
“என்னவோய்! வெள்ளனயே எங்க வேகமாப் போறேரு? “
“மாடு ஒன்னு செத்துப் போச்சிவோய்! அதான் தூக்கிப்போட சுப்பன கூப்படப் போறேன்.” என்று திண்ணையிலிருந்து கேட்ட நம்பியிடம் பதில் கூறிவிட்டு மீண்டும் வேகமாய் நடந்தார் சாமிக்கண்.
ஊரிலிலுள்ள அனைவரும் சுப்பையாவை ‘சுப்பன்’ என்றும், அவர் மனைவி வள்ளியம்மாளை ‘வள்ளி’ என்றும், அவனின் வயதுக்கு வந்த மகள் மூக்கம்மாளை ‘மூக்கி’ என்றும், அவனின் பத்து வயது மகன் மாடனை ‘மாடா’ என்றுந்தான் அழைப்பார்கள்.
ஆனால், சுப்பையாவும் அவர் குடும்பத்தாரும் ஊர்க்காரர்களின் பெயரில் ‘ஐயா, அம்மா’ இல்லாதவர்களையும், அவர்களை விட வயதில் குறைந்தவர்களையும் ‘ஐயா, அம்மா’ என்றுதான் அழைப்பார்கள்.
சுப்பையாவுக்கும் அவர் மகனுக்கும் ஊரில் பெரிய வீட்டுக்காரரான செல்வந்தர் வீட்டு மாடுகளை மேய்க்கும் வேலை. வள்ளியம்மாளுக்கும் மூக்கமாளுக்கும் ஊர்க்காரர்களின் மாடுகளை மேய்க்கும் வேலை.
ஊருக்கு ஒதுக்குப்புறமாய் உடைமரக்காடுகளின் நடுவே நெளியும் பாம்பைப்போல் கிடக்கும் ஒத்தையடிப் பாதையில் நரகல்களை தாண்டித் தாண்டி வந்து கொண்டிருந்த சாமிக்கண்ணை, தன் குடிசையிலிருந்து பார்த்த சுப்பையா ஓடோடி வந்து, “ஐயா, நீங்க ஏன் இந்த நாத்ததுக்குள்ள வந்தீங்க? தகவல் சொல்லியனுப்பினா நானே வந்து இருப்பேனே! சரிய்யா என்ன விசியமுன்னு சொல்லுங்க?”
தேங்காய்ப்பூத் துண்டினால் மூக்கினை பொத்திக்கொண்டு,”மாடு செத்துப்போச்சிடா. சொணங்காம ஆளுவள கூட்டிட்டு வந்து தூக்கிப் போட்டுருடா!”
“சரிங்கய்யா…நீங்க போங்க. நா இந்தா வந்துருதேன்.”
“சரிடா. இந்த செருப்புல ஒட்டுன நரவல கொஞ்சம் கழுவிக்குடு. நாத்தம் கொடலப் புடுங்குது…!”
“ கொண்டாங்கய்யா.” என்று வாங்கி தேங்காய் நாரினால் நன்றாகத் தேய்த்துக் கழுவி, அவர் காலடியில் வைத்தான்.
“டேய் சுப்பா! இன்னா பத்து ரூவா. பீடி கீடி வாங்கிக்கோ.”
சுப்பையா ஒண்டியாய் அந்த ஊரில் வாழ்வதால் மாட்டைத் தூக்கிப்போட உதவிக்கு பக்கத்து ஊரில் வசிக்கும் அவன் தம்பியையும் மச்சினமார்களையும் கூப்பிட ‘நடராஜா’ வண்டியில் செய்யது பீடியை புகைத்தபடி வேகமாய் போய் கூட்டி வந்து, மாட்டை மூச்சிரைக்கத் தூக்கிக்கொண்டு, ஊருக்கு வடக்கே ஒரு மைல் தூரமுள்ள மொட்டக்கிணற்றுப் பக்கம் போட்டுவிட்டு, ஆளுக்கொரு பீடியை பற்ற வைத்து அவரவர் வேலையை பார்க்க அவசரமாக ஓடினார்கள்.
“ஏன்டா! இவ்வளவு நேரம்?” செல்வேந்தரின் வேலையாளும் அடியாளுமான கட்டையனின் குரல் கனலாய் தெறித்தது. கட்டையனுக்கு தன் உயரத்தினை விட வாயும் கையும் எளியவர்களைக் கண்டால் எப்போதும் நீளும்.
“ நம்ம சாமிக்கண்ணய்யா வூட்டுல மாடு செத்துப்போச்சீங்க. அத தூக்கிப்போட்டுட்டு வர கொஞ்சம் நேரமாகிப்போச்சி. மன்னிச்சிருங்கய்யா!”
“வெள்ளனயே போயி தூக்கிப்போட வேண்டியதுதானடா நாயே!”
“ ஐயா, இங்க தொழுவுல தெனக்கியும் வெள்ளன வந்து அம்பது மாட்டு சாணியை அள்ளிப்போடவே… மணி எட்டு ஒம்போது ஆகியிருதய்யா.”
“ அப்பும் சாயந்தரமா போக வேண்டியதுதானடா பரதேசி!”
“ ஐயா, மாட்டெல்லாம் தொழுவுல அடச்சி, வைக்கப் புடுங்கி போட்டுட்டுப் போறதுக்குள்ள பொழுது இருட்டிருதய்யா!”
“இருட்டுலப்போனா ஒன்ன பேயால அடிக்கி!”
“ஐயா, ராத்திரி நேரத்துல எப்படிங்கய்யா…” என்று சத்தம் குறைத்து தலையைக் குனிந்தான்.
“ராத்திரில கோவணம் மட்டுந்தான் அவுப்பீயோ…வேலலாம் செய்யமாட்டியோ மயிரு. இப்படியே பண்ணிக்கிட்டு இருந்தனா! கூயிமவனே ஒரு நாளு ஒன்னயும் மொட்டக் கெணத்துக்கு தூக்கிட்டுப்போக வைக்கிறேன் பாரு!”
“இந்த ஒரு தடவ மன்னிச்சிக்காங்கய்யா. இனும இப்படி ஆகாது” என்று விட்டு, மாடுகளை தெக்காட்டினை நோக்கி மேய்ச்சலுக்கு கொண்டு போனான். தன் மகன் மாடனிடம், “அம்மாவையும் அக்காவையும் தெக்காட்டப் பாத்து மாடுவள பத்திட்டு வரச்சொல்லு.” என்று சொல்லி அனுப்பினான்.
தெக்காட்டு குளத்தங்கரையின் ஓரமாக மாடுகள் மேயத்தொடங்கின. அதன் அருகே நிற்கும் பெரிய படர்ந்த ஆலமரத்து அடியிலமர்ந்து, வள்ளியம்மாள் காலையில் செல்வேந்தர் வீட்டில் கொடுத்த இட்லி தோசையை மகனுக்கும் மகளுக்கும் கொடுத்துவிட்டு, ஊர்க்காரர்கள் ஊற்றிய கஞ்சியினை சுப்பையாவும் அவளும் குடித்தார்கள்.
காலையிலும் இரவிலும் மட்டும்தான் அவர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவார்கள். மதியச் சாப்பாட்டினை தனித்தனியாய்தான் சாப்பிடுவார்கள். ஏனென்றால், நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் என்பதால் ஒன்று கரைக்கும் மற்றொன்று தண்ணிக்கும்; ஒன்று மேட்டுக்கும் மற்றொன்று பள்ளத்துக்கும்; ஒன்று நஞ்சைக்கும் மற்றொன்று புஞ்சைக்கும் அலைந்துகொண்டு திரியுமென்பதால், நான்கு திசைகளிலும் நான்கு பேர் வேலியாய் நிற்பார்கள். ஒருவர் சாப்பிட்டு விட்டு மற்றவருக்கு கொண்டுப்போய் கொடுப்பார்கள். இதில் பொலி காளைகளை மேய்ப்பதற்குள் அவர்களுக்கு போதும் போதுமென்றாகிவிடும். மூத்திரத்தை மோந்துப் பார்த்து, மூக்கினை மேல் தூக்கி, முன் பற்களை ‘ஈ’யென வெளிக்காட்டி, வாலைத் தூக்கிக் கொண்டு வானூர்தியாய் வட்டமடிக்கும்; வந்து விரட்டுபவர்களை வெறிகொண்டு குத்திக் கிழிக்க முயற்சிக்கும்; பசுமாடுகளை கொசுபோல் மேய விடாமல் தொல்லை செய்யும். எல்லாப் பொலி காளையைவிட செல்வேந்தர் வீட்டு கருப்பனைப் பார்த்தால் வேங்கைக்கும் வியர்த்துப்போகும்; கருப்பனின் திடமான திமில் பார்த்தால் யானைக்கும் நம்ம தும்பிக்கையெல்லாம் அதற்கு முன் துரும்பென்றே தோன்றும். கருப்பன் ஊரில் அனேகப் பேரை குத்தியிருக்கிறான். அதற்காக குத்துப்பட்டவர்களிடம் சுப்பையா, “சாதிகெட்டப் பயல என்னல மாடு மேய்க்க?!” என்று ஏகப்பட்ட திட்டும் எக்கச்சக்க அடியும் வாங்கியிருக்கிறான். ராமனின் வயலில் நெற்கதிரைத் தின்றதிற்காக முள்ளுக்கம்பினால் முதுகில் இரத்தம் வழிய அடி வாங்கியிருக்கிறான். சினை மாட்டினைக் கருப்பன் முட்டியதற்காக சங்கரன் அடித்த அடியில் வலப்பக்கக் காது கிழிந்து, இடப்பக்கக் காதில் மட்டுமே இன்றுவரை வள்ளியம்மாள் வேப்பங்குச்சி சொருகிக்கொண்டு திரிகிறாள். கருப்பனுக்கு வாங்கிய கடலைப் புண்ணாக்கினை பசியிலெடுத்து தின்றதிற்காக கட்டையனிடம், “வேசி மவளே!” என்று திட்டும் வயிற்றில் உதையும் வாங்கியிருக்கிறாள் மூக்கம்மாள். கருப்பனுக்காக எவ்வளவோ அடிகளையும் அவமானங்களையும் பெற்றிருந்தாலும், அவர்கள் ஒருபோதும் கருப்பனை அடித்ததுமில்லை, வெறுத்ததுமில்லை!
ஊர் மாடுகளை மந்தையிலும், செல்வேந்தர் வீட்டு மாடுகளை தொழுவத்திலும் கட்டிவிட்டு, சுப்பையா தன் குடிசையின் முற்றத்தில் துண்டை விரித்து கொஞ்சம் கட்டையை சாய்த்தார். வள்ளியம்மாள் கை, கால் கழுவிவிட்டு, வெளியே இருக்கும் மண்ணடுப்பில் எல்லாருக்கும் காப்பித்தண்ணி போட்டுக்கொண்டிருந்தாள்.
ஒத்தயடிப்பாதையில் ஒரு உருவம் ஓடி வருவதைக் கண்ட வள்ளியம்மாள். “யோ! யாரோ வர்ற மாதிரி இருக்கு. எந்தீச்சி என்னன்னு கேளு” என்றாள். “இவ ஒருத்தி செத்த நேரம் கண்ணசர உடமாட்டா” என்று எழுந்து பார்த்தார். சுப்பையா மச்சினன் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியபடி அவன் முன்னால் வந்து நின்றான்.
“என்னாச்சு மாப்ள! ஏன் இப்படி ஓடிவாற? ஏல தம்பி, யாருக்கும் எதும் ஆகிப்போச்சா?” ரெண்டு பேர் கேள்விக்கும் பதில் சொல்லமுடியாமல் மூச்சடைத்தது அவனுக்கு. “ஏ மூக்கம்மா! மாமனுக்கு குடிக்க கொஞ்சம் தண்ணி கோரிட்டு வா” என்று தம்பியை முற்றத்தில் அமர வைத்து தண்ணீர் கொடுத்தாள். வாய்க்குள் ஊற்றிய நீர் உலைபோல கொதித்து உடலெங்கும் சிந்தியது. சிந்திய நீரை முந்தானையால் துடைத்துவிட்டு, “ஒனக்கு ஒண்ணுமாவது நா இருக்கேன். என்னன்னு மொதல்ல சொல்லு” என்றாள். கிணற்றுக்குள் வைத்த வெடியைப்போல நிலமதிர, “யக்கோ…! நம்ம அம்ம நம்மள விட்டு போயிட்டா.” என்றான்.
“எம்மோ…என்னவிட்டு போயிட்டயே…நா எங்க போவேன். இனி என்ன பண்ணுவேன். என்ன பெத்த அம்மா அம்மா” என்று மாருல அடிச்சிக்கிட்டு மண் தரையில் விழுந்தாள். விழுந்த வள்ளியம்மாளைத் தூக்கிய சுப்பையா. “சரி, நடந்தது நடந்து போச்சி. அடுத்து நடக்க வேண்டிய காரியத்தப் பாப்போம” என்று மேல்சட்டை போடாமல் துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு வள்ளியம்மாளிடம் உடுப்பு மாற்ற சொன்னார். தன் மகளிடம், “யம்மாடி! ஊர்ல போயி சோறு வாங்கிட்டு வந்து, நீயும் தம்பியும் சாப்பிட்டுட்டு பத்திரமா இருங்க. நா வெள்ளன மாடு அவுக்க எப்படியும் வந்துருவேன்.” என்று சொல்லிவிட்டு சுப்பையா முன்னால் போக அவர் பின்னால் மனைவியும் மச்சினனும் ஓட்டமும் நடையுமாக பின் தொடர்ந்து போனார்கள்.
மறுநாள் காலை வெள்ளிக்கிழமை. செல்வேந்தரின் மனைவி கோவிலுக்குப் போகும் நாளன்பதால் கட்டையன் காலங்காத்தாலயே குளித்துவிட்டு மாட்டுவண்டியைத் தயார் செய்ய தொழுவிற்குச் சென்றான். மாடுகளின் சாணம் அள்ளாமல் தொழுவே அலங்கோலமாய் கிடந்தது. மாடுகள் ஒன்றையொன்று முட்டிக்கொண்டும் கடுவாப்போல கத்திக்கொண்டும் இருந்தது. தண்ணீர் தொட்டியருகே கன்றுக் குட்டியொன்று வாயில் நுரைத்தள்ளி வயிறு ஊதி இறந்து கிடந்தது. அதைப் பார்த்த கட்டையன் ஓடிப்போய் செல்வேந்தரிடம், “ஐயா! தொழுவுல கன்னுக்குட்டியொன்னு செத்துக்கெடக்கு! அப்பறம் சாணியெல்லாம் அள்ளாம அப்படி அப்படியே கெடக்குது” என்றான்.
“என்னடா சொல்ற வெள்ளிக்கெழம அதுவுமா!” என்று தொழுவைப் பார்த்த செல்வேந்தருக்கு கோபம் உச்சிக்கு ஏறியது. “கூட்டிட்டு வாடா! அந்த நாய” என்று கட்டையனுக்கு கட்டளையிட்டார். கட்டையன், சுப்பையா வீட்டை நோக்கி சூறாவளியாய் போனான்.
கட்டையன் எட்டி நின்று, “ஏலே…சுப்பா! ஏலே…சுப்பா!” என்று ஏழட்டு முறை கூப்பிட்டான். எந்த அரவமுமில்லை. நாசியை மூடிக்கொண்டு நாற்றத்தை கடந்து வீட்டின் முன்பு போய் கூப்பிட்டான். அப்போதும் எந்த அரவமுமில்லை. குடிசையின் ஓலைக்கதவை ஓங்கி ஒரு மிதி மிதித்தான். உள்ளே உறங்கிக் கொண்டிருந்த இருவர் மீதும் கதவு விழுந்தது. மாடனும் மூக்கம்மாளும் பதறியடித்து எழுந்து வெளியே வந்தனர்.
“எங்கட்டி…ஒங்கப்பன்?”
“ஐயா, நேத்து ராத்திரி எங்க ஆச்சி எறந்துப்போச்சுய்யா! அதுக்கு போயிருக்காங்கய்யா.”
“ஓகோ! சொல்லாமக் கொள்ளாம போற அளவுக்கு… தொரைக்கு நெஞ்சுல பயம் வுட்டுப்போச்சா! வரட்டும் அந்த நாயிக்கு பொறந்தவன், அவன நார்நாரா கிழிச்சுப்புடுதன்! ஊரே முழிச்சுடுச்சு. ஒங்களுக்கு இன்னும் ஒறக்கம் போகல இல்ல. வாங்க வாங்க ஒங்கள தொழுவுல பாத்துக்குறேன்!” என்று கண்களை உருட்டி மிரட்டினான்.
“ஐயா, நீங்க போங்க. நாங்க இந்தா வந்துருதோம்” என முகத்தை மட்டும் கழுவிக்கொண்டு அரக்கப் பறக்க இருவரும் ஓடினர்.
இருவரும் தொழுவுக் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தனர். அங்கு சாமக்கொடையில் சுடலை கருத்தக்கிடா மீது ஏறி உட்கார்ந்து நெஞ்சு கீறி இரத்தம் குடிப்பதுபோல் மாட்டுவண்டியின் மீது கட்டையன் ஆங்காரத்துடன் அமர்ந்திருந்தான். இருவரும் அவனின் சிவந்த கண்களையும் கையில் வைத்திருந்த சாட்டைக் கம்பையும் பார்த்துக் குலை நடுங்கிப்போயினர். அக்காவின் பின் மாடன் பயந்து ஒளிந்தான். மூக்கம்மாள் சாணிக்கூடையை எடுக்க மெல்ல மெல்ல நகர்ந்தாள்.
“மொதல்ல தண்ணித்தொட்டிப் பக்கம் போயி பாருங்க நாய்களா!”
“அய்யய்யோ, என்னய்யா கன்னுக்குட்டி செத்துக் கெடக்குது!
எப்படிங்கய்யா செத்தது?”
“கன்னுக்குட்டிய மருந்தடிச்ச வயலுல மேய வுட்டுட்டு, நீங்க குடும்பத்தோடு மரத்தடியில மல்லாந்து படுத்தா! கன்னுக்குட்டி சாவாம என்னட்டி செய்யும்?”
“ஐயா, நேத்து நாங்க மாடுவள கொளத்தாங்கரையிலத்தான் மேய்ச்சோம். வயக்காட்டுப் பக்கம் போவவே இல்ல.”
“ ஒங்க கத மயிரலாம் கேக்க எனக்கு நேரமில்ல. கன்னுக்குட்டிய மொதல்ல தூக்கிப்போடுங்க.” என்று அவர்கள் முன்னால் கயிற்றையும் சவுக்குக் கம்பையும் எடுத்துப் போட்டான் கட்டையன்.
மூக்கம்மாள் கன்னுக்குட்டியின் முன்னங்கால் இரண்டையும், மாடன் பின்னங்கால் இரண்டையும் கட்டிவிட்டு, நீளமான சவுக்குக்கம்பை தோள்களில் தூக்கிச் சுமக்க ஏதுவாக கட்டிய கால்களுக்கு இடையில் திணித்தார்கள்.
“அம்மா கோவிலுக்குப் போற நேரமாச்சு. சீக்கிரம் தூக்குங்க.” – கட்டையன் அவசரப்படுத்தினான், அதட்டினான்.
மூக்கம்மாள் கன்னுக்குட்டிய இடுப்புக்கு மேல் தூக்கினாள். மாடனால் முட்டிக்கு மேல் தூக்கவே முடியவில்லை. பின்னால் நின்ற கட்டையன் சாட்டைக் கம்பினால் பளாரென மேல்சட்டை அணியாத மாடன் முதுகில் ஒன்று வைத்தான்.
வலியில் ‘அம்மா’வென அலறித் துடித்தான். ஏங்கி ஏங்கி அழுதான் மாடன். வழிந்த கண்ணீரை துடைப்பதற்குள் விழுந்தது அடுத்த அடி.
தம்பி வலியில் துடிப்பதைப் பார்த்து மூக்கம்மாளின் கண்களில் வழிந்த கண்ணீரில் அவளின் மூக்குத்தி முங்கிக்கொண்டிருந்தது.
“ஊர்ல ஒரு வீடு விடாம சோறு வாங்கித் திங்கத் தெரியுது! ஊர் மாட்டப்பூராம் அறுத்து காயவச்சி வறுக்கத் தெரியுது! இந்த கன்னுக்குட்டிய தூக்குறதுக்கு ஒடம்புல தெம்பு இல்லயோ செரிக்கியுள்ள… தூக்குல!”
மீண்டும் இருவரும் கன்னுக்குட்டிய தூக்கினார்கள். கனம் தாங்காமல் கன்னுக்குட்டியின் மேலே மாடனும், மண் தரையில் மூக்கம்மாளும் ‘பொத்’தென்று விழுந்தார்கள். இதைப்பார்த்த கட்டையனுக்கு கோபம் ‘கிச்’சென்று மண்டைக்கேறியது.
“தாயொளிகளா! யங்கிட்ட வெளாட்டாக் காட்டுறீய வெளாட்டு.” என்று சாட்டைக்கம்பை எடுத்து இருவரையும் விரட்டி விரட்டி விளாசினான்.
வீட்டுக்குள் வந்த வவ்வால் வெளியேற வழி தெரியாமல் முட்டிமோதி திக்கித் திணறுவதுபோல், தொழுவுக்குள் அடி தாங்காமல் அங்குமிங்கும் ஓடி ஒரு மூலையில் அடங்கி ஒடுங்கினர். இருவரின் உடலிலும் பட்டை பட்டையாய் சாட்டையின் தடம். அந்த தடத்தில் சரசரவென வழிந்தது ரத்தம்!
ஓடி ஓடி அடித்த களைப்பில், கருப்பன் முன்னால் கிடந்த பெரிய தென்னை மரத்தூரில் போய் அமர்ந்து இளைப்பாறினான் கட்டையன். பின்னால் கருப்பன் சீறிக்கொண்டேயிருந்தான். “இந்த சீறுற வேலலாம் நம்மக்கிட்ட வச்சுக்காத. அப்பறம் இதுவல தொலிய உரிச்சமாறி ஒன்னயும் தொலிய உரிச்சி தொங்கவுட்டுருவேன் பாத்துக்கோ!” என்று பிய்ந்துப்போன சாட்டையை அதன்மேல் வீசினான். கருப்பன் அவனை முட்டுவதற்கு முன்னாடி வந்தது. கழுத்துக் கயிறு கருப்பனைப் பின்னாடி இழுத்தது.
மூக்கம்மாள் தன் தம்பி காதில் ஏதோ கிசுகிசுத்தாள். அவனும் ‘ஆட்டும்’ என தலையசைத்தான். இருவரும் மெல்ல எழுந்து கால்கள் தரையில் நிற்க முடியாமல் நொண்டியபடி கட்டையனை நெருங்கினார்கள். கவிழ்ந்திருந்த கட்டையன் நிமிர்ந்து, “என்ன தைரியமிருந்தா, என் முன்னால வந்து நிப்பியே!” என்று இருவரையும் எட்டி மிதிக்க காலை தூக்கும் முன், மூக்கம்மாள் மாடனின் கையை இறுகப் பற்றிக்கொண்டு “சாவுடா நாயே!” என்று கட்டையன் நெஞ்சிலே எட்டி ஒரு மிதி மிதித்தாள். கட்டையன் கருப்பனின் கொம்பில் போய் சொருகிக்கொண்டான். இருவரும் கட்டையன் முதுகில் மிதித்துக்கொண்டே… “கட்ட நாய, களவாணி நாய, கங்காணி நாய எங்கள இத்தன நாளா மாடுமாதிரித்தான நடத்துன, இப்பும் சொல்றோம். நல்லா கேட்டுக்கோ! ஆமால, நாங்க மாடுதான். ஆனா, நீ நெனைக்குற மாதிரி கொன்னு கூறுபோடுற ‘அடிமாடு’ இல்ல. இன்னையிலிருந்து நாங்க, ஒன்னமாதிரி எங்கள அடிமாடா நெனைக்குற அத்தனைப்பேரையும் குத்திக் கொடல எடுக்குற முட்டுமாடுல முட்டாப்பயலே!” என்று மிதியை நிறுத்திவிட்டு, தொட்டி தண்ணீரில் முகத்தை கழுவிவிட்டு இருவரும் செல்வேந்தர் வீட்டை நோக்கி ஓடிப்போய், “ஐயா…கட்டயர கருப்பன் குத்திட்டான். சீக்கிரம் வாங்க.” என்று வாசலில் நின்று கத்தினார்கள்.
செல்வேந்தர் ஓடோடி வந்து பார்க்கையில், கருப்பனின் கொம்பு முனைகள் இரண்டும் கட்டையனின் வயிறு வழியாய் வெளியே வந்திருந்தது.
*******
மகிழ்ச்சித் தோழர்…