட்டில் இருந்த காலம். அப்படியான காலத்தில், ஒரு தேர்தலில், ஒரு வாக்குச் சாவடியில் நான் தலைமை அலுவலராகப் பணியாற்றினேன். இந்த இயல் அதைப் பற்றியது.

ஆர்வெல்லின் ஆண்டில் நடந்த தேர்தல்

ஆண்டு: 1984. ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984. அக்டோபர் மாதம் இந்திரா காந்தி சுடப்பட்டார். ராஜீவ் காந்தி பிரதமரானார். அவரது ஆட்சிக் காலம் முடிய இன்னும் ஓராண்டு எஞ்சி இருந்தது. என்றாலும் ராஜீவ் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டுத் தேர்தலைச் சந்தித்தார். தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சி. அவர் உடல் நலிவுற்று சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். தமிழகத்திலும் ஆட்சிக் காலம் ஓராண்டு இருந்தது. எம்.ஜி.ஆரும் ராஜீவை அடியொற்றி  சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலைச் சந்தித்தார். அதிமுக- காங்கிரஸ் கூட்டணி அமைத்தன. எதிரணியில் திமுக- ஜனதா -கம்யூனிஸ்ட் கூட்டணி.

நான் மதுரையில் ஓர் அரசுத் துறையில் பணியாற்றினேன். தேர்தல் பணியாற்ற விருப்பம் தெரிவித்திருந்தேன். அரசின் பழுப்புக் காகிதத்தில் நியமன ஆணை வந்தது. ‘145- சமயநல்லூர் சட்டமன்றத் தொகுதி, அதனைச் சார்ந்த 24-மதுரை பாராளுமன்றத் தொகுதி, ஆகியவைகளுக்கு 24.12.1984-ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கவிருக்கிறது. அதற்கு நீங்கள் ஒரு வாக்குச் சாவடியில் தலைமை அலுவலராக நியமிக்கப்பட்டு இருக்கிறீர்கள்.’  (விருப்பம் தெரிவிக்காத சிலருக்கும் ஆணை வந்தது, அது வேறு.) வாக்குச் சாவடி  விவரம் பிற்பாடு இன்னொரு ஆணை  வழியாக வந்தது- ’52- சாந்தி வித்யாலயா நடுநிலைப் பள்ளி, விளாங்குடி’. வாக்குச் சாவடி எண்ணும் தொகுதி எண்களும் முக்கியமானவை. காரணம் எனக்குப் பின்னால் தெரிய வரும்.

ஒரு வாக்குச் சாவடிக்கு தலைமை அலுவலர் தவிர ஐந்து அலுவலர்கள். எல்லோருக்கும் பயிற்சி வகுப்புகள் நடந்தன. பத்து நாட்கள் நகரின் மூன்று-நான்கு இடங்களில் சாவடி எண்களின் வரிசைப்படி வகுப்புகள் நடந்தன. எங்கள் வகுப்பு கே.கே.நகர், சுந்தரம் திரையரங்கில் (இப்போது ஜாஸ் அர்ஸ் சினிமாஸ்) நடந்தது. மதுரை நகரின் வட்டாட்சி அலுவலர்களில் ஒருவர் வகுப்பை நடத்தினார். ஓர் ஆவணப்படமும் திரையிட்டார்கள்.

ஐவர் அணி

எங்கள் அணியில் முதல் அலுவலர் உயர்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியர். இரண்டாமவர் வேளாண் பொறியியல் துறையில் வரைவாளர். மூன்றாமவர் பள்ளிக் கல்வித் துறையில் கணக்காளர். நான்காமவர் ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி ஆசிரியர். ஐந்தாம் அலுவலர் வனத்துறையில் எழுத்தர். எல்லோருக்கும் நிர்ணயிக்கப்பட்ட பணிகள் இருந்தன. அவை சற்றுப் பின்னால் வரும். என்னைத் தவிர எல்லோரும் நடுத்தர வயதினராய் இருந்தனர். எல்லோரும் ஆண்கள். ஏனெனில், வாக்காளர்கள் அனைவரும் ஆண்கள். அதே பள்ளியில் பெண்கள் சாவடியும் இருந்தது. அதில் அலுவலர்களும் வாக்காளர்களும் பெண்கள்.

வாக்குப் பதிவிற்கு முன்பு

தேர்தலுக்கு முந்தின நாள் ஞாயிற்றுக்கிழமை. தேர்தல் நடத்தத் தேவையான பொருட்களைத் தலைமை அலுவலரிடம் கையளித்தார்கள். எம் சாவடிக்கான பொருட்கள் பாத்திமா கல்லூரியில் வழங்கப்பட்டது.  பொருட்களின் பட்டியல் பெரிது. அவற்றில் முக்கியமானவை:

-வாக்குப் பெட்டிகள், அவற்றைப் பொதிய கித்தான் பைகள், முறுக்கு நூல், மென் கம்பி, நாடா, அரக்கு, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, வாக்குச் சீட்டுகளைத் தள்ளிவிட மரத் தள்ளுகோல்.

-அழியாத மை, நெகிழிக் குச்சி (மை தீட்ட), கந்தைத் துணி (வாக்காளரின் கைகளில் எண்ணெய்ப் பசை இருந்தால் துடைக்க).

-வாக்குச் சீட்டுப் புத்தகங்கள். இதில் அடிச்சீட்டும் இருக்கும். வாக்குச் சீட்டைக் கீழித்தெடுக்க இரும்புச் சட்டம்.

-தாள்கள், படியெடு தாள் (Carbon Paper), பேனா, குண்டூசி, பசை, பிளேடு, மையுறி தாள்.

-அலுவலர் அடையாள அட்டைகள், முகவர் அனுமதிச் சீட்டுகள்.

-வாக்குச் சீட்டில் குறியீடு செய்வதற்கான குறுக்கை அம்புக்குறியுள்ள ரப்பர் முத்திரை, எல்லா வாக்குச் சீட்டுகளின் பின்புறமும் பதிப்பதற்கான பிரித்தறி முத்திரை (இதில் வாக்குச் சாவடியின் எண்ணும் தொகுதி எண்ணும் இருக்கும்; எங்களது முத்திரைகள் சட்டமன்றத்திற்கு 52/145, நாடாளுமன்றத்திற்கு 52/24), மையொற்றுப் பெட்டகம் (ink pad).

-சுவரொட்டிகள்

-25க்கும் மேற்பட்ட படிவங்கள், உறைகள்

எனக்கு உதவியாக முதல் அலுவலரும் வந்தார். அவரிடம் ஸ்கூட்டர் இருந்தது. என்னிடம் சைக்கிள். இருவருமாக எல்லாப் பொருட்களையும் வாக்குச் சாவடிக்குக் கொண்டு வந்து சேர்த்தோம்.

சாவடி அமைக்கப்பட்டிருந்த நடுநிலைப் பள்ளி ஒரு ஓட்டுக் கட்டடம். நன்றாகப் பராமரிக்கப்பட்டு வந்தது. துப்புரவாக இருந்தது. இரண்டு வகுப்பறைகளை இணைத்து ஒரு வாக்குச் சாவடி ஆக்கி இருந்தார்கள். அலுவலர்களுக்கான மேசை- நாற்காலி, முகவர்களுக்கான இருக்கை எல்லாம் கிரமமாக இருந்தது. இரண்டு  வாக்களிப்பு மேசைகள். அவை சற்று உயரத்தில் வைக்கப்பட்டிருந்தன. மூன்று பக்கமும் கனமான வெள்ளை அட்டையால் மறைப்பு இருந்தது. பெண்கள் சாவடியிலும் இதே விதமான ஏற்பாடுகள். இந்த வகுப்பறைகளில் இருந்த பெஞ்சுகளை வேறு அறைகளுக்கு மாற்றியிருந்தார்கள். வருவாய்த்துறை ஊழியர்கள் முந்தின தினமே வந்து பள்ளி ஆசிரியர்களின் உதவியோடு ஒழுங்கு செய்ததாக எங்களை வரவேற்பதற்காகக் காத்திருந்த பள்ளி ஆசிரியர் சொன்னார்.

பெண்கள் சாவடியின் தலைமை அலுவலருக்கு உதவியாக அவரது கணவர் வந்திருந்தார். இருவரும் பொருட்களை என்னிடம் ஒப்படைத்துவிட்டு விடை பெற்றனர். எங்கள் அணியின் முதல் அலுவலரும் விடைபெற்றுக் கொண்டார். அவர்களுக்கு வீட்டில் பிள்ளைகள் இருந்தார்கள், வேலைகள் இருந்தன. இப்போது இரண்டு சாவடிப் பொருட்களுக்கும் நான்தான் ராக்காவல். இரண்டு சாவடிக்கும் சேர்த்து ஒரு காவலர். முன்னாள் ராணுவ வீரர். அவரும் முந்தின நாள் வந்துவிட்டார். அவரது சீருடை விரைப்பாக இருந்தது. அதிலும் விரைப்பான சல்யூட் ஒன்றை எனக்கு வழங்கினார். அதை முறையாக அவருக்குத் திருப்பித் தர எனக்குத் தெரியவில்லை. காவலரும்  என்னுடன் பள்ளியில் தங்கினார். நான் ஒரு பயணப் பொதியில் மாற்று உடை, விரிப்பு, துண்டு, சோப்பு, சீப்பு முதலானவற்றை அடைத்துக்கொண்டு போயிருந்தேன். காலைக் கடன்களுக்கு என்ன செய்ய? பள்ளியில் ஒரு கழிவறை இருந்தது. பள்ளிக்கு அருகாமையில் ஒரு பொதுத் தண்ணீர்க் குழாய் இருந்தது. காலை ஆறு மணி முதல் தண்ணீர் வரும். பெண்கள் ஆறரை மணிக்கு மேல்தான் வருவார்கள். நீங்கள் இருவரும் அதற்கு முன்னர் குளித்துவிடுங்கள் என்று உள்ளூர்க்காரர் ஆலோசனை வழங்கினார். நாங்கள் அவ்விதமே செய்தோம்.

வாக்குச் சாவடி, தொகுதி முதலான விவரங்கள் அடங்கிய சுவரொட்டிகளையும்,  பெரிதாக்கப்பட்ட வாக்குச் சீட்டின் மாதிரிச் சுவரொட்டிகளையும் சாவடிக்கு வெளியே ஒட்டினோம்.

சமயநல்லூர் சட்டமன்ற இடத்திற்கு அதிமுகவும் திமுகவும் மோதின. அதிமுகவின் சார்பாக ஏ.சிவக்குமார் என்பவர் போட்டியிட்டார். திமுக வேட்பாளார் எஸ்.செல்வராஜ். பின்னாளில் கலைஞர் அமைச்சரவையில் அங்கம் வகித்தார். மதுரை நாடாளுமன்றத் தொகுதிக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள் போட்டியிட்டன. காங்கிரஸ், அப்போதைய எம்.பி.யான ஏ.ஜி.சுப்பராமனுக்கு டிக்கெட் கொடுத்திருந்தது. மார்க்சிஸ்ட் வேட்பாளர், நிறைவாழ்வு வாழ்ந்து சமீபத்தில் விடை பெற்றுக்கொண்ட என்.சங்கரய்யா. நான்கு கட்சிகளின் முகவர்களும் வாக்குப் பதிவு தொடங்கும் முன்னரே வந்தனர். வாக்குப் பதிவு  அலுவர்களும் வந்தனர்.

எல்லா வாக்குச் சீட்டின் பின்னாலும் தலைமை அலுவலர் ஒப்பமிடவேண்டும். ஒரு புத்தகத்தில் 50 சீட்டுகள் இருக்கும். நான் நான்கு புத்தகங்களில் முன்னதாக ஒப்பமிட்டு வைத்தேன். வாக்குப் பெட்டிகள் காலியாக இருப்பதை முகவர்களிடம் காட்டிய பிறகு அதை மூடித் தாழிட வேண்டும். வாக்குச் சீட்டுகளின் தொடர் எண்களை முகவர்களிடம் காட்ட வேண்டும். அதை அவர்கள் குறித்துக்கொள்ளலாம்.

வாக்குப் பதிவுக்கான நேரம் தொடங்கும் முன்னரே வாக்காளர்கள் வந்து வரிசையில் நின்றனர். காவலர் வரிசையை ஒழுங்குபடுத்தினார். வாக்குப் பதிவு குறித்த நேரத்தில் தொடங்கியது. போலிசார் அவ்வப்போது வந்த வண்ணம் இருந்தனர்.

அலுவலரின் பொறுப்புகள்

வாக்காளரின் அடையாளத்தை சரிபார்ப்பது முதல் அலுவலரின் பணி. வாக்காளர் அடையாள அட்டை புழக்கத்தில் வர இன்னும் பல ஆண்டுகள் ஆகும். வாக்காளர்கள் பொதுவாக கட்சிகள் வழங்கும் அலுவல் சார்பற்ற அடையாளச் சீட்டைக் கொண்டு வருவார்கள். அதில் வாக்காளரது பெயர், பட்டியலில் அவரது தொடர் எண், பகுதி எண், சாவடி எண் ஆகிய விவரங்கள் இருக்கும். இந்தச் சீட்டு இல்லாமலும் வரலாம். அவர்களிடம், பெயர், முகவரி விவரங்களைக் கேட்டறிந்து பட்டியலில் அவரது பெயரைக் கண்டறிய வேண்டும். பிறகு முதல் அலுவலர் வாக்காளரின் பெயரையும் மற்ற விவரங்களையும் உரத்த குரலில் அறிவிப்பார். முகவர்களுக்கு ஆட்சேபணை இருந்தால் தெரிவிக்கலாம். அப்போது தலைமை அலுவலர் இடையிட்டு விசாரிக்க வேண்டும். தலைமை அலுவலர் மனநிறைவு கொண்டால் வாக்களிக்க அனுமதிக்கலாம். இதில் முகவர்களுக்கு எதிர்ப்பு இருந்தால் அதை அதற்கான படிவத்தில் பதிவு செய்யலாம். வாக்காளருக்கு அனுமதி மறுக்கப்பட்டு, அதை வாக்காளர் ஏற்கவில்லையென்றால் அவர் பிறிதொரு படிவத்தில் தனது எதிர்ப்பைப் பதிவு செய்யலாம்.

வருகை தந்த வாக்காளர்களின் எண்ணிக்கையையும் முதல் அலுவலர் குறித்து வைக்க வேண்டும். வாக்குப் பதிவு முடியும் முன்பு மூன்று முறை தேர்தல் அதிகாரியின் பிரதிநிதிகள் இந்த விவரங்களைப் பெற்றுச் செல்வார்கள். அலைபேசியும் கணினியும் இணையமும் இல்லாத காலத்தில் வாக்குப் பதிவு நடைபெறும்போதே பதிவான வாக்குகளின் கணக்கை ஆணையம் அறிவித்தது.

இரண்டாம் அலுவலரின் பணி அடையாள மை இடுவது. அரை நிமிடம் மை அழியாமல் இருக்கிறதா என்பதையும் இவர் கவனித்துக்கொள்வார்.

மூன்றாம் அலுவலரிடம் சட்ட மன்ற வாக்குச் சீட்டு இருக்கும். முதல் அலுவலர் பெயரையும்  விவரங்களையும் அறிவிக்கும் போது, பகுதி எண்ணையும் தொடர் எண்ணையும் அடிச்சீட்டின் பின்புறம் குறித்து வைப்பார். அதில் வாக்காளரின் ஒப்பம் அல்லது பெருவிரல் ரேகையைப் பெற வேண்டும். வாக்குச் சீட்டின் முனையில் பிரித்தறி சின்னம் (52/145) பதிக்கப்பட வேண்டும். வாக்குச் சீட்டுகளை தொடர் எண்களின் வரிசைப்படி வழங்கினால் முகவர்கள் குறிப்பிட்ட வாக்காளர் பெறும் வாக்குச் சீட்டின் தொடர் எண்ணைக் கணிக்கக் கூடும். இதைத் தடுப்பதற்குப் பயிற்சியின்போது ஒரு தந்திரம் சொல்லித்  தந்தார்கள்.  ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்குச் சீட்டுப் புத்தகங்களை தயாராக வைத்துக்கொண்டு சீட்டுகளை வரிசை மாறி வழங்க வேண்டும்.

நான்காம் அலுவலர் இதே பணிகளைச் செய்து நாடாளுமன்றச் சீட்டை வழங்குவார்.

ஐந்தாம் அலுவலரிடம்தான் வாக்குச் சீட்டில் பதிக்க வேண்டிய குறுக்கை முத்திரை இருக்கும். இவர் மேசையின் மீதுதான் வாக்குப் பெட்டிகளும் இருக்கும். இவர் இரண்டு வாக்குச் சீட்டுகளையும் வாங்கி பிரித்தறி சின்னம் வெளித்தெரியும் விதமாக நீள வாக்கிலும் குறுக்கிலும் மடிப்பார். பிறகு சட்டமன்ற வாக்குச் சீட்டைப் பிரித்து அதனையும் முத்திரையையும் வாக்காளரிடம் கொடுப்பார். வாக்காளர் வாக்களிக்கும் அறைக்குச் சென்று முத்திரையைப் பதித்து, பிறகு சீட்டை மடித்து அலுவலரின் முன்பு வைக்கப்பட்டுள்ள வாக்குப் பெட்டியில் செலுத்த வேண்டும். அடுத்து நாடாளுமன்ற சீட்டுக்கும் இதே நடைமுறைதான்.

வாக்குப் பதிவுக்குப் பின்

அன்றைய தினம் 800 வாக்குகளுக்கு மேல் பதிவாயின. குறித்த நேரத்தில் வாக்குப் பதிவும் முடிந்தது. வாக்குப் பெட்டியைப் பூட்டி அரக்கு வைக்க வேண்டும். முகவர்கள் விரும்பினால் அதில் அவர்களது முத்திரையைப் பதிக்கலாம். நான்கு முகவர்களும். பித்தளை முத்திரைகளைக் கொண்டு வந்திருந்தார்கள். இளகி வரும் அரக்கின் சூடு ஆறுவதற்கு முன்பு தங்கள் முத்திரையைப்  பதித்தார்கள். வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு முகவர்கள் இந்த முத்திரைகளைப் பரிசோதிக்கலாம்.

அடுத்து ஒரு முக்கியமான படிவத்தை நிரப்ப வேண்டும். இந்தச் சாவடிக்காக முந்தின நாள் நான் பெற்றுக்கொண்ட  வாக்குச் சீட்டுகளின் தொடர் எண்கள், பயன்படுத்தாத வாக்குச் சீட்டுகளின் தொடர் எண்கள், நீக்கப்பட்ட வாக்குச் சீட்டுகளின் எண்கள் (இருந்தால்) இவ்ற்றை ஒரு படிவத்தில் பதிவு செய்ய வேண்டும். இவற்றிலிருந்து பதிவான வாக்குகளின்  எண்ணிக்கையை கணக்கிட்டு அதையும் பதிய வேண்டும்.

இது வாக்குப் பெட்டியில் காணப்படும் வாக்குச் சீட்டுகளின் எண்ணிக்கையாக இருக்கும். இந்தப் படிவத்தில் தலைமை அலுவலர் ஒப்பமிட்டு முகவர்களுக்கு வழங்க வேண்டும். இதைப் பெற்றுக்கொண்டு முகவர்கள் விடை பெற்றனர். அவர்கள் வாக்கு எண்ணிக்கை நடக்கும்போது இதை சரிபார்க்கலாம்.

தொடர்ந்து 25க்கும் மேற்பட்ட படிவங்களை நிரப்பி அவற்றுக்கான உறையில் இட வேண்டும். எல்லாப் படிவங்களிலும், உறைகளிலும் தொகுதி எண்ணையும் சாவடி எண்ணையும்  நிரப்ப வேண்டும். அலுவலர்களுக்கான மதிப்பூதியம் ரொக்கமாக என்னிடம் தரப்பட்டிருந்தது. அதைப் பெற்றுக்கொண்டு அலுவலர்கள் அனைவரும் விடை பெற்றுக்கொண்டனர். இப்போது  வாக்குப் பெட்டிகள், பயன்படுத்தாத வாக்குச் சீட்டுகள், ஏராளமான உறைகள், திருப்பி அளிக்க வேண்டிய வாக்குச் சாவடிப் பொருட்கள் எல்லாவற்றையும்  முறையாக அடுக்கி வைத்துக்கொண்டு இரண்டு சாவடிகளின் தலைமை அலுவலர்களும் ஒரு காவலரும் காத்திருந்தோம். உள்ளுர்க்காரர்கள் எங்களுக்குத் துணையாக இருந்தார்கள். இரவு 9 மணியளவில் தேர்தல் அதிகாரிகள் வந்து, எங்களிடமிருந்து எல்லாப் பொருட்களையும் முறையாகப் பெற்றுச் சென்றார்கள்.

அன்றிரவு தல்லாகுளம் வைத்தியலிங்கா லாட்ஜூக்கு சைக்கிளில் திரும்பியபோது நகரமெங்கும் வீட்டிற்குள்ளும் வீதிகளிலும் தேர்தல் பேச்சாகவே இருந்தது. 1952-இல் நடந்த முதல் பொதுத் தேர்தலைப் பற்றி தனது ‘India After Gandhi’ நூலில் ராமசாந்திர குஹா ஓர் இயலே எழுதியிருக்கிறார். 2,24,000 வாக்குச் சாவடிகள், 20 இலட்சம் வாக்குப் பெட்டிகள், 56,000 தலைமை அலுவர்கள், 2,80,000 துணை அலுவலர்கள், 2,24,000 போலிஸ் என்று பலர் இயங்கிய தேர்தல் அது. 1984 தேர்தலில் இன்னும் அதிகமான மனித வளம் பயன்பட்டிருக்கும். அதில் எனது பங்கு ஓர் அணிலைக்கால் குறைவாக இருக்கலாம். என்றாலும் நிறைவாக இருந்தது. வாக்கு இயந்திரம் வந்த பிற்பாடு அதைக் குறித்த சர்ச்சைகள் மேலெழும்போதெல்லாம் எனக்கு சமயநல்லூர் நினைவுக்கு வரும்

2024 தேர்தலில் பதிவான வாக்குகளை ஆணையம் பல நாட்கள் தாமதமாகத்தான் அறிவித்தது. அதுவும் தொகுதி வாரியாக அறிவிக்கவில்லை. கணினி இல்லாத காலத்திலேயே பதிவான வாக்குகளின் கணக்கை தொகுதி வாரியாக அடுத்த நாளே துல்லியமாக அறிவித்தது அந்நாளைய ஆணையம்.

Association of Democratic Return (ADR) என்கிற அமைப்பு, 2024 தேர்தலில், இயந்திரத்தில் பதிவான வாக்குகளையும் எண்ணப்பட்ட வாக்குகளையும் ஒப்பிட்டது. 543 தொகுதிகளில் நான்கு தொகுதிகளில் மட்டுமே இவை ஒத்துப் போயின. 362 தொகுதிகளில் எண்ணப்பட்ட வாக்குகள் கூடுதலாக இருந்தன. மொத்தம் கூடுதல்: 5.5 லட்சம் வாக்குகள்! 176 தொகுதிகளில் குறைவாக இருந்தது. மொத்தம் குறைவு: 38,000 வாக்குகள். ADR வழக்குத் தொடுத்திருக்கிறது.

சாவடி வாரியாக பதிவான வாக்குகளின் கணக்கு அடங்கிய படிவத்தை இணையதளத்தில் ஏற்றி வைக்கவேண்டும் என்று கோரியது ADR. ஆணையம் மறுத்துவிட்டது. காகிதச் சரிபார்ப்பும் (VVPAT) முறையாக நடப்பதில்லை. இயந்திரத்தில் தில்லு முல்லு செய்யக்கூடிய சாத்தியங்களைப் பற்றிய உரையாடல் நடந்த வண்ணம் இருக்கிறது. இவையெல்லாம் இந்த இயந்திரத்தின் மீதும் ஆணையத்தின் மீதும் நமது நம்பிக்கையைக் குறைக்கிறது.

வாக்குச் சீட்டுகள் நம்பகமானவை. ஒவ்வொரு சீட்டின் பின்புறமும் தலைமை அலுவலரின் ஒப்பம் இருக்கும். சாவடி வாரியாகப் பதிவான வாக்குகளைத் தொடர் எண்களோடு சோதிக்கலாம். வாக்காளர் அளிக்கிற வாக்குதான் எண்ணப்படுகிறது என்பதை ஐயம் திரிபற அறிந்து கொள்ளலாம். உலகின் பல ஜனநாயகங்கள் இன்றளவும் வாக்குச் சீட்டுகளைத்தான் பயன்படுத்துகின்றன. நாம் வாக்குச் சீட்டுகளுக்குத் திரும்புகிற காலம் வரும். இந்த ஐயங்கள் அப்போது இல்லாமலாகும்.

(அனுபவம் தொடரும்)

Mu.Ramanathan@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button