
துர்க்கனவு போல வந்து போகிறது அவள் முகம். அவளின் கண்கள். அது சுமந்திருக்கும் செய்தி. இதுவொன்றும் புதிதல்ல. அவளை மறந்துவிடுவேனோ என்ற அச்சம் அம்முகத்தின் வருகைக்குக் காரணமாக இருக்கலாம். ஆனால்…………
எஸ்.பி.எம் தேர்வு முடிந்த நிலையில் சிலமாத விடுமுறை கிடைத்தது. நல்ல தேர்ச்சி கிடைத்தால் மேற்கொண்டு படிப்பைத் தொடரலாம். படிவம் ஐந்து, படிவம் ஆறு அதன் பிறகு பல்கலைக்கழகம். அல்லது படிவம் ஐந்தும் ஆறும் ஆரம்பிக்கும் முன்னரே ஏதாவது கல்லூரியில் சேர்ந்துவிடலாம். எப்படியும் பணம் கட்டியே தீரவேண்டும். நல்ல தேர்ச்சி பெற்றவர்களைப் பெற்றவர்களே பணத்தை வட்டிக்கு வாங்கித்தான் பிள்ளைகளின் மேற்படிப்பிற்கு கட்டுகிறார்கள். நான் எவ்வளவு தேர்ச்சியடைவேன் எனக்கு தெரியாதா என்ன. எதற்கும் தயார் நிலையில் இருக்க வேண்டுமே.
கிடைத்திருக்கும் இந்த விடுமுறையைச் சம்பளமாக்கிட திட்டமிட்டேன். அதற்கு ஏற்றார் போல ஏதாவது தற்காலிகமான வேலை கிடைக்கிறதா என தேடிக் கொண்டிருந்தேன். அச்சமயம் அருகிலுள்ள தோட்டங்களை துண்டாடிய பின் அங்கு தொழிற்சாலைகளைக் கட்டியிருந்தார்கள். வெள்ளைக்காரர்கள் எங்களை ஆட்சி செய்த காலத்தில் கொடுத்த தோட்ட வீடு. பால் மரம் வெட்டும் வேலைக்கு வந்தவர்கள் தங்குவதற்கு கொஞ்சம் நிலத்துடன் கூடிய வீடுகளை எஸ்டேட்டிலேயே கொடுத்தார்கள். வீட்டிற்கு தனியே வாடகை என எதுவும் இல்லை. ஆனால் தண்ணீருக்கும் மின்சாரத்திற்கும் மட்டும் மாதாந்திர கட்டணத்தைக் கொடுக்க வேண்டும். என் தாத்தா உயிரோடு இருக்கும் வரை அந்த வெள்ளைக்காரர்கள் செய்த எந்தக் கொடுமையைப் பேசினாலும், கடைசியா எங்களுக்கு இப்படி வீட்டையும் நிலத்தையும் கொடுத்துவிட்டு புண்ணியத்தைத் தேடிக்கொண்டதாக சொல்லித்தான் முடிப்பார்.
எதற்கும் ஓர் எல்லை உள்ளது போலவே வெள்ளைக்காரர்களின் புண்ணியத்திற்கும் ஒரு எல்லை வந்தது. நல்லவேளையாக என் தாத்தா உயிரோடு இல்லை. இருந்திருந்தால் இந்தச் செய்தி கேட்டதும் நெஞ்சைப் பிடித்து கீழே விழுவதற்கு முன்னமே உயிரை விட்டிருப்பார்.
புறம்போக்கு நிலத்தை அரசாங்கம் தன் மக்களின் நலனுக்கு பயன்படுத்தப் போவதாக சில அதிகாரிகள் ஒவ்வொரு வரிசை வீடுகளுக்கும் வந்து அறிக்கைகளையும் ஆலோசனைகளையும் கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.
நாங்கள் வாழ்ந்துகொண்டிருந்த இடம்தான் அந்தப் புறம்போக்கு இடம் என்பது எங்களுக்கு பல நாட்களுக்கு பிறகே தெரிந்தது.
இங்குள்ளவர்கள் இதுவரை வாடகை ஏதும் கட்டாததாலும் இந்நிலத்தின் உரிமை குறித்து பெரிதாக எதுவும் எங்களுக்குத் தெரியாததாலும், இந்நிலம் சிக்கல் இல்லாமல் கை மாறியது. இதுவரை வாழ்ந்தவர்களின் மனதைப் புண்படுத்தாத வகையில் ஒவ்வொரு குடும்பத்தலைவருக்கும் ஒரு தொகை கொடுக்கப்பட்டது. சிலர் அதை வைத்து வேறு இடத்திற்கு குடியேறினார்கள். இன்னும் சிலர் குடித்தே பணத்தை முடித்தார்கள். பிறகு கூடுதல் பணத்திற்காக போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மக்களின் மீது எப்போதும் அன்பையும் கருணையையும் கொண்டிருக்கும் அரசாங்கம் என்பதால், ‘மலிவு விலை வீடுகள்’ என்ற திட்டத்தைத் தொடங்கி இங்குள்ள சிலருக்கு அவ்வீடுகளை வழங்கினார்கள். வீட்டு வாடகை, தண்ணீர் மற்றும் மின்சாரத்திற்கான மாதாந்திர கட்டணம், சாலை வரி, பக்கத்திலிருக்கும் சாக்கடையைச் சுத்தம் செய்ய வரி, என வரிக்கு வரி , வரி போட்டார்கள். மலிவு விலை வீடுகள் என அவர்கள் சொன்னது உண்மைதான், மாதாந்திர கட்டணத்தையும் வரியையும் கணக்கிட்டால் இது உண்மையிலே மலிவு விலை வீடுதான். வீடு மட்டும்தான் மலிவு.
நாங்கள் வாழ்ந்த எஸ்டேட்டில் குறிப்பிட்ட சில ஏக்கர் நிலத்தை அழித்து, மக்கள் நலனுக்காகத் தொழிற்சாலைகள் கட்டப்போவதாகச் சொன்னார்கள். இங்கு இதற்கு முன் வாழ்ந்த எங்களுக்குத்தான் முதல் வேலை வாய்ப்பு என்று நாங்கள் ஓட்டு போட்டவர், கோட்டுப் போட்டுக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார். எல்லோருக்கும் புதிய வாழ்க்கை எப்படி இருக்குமென்ற பேச்சாகவே இருந்தது. ஒரே ஒருவர் மட்டும், ”அட போங்கடா… உங்களையும் பார்த்தேன் உங்களோட கட்சியையும் பார்த்தேன்” என எல்லோர் முன்னிலையிலும் சொல்லிவிட்டார். ஆனாலும் அந்தக் கிழவரை யாரும் பொருட்படுத்தவில்லை. பின்னர் அந்த கிழவர் மரணித்த தருவாயில் இருந்து அவர் வாயிலிருந்து வந்த சொற்கள் எல்லோர் வாயிலும் வந்து போகத் தொடங்கின.
சட்டென ஒருநாள் யாருடைய முன் அனுமதியும் பெற்றிடாமல் எங்கள் வீடுகளை இடிப்பதற்கான இயந்திரங்களுடன் சில மனித ரோபோக்கள் வந்திருந்தன. என்ன கேட்டாலும், எப்படி அழுதாலும் இடிக்கப்போவதை மட்டுமே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தவர்களை எப்படி மனிதர்கள் பட்டியலில் சேர்ப்பது. அரசாங்கம் தேவைப்படுவதாகச் சொல்லிய நிலம் எங்கேயோ இருக்கிறது. இவர்கள் இங்கே இடிக்க வந்திருக்கிறார்கள்.
அப்போதும் தலைவர் வந்தார். இம்முறை கோட்டு சூட்டெல்லாம் போட்டிருக்கவில்லை. கோவிலில் உலக மக்களுக்கானப் பிரார்த்தனை செய்து முடித்து வேட்டி சட்டையுடன் வந்திருந்தார். எங்கோ குழப்பம் நிகழ்ந்திருப்பதாகவும், அவர் பேசி எங்களுக்குச் சில வாரங்கள் அவகாசம் கொடுப்பதாகவும் சொன்னார். அந்த இடைவேளையில் குறைந்த விலை வாடகை வீடுகளை மேலும் சிலருக்குப் பார்த்துக் கொடுப்பதாகவும், இப்போதைய இடத்தை அழித்து மீண்டும் தொழிற்சாலைகள் மற்றும் வீடுகள் கட்டும் போது ஆளுக்கொரு வீடு கிடைக்க வழி செய்வதாகவும் கழுத்தில் போட்டிருந்த ருத்ராட்ச மாலையில் சத்தியம் செய்தார். வேறு வழியின்றி எல்லோரும் ஆளுக்கு ஒரு இடமென எங்கெங்கோ தேடி தற்காலிகமாக குடியேறினார்கள்.
சில மாதங்கள் கழிந்த நிலையில், வேலை கிடைக்கும் என நம்பியிருந்த அன்றாட கூலிக்காரர்களுக்கு மிகுந்த ஏமாற்றம். தொழிற்சாலை தொடக்கவிழாவிற்கு மட்டும் திறந்திருந்த வாயில் கதவு அதன் பின் எங்களுக்காகத் திறக்கவேயில்லை. நாங்கள் தங்கியிருந்த இடங்கள் வெற்று நிலங்களாக தெரிந்தன, வந்து சேர்ந்த வேற்று நாட்டவர்களுக்கே அங்கு வேலை கிடைத்தது.
எதிர்பார்த்தபடி வேலை கிடைக்காததால் அவரவர்க்கு கிடைத்த வேலைகளை செய்யத் தொடங்கினார்கள். ஒரு சிலரே ஏதேதோ காரணங்கள் சொல்லி இடிந்து கிடக்கும் குடியிருப்பில் சில பலகைகளையும் பாய்களையும் வைத்து கூடாரம் போல எதையோ செய்து கொண்டு அங்கு தங்க ஆரம்பித்தார்கள்.
வீடுகள் இடிபட்ட இடங்களில் அதிகாரிகள் மீண்டும் வீடு கட்ட தொடங்கினார்கள். அவசரப்பட்டு வேறு இடங்களுக்கு வந்துவிட்டோம் என நாங்கள் வருந்தினோம். தற்காலிகக் கூடாரங்களை அமைத்தவர்கள் மீது பொறாமையாக இருந்தது. எப்படியும் அவர்களுக்கு ஆளுக்கொரு வீடு அங்கேயே கிடைக்கும். கொடுத்து வைத்தவர்கள்.
புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன, வெளிநாட்டிலிருந்து அந்தத் தொழிற்சாலைக்கு வேலைக்கு வந்தவர்களே அந்தக் குடியிருப்பில் நிறைந்தார்கள். தற்காலிகக் கூடாரம் அமைத்தவர்களுக்கு கிடைத்த வீடு குறித்து விசாரிக்கச் சென்றிருந்தோம். அவர்களை அங்கு மட்டுமில்லை இன்றும் வேறெங்கும் காண முடியவில்லை. ஒருவேளை இடிக்கப்பட்ட குடியிருப்பில் வாழ்ந்தவர்களை விரட்டி விட்டு இவர்களுக்காக வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கலாம்.
அப்படி ஆளுக்கொரு திசையில் பிரிந்து, கேள்விப்பட்டத் தொழிற்சாலைகளில் வேலைக்கு சேர்ந்தார்கள். அம்மாவுக்கும் அப்படியொரு தொழிற்சாலையில் வேலை கிடைத்தது. குடியிருப்பில் பிரிந்த பலர் வேலையிடத்தில் சந்திப்பது பழைய நினைவின் வேதனைகளுக்கு ஒத்தடம் கொடுப்பதாக இருந்தது. எங்கள் வீட்டில் இருந்து தொழிற்சாலைக்குச் செல்வதற்கு போக்குவரத்து வசதி சரியாக இல்லை. எனக்கும் பள்ளி விடுமுறை என்பதால் அம்மாவை வேலைக்குக் கொண்டு செல்லும் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். சம்பளம் இல்லாத வேலைக்காரன் ஆகிவிட்டேன்.
காலையில் வேலைக்கு கொண்டு செல்வது, மாலையில் வீட்டுக்கு கூட்டி வருவது என இடையில் கிடைத்த நேரத்தை என்ன செய்வதென்று தெரியாமல் முடிந்தவரை தூங்கினேன். தூக்கம் வராத நேரங்களில் தொலைக்காட்சியும் புத்தகங்களும் துணையிருந்தன. நான் ஓர் எழுத்தாளன் ஆனது அப்படித்தான் என நினைக்கிறேன்.
எங்கள் வீட்டில் இருந்து செல்லும் பாதையில் கட்டுமானப்பணியை ஏற்பாடு செய்திருந்தார்கள். பொது போக்குவரத்துக்கு தடை விதித்தார்கள். இது எந்த புறம்போக்கு நிலம் என தெரியவில்லை. ஆக, வேறு வழிகள் இருப்பதாக சொன்ன நண்பர்களை நம்பி, மாலை அம்மாவை கூட்டி வர செல்லும் சமயங்களில் புதுப்புது பாதைகளில் சென்றேன். வரும்போது வழக்கமான பாதையில் பிரச்சனைகளின்றி வரலாம். நல்லவேளை கட்டுமானப் பணியில் யாரோ ஒரு நல்லவர் இருந்திருக்கிறார்.
அப்படி ஒரு பாதையில் சென்று கொண்டிருக்கும் போதுதான் அவளைச் சந்தித்தேன். மற்றவர்கள் போல மோட்டாரை ஒரு சக்கரத்தில் ஓட்டுவதோ, வளைத்து வளைத்து ஓட்டுவதோ எனக்குத் தெரியாது. சைக்கிளில் கைகளை காற்றில் விட்டு ஓட்ட முயற்சித்து கவிழ்ந்து விழுந்துள்ளேன். அந்த அனுபவம், இன்னும் அவ்வபோது முட்டியில் வலியைக் கொடுக்கிறது.
நின்று கொண்டிருந்த பெண்ணை வெறுமனே கடந்து சென்றேன். அழகாகத் தெரிந்தாள். வீட்டு உடையில் இருந்தாலும் தோளில் ஏதோ பள்ளிப்பை போல ஒன்றை மாட்டிக் கொண்டிருந்தாள். ஒருவேளை பக்கத்தில் ஏதாவது தொழிற்சாலையில் வேலை செய்கிறவளாக இருக்கலாம். ஆனால் ஏன் அங்கு நிற்காமல் இப்படி ஒதுக்குப்புறமாக நிற்கிறாள் என பிடிபடவில்லை. எங்கள் இடங்களில் ஒரு வழக்கம் இருக்கிறது. ஊர்தியில் தொழிலாளர்களை வேலைக்கு கூட்டிச்செல்பவர்கள், ஒரு இடத்தில் சில தொழிலாளர்களை இறக்கி விட்டு மற்றொரு ஊர்தியில் ஏற்றிச் செல்வார்கள். அப்படியேதும் இருக்குமோ என முதல் நாளிலேயே முடிவு செய்துவிட்டேன். மறுநாளும் அவளை அங்கு பார்க்க நேரிட்டால், எப்படியும் அவளிடம் பேசிவிட வேண்டும் என முடிவெடுத்திருந்தேன். அதுதானே அழகான பெண்களுக்கு நாம் கொடுக்கும் முதல் பாராட்டு.
முன்பின் அறிந்திடாதப் பெண்களிடம் பேசுவதற்கென்றே சில யுக்திகள் வைத்துள்ளோம். அதில் ஒன்றை மட்டும் சொல்கிறேன். முன்பின் தெரிந்திடாத பெண்ணிடம் சென்று, “நீங்க ப்ரியாவோட தங்கச்சியா..? அக்கா எப்படி இருக்காங்க..? நானும் அவுங்களும் ஒன்னாதான் படிச்சோம்” என ஆரம்பிக்கலாம். ஆனால் அந்த பிரியாவை அவளுக்கும் தெரியாது நமக்கும் தெரியாது. அதிர்ஷ்டம் இருந்தால் அந்நொடியில் இருந்து புதிய பூக்கள் பூக்கும் ஓசையை நாம் கேட்போம். சட்டென உச்சி வெயிலில் வானவில்லின் வண்ணம் முகத்தில் தடவிச்செல்லலாம். ஒருவேளை நமது கேள்விக்கு பதில் தரும் வகையில் அந்த பெண்ணிடம் இருந்து, “இல்லங்க.. ஆனா உங்களை பார்த்தாதான் குமாரோட தம்பி மாதிரி இருக்கிங்க.. ஆமா உங்க அண்ணன் பேரு குமாரா ?” என்று பதிலுக்கு பதில் கேள்வி வந்தால், உடனே இடத்தை காலி செய்வது உத்தமம். ஏனெனில் நமது ’கம்பெனி’ ரகசியத்தை யாரோ கசியவிட்டிருக்கிறார்கள். அங்கு அதற்கு மேல் இருப்பது நமக்கு ஆபத்து.
மறுநாள் அதே வழியில் சென்றேன். அவள் அதே இடத்தில் நின்றுகொண்டிருந்தாள். அவளுக்காகத்தானே சென்றேன். இம்முறை நேற்றைய தினத்தை விடவும் இன்னும் அழகாக இருந்தாள். அப்படித்தான் தெரிந்தாள். சரி அந்தக் கடவுள் நமக்கென்று ஒரு தேவதையை அடையாளம் காட்டியிருப்பதாக நினைத்துக் கொண்டேன். அவளைக் கடக்கும் போது என் மோட்டார் மெதுவாக நகரத்தொடங்கியது. அவளைக் கடந்து செல்கிறேன். கண்ணாடியில் அவளைப் பார்த்தவாறே, இன்னமும் மோட்டார் மெதுவாகவே நகர்ந்து கொண்டிருக்கிறது. உச்சந்தலையில் கொட்டியதாகப்பட்டது. மோட்டாரை அங்கேயே நிறுத்தினேன்.
மறுநாளின் மறுநாள். இன்றும் அவள் அங்கு இருந்து விட்டால், அவளிடம் சென்று பேசுவதாக நேற்று எடுத்திருந்த முடிவு நினைவுக்கு வந்தது. தைரியத்தை வரவழைத்துக் கொண்டேன்.
மோட்டாரை லாவகமாகத் திருப்பினேன். ஆச்சர்யமாக இருந்தது முதல் முறையிலான லாவகம் என்றாலும் அத்தனை நேர்த்தியாக செய்ய முடிந்தது. மோட்டார் அந்தப் பெண்ணை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. அந்த பெண்ணின் கண்கள் என் கண்களை ஊடுருவியது. காற்று பலமாக வீசி என் தலைமுடியெல்லாம் பறந்தன. என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். இடது கையால் தலைமுடியை வாரினேன். பக்கத்தில் ஊர்தி ஒன்று என் காலை உரசுவதாக என்னை கடந்து சென்றது. அதுவரை அவள் பார்த்துக் கோண்டிருந்து. அந்த ஊர்தியைத்தான் என உரைத்தது. எவ்வளவு அவமானம் அது எனக்கு.
அவளின் அருகில் நின்றது ஊர்தி. அவளும் அது வரையில் காட்டிடாத சிரிப்பை காட்டிவிட்டு ஊர்தியில் ஏறிக்கொண்டாள். ஊர்தி முழுக்க கறுப்பு நிற கண்ணாடியால் மூடப்பட்டிருந்ததால் வேறு எதையும் என்னால் கவனிக்க முடியவில்லை. ஆனாலும் முயன்றேன்.
அதன் பிறகு அவளைத் தனியாக நான் பார்க்கவில்லை. அம்மாவை அழைத்து வருவதற்கான அதே நேரத்திற்குதான் செல்கிறேன். சில சமயம் அதற்கு முன்பும் செல்கிறேன். ஆனால் ஒவ்வொரு தடவையும் கறுப்பு கண்ணாடி சூழ்ந்திருக்கும் ஊர்திதான் நின்று கொண்டிருந்தது.
இப்படித்தான் ஒருமுறை வழக்கமான ஏமாற்றத்தை எண்ணியபடி அவ்வழி சென்று கொண்டிருந்தேன். தூரத்திலேயே அந்த ஊர்தியை கவனித்துவிட்டேன். அதோடு ஊர்த்தி குலுங்குவதையும் கவனித்தேன். நெஞ்சு படபடவென அடித்துகொண்டது. மோட்டாரை பிடித்திருக்கும் கைகள் நடுங்கின. வயிற்றில் என்னமோ கரைந்தது.
ஊர்தியை கடக்கும் சில நொடிகளில் லேசாக கண்ணாடி திறந்திருந்ததை குலுங்கலுக்கு இடையில் கண்டுகொண்டேன்.
அந்த அரையடி இடைவேளையில் அந்தப் பெண்ணின் கண்களைக் கடக்கும்போது கண்டுகொண்டேன். இம்முறை அவள் கண்களில் வீசிய உக்கிரம் என்னை வியர்க்க வைத்தது. என் நடுக்கத்தை மேலும் அதிகப்படுத்தியது. அம்மாவின் தொழிற்சாலையில் மோட்டார் தானாக நின்றபோதுதான் சுய நினைவுக்கு வந்தேன். ஆனாலும் நடுக்கமும் படபடப்பும் விட்டபாடில்லை. மறுநாள் எனக்கு உடல் நலமில்லாமல் போனது.
நல்ல வேளையாக தொழிற்சாலை நிர்வாகமே போக்குவரத்துக்கு பேருந்தை ஏற்பாடு செய்திருந்தது. பேருந்துக் கட்டணத்தைக் கட்டுவதற்கே தினமும் ஓவர் டைம் செய்ய வேண்டி வந்ததை அம்மாவும் வேறு யாரும் பெரிதுபடுத்தவில்லை.
சில நாட்களில் உடல் நலம் பெற்றது. மனம் மட்டும் ஏதோ குழப்பத்தில் இருந்தது. எதற்கான பதிலோ கிடைக்காத அதிருப்தியுடன் சில நாட்கள் திரிந்து கொண்டிருந்தேன். மீண்டும் ஒரு முறையாவது அவ்வழியில் சென்று அந்த பெண்ணைப் பார்த்து விட வேண்டும் என தீர்மானித்தேன். இந்நேரம் அந்த ஊர்திக்காரனுடன் திருமணம் முடித்திருப்பாள் என ஒரு மனமும் ஊர்தி இன்னமும் குலுங்கிகொண்டிருக்கும் என இன்னொரு மனமும் சொல்லிக்கொண்டன. இரண்டில் எதன் பேச்சை கேட்பது என யோசிக்காமலேயே புறப்பட்டேன்.
மோட்டாரை மெதுவாக்கினேன். தூரத்தில் ஊர்தி நின்று கொண்டும் இரண்டாம் மனம் சொன்னது போல குலுங்கிக் கொண்டும் இருந்தது. அன்று போல இந்தக் குலுங்கல் இல்லை. இன்று ஆவேசமாக இருந்தது. ஊர்தியின் கதவு திறந்தது. அந்த பெண் பொத்தென்று கீழே விழுந்தாள். பிங்க் வண்ண பிராவும் குட்டைப் பாவாடையும் மட்டுமே அணிந்திருந்தாள். தூரத்திலேயே நான் எனது மோட்டாரை நிறுத்தி விட்டேன்.
அவள் முகத்தின் மீது ஏதோ வீசப்பட்டது. அது அவளின் முகத்தில் சில நொடிகள் ஸ்தம்பித்தது. அதை வெறியுடன் கையில் எடுக்கிறாள். எழுந்து நிற்கிறாள், கால்களை ஒவ்வொன்றாக நுழைத்து குட்டை பாவாடைக்குள்ளே அவள் உள்ளாடையை அணிந்து கொண்டாள். ஆவேசம் கொண்டு ஊர்தியின் ஏற முயன்றாள். மீண்டும் ஒரு கை அவளைத் தள்ளிவிட்டது. கீழே விழுந்தாள். அவள் கத்துவது தெரிந்தது. ஆனால் கேட்கவில்லை. கீழே விழுந்து கிடந்தவள் மீண்டும் எழுந்தாள். இன்னமும் அவளிடம் அந்த ஆவேசம் இருந்தது. ஊர்தியின் கதவு மூடியது. ஊர்தி புறப்படத் தொடங்கியது. புறப்பட்டது.
பிங்க் பிராவுடனும் குட்டைப்பாவாடையுடன் ஊர்தியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். சில அடிகளில் ஊர்தி நின்றது. வாகனமோட்டியின் கண்ணாடி திறந்தது. உள்ளிருந்து வெண்மையான சீருடையையும் பள்ளிப்பையும் தூக்கி எறியப்பட்டன. பின்னர் ஊர்தி புறப்பட்டது. பை கிழிந்து சில புத்தங்கள் சிதறிக் கிடந்தன. ஏதோ பேசிக்கொண்டே சிதறிய புத்தகங்களைப் புத்தகப்பையில் போடுகிறாள். பள்ளிச் சீருடையை எடுத்து உதறிக்கொள்கிறாள். திரும்பி என்னை பார்த்தவாறே சீருடையை எந்தக் கூச்சமும் இன்றி அணிந்து கொள்கிறாள். எனக்குத்தான் அவளை அந்நிலையில் பார்க்கக் கூச்சமாகவும் பயமாகவும் இருந்தது. இன்னமும் நான் அங்கேயே நின்று கொண்டிருந்தேன். நடுங்கி கொண்டிருக்கிறேன்.
அவள் என்னை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறாள். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. மோட்டாரைத் திருப்ப முயன்றேன். அவள் என்னைக் கைகாட்டி அழைத்தாள். எனக்கு இருந்த அப்போதைய மனநிலையில் வீட்டுக்குப் போவதுதான் சரி எனப் பட்டது. எனது இரண்டாவது மனமும் அதைத்தான் சொல்கிறது. மோட்டாரை வளைத்து வந்த வழியில் திரும்பினேன். கண்ணாடியில் அவளை பார்க்க, அவள் இன்னமும் எனக்கு கையாட்டிக் கொண்டிருக்கிறாள். அந்தக் கண்கள் ஏதோ என்னிடம் சொல்ல முயன்றன. உண்மையில் அவை அந்தக் கண்கள்தானா இல்லை என் பயத்தின் வடிவமா எனகூட தெரியவில்லை.
அதற்கு பிறகு நான் அவளைப் பார்க்கவில்லை. ஏன் பார்க்க வேண்டும் என்ற கேள்வியும் ஒரு முறையாது அவளைப் பார்க்க வேண்டுமே என்ற ஏக்கமும் என்னை படுத்தி எடுத்தன. அவள் எதற்கு எனக்குக் கைகாட்டினாள், அந்தச்சூழலிலும் அவளால் எப்படி எனக்கு கைகாட்ட முடிந்தது. அவள் என்னிடம் என்ன எதிர்பார்த்தாள். நான் அவளுக்கு யாராகத் தெரிந்தேன். ஏன் தெரிந்தேன். பிடிபடாத கேள்விகளின் பிடியில் பலநாட்கள் பீடிக்கப்பட்டிருந்தேன். அவளுக்கு உதவியிருக்கலாமோ, எதற்கு அவளுக்கு உதவ வேண்டும்.
அதோடு அந்த வழியை நான் பயன்படுத்துவது இல்லை. அம்மாவும் தொழிற்சாலை பேருந்திலேயே சென்று வர தொடங்கிவிட்டார். அந்தக் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்தன. அங்கும் சில தொழிற்சாலைகள்தான் உருவாகின.
துர்க்கனவு போல அவள் முகம் கனவில் வந்துபோனது. அந்தக் கண்கள். அது சுமந்திருக்கும் செய்தி. அதன் உக்கிரம். அவளை மறந்துவிடுவேனோ என்ற அச்சம் அவளின் கனவு வருகைக்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் அந்த பெண்ணின் உக்கிரமான கண்களை மட்டும் அவ்வபோது சிலரிடத்தில் கண்டு அச்சம் கொள்கிறேன். அவளின் கண்கள். உக்கிரமான அவளின் கண்கள். அவளின் அதே கண்கள்…
*********