
“கணேஷ் பாய், ஸ்ட்ராபெர்ரி பிளாண்ட்ஸ் வந்துட்டுண்டு, இன்னும் ஒரு மணிக்கூரினுள்ளில் அவ்விட எத்தும் கேட்டோ! ஞான் விளிச்சப்போல் புள்ளி கோல் அட்டெண்ட் செய்தில்லா! நிங்களு அயாளோடு அறியுக்குக்கா ப்ளீஸ்!” லாஜிஸ்டிக்ஸ் கோஆர்டினேட்டர் சஜித் அப்படிச் சொன்னதும் இன்றும் லேட்டுதானா என்பதுபோல் ‘ஹ்ம்’ என்று பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.
ஆனால், அந்த சலிப்பை விட எரிச்சலூட்டும் இன்னொரு விஷயம், நடவுக்காக எகிப்திலிருந்து தருவிக்கப்பட்ட ஸ்ட்ராபெர்ரி செடிகள் இன்னும் ஒரு மணிநேரத்தில் வந்தடையவிருப்பதை எங்கள் ஃபார்ம் மேனேஜரான ஜமாலிடம் தெரிவிப்பது.
ஜமால் மொரோக்கோவைச் சேர்ந்தவன். எனக்கும் அவனுக்கும் ஆகாது என்பதைக் காட்டிலும் என்னை அவனுக்குப் பிடிக்காது. பொதுவாக அவன் அரபிகள் மற்றும் வெள்ளையர்களைத் தவிர மற்றவர்கள் யாரிடமும் சகஜமாகப் பேசி நான் என்றுமே கண்டதில்லை.
அதனால் என்னவோ பேசும்போதும் சிரிக்கும்போதும் கூட ஒரு பக்கமாய் வாயை அவன் அவ்வப்போது சற்று மேலிழுத்து, சுளித்துக் கொள்வது அவனது இயல்பே என்றாலும் என்னை அவமதிப்பது போலிருக்கும். அசவுகர்யமாய் உணர்வேன்.
குறிப்பாக வேலை சார்ந்த விஷயங்களுக்காக அவன் ஆபிஸிற்குச் செல்ல நேர்ந்தால் நிற்க வைத்தே பேசுவான். ஒரு நாள் கூட என்னை இருக்கையில் அமரும்படி சொன்னதேயில்லை. ஆனால், மேற்சொன்னது போல அவனுக்குப் பிடித்த அரபிகளும் வெள்ளைக்காரர்களும் என்றால் மட்டும் அவன் கொடுக்கும் முக்கியத்துவமே தனிதான்.
எனக்கு அவ்வளவு வரவேற்பெல்லாம் தேவையில்லை என்றாலும், சந்திக்கச் செல்லும் நேரங்களில், “வா, உட்கார்! வந்த விஷயமென்ன?” என்று விசாரிக்கும் அடிப்படை நாகரீகமாவது வேண்டும் இல்லையா? புருவத்தை மட்டும் உயர்த்தி ‘உனக்கு என்ன இங்கு வேலை?’ என்பது போல் செல்லும் நேரங்களில் பார்ப்பான்.
இத்தனைக்கும் கிட்டத்தட்ட எல்லா நாளும் எனது உதவிகளும் அனுசரணைகளும் அவனுக்குத் தேவைப்படும். அனைத்தையும் அதிகார தொனியிலேயே கேட்டுப் பெறுவான். அதனாலேயே அவனால் சடவுகளுக்கு உள்ளாகும் நேரங்களில் அவனைப் பற்றி, அவனுடைய சுபாவம் பற்றி எல்லோரிடத்திலுமே வலியச் சென்று புலம்பிக் கொண்டிருப்பேன். தினமும் அவன் முகத்தில் விழிப்பதே எனக்கு பாவம் என்பது போலவும் சில நேரங்களில் தோன்றுவதுண்டு.
போன வாரம் கூட இந்த ஸ்ட்ராபெர்ரி செடிகளுக்கான ஃபைபர் மீடியம் அதாவது தேங்காய் மட்டை நாரை புகையிலையைப் போல கொர கொரவென அரைத்துப்பொடியாக்கப்பட்ட தூள், அதாவது மண்ணுக்கு மாற்றாக உபயோகப்படுத்தப்படும் தளம் வந்திறங்கியிருந்தது.
அவைகளைப் பற்றி மேலும் விவரிக்க வேண்டுமென்றால், நீள் சதுர வாக்கில் பட்டை பட்டையாக கம்ப்ரெஸ் செய்து, பாலித்தீன் பைகளில் அடைக்கப்பட்டிருக்கும். பார்ப்பதற்கு மூன்று நான்கு மடங்குத் தடித்த தெர்மோகோல் ஷீட் போல் காட்சியளிக்கும். அதில் ஆங்காங்கே வேண்டிய அளவில் துளையிட்டு, தேவையான அளவிற்கு நீரைப் பாய்ச்சினால் உப்பிவிடும். செடிகளை நட, தொட்டிகள் தயார்!
இந்த இடத்தில் என்னுடைய பணியைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொள்வது உசிதம் என்று நினைக்கிறேன்.
ஐக்கிய அரபு நாடுகள் என்றாலோ அழகாக தமிழில் அமீரகம் என்றாலோ நம்மூரில் பலருக்கும் விளங்குவதில்லை. சொல்லப்போனால் இந்த நாட்டில் எந்த இடத்தில் வந்து இறங்கினாலும், வேலை பார்த்தாலும் துபாய் என்று சொன்னால்தான் எல்லோருக்கும் புரிகிறது.
ஆனால், நீங்கள் நினைக்கும் துபாய் அல்ல, நானிருப்பது சுற்றிலும் பாலைவனம் மட்டும் சூழ்ந்த ஒரு அத்துவானக் காட்டில்! காய் கனிகளை விளைவிக்கும் பிரபலமான ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் பேக்கிங் ஹவுஸ் சூப்பர்வைசராகப் பணிபுரிந்து வருகிறேன்.
என்னது பாலைமணலில் காய்கறிகளா? பழங்களா? என்று நீங்கள் யோசிப்பது விளங்குகிறது. எல்லாம் பசுமை இல்லங்களில் அதாவது க்ரீன் ஹவுசில் நவீன தொழில் நுட்பங்கள் மூலம் விளைவிக்கப்படுபவை. குளிர்காலங்களில் நம்மூரில் போல திறந்த வெளிகளிலும் பயிரிடப்படும்.
அப்படி க்ரீன் ஹவுஸ் தோட்டங்களிலிருந்து அறுவடை செய்யப்பட்டு வருபவைகளை கழிவுகளை நீக்கி, தர வாரியாகப் பிரித்து, பேக் செய்து சந்தைகளுக்கு அனுப்புவது எனது முதன்மையான வேலை. நியாயமாகப் பார்த்தால் அதுமட்டும்தான் எனது வேலையாக இருக்க வேண்டும். அதற்கே பணிநேரம் போதாது என்பது எனது தினசரி சவால். பேக்கிங் ஹவுஸ் 24/7 இயங்கும் என்பதால் விடுப்பு நாட்களில் கூட ஓடிக்கொண்டிருக்க வேண்டும். வெளியிருந்து வரும் பொருட்களை வாங்கி வைக்கும் பொறுப்பும் எங்களைச் சார்ந்ததென்பதால், அவ்வப்போது இதுபோன்ற ஃபார்ம் சார்ந்த பணிகளும் வந்து சேர்ந்து பொதிகளை மேலும் கூட்டிவிடும்.
அன்று அந்த ஃபைபர் மீடியம் வந்திறங்கிய நேரம் பார்த்து பேக்கிங் ஹவுசில் ஏற்கனவே இருந்த அறைகள் எல்லாம் நிறைந்து விட்டிருந்தன. அதனால் வந்த பொருளை உடனே பண்ணை குடோனுக்கு எடுத்துச் செல்ல ஆட்கள் அனுப்புமாறு ஜமாலுக்கு விளித்தேன்.
என் குரலைக் கேட்டாலே அவனுக்கு தேள் கொட்டியது போலிருக்கும் போல. ‘ரிஸீவ் செய்து அங்கேயே வை. காலையில் பார்த்துக் கொள்ளலாம்’ என்றான். மேலும், ‘ஆறுமணி மேலே எனக்கு எப்படி போன் செய்யலாம்?’ என ஆவேசமாக தனது குரலை உயர்த்தியபடி தொடர்பைத் துண்டித்துவிட்டான்.
வந்த கோபத்தில் நானும் உள்ளே வைக்க இடமில்லாத நிலையில் வெளியிலேயே எல்லாவற்றையும் கிடத்தச் சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டேன். அன்று பார்த்து சரியான மழை! ‘கிளவுட் சீடிங்’ அதாவது செயற்கை மழையை உண்டாக்க, இவர்களுக்கு வேறு நாளே கிடைக்கவில்லையாயென, வெளியிலேயே விடப்பட்டிருந்த சாமான்களை நினைத்து கவலை கொள்ளலானேன். எல்லாம் பாலித்தீன் பேக்கிங்கில்தானே இருக்கிறது, ஒன்றும் ஆகாது என என்னை நானே சமாதானமும் செய்துகொண்டேன்.
அடுத்த நாள் வந்தவன், எதற்கும் உபயோகமில்லாத உன்னுடைய ஆளால் எனது பொருட்கள் அனைத்தும் நாசமாகிவிட்டன என்று எனது உயர் அதிகாரியான ஜேம்ஸிற்கு, நான் வருமுன்னரே போன் செய்து கத்தியிருக்கிறான். அவரும் அரபி என்றாலும், ஜமாலைப் போலல்ல; மிகவும் மென்மையானவர்.
இவனுடைய சுபாவங்கள் ஜேம்ஸும் அறிந்ததுதான். நானும் அவரிடம் அவ்வப்போது அவனைப் பற்றி கம்ப்ளைண்ட் செய்திருக்கிறேன். ‘உங்களுக்குள் எப்போதும் பூனைச் சண்டைதான், பஞ்சாயத்துகள்தான்’ என்று விளையாட்டாக சலித்துக்கொண்டபடி சச்சரவுகளை லாவகமாகத் தவிர்த்துச் செல்வது அவருடைய வழக்கம்.
அப்படியும் அழுத்திச் சொன்னாலும் அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுவிட்டு ‘ஹல்லி! ஹல்லி!’ அதாவது இதெல்லாம் ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்று சென்றுவிடுவார். என்னதான் இருந்தாலும் அவரும் அதே மொழி பேசும் அதே நிறத்தவர்தானே, இவரிடம் சொல்லி என்னவாகப் போகிறது என்று விரக்தி கொண்டவனாக, ஒரு கட்டத்திலிருந்து நானும் அப்படியே விட்டுவிட்டேன்.
குறிப்பிட்ட நாள் நான் பேக் ஹவுஸுக்குள் நுழைந்தவுடன் எங்கிருந்தோ என் பெயரைச் சொல்லி கத்திக்கொண்டே என் சீட்டை நோக்கி வந்தவன், பதற்றத்தில் தன்னிச்சையாக எழுந்து நின்ற என்னை என் இடது கையை இறுக்கமாகப் பற்றி இழுத்தபடி சந்தையில் புதிதாய் வாங்கிய ஆட்டிற்குப் போல கழுத்தில் சுறுக்கேதும் வைக்காத குறைதான். ஃபார்ம் குடோன் பக்கம் என்னை பரபரவென அழைத்துச் சென்றான்.
‘கையை விடு! விடு!’ என்று நானும் உதறிவிட்டவாறு கத்த, ‘இன்னைக்கு உன்னை என்ன செய்கிறேன் பார்! நீ செய்து வைத்திருக்கும் காரியத்தை வந்து பார்’ என கூச்சலிட்டுக்கொண்டே வந்தானே தவிர பற்றிய கையை விடுவதாயில்லை! அனைவரின் கண்களும் எங்கள் மீதே வழியெங்கும் வெறித்துக் கொண்டிருந்தன. சிலர் பின் தொடர்ந்தும் வர தொடங்கியிருந்தார்கள். அதில், எனக்கு கீழே வேலை பார்க்கும் நேபாளிகளும் அடக்கம்.
நான் நினைத்தது போலவே தடிமனான பாலித்தீன் பைகளில் பேக் செய்யபட்டிருந்ததால் பொருளுக்கு ஒரு மோசமும் இல்லை. ஆனால், மண்ணும் சகதியுமாக பண்டில்கள் யாவும் குப்பையில் கிடந்தது போல் காட்சியளித்தன. அதை சுத்தம் செய்யாமல் கூட உபயோகப்படுத்தலாம். ஏனென்றால் மைக்ரோ ஸ்ப்ரிங் முறையில் நீர் பாய்ச்சும்போதும், சொட்டு நீர் மூலமாக உரங்கள் உபயோகிக்கும் போதும் எப்படியும் அழுக்காகதான் போகின்றன. பூக்கள் வரும்போதே பெரும்பாலும் மண் கறைகள் ஏதும் ஒட்டிவிடாதபடி அவ்வப்போது சுத்தம் செய்து பராமரிக்கத் தொடங்குவார்கள்.
அவனை சமாதானப்படுத்தும் வகையில் இதையெல்லாம் சொல்லி சமாளிக்க முனைய, அது அவனை மேலும் கோபப்படுத்தியிருக்க வேண்டும். ‘எனக்கே பண்ணையம் செய்வதைப் பற்றி பாடம் எடுக்கிறாயா? இன்னைக்கு உன் வேலை அவ்வளவுதான்! போய் உன் பொருட்களையெல்லாம் எடுத்துக் கொண்டு தயாராக இரு! இதோ இப்போதே எச்.ஆருக்கு கம்பளைண்ட் செய்து உன் சீட்டை கிழிக்க வைக்கிறேன்’ என்று ஆவேசமாகப் பேசத் தொடங்கவும். சட்டென வந்த கோபம் சுருங்கி கவலைகள் மேலோங்க ஆரம்பித்தன.
வங்கியில் வாங்கியிருக்கும் கடன் தொகை கண்முன் விரிந்தது. இது ஒரு சிறிய பிரச்சினை, இதற்கு ஏன் இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறான் என்று விக்கித்து தடுமாறி நின்றேன். மற்ற உயர் அதிகாரிகளிடமிருந்த அவனுடைய செல்வாக்கெல்லாம் அப்போதுதான் என் மூளைக்கு உரைக்க ஆரம்பித்தது போல உணர ஆரம்பித்தேன். இருந்தாலும் முந்தைய தினம் ஏதாவது நான் அட்ஜஸ்ட் செய்து வந்த பொருட்களை உள்ளே வைக்கச் சொல்லியிருக்க வேண்டும், இவன் குணம் அறிந்திருந்தும் நான் இவ்வளவு முட்டாளாக நடந்திருக்கக் கூடாது என என்னை நானே குறைப்பட்டுக்கொள்ள தொடங்கியதின் விளைவாக, “ஸாரி!” என்றேன்.
“ஹல்லிவல்லி!” தேவையில்லை! என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்றுவிட்டான். அது என்னை மீண்டும் அவன் மீது கோபம் கொள்ள வைத்தது, எதையும் கண்டும் காணாமல் பேருக்கு செயல்படுவதாக ஜேம்ஸ் மீதும் அதிருப்திகள் வழுத்தன. இந்த வேலையே வேண்டாம் என நானே முடிவு செய்தேன். வேலையைவிட்டு நின்றபின் வரும் செட்டில்மெண்ட் தொகை கடன்களை பூர்த்தி செய்ய உதவுமா என அடுத்தகட்ட சிந்தனைகளை ஓடவிட்டேன். போதாது என உரைத்தது. நண்பர்களிடம் வாங்கி சமாளிக்கலாம் என தீர்மானித்தேன். யார் யாரெல்லாம் கேட்டால் உதவுவார்கள் என நம்பிக்கை பட்டியலை ஒரு முறை சரிபார்க்க ஆரம்பித்தேன். ஆனால், நான் பயந்தது போல் அன்று எதுவும் நடக்கவில்லை. அந்த விசயம் அப்படியே அமுங்கிப்போனது.
“நான்தான் அவனை சமாதானம் செய்து வைத்தேன். இனி.. இனிமேல் இதுபோல் பொறுப்பற்று நடந்து கொள்ளாதே! உனக்குதான் தெரியுமே இந்த கம்பெனியில் அவனுக்கு இருக்கும் வாஸ்த்தா (செல்வாக்கு) என்னவென்று?” என்று ஜேம்ஸ் வழக்கம் போல் அட்வைஸ் செய்ய ஆரம்பித்தார். ஆனால், உண்மையான காரணம் என்னை விட்டால் உங்களுக்கு இந்த மாதிரி, இந்த சம்பளத்தில் மாடாய் உழைக்க எவனும் சந்தையில் இது போல் கிடைக்க மாட்டான் என மனதிற்குள்ளேயே பொறுமிக்கொண்டு, மேலெதுவும் பேசாமல் அன்று எனது வேலைகளைத் தொடர ஆரம்பித்தேன்..
வெண்ணிற பூக்களெல்லாம் பசும் பிஞ்சுகளாகி, காய்களாகி சரியாக நாற்பத்து ஐந்து நாளில் ஸ்ட்ராபெர்ரி அறுவடை ஆரம்பமானது. ஃபார்மிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட முதற் பழங்களில் பிரச்சினைகள் இருந்தன. அளவில் சிறியவை, அதிகம் கனிந்தவை அல்லது பாதி கனியாதவை, ஸ்ட்ராபெரியின் வழக்கமான கூம்பு வடிவம் போலில்லாமல் றெக்கை விரித்தது போலவெல்லாம் கலந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
அதனால் எங்களுக்கும் வேலைகள் கூடுதலானது. மற்ற கனிகளைப் போலல்ல ஸ்ட்ராபெர்ரி; தொட்டால் சிறிது நேரத்தில் அதன் தோல் மாறிவிடும், விரல் பட்ட இடங்களில் கருஞ்சிவப்பு கூடிவிடும். அதனால் பழத்தைத் தொடாமல் காம்பைத்தான் பற்றி எடுக்க வேண்டும். இல்லையென்றால் சீக்கிரம் பாழாகத்தொடங்கிவிடும்.
சந்தைகளுக்கு அனுப்பட்ட முதல் நாள் ஸ்ட்ராபெரிகளெல்லாம் மேற்சொன்ன காரணங்களுக்காக திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன.
அது எங்களுக்கும் சேல்ஸ் டிபார்ட்மெண்ட்டுக்கும் சலசலப்பை ஏற்படுத்தவே, விசயம் பெரிதாகி மேனேஜ்மேண்ட் வரை சென்றுவிட்டது. உயர் அதிகாரியிடம் நான் ஃபார்மைக் குறைகூறினேன். ஜமாலோ நாங்கள் சரியாக கையாளவில்லை என என் மீது குற்றம் சுமத்தினான். ஏனென்றால், அந்த ஒரு ஹெக்டரில் மட்டும் கிட்டத்தட்ட அறுபத்தி ஐந்தாயிரம் செடிகள் அதில் அன்று மட்டும் முதற் பழமாக பாதி வரை அறுவடை செய்யப்பட்டிருந்தது. மொத்தம் ஒரு டன்!
ஆரம்பமே இப்படியா! இன்னும் பன்னிரண்டு ஹெக்டர்கள் வேறு இருப்பதாகச் சொல்கிறார்களே, வரும் நாட்கள் எல்லாம் எப்படி செல்லப்போகிறதோ என்று யோசித்தபடி நின்றேன். ஆனால், முடியாதது என்று ஒன்று இருக்கிறதா என்ன?
இந்த மாதிரி பிரச்சினைகளைத் தவிர்க்க க்ரீன் ஹவுசிலேயே கிரேட் செய்து அனுப்ப வேண்டும் என்று எனது கோரிக்கையை முன் வைத்தேன். அது ஜமாலை மகிழ்விக்கவில்லை என்றாலும், ஜேம்ஸ் என்னை அங்கு சென்று, அனைவருக்கும் பேக்கிங்கிற்கான பயிற்சியளிக்கும்படி கேட்டுக்கொண்டார். நான் அங்கு செல்லும்பட்சத்தில் மீண்டும் எங்களுக்குள் பிரச்சினைகள் எழலாம் என தோன்றியதைச் சொன்னேன்.
“மற்ற காய்கள் கனிகள் என்றால் இங்கே ஓகே, ஸ்ட்ராபெர்ரி நீ சொன்னதுபோல் அங்கேயே பேக் செய்து வந்தால்தான் சிறந்தது. அதற்கு நீ அவர்களுக்கு பயிற்சி கொடுத்தே ஆக வேண்டும். திரும்ப திரும்பத் தொட்டால்,கையாண்டால் பழங்கள் சீக்கிரம் பாழாகி விடும் என்று உனக்கு தெரியாதா? அதனால் நீ செல். ஜமாலிடம் நான் பேசிக்கொள்கிறேன்” என்றார் ஜேம்ஸ். நீ மேலும் செல்லும் நேரத்தில் பெரும்பாலும் தொகோமா மட்டும்தான் இருப்பான் என்றும் தைரியமுமூட்டியபடி தலைமை அலுவகத்தில் தனக்கு மீட்டிங் இருப்பதாக, மாலையில் முடிந்தால் சந்திக்கலாம் எனச் சென்றுவிட்டார்.
தொகோமா ஜமாலுடைய அசிஸ்டெண்ட்; அதாவது ஃபார்ம் சூப்பர்வைசர். எத்தியோப்பியன். எனக்கு கொஞ்சம் நெருக்கம் என்பதால் எப்போதும் எங்களுக்குள் பிரச்சினைகள் ஏதும் வந்ததில்லை.
ஆனால், நான் சென்ற நேரத்தில் ஜமாலும் நின்று கொண்டிருந்தான். நின்றால் என்ன.. ஏன் பயப்பட வேண்டும்? எது நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என நெஞ்சை நிமிர்த்தி ஒரு போர் வீரனைப் போலச் சென்றேன். முந்தைய தினம் வந்த கம்பளைண்ட்டால் கிட்டத்தட்ட ஜமாலே அங்கே சூப்பர்வைசிங் செய்து கொண்டிருந்தான். ஆனால், வேலை சுத்தமில்லாமல் இருந்தது. சிறிய மற்றும் ஷேப் சரியில்லாத பழங்களை தனியாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், நன்றாக பழுத்த, பழுக்காத பழங்களை கலந்துக்கட்டி பேக் செய்யப்பட்டிருந்தது.
நான் சென்ற வேலைக்கு சும்மாவா நின்றுவிட்டு வர முடியும்? தலையிட்டு, தக்கமுறையில் தரம் பிரித்து, வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் எப்படி பேக் செய்வதென விளக்க ஆரம்பிக்கவே, ஜமால் கோபப்பட்டுக்கொண்டு ‘இதற்கு மேல் எப்படி கிரேட் செய்வது?’ என்று அவனே பேக் செய்ததென ஒன்றை எடுத்துக்காட்ட அதிலும் குறைகள் கண்டேன். எல்லோருமுன் அது அவனுடைய ஈகோவை மேலும் சீண்டியிருக்க வேண்டும். ஏற்கனவே ஜவ்வு மிட்டாய் போல சிவந்து கிடைக்கும் அவனது முகம், கிட்டத்தட்ட ஸ்ட்ராபெர்ரி நிறத்திற்கே மாறிவிடுமளவிற்கு அவனுக்கு கோபம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. மீசையில் மண் ஒட்டினாலும் எல்லோர் முன்பும் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள அவன் விரும்பவில்லை. கிட்டத்தட்ட ஐம்பத்திற்கு மேற்பட்டோர் அருகிலும் ஆங்காங்கேயும் க்ரீன் ஹவுசில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
தனிப்பட்ட முறையில் அவன் மீது எனக்கு வருத்தங்கள் இருந்தாலும், அதையெல்லாம் பணியில் தொடர்புப்படுத்தாது அதுவரை அங்கே அடக்கிதான் வாசித்துக் கொண்டிருந்தேன். ஆனால், தன்னை ஒரு பெரிய புடுங்கி என்று நினைத்துக் கொண்டிருக்கும் இவனை எல்லோர்முன்பும் ஓரிரு வார்த்தைகள் அதட்டிப் பேசிவிட்டாலே அவனது சுப்பீரியாரிட்டி பிம்பம் எல்லாம் ஒரு நொடியில் தகர்ந்துவிடும்; அதே நேரத்தில் எனக்கும் இவனை தைரியமாக எதிர்த்து விட்ட பெயரும் எல்லோர் முன்பும் கிடைத்துவிடும் என்று சட்டென உதிக்க ஆரம்பித்த மூளையின் வேதியியல் மாற்றங்களால், அதுவரை காத்துவந்த எனது பொறுமைக்கு ஃபுல் ஸ்டாப் வைத்துவிட்டு, பதிலுக்கு பதில் அவன் அளவிற்கு நானும் ஹை டெசிபெலில் நானும் கத்த ஆரம்பித்தேன்.
பதறியடித்துக்கொண்டு தொகோமா என்னைத் தடுக்க வந்தும் என்னால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. நானும் எல்லோர் முன் அவமதிக்கப்பட்டது போல் காயப்பட்டிருந்தேன். என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று எல்லாவற்றையும் கொட்டிவிட வேண்டும் போலிருந்தது. ஜமால், தன்னுடைய மேட்டிமைத்தனங்களால் ஒவ்வொரு சூழலிலும் என்னை நடத்தி வந்த விதங்களை கடுமையான சொற்களைக் கொண்டு விமர்சிக்கத் தொடங்கினேன்.
இப்போது அவன் முகம் கறுக்கத் தொடங்கியது. தன்னுடைய பண்ணையாட்கள் முன்பு நான் அவ்வாறு பாய்ந்து கொண்டிருந்ததை அவனால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. கோபம் அவனது குரல்வளையை அடைத்தாற்போல, வார்த்தைகள் ஏதும் வராமல், மின்சாரம் பாய்ந்தது போல் கைகளை கீழே நோக்கி விரித்தபடி இரண்டு புறங்களிலும் வெறிப் பிடித்தவன் போல திரும்பி திரும்பி ஓரிரு முறை பார்த்தான்.
பிழம்பு போல் எழுந்த ஆத்திரத்தில் என்ன செய்வதென அறியாது கிரேடிங் டேபிளிலிருந்த ஸ்ட்ராபெர்ரி ட்ரே ஒன்றை எடுத்து எனை நோக்கி வீசியவனாக, ‘மரியாதையாக இங்கிருந்து சென்றுவிடு! இப்பவே!” என்று கூச்சலிட்டான். அந்த பிளாஸ்டிக் ட்ரே என்னை உரசிக்கொண்டு வேறு இடத்தில் போய் விழுந்தாலும், வீசியெறிந்த பழங்களில் சில குண்டுகள் போல என்னை ஆங்காங்கே துளைத்ததில், உடைகளில் ரத்தக்கறை பட்டது போல் ஆங்காங்கே தெறித்திருந்தவை எல்லாம் சின்னச் சின்ன சதைத்துண்டுகள் போல நைந்து கீழே நழுவி விழுந்தன.
எல்லோரும் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றார்கள். அப்போது அவனது அந்தச் செயல் என்னை சிரிக்க வைத்தது. மேலும் அவனுடைய செயல்களும், என்னுடைய கோபங்களும் என்னை மேலும் காத்திரமாக்கியது. நான் அங்கிருந்து நகருவதாக இல்லை. மேலும் கொந்தளித்தது போல கண்கள் சிவந்தான்.
“போ! மரியாதையாகப் போய் விடு! இது என்னுடைய இடம். இனி இங்கே வர உனக்கு அனுமதி இல்லை!” என விரட்டினான். தொகோமா தயவு செய்து என்னை வெளியேறி விடுமாறு ஜாடைகள் காட்டவே, இறுதியாக அங்கிருந்து வெளியேறினேன்.
சற்றும் அந்த மிடுக்கும் நெஞ்சுரமும் குறையாமல் நான் அங்கிருந்து வெளியேறியிருந்தாலும், கண்களெல்லாம் என் பிடரிக்கு பின் உச்சுக் கொட்டியது போல ஒரு பிரமை, வருத்தம், சங்கடம் எல்லாம். ஆனால், பல நாட்கள் தேக்கி வைத்த என்னுடைய சீற்றங்கள் யாவும் திறந்துவிட்ட மடைபோல் பாய்ந்து அவனை அப்படியே கீழே சாய்த்துவிட்டது என்னைப் போல் ஒடுங்கிக் கிடந்த சிலரை ஆற்றி மகிழ்வித்திருக்கும் என உள் மனம் சொல்லியது.
சட்டையிலும் பேண்ட்டிலும் ஒட்டியிருந்த பழத்துணுக்களோடும் கறைகளோடும் வழியில் என்னைக் கண்டவர்கள் விநோதமாகப் பார்த்ததும், சிலர் விசாரித்ததும் ஆச்சர்யங்கள் ஏதுமில்லை. ஆனால், நடந்த எதையும் நான் யாரிடமும் பகிர்ந்துகொள்ளவில்லை. சுத்தம் செய்துக்கொண்டு எனது இருக்கைக்குச் சென்று பணிகளைத் தொடரலாயினேன்.
மனம் ஒரு புறம் திருப்தியையும் மறுபுறம் வருத்தங்களையும் சுமந்தபடி ஓய்வில்லாமல் நடந்தவைகளை எண்ணி எண்ணி, மனக்கண்ணில் திரையிட்டு திரையிட்டு என்னை வருத்திக் கொண்டிருந்தது. இது விசாரணைக்குச் சென்றால் கூட எனக்கு பயமில்லை. அவன் மீது தவறுகள் இருந்ததால் என்னைத் தண்டிக்கப் போவதில்லை. அவனையும் கண்டிக்கப்போவதில்லை. நிர்வாகம் சமாதானப்படுத்தி வைக்கவே விரும்பும். இதே என் மீது தவறுகள் இருந்திருந்தால் அவன் எப்போதும் மிரட்டுவது போல அப்போதே பெட்டி படுக்கையோடு ஏர்போர்ட்டில் நின்றிருப்பேன்.
சம்பவம் நடந்த நாள் ஒரு வெள்ளைக்கிழமையும் கூட. முகம், கால்களைக் கழுவி தொழுகைக்குத் தயாராவதற்கு ஜமால் ரெஸ்ட் ரூம் பக்கமாக வந்தான். அச்சமயம் எதார்த்தமாக நானும் அங்கே நின்றுகொண்டிருந்தேன். எதுவும் பேசவில்லை. அவன் பக்கம் திரும்புவதையே இனி பாவம் என்று நினைத்தேன்.
“அஸ்ஸலாமு அலைக்கும்!” என்று மெல்லிய குரலில் சொன்னான். வார்த்தைகளில் மென்மை கலந்திருந்தது. நானும் “வலைக்கும் ஸலாம்” என்று எந்தவித உணர்வுகளையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் பதில் சொன்னேன். மேற்கொண்டு எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டான்.
எனது வேகங்கள் எல்லாம் கட்டுக்குள் வந்தபிறகு ஜேம்ஸிற்கு போன் செய்து காலையில் நடந்தவற்றைக் கூறினேன். “ஏன் அந்த நேரத்தில் என்னை அழைக்கவில்லை? அழைத்திருக்க வேண்டும்!“ என்றார். அப்புறம், ‘’அவன் அப்படித்தான் என்று உனக்கு தெரியாதா, கவனமாக கையாண்டிருக்க வேணாமா?” என்று எனக்கு அறிவுரைகள் சொல்ல ஆரம்பித்தார்.
இவரது எதிர்வினைகளெல்லாம் எப்படி இருக்கும் என்று தெரியாதா? அதைப்பற்றித் தொடரப்பிடிக்காமல், ரெஸ்ட் ரூமில் ஸலாம் சொன்னதைச் சொன்னேன். ‘அப்பாடா’ என்று ஒரு பெருமூச்சு விட்டார். “நான் எதுவும் அவனிடம் பேசவா?” என்று திடீர் பிரகாசத்தோடு கேட்டார். எப்போதும் போல நீ ஒரு ஆணியையும் பிடுங்க வேண்டாம் என்று போனை வைத்துவிட்டேன்.
நான் எதிர்பார்த்ததை போலவே கிட்டத்தட்ட சைட்டில் அனைவருக்கும் நடந்த சம்பவங்கள் யாவும் தெரிந்துவிட்டிருந்தது. ‘பலே கணேஷ் பாய்!’ என்று சிலர் நேராகவே என்னைச் சந்தித்து, தோளைத் தட்டிப் பாராட்டியதெல்லாம் ஏதோ இந்திய அணிக்கு உலக கோப்பையே வாங்கிக் கொடுத்தது போலிருந்தது.
ஜமாலைப் பற்றிய தங்களுடைய மனக்குமுறல்கள் அனைத்தையும் தமிழ், ஹிந்தி, ஆங்கிலமென எல்லா மொழிகளிலும் மாறி மாறிக் கொட்டினார்கள். அனைவரையும் புன்னகையோடேயே கடந்தேன்.
முந்தைய நாள் நடந்த சம்பவம் அவனை மிகுந்த குற்றவுணர்விற்கு ஆளாயிருக்க வேண்டும். பெரிதாக்க நினைத்திருந்தால் ஆக்கியிருக்கலாம். ஆனால், அப்படி நான் யாரிடமும் முறையிடாதது அவனை யோசிக்க வைத்திருக்க வேண்டும். இரவெல்லாம் அதையே சிந்தித்துக் கொண்டிருந்தவன் போல அடுத்த நாள் ஆபிசில் நுழைந்ததும் நுழையாததுமாக என்னுடைய இருக்கையை நோக்கி வந்தான். நான் கவனித்தும் கவனிக்காதது போல பார்வையை திசை மாற்றி கணினித்திரையில் ஓடவிட்டுக் கொண்டிருந்தேன். அருகில் வந்தும் நானாக எதுவும் பேசாத நிலையில், அவனே ஒரு சேரை இழுத்துப் போட்டபோதுதான் அவன் வருகையை அப்போதுதான் உணர்ந்தது போல செயற்கையான பாவனைகள் காட்டினேன்.
எந்தவித குரல் பிசிறுமின்றி, தெளிவான வார்த்தைகளால் தான் அப்படி நடந்துக் கொண்டது தவறுதான் என்னை மன்னித்து விடு என்றான். “நாம் இருவரும் சகோதர்கள் மாதிரி, எதையும் மனதில் வைத்துக் கொள்ளாதே! ஆனால், நான் இங்கே யார் என்பது உனக்கு நன்றாகவே தெரியும், என்னுடைய தகுதிகளையும் நீ அறிவாய், அத்தனை ஆட்கள் முன்பு நீயும் கொஞ்சம் நிதானமாக நடந்திருந்திருக்க வேண்டும் அல்லவா?” – அவன் குரலில் வருத்தங்கள் தோய்ந்திருந்தாலும் ஸாரி சொல்லவெல்லாம் எனக்குத் தோன்றவில்லை. எல்லாவற்றிற்கும் மௌனமாக அமர்ந்திருந்தேன். அதே நேரம் அவன் மீதான கோபங்கள் தணிந்து விட்டது போலவும் உணர்ந்தேன்.
அவனது வருகையும் மன்னிப்புக் கோரலும் என்னை சமாதானப்படுத்தியிருந்தாலும் அவன்மீது புதிய பாசமெல்லாம் உடனே தோன்றிவிடவில்லை. கடந்த காலங்களில் அவனாலான நீங்காத வடுக்கள் அப்போதும் எஞ்சியேயிருந்தன. இருந்தாலும், “அதெல்லாம் ஒன்றுமில்லை; இனி சரிவர நடந்து நாம் கொள்வோம்” என்று ஒப்புக்காக புன்னகைக்க, சிரித்துக் கொண்டே சமாதானம் கொண்டவனாகச் சென்றுவிட்டான்.
சில மாதங்களில் அப்போதிருந்த லோக்கல் அரபி கல்ஃபான் ரஷீத் தனது பொறுப்புகளிலிருந்து விலகிக்கொள்ள, பொது மேலாளராக புதியவர் சேர்ந்தார். அதுவும் தமிழர் என்பது என்னைப் போன்றோர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. எங்கள் சைட்டில் சிஈஓ அல்லது ஜி.எம். யார் வந்தாலும், அவர்களுக்கென்று ஒரு பிரம்மாண்டமான தனியறை ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த குறிப்பிட்ட அரபி சென்றவுடன், ஜமால் தனது அலுவலகத்தை அந்த அறைக்கு மாற்றினான். அது ஜேம்ஸ் முதற்கொண்டு சிலருக்கு உட்புகைச்சலை ஏற்படுத்தியிருந்தாலும், அவன் அரபு பேசும் ஆள் என்பதால் அங்கே ஏன் என்று கேட்கவும் ஆளில்லை.
புதிய ஜி.எம். மிஸ்டர் ஏழுமலை ஆறுமுகம் விசிட்டிற்காக எங்கள் சைட்டிற்கு வந்தபோது தனது அறையை ஜமால் ஆக்கிரமித்திருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்திருந்தாலும் அதை வெளிகாட்டிக் கொள்ளாமல் மீட்டிங் ஹாலிலேயே அன்றைய பொழுதை கழித்தார். அது என்னவோ தெரியவில்லை எவ்வளவு தன்னம்பிக்கை மிகுந்தவர்களாக இருந்தாலும் தமிழர்களிடம் மட்டும் இயல்பாகவே ஒரு பணிவான குணமும் பாலுக்கு சர்க்கரை போல சேர்ந்து கலந்திருப்பதை இங்கிருக்கும் பல ஆண்டு அனுபவத்தில் நான் எத்தனையோ முறை சாட்சியாகப் பார்த்திருக்கிறேன்.
மிஸ்டர் ஏழுமலை ஆறுமுகம் மிகவும் எளிமையான மனிதர். ஒரு ஜி.எம்மிற்கு உரிய எந்த ஒரு அதிகாரப் போக்கையும் அவர் கடைப் பிடிக்காதிருந்தார். அவரது சராசரி உயரத்திற்கும், சாக்லேட் கலருக்கும் அணிந்திருந்த உடைகள் கூட வெகு சாதாரணமாகத் தெரிந்தன. எல்லோரிடமும் கனிந்து கனிந்து பேசினார். இதையெல்லாம் வைத்தும் கூட ஜமால் அவரை குறைவாக மதிப்பிட்டிருக்க வேண்டும். மரியாதை நிமித்தத்திற்கு கூட தனது ஆபிஸில் வந்து அமர்ந்துகொள்ளும்படி அவன் கடைசி வரை அவரை அழைக்கவில்லை.
பிறகுதான் புரிந்தது மிஸ்டர் ஏழுமலை ஆறுமுகத்தை நான்தான் குறைத்து கணக்குப் போட்டிருக்கிறேன் என்று. என்னதான் ஜமால் ஃபார்ம் மேனேஜர் என்றாலும், இப்போது நம்மூர் ஜி.எம்.மிற்குத்தான் ரிப்போர்ட் செய்ய வேண்டும். ஆனால், அது ஜமாலின் அரபி மனநிலைக்கு ஒத்து வராமல் நிர்வாக இயக்குனரான இன்னொரு லோக்கல் அரபி அப்துல்லாஹ் ஜூனைபியின் கீழ் பணிபுரிவது போல் காட்டிக்கொள்ளவே, அது ஏழுமலை ஸாரை அசைத்துப் பார்க்கத் தொடங்கியது. விளைவு, தான் ராஜினாமா செய்வது போல் செய்து நாடகமாடினால் தனக்கு பணி மற்றும் சம்பள உயர்வு கிடைக்குமென கனவு கண்டபடி தனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்த ஜமாலுக்கு, அவனது ராஜினாமா கடிதத்தை மருந்திற்கு கூட மறுபரிசீலனை ஏதும் செய்யாமல் அங்கீகரித்தவராய் கையெழுத்திட்டு அவனுக்கு பேரரதிர்ச்சியைக் கொடுத்தார் மிஸ்டர் ஏழுமலை ஆறுமுகம்.
அந்த முடிவு எல்லோருக்குமே அதே அதிர்ச்சியைத்தான் கொடுத்தது. ஜமால் ஃபார்ம் மேனேஜர் மட்டுமல்ல பெர்ரி ஸ்பெஷலிஸ்ட்டும் கூட! இதற்காகவே ஐரோப்பிய பல்கலைக்கழகத்தில் பட்டயம் பெற்றவன். அதையும் விட அமீரகத்தில் அவன் தலைமையில்தான் முதன்முதலில் ப்ளூ பெர்ரி, ஸ்ட்ரா பெர்ரி, பிளாக் பெர்ரி, ராஸ்ப் பெர்ரி என எல்லா பெர்ரிகளும் விளைக்கவிக்கப்பட்டதும் என்பது அவனுடைய கூடுதல் சிறப்புகள். இதெல்லாம்தான் அவனுக்கு தான்தான் இங்கே பெரியவன் என்ற பிம்மத்தை தனக்குள் ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
அவன் எப்படிபட்டவன் என்றாலும் இந்த நிறுவனத்திற்காக நிறைய செய்திருக்கிறான். ஆண்டுதோறும் கம்பெனியும் மில்லியன் கணக்கில் அவனால் லாபம் பார்த்திருக்கிறது. ஆனால், அவன் ராஜினாமா செய்தபின் எல்லாம் பூஜ்யமாகிவிட்டது. அதற்கு பிறகு யாரும் அவனைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அவனுக்கு நன்றி கூறும் விதமாகவோ, மரியாதை நிமித்தமாகவோ பிரிவு உபச்சார விழாவைக் கூட நடத்த முன் வரவில்லை யாரும்!
அவன் மலையாய் நம்பியிருந்த அவன் மொழி பேசும் மேலதிகாரிகளெல்லாம் கூட எங்கு சென்றார்கள் என்றே தெரியவில்லை! அதனால் எங்கள் சைட்டிலேயே ஜேம்ஸ், தொகோமா போன்றோர்கள் தங்கள் அளவில் ஏற்பாடுகளைத் தொடங்கினார்கள்.
மேலும் சிலரும் அவர்களோடு இணைந்து கொண்டாலும், எனக்கு ஏனோ மனம் வரவில்லை. கடைசி இரண்டு மூன்று மாதங்களில் என்னதான் அவன் என்னிடம் நல்லவிதமாக நடந்து கொண்டிருந்தாலும், முழுதாக அவனை நான் மன்னித்திருக்கவில்லை. அவன் இந்த நிறுவனத்தை விட்டுச் செல்வது கவலை கொள்ளும் அளவிற்கு எனக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை; அவன் இடத்தில் ஜி.எம். ஆக கார்த்திக் குணசேகரன் என்பவரைக் கொண்டுவரும் செய்திகள் வதந்திகள் போல உலாவிக் கொண்டிருந்ததால், அது எனக்கு சற்று மகிழ்ச்சியாகவே இருந்தது.
கார்த்திக் குணசேகரன், ஊட்டியைச் சார்ந்தவர், இதே கம்பெனியில் வேறொரு சைட்டில் ஃபார்ம் ‘இன்சார்ஜ் ஆகப் பணிபுரிந்து வந்தார். நெடுங்காலமாக தனக்கு ப்ரோமோஷன் ஏதும் கிடைக்கவில்லை என்று ஆறு மாதத்திற்கு முன்புதான் விரக்தியில் ராஜினாமா செய்துவிட்டு, சொந்த ஊரில் இதே போல ஒரு நிறுவனததைத் துவங்கும் திட்டத்தில் சென்றதாகக் கேள்விப்பட்டிருந்தேன். கார்த்திக் ஏழுமலை சாருக்கு தெரிந்தவர் என்பது பின்பு கசிந்து வந்த உபரித் தகவல்.
ஆனாலும் ஜேம்ஸும் தொகோமாவும் கேட்டுக்கொண்டபின் போகாமல் இருக்க முடியவில்லை. உணவு முதல் அவனுக்கு நினைவுப் பரிசு வழங்குதல் வரைக்குமான தொகையை அனைவரும் பங்கு போட்டுக் கொண்டோம். தொகை சற்று அதிகம்தான், நம்மூர் காசுக்கு சுமார் எட்டாயிரம். ஆனாலும் தொகோமாவின் செலவுச் சுமையைக் குறைக்க மறுப்பேதும் தெரிவிக்காமல் கொடுத்தேன்.
பிரியும் சங்கடத்தை விட எங்களின் ஏற்பாடுகளைக் கண்டு அவன் நெகிழ்ந்துப் போயிருந்ததை அவன் கண்கள் சற்றுப் பனித்து, சந்தோசத்தில் மின்னிக்கொண்டிருந்ததில் என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. மொழி, இனம், நிறம், தொழில் வல்லமை சார்ந்து அவ்வளவு மிடுக்கோடு திரிந்துக் கொண்டிருந்தவனுக்கு எதிர்பாராது எல்லாம் நிறம் மாறி, பெரும் ஏமாற்றங்களை மட்டும் பரிசளித்தது போல் ராஜினாமாவிற்கு பின் நடந்தேறிய நிகழ்வுகளில் உடைந்திருந்தவனுக்கு, தனிப்பட்ட முறையில் எங்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த பிரிவு உபச்சார விழா மிகுந்த ஆறுதலைத் தந்திருக்க வேண்டும். அவ்வாறே தொகோமா கண்டுணர்ந்தது போல் என்னிடம் பகிர்ந்துக்கொண்டான். சந்தோச முகத்துடன் சிறப்பாக ஜமாலை அனைவரும் வழியனுப்பி வைத்து, அவனுக்கு பிரியா விடை கொடுத்தார்கள்.
பின்னொரு நாள், அங்குள்ள முதன்மையான ஷேக் ஒருவரின் மாளிகை பண்ணைகளுக்கு அவன் தலைமைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். அதில் ஆச்சர்யப்படவும் ஒன்றுமில்லை. ‘நமக்குதான் இங்கே வேலைக்கான போராட்டம்; அவர்களுக்கெல்லாம் என்ன?’ என்ற மனநிலையோடு எப்போதும் போல என் பிழைப்பைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
ஒரு நாள் சில கவர்களோடு தொகோமா ஓடி வந்தான். முகமெல்லாம் மகிழ்ச்சியில் பூரித்திருந்தது. என்ன என்பது போல் நானும் ஆச்சர்யத்தில் புன்னகைக்க, “ஜமால் ஷேக் பேலஸில் நடக்கும் தேசிய தின விழாவில் கலந்து கொள்ள நமக்கு இன்விடேஷன் அனுப்பியிருக்கார்” என்றான். கொஞ்சம் நம்ப முடியாமல் இருந்தாலும், யார் யாருக்கு எனக் கேட்க, “நீ, நான், ஜேம்ஸ்.. அப்புறம் இங்க லோக்கல்ல இரண்டு ஃப்ரெண்ட்ஸ்!” என்றான்.
இன்ப அதிர்ச்சியாக இருந்தாலும், போக விரும்பவில்லை. அதற்கு எனது சோம்பேறித்தனமும் ஒரு முக்கியக்காரணம். வரவில்லை என்று கூறினேன். தொகோமா ஏமாற்றமடைந்தான். அதே நேரம் புதிய எண்ணிலிருந்து எனக்கு அழைப்பும் வந்தது. ஆம், ஜமால்தான் அது. வந்து கலந்து கொண்டால் மகிழ்ச்சியடைவேன் என்றான் மிகவும் கனிவானக் குரலில். என்னால் மறுப்புத் தெரிவிக்க முடியவில்லை. வருகிறேன் என்றேன், எதிர்பார்ப்பேன் என்று வைத்து வைத்து விட்டான்.
இன்விடேஷனே அவ்வளவு பிரமாண்டமாக இருந்தது, அதற்கே ஒரு தொகை செலவழிக்கப்பட்டிருக்கும். ஆனால், அதைவிட முக்கியமானது கேட் பாஸ். கேட் பாஸ் இல்லாமல் யாரும் துளியும் உள்ளே நுழைந்து விட முடியாது. பலத்த பாதுகாப்புடன் துப்பாக்கி ஏந்திய காவலாளிகள் மாளிகையின் வாயிலிலிருந்து சில கிலோமீட்டர்கள் வரை ஆங்காங்கே நின்றுகொண்டிருப்பார்கள். ஒவ்வொரு எல்லையிலும் பதில் சொல்லிக்கொண்டுப் போவதே பெரிய காரியமாக இருக்கும், அதே நேரம் பெருமையாகவும்! அதற்கு முன் ஒரு முறை வேறொரு பேலஸிற்கு பணி நிமித்தமாகச் சென்றிருக்கிறேன். அலுவலகப் பணியே என்றாலும் அந்த கேட் பாஸ் வாங்குவதே இங்கே பெரும்பாடாக இருக்கும்! அவனது சிரத்தைகளையும் கவனத்தில் கொண்டு ஒரு வழியாகச் செல்வதென முடிவெடுத்தேன்.
ஜேம்ஸ், நான், தொகோமா என்று மூவரும் ஒரே காரில் பயணித்தோம். அந்தி சாயும் நேரமென்பதால் வழி நெடுக தேசிய தினத்திற்கான கோலாகலங்கள் பகலை விட பல மடங்கு வண்ணமயமாக காட்சியளிக்கும் விதவிதமான சீரியல் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்துக் கொண்டிருந்தன. எங்களின் வசதிக்காக கேட்டிலேயே காத்துக் கொண்டிருப்பதாக ஜமால் தகவல் அனுப்பியிருந்தான். பாதுகாப்புக் கருதி, செல்போன்களை வாயில் காவலர்களே தங்களது பொறுப்பிலேயே வரும்வரை வைத்துக் கொள்வார்கள் என்பது இங்கே பொதுவிதியும் கூட. ஆனால், அங்கேயே தங்கிப் பணி புரிவோருக்கு மட்டும் சிறப்பு அனுமதியுண்டு.
கேட்டிற்கு உள்ளே இருப்பதாகச் சொன்னவன், நாங்கள் சென்றடைந்த நேரம் எங்களுக்காக வெளியிலேயே கோட் சூட்டோடு ஐரோப்பிய அரபிகள் போல டிப் டாப்பாக இளஞ்சிவப்பும் சந்தனமும் கலந்த, தனது அழகான முகப்பொலிவோடு ஒரு சிறிய கோபுரம் போல நின்றுகொண்டிருந்தான். கண்டதும் கையசைத்தபடியே எங்களை நோக்கி மெல்ல நகர்ந்து வந்து ஒவ்வொருவரையும் கட்டியணைத்தபடி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டபடி நலம் விசாரித்தான். அவனைப்பற்றிய எந்த ஒரு முன் முடிவுமில்லாமல் அவன் முகத்தை அன்றுதான் நேருக்கு நேர் நோக்கினேன்.
நம்மோடு பணி புரிந்தவனா இது என்பது போலிருந்தன அவனது பேச்சும், வாஞ்சையும். அவனைச் சுற்றி அரேபியர்களுக்கே உரிய அடர்ந்த செண்ட் வாசனைகள் பரவி மிதந்தன. கைகளைப் பற்றியவனாக ஒரு பக்கம் உதட்டை மேல் நோக்கி இழுத்துச் சிரித்தான். அன்று அது எனக்கு உறுத்தவில்லை. நானும் சிரித்தேன். எல்லோரும் சிரித்தோம். அந்த இடமே வண்ண வண்ண மலர்களாலும், விளக்குகளாலும், பலதரப்பட்ட மனிதர்களின் அடையாளங்கள் தாண்டிய மகிழ்ச்சிப் பெருக்குகளாலும் நிறைந்து வழிந்தன.
“யெல்லா ஹபீபி..!” என்று ஜமால் தனது வலது கரத்தை விரித்து வாயிலைக் காட்டி, ‘வாருங்கள். உள்ளே செல்லலாம்’ என தனது கம்பீரக் குரலால் வரவேற்கவே, மாளிகை வளாகத்தினுள் நுழைய ஆயத்தமானோம்.
*******