கவிதைகள்
Trending

குமரகுரு கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

உவர்ப்புக் கடல்
பறவைகளின் கண்ணீர் சிந்தி உவர்த்த கடலின் பரப்பில்
மிதந்தபடி பறக்கும்
பறவையின் நிழல்களைக் கிழித்தெழும்பும் டால்ஃபினின்
நிழலாக ஒரு மேகம்
தவழ்கிறது!
வானத்துக்கும்
கடலின் நீர்ப் பரப்புக்கும்
மத்தியில்தான்
மனிதர்களை விழுங்கிய கடல்
தளும்பிக் கொண்டிருந்தது.
தோல்விகளை சுமந்தபடி
கடலுக்குள் விழுபவர்களைப் பிடிக்காமல் கரையில் உமிழ்ந்து விடும் கடல்…
அவர்கள் உடலின் மீது
அலையால் தடவி ஆசுவாசமும் படுத்துகிறது…
கண்ணீருடன்
கடலுக்குள் மூழ்கியவர்களை
முத்தாக்கி மறைத்துக் கொண்ட கடல்
சிப்பிகளை மட்டும்
துப்புவதேயில்லை!
கடற்கரையெங்கும்
அவ்வளவு சப்தம்
அவ்வளவு இரைச்சல்
அவ்வளவு ஒலியையும்
தன் அமைதிக்குள் விழுங்கி
பேரிடியைத் தாங்கி
மிதந்து கொண்டிருக்கும்…
இரவின் தனிமையில்
கடல் பாடும் பாடல்களும்
ஜெல்லி மீன்களின் அழகு நடனமும்
ஆழத்து பிளாங்க்டனுக்கும்
பாசிகளுக்கும் மிதந்தும் நீந்தியும்
உறங்கும் அத்தனை கடல்வாழ் உயிர்களுக்கும்
அற்புதமென்றே தெரியாது!!
மனிதனுக்கோ!
கடலே!! அதியற்புதத்தின் துளி!
***

புல்லாங்குழல் துளைகளைப் பிரித்து
விரல் நுனியில் வைத்து

பெருநிழலை சுமந்த பகல் எங்கோ
விடியல் பூ பறிக்கச் சென்றிருக்கையில்

மென்மையான கல் ஒன்று
கண்ணாடிக் குளத்துக்குள் வீழ்ந்து
மிதக்கிறது

ஏசுநாதரின் சிலுவையிலிருந்து ஒழுகும் உதிரம்
வரைந்த வழி பாயும் நதி
சுமந்திருந்த நீர் குடித்து வளர்ந்த மரங்களில்
ஒன்று சிலுவையாகிக் கொண்டிருப்பதில் ஆச்சரியமில்லை!

உந்தி உந்தி நடக்கும் போது இல்லாத வலி
மிகுந்திருந்த அவமானப் பொழுதில்
தன் விரல்களில் இருக்கும் துளைகளின்
மூடித் திறந்தவனின் கண்களின் வழி
சிறகடித்துப் பறக்கிறது
செவிக்கினிய இசை!

அதன் நுண்ணிய குறிப்புகளில்
இச்சமூகத்தின் தோல்களை உறிக்கும்
வன்மம் இல்லை!

பேரமைதியின் புறா பறந்து கொண்டிருந்தது
நுழையவே இயலாத அடர்வனத்துக்குள்
நுழையும் ரகசியம் இருந்தது
தாய்ப்பால் நிரம்பிய மார்பு இருந்தது
தலை கோதும் விரல்கள் அவனைச் சூழ்ந்தன
பேரிருள் கடலில் மிதந்து
மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது
இரவெனும் படகு.

***

இரண்டு கண்கள் சந்தித்தன
அவையிரண்டும் ஒருவரின் கண்கள்
சந்திப்பு வாய்க்காத கண்கள்
சந்தித்த போது
அழுத கதைகளைப் பற்றி
பேசிச் சிரித்தன.

***

உடலை இரண்டாகப் பிளந்து
உடல்களாக்கி
உலர்ந்த பழம் போல் தேனில் ஊற வைத்து
மெல்ல அழுக வைத்துப் பிழிந்து ரசமாக்கி
செய்த ஒயின்
என் கண்ணீர்…

***

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button