
எனக்கு ஒரு பிள்ளையாரைத் தெரியும். உங்களுக்கும் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. உங்கள் பிள்ளையாரில் தும்பிக்கை இருக்கும். சிறுசு, பெரிசாக தொப்பை கூட இருக்கும். ஆனால், என் பிள்ளையாரில் அது பிள்ளையார் என்று நம்பும்படியாக எதுவும் இல்லை. கல் தூணில் குழி வெட்டி எண்ணெய் விட்டு யாராவது கொளுத்தி விட்டுப் போவார்கள். வேண்டுதல் நிறைவேறும் என்றெல்லாம் இல்லை. நிறைவேறிய நன்மைக்கு அவர்களுக்கு வேறு எதுவும் செய்யத் தெரியாமல் விளக்கேற்றினார்கள்.
புளிய மரத்தடி பிள்ளையார் அவர்.. பெரும்பாலும் புளியங்காயை அடித்து வெல்லம் வைத்து… சீனி இல்லை… நன்றாகக் கவனியுங்கள்… வெல்லம் வைத்து இடித்து, நுனி நாக்கில் வைத்து உள்ளிடும் போதல்லாம் அமிர்தம் பற்றிய வரையறை எங்களிடம்தான் இருத்தது.
கீழ் புழுதி மண்ணில் எதுவும் செய்ய முடியாது என்பதால் அந்த பிள்ளையார் மேடைதான் வசதி. அவருக்கும் கூட அது பொழுதுபோக்காக இருந்துருக்கலாம். பின்னாளில் கரண்டு கம்பங்கள் போட்டுவைக்க புளிய மர நிழல் வசதியாக இருக்கும் என்று இறக்கி வைத்தர்கள். மேடையை விட புளியங்காய் நசுக்க கரண்டு கம்பம் நன்றாக இருந்தது
புளிய மரம் என்றதும் அதற்குண்டானா நீள அளவு உங்களுக்குத் தெரிய வேண்டும் அல்லவா.. நான்கு பக்கமும் அதன் நிழலில் நான்கு வீடுகளை கட்டி குடியேறலாம். இரண்டு ஆள் உயரத்திற்குப் பின்புதான் கிளைகள் துவங்கும். உயரமான மனிதர் ஒருவர் உயர்த்திப் பிடித்த குடை போல் அந்த மரம்
இது தவிர, பிள்ளையாரை இரண்டு அடியாவது நிற்க வைக்க வேண்டும் என்று… மன்னிக்க வேண்டும்.. ‘பூடத்தை’ உருவம் இல்லாத ஒன்றை நாங்கள் பூடம் என்று தான் சொல்லுவதுண்டு.. முயற்சித்து சதுரக் கற்கள் நிறைய கொட்டி வைத்தர்கள். அது பிள்ளையாரின் பின்பக்கமாக வீங்கி நிறைந்திருந்தது.
மெதுவாக ஏறி நடந்து, அது நகரும் சப்தமும் எங்களுக்கு விளையாட்டு தான். ஆணி வைத்து அடித்தால் பெயர் எழுதலாம் என்ற ஆராய்ச்சியின் முன்னோடி யார் என்று தெரியவில்லை. ஆனால், எங்கள் எல்லாருடைய பெயரும் அதிலிருந்தது. பெரிய நாயக்கர் வேலைதான் இது. கண்டிப்பாக பிள்ளையாரை எழுப்பி விடலாம் என்று நினைத்த வருடத்தில்.. கொல்லைக்குப் போனவர் கால் ஓடிந்து காலமானார். நல்லவேளை அப்போது ராமர் கோவிலுக்கு செங்கல் அனுப்பும் சம்பவமும் எங்கள் ஊரில் நடந்தது. ஒருவேளை பிள்ளையார் ராமராக மாறவும் வாய்ப்பிருந்தது. ஆனால், ஏனோ நடக்கவில்லை. மாறாக புளிய மரத்தின் தென் திசையில் பதினைந்து அடி தள்ளி ராஜிவ்காந்தி நினைவாக வைத்த மரமும் வளரவில்லை.
மெல்ல நாங்கள் ஊரை விட்டு நகர்ந்து.. ஒரு நேரம் ஊருக்கு என்ன செய்வது என்று தெரியாமல் பிள்ளையார் கோவில் கட்ட வசூல் நடத்தினார்கள்.பெருமைக்கு மாவு இடித்த கதையாக உலக்கை புகாத அளவிற்கு மாவு மன்னிக்கணும் பணம் சேர்ந்தது.
இரண்டாவதாக தள்ளாடிய பெருசுவின் கைகளில் இருந்த கணக்கும் பெருசும் தவறிய நாள் முதல், ‘துடியான பிள்ளையார்’ என கூடுதல் பெயர் வந்தது பிள்ளையாருக்கு.
கடைசியாக மேல்கட்டு குடிக்கு பழக்கமான ஒருவர் நூல் கொண்டு உலகை அளக்கும் ஐயர் ஒருவர் முன்னால் ஊரை நிறுத்தினர்.. புளிய மரத்திற்கு கீழே பிள்ளையரா… ? அதுசரி அவருக்கு வேறென்ன காரணம் சொல்ல முடியும்..? ஆனால், அரசாங்க அனுசரனைகளைச் சொல்லி கிராம நிர்வாக அதிகாரிக்கு இவ்வளவு, தாசில்தாருக்கு இவ்வளவு என்று பேரம் பேசி தனக்கும் இவ்வளவு என்றதோடு புளிய மரத்தை பிள்ளையாரிடம் கேட்காமலே அகற்றிவிட்டார்.
கல்லும் மண்ணும் இலவசம் என்றாலும் செங்கலும் சிமிண்டும் இலவசங்களோடு பிள்ளையார் (வீடு) மன்னிக்கணும் கோவில் உருவானது
கும்பாபிஷேகம் நடத்த எல்லா ஏற்பாடுங்களும் ஜோராக நடக்கும் போது கீழுர் பெருசு ஒன்று கும்பம் போன்ற தலையை ஒரு பக்கமாக சாய்த்து கவிழ்ந்து உயிர் விட்டது. இப்போது வெட்டிய புளிய மரம் அங்கு இல்லை. வழக்கம் போல் ஐயர் வீட்டு வாசலுக்கு போனவர்கள் ‘நல்ல சகுணம்….அன்னைக்கே கும்பாபிஷேகம் வச்சிக்கலாம்னு ஐயர் சொல்லிட்டாரு’ என்று பெருமை பேசினார்கள். ‘அதுக்கும் ஏதோ மந்திரம் இருக்காம்.. ஐய்யா சொன்ன எல்லாம் சரியாத்தான் இருக்கும்’ என்ற மனநிலைக்கு அப்புறம் என்ன இருக்கிறது?
ஊர் கட்சி பெரியவரும் வந்து பிள்ளையார் போல வேஷ்டி கட்டி விழாவை ஒரே தோரணையில் நடத்தித் தந்தார். ஆளுக்கொரு முதல் மரியாதை செய்து ஐயர் எல்லாருக்கும் நல்லவர் ஆனார். எல்லாம் சில காலம் தான். ஒரு மண்டல பூஜை, இரு மண்டல பூஜை என்று ஐயருக்கு வரும் படியும். பிள்ளையாருக்கு கொழுக்கட்டையும் படையல் வைத்து அலுத்துப் போனவர்களிடம் அடுத்த கேள்வி வந்தது.. யாரு விளக்கு வைக்கிறது?
பரவாயில்லை.. முதல் மரியாதையில் ஆட்கள் எண்ணிக்கையை அதிகமாக்கிய ஐயரைப் பாராட்டலாம். நான், நீ என்று எல்லோரும் போட்டி போட்டு வந்தார்கள். ஆளுக்கொரு நாள் என்று முடிவானது.
பிள்ளையாருக்கு தெரியுமா என்று தெரியவில்லை. எல்லோருக்கும் வேலை இருந்தது. ‘வெறும் விளக்கு மட்டும்னா பரவாயில்ல… வாசல் தெளிக்கணும்,கோலம் போடணும், துண்டு மாத்தணும்… ஆகுற காரியமா..?’ என்று பேசி, ‘துண்டு வாரத்துக்கு ஒரு தடவை, கோலம் செவ்வாய் வெள்ளி, தண்ணி தெளிக்க பக்கத்துல பைப் போட சொல்லிரலாம் ‘ என்று முடிவானது.
அப்பாடா… என்றிருந்தது பிள்ளையாருக்கு. பாவம், அன்பளிப்பு இரும்பு கேட் இல்லாமல் இருந்திருந்தால் வேடிக்கையாவது பார்த்துக் கொண்டிருப்பார். புளியமரத்து காய் இல்லாத இடத்தில் பிள்ளையாருக்கு வேண்டுமானால் வேலை இருக்கலாம்.. பிள்ளைகளுக்கு என்ன வேலை?
‘விளக்கு சும்மாவா எரியும்..எண்ணெய் வேண்டாம்..’ அடுத்த பஞ்சாயத்து வந்தது. ‘எண்ணெய் வாங்கி மூணு நாள்தான ஆகுது.. அதுக்குள்ளயா தீந்து போச்சு…?’ தீந்து போகாம யாராவது எடுத்துக்கிட்டா போயிருப்பாங்க..?’ ‘அப்போ எங்க காணோம்… ‘ம்கூம் விளக்கு வச்சி… விளக்குக்கு பஞ்சாயத்து வச்சி.. ஒன்னும் வேண்டாம்…’ ‘இந்தா..இருக்கு லைட் சுச்சு அதை போடுங்க போதும்..’ என்று மின்சார விளக்கும் எண்ணெய் விளக்கும் ஒன்றுதான் என்ற சமத்துவதற்குள் வந்தார்கள்.
அதோடு நின்றதா… ‘சுச்சுதான கோவிந்தையா போடுவாரு..’ ..
கோவிந்தையா …. ‘சுந்தரம் போடுவாரு..’
சுந்தரம்…’சின்னசாமி போடுவான்’ என்று மின்சார விளக்கும் விலக்கு வாங்கிக்கொண்ட தருணத்தில். ‘நிரஞ்ச கோவில்ல வெளிச்சம் இல்லாம இருந்தா எப்படி… கோவிந்தையா நீ போடு… நீ வெளியூர் ஏதும் போறதா இருந்தா சொல்லிட்டு போ நான் பாத்துக்கிறேன்’ என்று முடிவோடு விளக்கு வைத்தர்கள்.
பாழாய்ப்போன காலில் பழைய புண் வீங்கி வீட்டில் விழுந்தார் கோவிந்தையா. வேறென்ன செய்ய..நல்ல மனுசர், சின்ன புண்ணா மனுஷனை முடக்கி போடணும்’ என்று அங்கலாய்த்துக் கொண்டே சுந்தரம் சுச்சு போட்டார்.
கோவிந்தையா படுக்கை இறுதிப் படுக்கை வரை வந்து எல்லாம் முடியும் தருவாயில் ஒரு வாய்… என்ன பேசுவது என்று தெரியாமல், ‘என்ன இருந்தாலும் புளிய மரத்தை வெட்டிருக்க கூடாதையா…’ என்றது..
‘அட ஆமாம்யா… மழை தண்ணி கூட இல்லைல.. விசேஷ வீட்டுக்கு கூப்பிட போனப்ப அந்த ஐயர் கூட ஊர விட்டு போய்ட்டாராம்… என்ன கொடுமை பாரு…’என்றது இன்னோரு குரல்
ஐயருக்கு மழை எல்லா இடத்துலயும் பொழியும் என்று யாருக்கு தெரியும்
மெல்ல சுந்தரய்யாக்கு பயம் வந்தது. ஆனால், மனுசர் அசரவில்லை.. ‘சும்மா ஏதாவது பேசுறதா… வேலைய பாருங்கய்யா… ‘என்று சொல்லிவிட்டாலும் அவர் வேலையை அவர் சரியாகப் பார்க்க முடியவில்லை.. தண்ணி குடிச்சா ராவுல ஒண்ணுக்கு போகணும் என்பது வரை முன்னேற்படாக இருந்து கொண்டார். ஆனால் இடம் வலம் திரும்ப தெரியாமல் இருவது வருஷம் வண்டி ஒட்டினவர் இன்னும் கொஞ்ச நாள் ஒட்டிருக்கலாம் அரசாங்க வாகனம் காலில் ஏறி அவரது கதையை முடித்து வைத்தது. ஆனால், சாவும் எழவும் முடியும் வரை நல்ல வேலையாக பிள்ளையாரை மறந்து விட்டார்கள். பிள்ளையாருக்கே அது தான் நிம்மதியாக இருந்துருக்கும். அப்படியேவா இருக்கும்? இருந்தால் அதெப்படி ஊர் ஆகும்? ஆனால், இம்முறை வேற வாய்..
‘அடுத்தது யாரு…?’ என்று மொட்டையாக அப்படி ஒரு கேள்வியை கேட்காமல் இருந்திருந்தால் ஒரு முடிவு வந்துருக்கும்..
‘இவன் என்ன அர்த்தத்துல கேக்குறான் பாரு…?வேற யாரு…சின்னசாமி தான… ஒத்துகிட்டான்“
‘எனக்கு வேலை இருக்கப்பா … காலைல மாட்ட பத்திகிட்டு போகணும்.. சும்மா இருக்குறவங்க யாரையாவது போடச் சொல்லு… கரண்டு, சுச்சுல வரலைல அப்புறம் என்ன… சின்னசாமி போட்ட தான் எரியுமா…?’
நியாமான கேள்வி தான். அதுலயும் சின்னசாமி விவரம் யாருக்கும் வரும்…
‘அன்னைக்கு ஓடி ஓடி முதல் மரியாதைய வாங்கத் தெரிஞ்சது. இன்னைக்கு சுச்சு போட மட்டும் சின்னசாமி வேணுமாக்கும்..’ என்றார் முத்தாய்ப்பாக..
‘அதுவும் சரி தான்… இதுக்கு பரிகாரம் ஏதாவது இருக்குமேப்பா…. அதப் பாக்கலாம். ஆஹா, என்ன யோசனை… என்ன யோசனை..’ என்று வெள்ளை துண்டு சகிதமாக பெருசுகள் சில கிளம்பியது.
இதோ இந்த முறை ஜோசியம் பக்கம் மாறினார்கள்.. பிள்ளையாருக்கு ஜோசியமா என்று பதறக் கூடாது. முகத்துல தான் கொஞ்சம் வித்தியாசம் மத்தபடி அவரும் மனுஷன் தானப்பா வெள்ளந்தி மனிதர்கள் நாங்கள்.
ஆனால், வில்லங்கம் எங்களை விட்டபாடில்லை..
‘பிள்ளையாரை எப்படி வச்சிருக்கீங்க.. ?’ – இது ஜோசியர்
பெருசுகள் ஒன்றுக்கொன்று பார்த்துக் கொண்டது. என்ன சொல்லுவது..ஒரு வேலை லைட் போடதத கண்டு பிடிச்சிட்டாரோ.. சமாளிப்போம் என்று, ‘அதல்லாம் நல்லா தான் வச்சிருக்கோம்… எந்த கொறையும் இல்ல..’
‘ஆமா…உங்க வீட்டுல சம்பந்தம் பண்ணிருக்காரு பாருங்க… நல்லா வச்சிக்கிறதுக்கு…எந்த திசைல வச்சிருக்கீங்கன்னு கேட்டேன் யா…’
‘ஓ..அப்டியா… ‘கிழக்க பாத்து தான்…’
‘யாரு,யாரு உள்ள போயிருக்கிங்க….?’
இந்தக் கேள்வியும் கொஞ்சம் கஷ்டமாகத்தான் தெரிந்தது..
சின்னசாமி… ‘நான் மூணு மாசம்’
வெள்ளையன்..’ நான் ரெண்டு வாரம்’
சுப்பு….’ நான் ஒரு நாள் தான் அதும் பகல்ல..’
சாமித்துரை… ‘நமக்கு அவ்ளோ தூரம் எதும் நடக்கலைங்க..’
‘அதுசரி… நீங்க ஜெயிலுக்கு போனதக் கேக்கல சாமிகளா…. கருவறைக்குள்ள யாரு யாரு போறிங்கனு கேட்டேன்..’
‘ஓ… அப்படியா…அது எல்லாரும் போவோம்..’
‘அது தப்புதான… பொம்பளைங்களும் போறாங்களா?..’
‘பின்ன… பூஜை அவங்கதான் வைக்கிறாங்க.. பிள்ளையாருக்கு தண்ணி எடுத்து ஊத்தி நேத்திக்கடன் செலுத்துறது அவகதான..’
‘எல்லாம் சரி தான்… கல்யாணமாகத சாமிய அவக குளிப்பாட்டலாமா..?அது தப்புல்ல..’
‘வேறென்ன செய்றது சாமி… இனிமே நாங்க வேணா பண்ணுறோம்…’
‘அதுவும் தப்புதான். நீயும் சுத்தமாக இருப்பேன்னு எப்படி சொல்றது..?’
‘பேசாம இப்டி பண்ணிட்டா… என்ன..’- சுப்புவின் யோசனை இது
‘எப்படி…?’
‘பிள்ளையாருக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சிரலாம்…’
‘உமக்கு எத்தனை பொஞ்சாதி?’
‘ரெண்டு சாமி’
‘அதான் அப்படி யோசிக்கிற…’
‘அப்போ நீங்களே ஒன்னு சொல்லுங்க…’
‘தனியா வெளிய ஒரு பிள்ளையாரை வைப்போம்… இப்போ இருக்குற பிள்ளையாரை யாரும் தொடக்கூடாது..
ஐயர் வந்தா மட்டும் பூஜை பண்ணட்டும்..’
‘ஆம்பள ஐயரா…? இல்லை பொம்பள ஐயரா சாமி’ –இது சின்ன சாமி..
‘ஏன்…. அதுல உமக்கு என்ன பிரச்சினை..?’
‘அதல்லாம் ஒன்னும் இல்ல… நீங்க சொல்லுறதும் சரிதான்..’
‘இத நாங்க ஊருல எப்படி சொல்லுறதுய்யா..?’
‘வெளியில இருக்குற பிள்ளையாரை என்ன வேணா பண்ணிக்கலாம். உள்ள இருக்குற பிள்ளையாரை ஒன்னும் பண்ண வேண்டாம்னு சொல்லு… இப்போதைக்கு காசு வச்சிட்டு கிளம்புங்க அப்புறம் பார்ப்போம்…’ என்று அனுப்பி வைத்தார்.
அதே போல் இரண்டாவது தம்பி பிள்ளையார் (நீங்கள் தொந்தி பிள்ளையார் என்றும் வாசிக்கலாம்) வைக்கப்பட்டார்.
‘ஒரு வழியா பிரச்னை தீர்ந்தது.. ‘எல்லாம் அவங்கவங்க வேலையைப் பாருங்க…’
‘எங்க பாக்க… எல்லாம் சரி தான்… இப்போ வெளியில இருக்குற தம்பி பிள்ளையாருக்கு சூடம், பத்திகுச்சி, குடம் குடமா தண்ணி…. எல்லாம் வருது. உள்ள இருக்குற பெரிய பிள்ளையாருக்கு ஒண்ணாத்தையும் காணோமே..’ என்றார் சுப்பு
‘அதுக்கு தான் பிள்ளையார் சதுர்த்தி வருதுல… வசூல் பண்ணி சிறப்பா செஞ்சிடலாம்… ‘ என்று யோசனை சொன்னார் சின்னசாமி.. ஆனால், எந்த விதத்திலும் நோட்டைத் தூக்கிக்கொண்டு வசூலுக்கு போகக் கூடாது என்பது அவர் எண்ணம்.
பெரியநாயக்கரில் இருந்து கதை திரும்பவும் துவங்கிவிடும் பயம் அவரை போல எல்லோருக்கும் இருந்தது.
இப்போதும் பிள்ளையாரை விட எங்களுக்கு புளியமரம்தான் ஞாபகத்தில் இருக்கிறது.
******