இணைய இதழ் 97சிறுகதைகள்

கம்போடியா 596 கிலோ மீட்டர் – தமிழ்கணேஷ்

சிறுகதை | வாசகசாலை

தாய்லாந்து வழக்கம் போல இப்பொழுதுதான் விடிந்தது. மாலை 6 மணி. பகல் முழுவதும் பெரிதாக உற்சாகம் இழந்துதான் காணப்படும். விடிந்துவிட்டால், ஆட்டம்பாட்டம் கொண்டாட்டம் விடிய விடிய நடந்து கொண்டே இருக்கும். பகலில் இம்மக்கள் எங்கே போவார்கள் என்ற கேள்வியும் எழுவது வழக்கம்தான். இங்கு வருபவர்களில் 80 சதவிகிதம் பேர் என்னைப் போன்ற இந்தியர்கள்தான். இங்குள்ளவர்களுக்கு இந்தியர்கள் மீது பெரிய ஆர்வம் எதுவும் இல்லை என்றே சொல்லலாம். ஏன் என்றால் எதற்கு எடுத்தாலும் பேரம் பேசுவதுதான் முதன்மையான காரணமாக இருக்க கூடும் என்று எண்ணுகிறேன்.

முதல்முறையாக பயணமாக இங்கே வந்ததும், என் மண்டைக்குள் படிந்து கிடந்த நினைவுகள், தினமும் பார்த்த முகங்கள், தினந்தோறும் பார்த்த அதே இடங்கள் அனைத்தும் மறைந்து புதிய பார்வை, புதிய இடம், ஒரே மாதிரியான முகங்கள் கொண்ட மனிதர்கள். மண்டைக்குள் இருந்த பழைய மெமரியை ரீசெட் செய்தது போன்ற ஒரு உணர்வு. அதுக்கும் வாழ்நாள் நான்கு நாட்கள்தான். பின்பு பழைய மெமரி கார்டை மண்டைக்குள் புகுத்திக்கொண்டு அலுத்துப் போன வாழ்க்கையை ஆமை வேகத்தில் நகர்த்த வேண்டும்.

கழுத்து வலிக்க அண்ணாந்து பார்க்கும் ‘டி பீச்’ ஹோட்டலில் எனது அறை 17வது மாடியில் உள்ளது. அறை எண் 1736. இரண்டு படுக்கை கொண்டது. ஆனால், நான் மட்டுமே பெரும்பாலான நேரங்களில் தனியாக இருப்பேன். என்னோடு இருப்பவன் எங்கே போவான் எப்போது வருவான் என்று தெரியாது. அவன் பார்வையில் இந்த ஊரை அனுபவித்து கொண்டுதான் இருந்தான். செல்போனை அதிகமாகப் பயன்படுத்துவதுயில்லை. ரூமில் இருக்கும் போது மட்டும் இலவச வை-பை வசதியைப் பயன்படுத்துவேன். இதனால் தொல்லை தரும் போன் கால்கள் இல்லாமல் நிம்மதியாக இருந்தேன். ரூமை விட்டு வெளியே சென்றால் செல்போனுக்கு முழுநேரமும் ஓய்வுதான். தனிமை பிரகாசத்தைக் கொடுத்தது.

அன்று பகல் முழுவதும் ரூமில் படுத்து தூங்கிவிட்டு இரவு எங்காவது வெளியே போகலாம் என இருந்தேன். இரவு வெளியே சென்றால் விடியற்காலை ஐந்து மணிக்கோ ஆறு மணிக்கோதான் வருவேன். எங்கே போனாலும் ரூம்க்கு வந்துவிடலாம் என்ற நம்பிக்கை. கிளம்பிச் சென்று லிப்ட் பட்டனை அழுத்திவிட்டு காத்துக் கொண்டு இருந்தேன். லிப்ட் இருபத்தைந்தாவது மாடியில்  இருந்தது. சிறிது நேரத்தில் தளத்துக்கு வந்தது. அதில் கூட்டமாக இருந்ததால் ஏற இடம் இல்லை. சிறிது நேரத்தில் அருகில் உள்ள லிப்ட் திறந்தது. அதில் ஒரே ஒரு பெண் மட்டும் இருந்தாள். உள்ளே சென்றேன், அவள் என்னை பார்த்ததும் பொதுமொழியான சிரிப்பை வெளிபடுத்தினாள்.

நானும் பொதுமொழியை வெளிபடுத்தினேன். இதுவரை அந்த ஊரில் உள்ள பெண்களின் முகங்கள் ஒரே மாதிரியான முகமாகத்தான் தெரிந்தது. இவளின் முகம் அப்படியில்லை. இந்தப் பெண்ணின் முகம் நேர்த்தியான முகம். எளிதில் மனதில் பதிய கூடிய முகம். பிறந்த குழந்தையின் பிங்க் நிறம். பார்த்துக் கொண்டே இருக்கத் தூண்டும் பேரழகு. பார்ப்பதைக் கவனித்து அவள் மொழியில் ஏதோ சொல்லிச்        சிரித்தாள். என்னைதான் நக்கலாக சொல்லி சிரிக்கிறாள் என்று தெரிந்தது. லிப்ட் தரைத் தளத்திற்குச் சென்றது கூடத் தெரியாமல், அவளையே பார்த்துக் கொண்டே இருந்தேன். அவளுக்கு நாய் வெறிக்க பார்த்துக் கொண்டிருக்கிறது என்று தோன்றியிருக்க கூடும். லிப்ட் திறந்தது. முதலில் வெளியே சென்றாள். அவள் பின்னால் நான் சென்றேன். எங்கே போவது என யோசித்தேன். எங்கே போவது எனத் தெரியவில்லை. சரி, இவள் பின்னால் போவோம் என முடிவு செய்தேன். அவள் பின்னாலேயே நடக்க ஆரம்பித்தேன். சிக்கன ஆடை ஆணிந்த பெண்கள் ஆடிக் கொண்டும், கூட்டமாகச் சிரித்துக் கொண்டும், ஆண்களை கட்டிப்பிடித்துக் கொண்டும், முத்தம் பரிமாறிக் கொண்டும் இருந்தத் தெருவை கடந்து அவள் பின்னாலே சென்றேன். அதில் சில பெண்கள் என் கையை பிடித்து இழுப்பதைக் கூட கவனிக்காமல் அவள் பின்னாலே போனேன். பெரிய தார் சாலையை அடைந்தோம். இந்த இரவும் அவளும் ஒருவித போதையாக இருந்தது.

சிறிது நேரத்தில் டுக் டுக்  வண்டி வந்தது. நம்ப ஊர் ஷேர் ஆட்டோ போன்றது. ஆனால், வண்டியின் அமைப்பு சேடான் காரின் முக அமைப்பில் இருந்தது. ஒரு பிண வண்டி எப்படி இருக்குமோ.. அப்படி ஒரு அமைப்பு. இரு புறமும் கட்டையில் இருக்கைகள். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு உட்கார்ந்து செல்வது போன்று இருக்கும். இருக்கைகள் நிறைந்துவிட்டால், பின்னால் கம்பியைப் பிடித்து நின்றுகொண்டும் போகலாம். இருவரும் ஏறினோம். அந்த வண்டியில் நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம். வண்டி கிளம்பியது என் கண்கள் அவளைத் தவிர வேறு எதையுமே பார்க்கவில்லை. செல்போனைப் பார்த்துக் கொண்டும் அவ்வப்போது என்னைப் பார்த்துக் கொண்டும் இருந்தாள். அவளைத் தவிர, அந்த இரவில் வேறு எதையும் சிந்திக்கத்  தோன்றவில்லை. அவளும் என்னைப் பார்க்கிறாள் என்று ஒரு நிம்மதி. வண்டி நீண்ட தூரம் சென்றது. அவள் வண்டியின் மேலே இருக்கும் ஒரு பட்டனை அழுத்தினாள். அது சத்தம் எழுப்ப பிண வண்டி நின்றது. அவள் இறங்கினாள். நானும் இறங்கினேன். அவள் தன் கைப்பையில் இருந்து பத்து பாட் எடுத்துக் கொடுத்தாள். அவள் பின்னால் நின்று கொண்டு என் பேண்ட் பாக்கெட்டில் பர்ஸைத் தேடினேன்.. காணவில்லை. சட்டைப் பையில் பார்த்தேன்.. பணம் இல்லை. பர்ஸை ரூமில் மறந்து வைத்துவிட்டேன் என ஞாபகம். அந்த வண்டியின் டிரைவரைப் பார்த்தேன். அவள் ஒரு பெண். என்ன செய்வது எனத் தெரியாமல் குற்ற உணர்ச்சியில் குறுகி நின்றேன். என் பக்கத்தில் நின்றவளுக்கு கண்டிபாக தெரிந்து இருக்க கூடும் என்னிடம் பணம் இல்லை என்று. அவள் என்னைப் பார்த்து மீண்டும் புன்னகை செய்துவிட்டு, கைப்பையில் இருந்து மேலும் பத்து பாட் எடுத்து கொடுத்தாள். வாங்கி கொண்ட அந்தப் பெண்  பிண வண்டியைக் கிளப்பினாள். திரும்ப எப்படி போவேன் என்று பயம் தோன்றியது.

ஒரு நிமிடம் என்ன செய்வது எனத் தெரியாமல், அவள் முகத்தைப் பார்க்காமல், அவளின் கால்களைப் பார்த்து யோசிப்பது போல இருந்தேன்.

என்னைப் பார்த்து அவள் மொழியில் பேசினாள். எனக்குப் புரியவில்லை என்று அவளுக்கு தெரிந்திருக்கும். நான் ஆங்கிலத்தில் ‘தேங்க்ஸ்’ என்று சொன்னேன். இவளுடனான இரவு இத்துடன் முடிவுக்கு வரப் போகின்றது எனத் தோன்றியது. திரும்ப நடந்துதான் ரூமுக்குப் போக வேண்டும். இவளிடமே மேலும் பத்து பாட் கேட்கலாம் எனத் தயங்கி நின்றேன். அவளுக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் பேசினாள். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. எனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் பேசினேன். அவளின் முகச்சுளிப்பு சொல்லியது சத்தியமாக அவளுக்கு புரிந்து இருக்க வாய்ப்பே இல்லை என்று. இறுதியாக “கம்”  என்ற ஒரு வார்த்தை மட்டும் அவள் ஆங்கிலத்தில் சொன்னது எனக்கும் நன்றாகப் புரிந்தது.  முடிவை நோக்கி இருந்த இரவு மீண்டும் நிலை பெற்றது. வீசும் குளிர்ந்த காற்று மேலும் ரசிக்கத் தூண்டிவிட்டது. இருவரும் நடந்தோம். அவள் என் கையை இறுகப் பற்றிக் கொண்டாள். வேற்று நாட்டு பெண் என்பதை மறந்தேன். “நாடுகளுக்கு நடுவே எல்லைக் கோடுகள் எதற்கு? எல்லை பாதுகாப்புகள் எதற்கு? பொருளாதாரத்தில் பெரும்பகுதியினை பாதுகாப்புக்கு பயன்படுத்துவதும் எதற்கு? உலகப் பொது மொழி புன்னகை இருக்கும் போது!”. அவளின் பிரகாச முகத்தைப் பார்த்தால் கவிதை எழுதத் தெரியாதவன் கூட கவிதை எழுதுவான்.

அவளின் வீட்டை அடைந்தோம். கடலின் அலைகளைப் போல அவளின் முகத்தில் புன்னகை தோன்றிக் கொண்டே இருக்கின்றது. ஒரு சிறிய அறை, அதில் ஒரு கட்டில். அதன் மேலே மெத்தை. அந்த அறை உள்ளே பாத்ரூம். ஒரு ஏசி. சமையல் அறை உள்ளதா என்று கவனிக்கவில்லை. கண்டிப்பாக அவளின் சொந்த வீடு இல்லை எனத் தோன்றியது. அவள் கை பேக்கை ஒரு மேசையில் வைத்துவிட்டு, என்னை கட்டிலில் உட்காரும்படி சொல்லிவிட்டு, ஏசியை ரிமோட்டில் ஆன் செய்துவிட்டு, ஒரு பெரிய துண்டை எடுத்து கொண்டு பாத்ரூக்குள் சென்றாள். கட்டிலில் உட்கார்ந்து கொண்டு அவளின் எளிய வீட்டை சுற்றிப் பார்த்து கொண்டுயிருந்தேன்.

திடீரென மண்டைக்குள் இருக்கும் புதிய மெமரி கார்டு எவ்வளவு அழகானது எனத் தோன்றியது. அவள் குளித்துவிட்டு துண்டை கழுத்துவரை கட்டிக் கொண்டு வந்தாள். பிங்க் நிற ரோஜாவில் அங்கே அங்கே இருக்கும் பனித்துளிகள் போல நீர் துளிகள் அவளின் முகத்தில் இருந்தன. மீண்டும் என்னைப் பார்த்து கடல் அலை போல புன்னகை செய்தாள். என்னுடன் இவ்வளவு எளிதாகப் பழகும் அளவுக்கு அப்படி என்ன செய்துவிட்டேன் என யோசித்தேன். கை பேக்கில் இருக்கும் க்ரீமை எடுத்து முகத்திற்குப் பூசினாள். உதட்டுக்கும் சாயம் பூசினால். அவளின் கடவுச் சீட்டு வெளியே தெரிந்தது. அதை நான் பார்த்தேன். கடவுச் சீட்டு சிகப்பு நிறத்தில் இருந்தது. கட்டிலில் என் அருகில் வந்து உட்கார்ந்தாள். என்னிடம்  உற்சாகமாகவும் குழந்தைதனமாகவும் ஏதோ பேசி கொண்டியிருந்தாள்.

அவளுக்கு ஒரு ஆணிடம் தனியாக இருக்கிறோம் என்ற உணர்வு துளியுமே இல்லை. அவள் சிரித்து கொண்டே என் வயிற்றைத் தொட்டுப் பார்த்து உனக்கு தொப்பை இருக்கின்றது; எனக்கு இல்லை என்று அவளின் துண்டு கட்டியிருந்த வயிறைக் காட்டினாள். அருகில் இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து குடிக்க தண்ணீர் கொடுத்தாள். அதை வாங்கி குடித்துவிட்டு அவளிடம் கொடுத்தேன். மீதி இருந்த தண்ணீரைக் குடித்துவிட்டு பாட்டில் இருந்த இடத்தில் வைத்தாள்.

அவளின் முகத்தை என்னால் பார்க்கவே முடியவில்லை. அவ்வளவு சந்தோசமாக இருந்தது. என் கண்கள் கூசும் அளவிற்கு முகப் பொலிடன் இருந்தாள். எழுந்தேன், அருகில் இருந்த கண்ணாடி முன்பு நின்று என் முகத்தைப் பார்த்தேன். சிறிது நேரத்தில் என் பின்னால் வந்து என் கழுத்தின் மேல் அவள் முகத்தை வைத்தாள், சிரித்துக் கொண்டு கண்ணாடியைப் பார்த்தாள். இருவரும் கண்ணாடியைப் பார்த்து கொண்டு இருந்தோம். அவளின் முகத்தில் அருகில் இருக்கும் என் முகம் அருவருக்கச் செய்தது. எனக்கு அவள் மீது காமம் தோன்றவில்லை. காரணமும் தெரியவில்லை.

அவளை விடியும் வரை பார்த்துக் கொண்டிருந்தாலே போதும், அவளின் அழகை ருசிக்கவோ, அவளை ருசி பார்த்து திருப்தி அடைந்துவிட்டோம் என ஆண்மை பெருமை அடையவோ விருப்பம் இல்லை. அவள் முகத்தைத் திருப்பி என் கன்னத்தில் முத்தம் கொடுத்தாள். அவளின் முத்ததை எதிர்பார்க்கவே இல்லை. என் கண்கள் அகண்டு விரிந்து இருபுருவத்தின் ஓரத்திலும் ஒரு துளி நீர் மெல்ல வெளியே வர காத்துக் கொண்டுயிருந்தது. என் முகத்தைத் திருப்பி அவளின் கண்களைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அது கண் இல்லை; மிகப் பெரிய நீலக்கடல்; அன்பின் பேரருவி. அவள் குழந்தையாகப் பிறந்து இன்னும் வளர்ந்தவளாக ஆகாமலே இருக்கிறாள் எனத் தோன்றியது. அவளை இறுக்கி அணைத்துக் கொண்டேன். அவளும் இறுக்கி அணைத்து கொண்டாள். இருவரும் ஆண், பெண் என மறந்து நீண்ட நேரம் இறுக்கி அணைத்தபடியே இருந்தோம்

இருவரும் கட்டிலில் அமர்ந்தோம். நிறையப் பேச வேண்டும் போலத் தோன்றியது. மொழி தெரியவில்லை .எப்படிப் பேசுவது எனவும் தெரியவில்லை. மணியைப் பார்த்தேன். அதிகாலை மூன்று மணி. அவள் தன் கைப்பேசியை எடுத்து கூகுள் ட்ரான்ஸ்லேட்டில் அவள் மொழியான கெமெர் மொழியில் பேசி அதை தமிழ் மொழிபெயர்ப்பு செய்து காட்டினாள். ‘உன் பெயர் என்ன?’ என்று கேட்டியிருந்தாள். போனை வாங்கி திரையைப் பார்த்தேன். கெமெர் மொழியின் வடிவம் குழந்தைகள் பில்டிங் கட்டி விளையாடும் டாய் போன்று இருந்தது. பேச ஒரு ஆயுதம் கிடைத்த சந்தோசத்தில் அவளுடைய போனை வாங்கி என் பெயர் வாசு எனச் சொல்லி, அவள் பெயரை கேட்டேன். மெரி நித் என்றாள்.

எந்த மொழி தெரியாதவர்களையும் பேசிப் பழக வைக்கும் இந்த டெக்னாலஜிதான் எவ்வளவு வலிமை மிக்கது? ஏசி ரொம்பவும் குளிரச் செய்தது. ஒரு துண்டை மட்டும் கட்டிக் கொண்டு இவள் மட்டும் எப்படி சாதாரணமாக இருக்கிறாள், என்று தோன்றியது. அவளும் என் கேள்விக்கு காத்துக் கொண்டு இருக்கிறாள் எனத் தெரிந்தது. போனில் பேசினேன்.

        என் மீது ஏன் இவ்வளவு அன்பு செலுத்துகிறாய்? உன்னிடம் நான் நீண்ட நாள் பழகியவனும் இல்லை; எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் எப்படி உன்னால் மட்டும் இப்படி இருக்க முடிகிறது.. அதுவும் உன் வீட்டிற்குக் கூட்டி வந்து!

        அவள் சிரித்து கொண்டேயிருந்தாள்…

அவளின் பதிலைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசரத்தில் போனை வாங்கி மீண்டும் கேட்டேன் – பதில் சொல்.

            விடாமல் நீ என்னை பார்த்துக் கொண்டே இருந்தாய். எனக்குள்ளும் ஒருவித பரவசம் ஏற்பட்டது. உன்னுடைய பர்ஸை காணாமல் பயத்தில் நின்று இருந்த உன்னிடம், ‘மீண்டும் பத்து பாட் தருகிறேன். டுக் டுக்கில் உன் ஹோட்டலுக்குப் போ’ என்று சொன்னேன். உனக்கும் அது புரியவில்லை. அப்பொழுது, உன்னை பார்க்கவும் பிடித்து இருந்தது. மீதி இருந்த இரவை உன்னுடன் கழிக்கலாம் என நினைத்தேன். உன்னை போன்று யாரும் என்னை இப்படிப் பார்த்ததே இல்லை. இரவு முழுவதும் நீ என்னைப் பார்த்துக் கொண்டே இருந்தால் ஒருவித ஆறுதலாக இருக்கும் என நினைத்தேன் என்று சிரித்துக் கொண்டே சொன்னாள். தொடர்ந்து, உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு வந்தது பிடிக்கவில்லை என்றால் சொல்லு ரோட்டில் போய் இருக்கலாம் என்றாள்.

பார்த்த முதல் கணத்தில் அவள் மீது காம ஆசையில் அவளின் அழகை அனுபவித்து விட வேண்டும்; பேரழகியை அனுபவித்து விட்டோம் என ஆண்மை பீத்திக் கொள்ள வேண்டும் எனத் தோன்றியிருக்கலாம். காமத்தைத் தாண்டிய பார்வையை எப்படி எனக்குள் செலுத்தினாள்? அவள் மீது இருந்த காமம் மறக்க அதீத பரவசமான அன்புதான் காரணமோ?.

கேள்விகள் அடுத்து, அடுத்து மேலே எழும்பிக் கொண்டே இருந்தது. ஆனால், அவள் என்னைப் பற்றி தெரிந்துக் கொள்ள ஒரு கேள்வியும் கேட்கவில்லை. தெரிந்து கொண்டு நாம் என்ன செய்யப் போகிறோம் என்று கூட இருக்கலாம்.

எந்த ஊர்? உன்னைப் பற்றி சொல்.

என் ஊரு கம்போடியா. ஆறு வயதில் ஒரு பையன் இருக்கிறான். சில மாதங்களுக்கு முன்புதான் விவாகரத்து பெற்றேன்.

என்னாது?… கல்யாணம் ஆகிடுச்சா! என்று அதிர்ச்சி அடைந்தேன். கல்யாணம் ஆனதற்கான எந்த அறிகுறியும் இல்லை. கன்னியாகவே தெரிந்தாள். போதும், இனி எந்த கேள்வியும் கேட்க வேணாம் என முடிவு செய்தேன். சிறுது நேரம் அமைதியாக இருந்தோம்

சிரித்து கொண்டே எப்பொழுது பயணம் என்றாள். நாளை இரவு 8-க்கு டான் மியூயாங் சர்வதேச விமான நிலையம் என்றதும், அவளின் முகம் சின்ன மாற்றம் அடைவதை கவனித்தேன். அதை கட்டுபடுத்திக் கொண்டு சிரித்தாள்.

முத்தம் கொடுக்க வேண்டும் போல் இருந்தது. இந்த முத்தம் பிரிவின் ஆறுதலாக இருக்கலாம் என நினைத்தேன்.

இதுவே இறுதிக் கேள்வியாக இருக்கட்டும் என்று நினைத்தபடியே “இந்திய புத்தி கேள்வி” ஒன்றைக் கேட்டேன். டி பீச் ஹோட்டலுக்கு எதுக்கு வந்த?

வாக்கிங் ஸ்ட்ரீட்டில் நின்று கொண்டு இருந்தேன். உன்னைப் போன்ற ஒரு இந்தியன் என்னிடம் வந்து பேசினான். அவன் பேசுவதை யூகத்தின் அடிபடையில் புரிந்து கொண்டேன். என் போனை எடுத்து என் விலையை சொன்னேன் 1000 பாட் என்று. போனை வாங்கி அவன் 600 பாட் கேட்டான். இறுதியாக 750 பாட் கேட்டேன். சிரித்துக் கொண்டு தலையாட்டினான். ரூம் எங்கே என்று கேட்டேன். அவன் ஹோட்டலின் கீயைக் காட்டினான். டுக் டுக் வண்டியில் ஏறினோம்.

இருவரும் மேற்கூரையைப் பார்த்தவாறு கட்டிலில் படுத்திருந்தோம். இரவு வேகமாக ஓடிக் கொண்டுயிருந்தது. இனி கேள்விகள் எதுவும் இல்லை. அவளை பற்றி போதுமானவரை தெரிந்து கொண்டதால் அவள் முகத்தைத் திருப்பி பார்த்தேன். முதல் முதலில் பார்த்த பார்வைக்கும் இப்போது அவளைப் பார்க்கும் பார்வைக்கு வித்தியாசம் இருக்கின்றதா என என்னை பரிசோதித்தேன். அவள் பிறந்த வெள்ளைக் குழந்தையின் பிங்க் நிறமும், குழந்தையாக பிறந்து மனிதன் ஆகாத அவளின் குணமும் அப்படியே இருந்தது. விடியட்டும் என்று அமைதியாக அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். அவள் போனை எடுத்து பேச ஆரமித்தாள்.

இங்கு வேலைக்கு வந்து மூன்று மாதங்கள் ஆகிறது. என் பையன் அம்மா உடன் ஊரில் இருக்கிறான். பெரும்பாலான பேர் பிடிக்காத வேலையைச் செய்வது போல நானும் இந்த வேலையைச் செய்கிறேன். ஆரம்பத்தில் இருந்தே என் கணவருக்கு, என்னையும் என் குடும்பத்தையும் பிடிக்கவே இல்லை. காரணம் அவருக்கு பொருளாதாரம்தான் பிரச்சனை என்று சொல்லி விட்டு, என்னைப் பார்த்துச் சிரித்தாள். எப்படி இவளால் இப்போது கூட சிரிக்க முடிகிறது என்று யோசித்து அமைதியாக அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டு இருந்தேன். உலகத்தில் மிக கொடிய நோய் பொருளாதாரத்தை விட வேறு என்ன இருந்துவிட முடியும்?. இவற்றை எல்லாம் சொல்லும்போது சோகமோ, தன் மீது கவனம் பெற வேண்டும் என்ற நோக்கமோ அவளிடம் இல்லை. அவள் எப்பொழுதும் போல மகிழ்ச்சியாகவேதான் இருந்தாள். அப்பொழுது அந்த பிண வண்டியின் பெண் டிரைவர் ஞாபகத்திற்கு வந்தாள். ஏன் என்று தெரியவில்லை?. பணம் இல்லாமல் அவள் முன் நின்ற போது, அவள் தனது ஆறு வயது மகனை மடியில் சொகுசாக படுக்க வைத்து வண்டியை ஓட்டிக் கொண்டுயிருந்தாள். இப்போதும் அவள் வண்டி ஓட்டிக் கொண்டிருப்பாள், அவளின் மகன் , அவள் மடியில் தூங்கி கொண்டுயிருப்பான் எனத் தோன்றியது. மணியைப் பார்த்தேன் நான்கு. அவளுக்கு என்னிடம் கொடுக்க ஒன்றுமே இல்லை. இந்த தருணத்தில் என்னிடம் கொடுக்க வார்த்தைகள் மட்டும் தான் இருந்தது. வார்த்தைகள் அந்த நேரத்தின் சமாளிஃபிகேஷன்.

உன் முகத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சி இருக்கட்டும்.இந்த வாழ்க்கை சக்கரத்தில் உள்ள உன் கஷ்டங்கள், அடுத்த வாழ்க்கை சக்கரத்தில் சரி ஆகி, உனக்குப் பிடித்த வாழ்க்கை விரைவாக அமையட்டும். என்றும் உன்னை என்னால் மறக்க முடியாத அனுபவத்தை எனக்கு தந்தாய். அதற்கு என் நன்றிகள். மீண்டும் ஒரு முறை இங்கு வந்தால் உன்னை கண்டிப்பாக என் கண்கள் தேடும். கம்போடியா என் நாட்டு அண்டை மாநிலமாக இருந்திருக்கக் கூடாதா என்று எண்ணுகிறேன். இந்த இரவு இனிமையானது. நீ பேரழகி. போனை அவளிடம் கொடுத்தேன். படித்துவிட்டு மெய்சிலிர்த்து, படுத்திருந்த என்னைத் தலையை பிடித்து உதட்டோடு உதட்டில் இருக்கமாக முத்தம் செலுத்தினாள். அவளின் கண்ணைப் பார்த்தேன், கண்களில் அன்பின் பேரருவி தெரிந்தது.

மணிகாலை ஐந்து. துண்டை கழட்டிவிட்டு மாற்று உடை அணிந்து கிளம்பிக் கொண்டு இருந்தாள். ஏசியை ஆப் செய்தேன். கைப்பையை எடுத்து அதில் இருக்கும் வாசனைத் திரவியத்தை எடுத்து அவளுக்கு அடித்து கொண்டாள். என்னை அருகில் வரச் சொல்லி எனக்கும் வாசனை திரவியத்தை அடித்துவிட்டாள். இருவரும் வீட்டை விட்டு கிளம்பினோம். என் கையை இறுகப் பற்றிக் கொண்டாள் சாலையை நோக்கி நடந்தோம். டுக் டுக் வண்டிக்கு காத்துக் கொண்டியிருந்தாள். நான் பிண வண்டிக்கு காத்துக் கொண்டுயிருந்தேன். வண்டி வந்தது. நான் மட்டும் ஏறினேன். வேறு யாரும் வண்டியில் இல்லை. என் கையில் பத்து பாட் கொடுத்தாள். வண்டி கிளம்பியது. அதே சிரிப்புடன் கையை வானத்திற்கு தூக்கி ஆட்டிக் கொண்டேயிருந்தாள். பிண வண்டி கிளம்பியது. நான் பிணமாக அவளை பார்த்துக் கொண்டே இருந்தேன்.

thenameistamil@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button