
சக்கராப்பம் தின்னும் போதெல்லாம், “பப்அ… ப்பா.. ப்பா…. ப்பா. பாப்டு….” என்று வாய் கொள்ளா வாஞ்சையுடன் அழைக்கும் ஊமை அத்தை ஏனோ நினைவில் வந்துவிடுகிறாள் அல்லது ஊமை அத்தையைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் அவள் சுட்டுப் போடுற சக்கராப்பத்தின் தித்திப்பு அடித்தொண்டையில் வெது வெதுப்பாய் இறங்குகிறது.
எங்கள் வீட்டு ஆட்களின் முகச்சாயல் ஊமை அத்தைக்கு கிடையாது. அது தனி ரகம். கொஞ்சம் மாஞ்செவலை. பூனை முழி. பின்பக்கம் நீண்டு தொங்கும் சுருள் முடி. சராசரியை விட சற்று அதிக உயரம். அதற்கு ஏற்றபடியான திம்மென்ற முரட்டு உடல். உருவ அமைப்பில் மட்டுமல்ல, யார் மீதும் எதிர்பார்க்காத அன்பைப் பொழியும்! அத்தை எங்கள் வீட்டில் தப்பிப் பிறந்தது என்று தைரியமாகச் சொல்லலாம்.
சந்து அத்தை, பெரிய அத்தை, ஆப்பக்கார அத்தை, ஊமை அத்தை, நாகவட அத்தை என்று அத்தைக்கு ஏகப்பட்ட பட்டப் பெயர்கள் இருந்தன. எல்லாமே காரணப் பெயர்கள்தாம். அதன் உண்மையான பெயர் என்னவென்று அப்பாவைத் தவிர எங்கள் யாருக்கும் தெரியாது; ஏன் அம்மாவுக்கு கூடத் தெரியாதாம்.
அப்பாவுடன் கூடப் பிறந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் ஏழு. எல்லாமே பெண்கள். அவர்களில் ஊமை அத்தைதான் மூத்தது. எந்த முறையில் என்பதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. வீட்டில் எல்லோருக்கும் அக்கா! அப்படித்தான் கூப்பிடுவார்கள். அப்பாவுக்கு அக்கா. எனக்கு அத்தை! அவ்வளவுதான்.
கல்யாணம் ஆன புதிதில் அம்மா எட்டு நாத்திகளுடன் பேசிப் புழங்கவே ரொம்பக் கஷ்டப்பட்டாராம். நாத்தியென்று ஒரு சத்தம் போட்டால் ஏழு பேரும், “யேண்ணி என்ன…” என்று கேட்டு திரும்பிப் பார்ப்பார்களாம். தடுக்கி விழுந்தால் கூட யாரேனும் ஒரு நாத்தியாள் காலில்தான் விழ வேண்டுமாம். அப்படி திமுதிமுவென்று வீடு எப்பவுமே ஆட்கள் நடமாட்டமாகவே இருக்குமாம். அப்புறம் ஒரு வழியாக கொளஞ்சி நாத்தி, செம்பவல்லி நாத்தி, தனம் நாத்தி, நடுவுள்ள நாத்தி, சின்னது, சமரசம், வெள்ள நாத்தி என்று ஒவ்வொருத்தருக்கும் பெயர் வைத்து கூப்பிடப் பழகியிருக்கிறார் அம்மா.
ஊமை அத்தையை மட்டும் எப்படிக் கூப்பிட வேண்டும் என்ற தயக்கம் அம்மாவுக்கு இருந்ததாம். வீட்டுக்கே பெரிய மனுஷி. ஆளு வேறு மிதப்பாக, ஓங்கு தாங்காக இருக்கிற பொம்பள. பிள்ளைப்பேறு, பதினாறு, சடங்கு, காதுகுத்தல், நலுங்கு வைப்பது, கல்யாணம், துக்கம், என்று வீட்டில் நடக்கிற எல்லா நல்லது கெட்டதுகளிலும் அத்தையின் குரல்தான் கேட்கும். அதுதான் முன்ன நின்று எல்லாவற்றையும் செய்கிற ஆள்.
“ப்பா..அப்ப பெப்பக்க பேத்தி பை….”
‘யப்பா..அந்த விளக்கை ஏத்தி வை. நம்ப வீட்டுல ஒருத்தி பெரிய மனுஷியா ஆகிருக்கா’ என்று அத்தையின் மொழியைப் புரிந்து கொள்ளுமளவுக்கு வீட்டில் எல்லோருக்கும் அது பேசும் பாஷை பரிச்சயம்.
அதுகிட்ட போய் எப்படி சகஜமா பேசுறது. சட்டுன்னு பேர் வச்சும் கூப்பிட முடியாது. என்ன செய்வது என்று தெரியாமல் அத்தை கிட்டேயே போய் ஒருநாள், “உங்கள எப்படி அழைக்க, சும்மா ஒருமுறை ஒங்க பேரு என்னன்னு தான் சொல்லுங்களேன்” அப்டினு அம்மா கேட்டுருக்கு.
அவ்வளவுதான். அத்தை புடி புடின்னு புடிச்சி விட்டுருக்கு. அதன் பாஷையிலே. அத்தை என்ன சொல்லி சத்தம் போட்டது என்று புரியாமலே கேவிக் கேவி அம்மா அன்றைக்கு நாள் முழுவதும் அழுததாம்.
பத்தாதற்கு அப்பா காதுக்கும் சேதி போக, வீட்ல பெரிய கலவரம் ஆகிருக்கு. “பெரிய நாத்தின்னு கூப்பிட வேண்டியது , அது என்ன பெரியவங்ககிட்ட பேரு கேக்குற பழக்கம்” ன்னு அப்பா அவரு பங்குக்கு திட்டியிருக்கார். ஒருவழியாக எல்லா அத்தைகளும் அம்மாவுக்கு ஒத்தாசையாக சண்டையை ஓயச் செய்ய, பிரச்சனை தீர்ந்திருக்கிறது. அதுக்கு பிறகு அம்மா…மூச்சு விடனுமே .. அத்தைகிட்ட அப்படியே சரண்.
அதற்கு பிறகு அத்தையின் பெயரைத் தெரிந்து கொள்ள அம்மா எந்த பிரயத்தனமும் செய்யவில்லையாம். அத்தையைப் பார்க்கிற போதெல்லாம் பல் தெரியாமல் ஒரு பொய்ச் சிரிப்பு. அவ்ளோதான் அத்தையுடனான அம்மாவின் உறவு. வெளியாட்களுடன் பேசும் போது அத்தையைப் பற்றி சொல்ல வந்தால் நேரத்திற்குத் தகுந்தாற் போல அத்தையின் ஏதாவது ஒரு பட்டப் பெயரைச் சொல்லி சாடை பேசுமாம்.
“யம்மா , ஏம்மா ஊம அத்தைக்கு இத்தினி பேரு இருக்கு?” என்று சிறு வயதில் நான் கேட்டதிற்கு அம்மா சொன்னவைகள் எல்லாம் நினைவில் வந்தது. ஏன் என்று புரியவில்லை. அத்தையைப் பற்றிய நினைவு வரும் போதெல்லாம் மனசு என்னவோ செய்யும்.
சின்ன அய்யர் அவரின் சின்னக் கைகளால் வார்க்கும் அரை தொன்னை பிள்ளையார் கோவில் சக்கரை பொங்கல் பிரசாதத்திற்கு நாங்கள் முந்திக் கொள்வோம். பாத்திரத்தில் உள்ள பிரசாத்தை கிள்ளி வழித்து எத்தனை கூட்டம் இருந்தாலும் சமாளித்துவிடுவார் அய்யர். ஒரு கையில் அள்ளி எட்டு பேருக்கு வார்க்கும் லாவகம் அவருக்கு வாய்த்திருந்தது. ‘லைன்ல வர்றவங்களுக்குத்தான் தருவேன்’ என்று ஒருநாள் அய்யர் கறார் காட்ட, நாங்கள் வழக்கத்திற்கு மாறாக வரிசையில் நின்றோம். சில்லரை காசு சுண்டுவது போல பெருவிரலால் அவர் தள்ளத் தள்ள அவர் உள்ளங்கையிலிருந்து பொங்கல் முன்விரலுக்கு இறங்கிக் கொண்டே இருக்கும். அடுத்தடுத்த ஆட்களின் இலைகளில் உதிர்ந்து கொண்டே இருக்கும். பிரசாதம் வார்க்கும் போது அவரின் முகம் பார்ப்பதே எங்களுக்கு அலாதி. ஒரு பருக்கை கூட கூடக் குறைச்சல் ஆகிவிடக்கூடாது என்ற கவனம் அதில் பொதிந்திருக்கும்.
அப்படிதான் அன்றைக்கு அய்யர் எங்களை நோக்கி வந்துகொண்டிருந்தார். கடைசியாக வழித்துத் தெளித்த பிரசாதம் என்னுடன் தீர்ந்து போனது. எனக்கு அடுத்து நின்ற அப்புகுண்டுவிற்கு கிடைக்கவில்லை.
“டே ஆளு, அய்யிரு ஏமாத்திட்டாருடா, எனக்கு இல்லமா போச்சு, எப்பவுமே ஒரு சொட்டுக்கோண்டாவது தருவாரு, இன்னைக்கு அதுவும் இல்லை” விசும்பிக் கொண்டே என்னருகில் வந்தவன், என் இலையில் கை வைத்தான். நான் தர மறுத்து விலகி ஓட, வெறிபிடித்த மாதிரி என்னை அடித்தான். நான் அவனிடமிருந்து தப்பிக்க ஓடினேன். “டே எனக்கு கொஞ்சம் தந்துரு” என்று அரட்டிக் கொண்டே என்னை விடாமல் துரத்தினான்.
நான் கோவிலைச் சுற்றி வந்தேன். அதற்குள் பொங்கல் செரித்து விட்டிருந்தது. அப்புகுண்டு ஆற்றாமையில் அழுது புரண்டான். என் மீது மண்ணை வீசி எறிந்தான். எங்களுக்கு இருவருக்குமே அர்த்தம் புரியாத வார்த்தைகளில் ஏதோவொன்றைச் சொல்லி என்னை வைதான். “டே ஓங்குடும்பம் அழிஞ்சிபோகும்” என்று அழுகையினூடாக சாபமிட்டான்.
“ஆமா, இவரு பெரிய இவரு பாரு, சாபமுட்டா ஒடனே பளிச்சிற போது..போடா, இன்னைக்கி பொங்கல் சூப்பரா இருந்துச்சி” – நாக்கை சப்புக் கொட்டினேன். அது அவனை இன்னும் கோபமூட்டியது.
“யம்மா, கோவில் சோறு எனக்கு இல்லாமப் போச்சும்மா. இந்த மணிப் பய எனக்குத் தராம தானே தின்னுட்டாம்மா. நீயி எனக்கு சக்கர சாதம் செஞ்சு கூடமா” என ஒட்டாராம் செய்தான். அவன் அம்மா அதை சட்டை செய்வதாகயில்லை. அவள் பாட்டுக்கு கீரை ஆய்ந்துகொண்டிருந்தாள்.
அதற்கு பிறகு அவன் யாரிடமும் பேசவில்லை. கோவில் திண்டில் உட்கார்ந்து கொண்டு அழத் தொடங்கினான்.
எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த ஊமை அத்தை விகு விகுவென அது குடியிருந்த மடத்து சந்தை நோக்கி நடந்தது. கொஞ்ச நேரத்தில் திரும்பிய அத்தையின் கைகள் பொனா குண்டான் ஒன்றைப் பற்றிக் கொண்டிருந்தது.
சுற்றிப் பார்த்துவிட்டு அழுது அழுது ஓய்ந்திருந்த அவனை அழைத்து, காய்ந்த தாமரையிலையில் சுடச் சுட சக்கரைப் பொங்கலை குண்டானிலிருந்து எடுத்து அவனுக்குத் தின்னக் கொடுத்தது.
அப்புகுண்டு செருமிக் கொண்டே தின்ன ஆரம்பித்தான்.
தூரத்தில் நின்றுகொண்டிருந்த எனக்கு சைகை காட்டி வரவழைத்து, “ப்பி ,, இப்பிப்பாம் பெய்ய பூபாபு ..ப்பு, ப்பேப்பு பாபுன்னும் , ம்ம்” என்று தலையை வருடிக் கொடுத்துக் கொண்டே எனக்கும் பொங்கல் வார்த்தது. அத்தை என்ன சொல்லிற்று என்று தெரியாமல் நான் ‘சரி’ என்பது போல் தலையாட்டி கொண்டே சாப்பிட்டேன்
அழுது ஓய்ந்திருந்த அப்புகுண்டு சக்கரைப்பொங்கலை வழித்து தின்னும் போது மீண்டும் அழுததும், அத்தை என்னிடம் எதையோ சொன்னதின் அர்த்தமும் புரிந்துகொள்ள காலங்கள் இன்னும் கனியவில்லை.
குண்டரிசியில் திப்பி திப்பியாக வெல்லம் கரையாமல் மிதந்த அந்த சர்க்கரைப் பொங்கலை போல ஒன்றை அதற்குப் பிறகு என் வாழ்நாளில் நான் சாப்பிட்டதேயில்லை.
பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள எங்கள் பெரிய வீட்டை விட்டு ரெண்டு தெரு தள்ளி மடத்து சந்தில் ஒரு திண்ணையில்தான் அத்தையும் பழனியாண்டி மாமாவும் தனியாக குடி இருந்தார்கள். அதாவது தனித் தனியாக குடி இருந்தார்கள்.
மாமாவை நம்பி இருக்காமல் ஆப்பம் போட்டு பிழைப்பு நடத்தி வந்தது ஊமை அத்தை. வெள்ளனவே எழுந்து, எடுத்து வைக்கும் கடை காலை சுமார் ஏழு எட்டு மணிக்கெல்லாம் முடிந்து விடும். ரெண்டு கரண்டி மாவை சூடான ஆப்ப சட்டியில் ஊற்றி ஆலம் எடுப்பது போல விளாவ, மாவு சட்டியின் விளிம்பு வரை பரவும். மேடு தட்டிய நடுப்பகுதியில் ஒரு சில்லு வெல்லம், கொஞ்சம் எண்ணெய். அவ்வளவுதான்!
சுட்டுப் போட சுட்டுப் போட தின்று கொண்டே இருக்கலாம். விலை என்னவென்று சரியாக நினைவில் இல்லை. ஐந்து ரூபாய்க்கு மூன்று தரும் என்று நினைக்கிறேன். ஆனால், தேங்காய்ப் பாலுக்கு கூடுதல் காசு வாங்கும் என்பது மட்டும் நியாபகம் இருக்கிறது.
வியாபாரம் முடிந்தது போக அப்பாவுக்கென்று சில ஆப்பங்களை தாமரையிலையில் மூடி நாள்தோறும் வீட்டிற்கு கொண்டு வரும். அதில் ஆளுக்கொரு விள்ளலை வாயில் போட்டுக் கொள்வோம்.
அத்தை வீட்டில் இருந்து தின்பது போல இல்லாமல் அது தனி ருசியாக இருக்கும்.
அம்மா மட்டும் அத்தை சுடும் ஆப்பத்தைத் தின்பதில்லை. தெருவே தின்று தெவிட்டாத அப்பம் அம்மாவுக்கு மட்டும் ஒவ்வாமல் இருப்பது ஏனோ எனக்கு நெடுநாட்களாகத் தெரியாது. அதைப் பற்றி அவளிடம் கேட்டபோது, அவள் சொல்லியவைகளை இன்று நினைத்தாலும் சிரிப்பாணி மலரும்.
“அதுக்கு ஒரு கைப்பக்குவம்தா. அது கையால எது செஞ்சாலும் அப்படியொரு ருசி வந்து உக்காந்துரும். கூடவே இருந்து நாங்களும் செஞ்சு பார்த்திருக்கோம். ம்ஹும். அது செய்யிற மாதிரி வராது. எனக்கு அளவெல்லாம் தெரியாது. ஆனா, ரேஷன் அரிசி, பச்சிரிசி, தேங்கா கீத்து, பேட்ட வெல்லம் எல்லாத்தையும் போட்டு மதியானமே ஊற வைச்சிடும். ராச் சோத்தை தின்னுட்டு குழவியில உட்கார்ந்திரும். மெய்ய நல்லா அரைச்சு வழிச்ச சாந்தை குழவியிலிருந்து பானைக்கு மாத்தும். வெளிர் மஞ்சளிலில் இருக்கும் கூழான மாவில் கொஞ்சம் வெல்லத்தை அரைத்து கரைக்கும் போது வாயோரத்தில் இருந்து எச்சில் கோழையாக மாவில் வழிஞ்சத ஒருநாள் பாத்துட்டேன். அத பாத்ததிலிருந்து எனக்கு அது சுடுற ஆப்பத்தைக் கண்டாலே கசம் என்பது போல உடம்பு சிலித்திடும்” என்று சொல்லி உமட்டிய அம்மாவின் செய்கையைப் பார்த்து நான் விழுந்து விழுந்து சிரித்தேன்.
எரிச்சலில் என்னை அடிக்க வந்தாள்.
அதற்கு பிறகு அத்தை கொண்டு வரும் அப்பத்தை ருசித்து தின்பது போல அம்மாவிடம் பாவம் செய்து, “அம்மா, நீயும் திண்றியா, இன்னைக்கு அத்தை வெல்லம் கொஞ்சம் ஜாஸ்தி போட்டுருக்கு போல. செம சேஸ்ட்டா இருக்கு, இந்தா” என்று அம்மாவைச் சீண்டுவது எனது பழக்கமாகிப் போனது தினந்தோறும்.
“ஒரம் உழுந்து கத்து கத்துன்னு கத்துற புள்ளைவோ எல்லாம் அது தொட்டு தூக்குனதும் ஓஞ்சிடுங்க. ஆச்சரியமா இருக்கும் எங்களுக்கு. பிள்ளங்கன்னா அதுக்கு கொள்ள பிரியம் ஆனா, கடேசி வரைக்கும் தனக்குன்னு புள்ளயே வேணாமுன்னு வீம்பா இருந்துடுசே. ப்பா, கெட்டின ஆளுகூட ஒரு வார்த்தை பேசாம. நம்பலால முடியாது சாமீ…அது ஒரு பொம்பளதான்பா. என்னவோ வாக்கப்பட்டு போச்சுது. காலந்தள்ளுது” என்றாள் அம்மா. வீட்டிலுள்ள வயது மூத்தவர்களை ‘அது’ போட்டு அழைப்பது எங்கள் பக்கத்து வழக்கம்.
அத்தையை பற்றித் தெரிந்ததையெல்லாம் அம்மா சொன்னாள். அத்தைக்கு அப்போதெல்லாம் எந்த காரணப் பெயர்களும் சூட்டப்படவில்லை. வீட்டில் இருக்கிற எல்லோரையும் போலவே சாதாரணமாகத்தான் அத்தையும் இருந்திருக்கிறது பேச கொள்ள என்று. அத்தைக்கு பன்னிரெண்டு வயசில் கல்யாணம் முடிந்திருக்கிறது. தன்னை விட பதினைந்து வயது மூத்தவரான, மர வேலை செய்யும் பழனியாண்டி மாமாவோடு.
சிரித்துப் பேசி விளையாடிக் கொண்டிருந்த அத்தைக்கு அது முதல் எல்லா இரவுகளும் நிர்வாணமாக மாறியது அருவருப்பாக இருந்திருக்கிறது. முதல் நாள் முடிந்த போது உண்டான எரிச்சல் அதன்பிறகு அடங்கவேயில்லை. அத்தையிடம் மாமாவுக்கு படுக்கை சுகம் மட்டும் தேவைப்பட்டது. இரவு வந்துவிட்டாலே இனம்புரியாத ஒரு பயம் வந்து தொற்றிக் கொள்ளும் அத்தைக்கு.
உதிர்த்த ரத்த போக்கும், பழனியாண்டி மாமாவின் மீது படிந்துள்ள பச்சை மர வாசமும், வியர்வையின் மொச்ச வீச்சமும், அத்தைக்கு அதற்குள் பழகிவிட்டிருக்க வேண்டும். ரெண்டு மாதம் தள்ளிப் போனதில் அத்தை மூழ்காமல் இருந்தது.
எரிச்சலிலும் நாற்றத்திலும் கழிந்த சில நாட்களுக்கு அப்பால், ஒரு விடியற்காலையில் முள்ளுக்காட்டில் வெளிக்கிக்கு முக்கும் போது, வளர்ச்சி அடையாத ஆறு மாச உயிர் பிண்டம் பிசுபிசுவென வெளியே வந்து கிடந்ததைப் பார்த்து பயந்து போய், கால் கூட அலம்பாமல் வீட்டிற்கு அழுது கொண்டே ஓடி வந்திருக்கிறது ஊமை அத்தை.
விஷயம் தெரிந்து மாமா காட்டுக்குப் போகும் முன்னர் ரெண்டு மூன்று நாய்கள் உயிரற்ற அந்த ரத்த பிண்டத்தை குதறிக் கொண்டிருப்பதை பார்த்த அத்தை பேய் பிடித்தது போல காட்டுக் கூச்சல் போட்டு கதறியிருக்கிறது.
நாய்களை விரட்டி விட்டு கிடைத்த மிச்சத்தை அங்கேயே புதைத்துவிட்டு வந்திருக்கிறார் பழனியாண்டி மாமா அழுது புலம்பியபடியே. அவரின் எல்லா கோபமும் அத்தை பக்கம் திரும்ப, அத்தைக்கு அடி உதை. அதுவும் கருவச்செடி கம்பால். அதில் முட்கள் இருந்ததை மாமா அறிந்திருக்கவில்லை.
நாய்கள் வாய் வைத்த தன் குழந்தையின் பிண்டத்தை குழிவெட்டி புதைத்த அந்தக் காட்சி அத்தையை ரொம்பவே பாதித்திருக்கிறது. அதன் பின்னர் அவளின் குழந்தை குணம் வற்றிப் போய்விட்டது. மாமாவின் கோபமும் வெறியும் அத்தைக்கு தீராத வெறுப்பை விதைத்திருக்கிறது. அது அவர் கருவக் கம்பால் வீசியபோது உடம்பில் தைத்த முட்களை விட அதிகம் உறுத்தியது.
அத்தைக்கும் மாமாவிற்கும் பேச்சு வார்த்தை நின்று போய் சில வருடங்கள் அப்படியே கழிந்தன. ஆனாலும் அத்தை பிறகு ஒருமுறை கருத்தரித்திருக்கிறது. அதுவும் ஏனோ மடி தங்கவில்லை. அதன் பிறகு முற்றிலுமாக அவர்களுக்கு இடையிலான தேக உறவும் நின்று போய் விட்டது.
பிறகு எத்தனையோ பஞ்சாயத்து வைத்தும் பலனில்லை. மாமாவை அத்தை அண்ட விடவில்லை. கோபத்தில் மாமா அடித்ததையம் மீறி வேறு ஏதோவொன்று அத்தையை மாமாவிடமிருந்து வெகுதூரம் தள்ளிப் போகச் செய்திருக்கிறது.
பெண்கள் மன ஓட்டத்தை யாருமே உணர்ந்து கொள்ள முடியாது என்று சொல்லி முடிக்கும் போது அம்மா ஏனோ பெருமூச்செறிந்தாள்.
அதன் பிறகு வீட்டில் ரெண்டு அடுப்பு எரியத் துவங்கியிருக்கிறது. ஒன்று, எப்பவும் போல மாமாவிற்கும் சேர்த்து. மற்றது வியாபாரத்துக்கு. அத்தை தனியாக அடுப்பு போட்டுகொண்டு ஆப்ப வியாபாரம் பண்ண ஆரம்பித்திருக்கிறது. வியாபாரத்தில் வரும் காசை வைத்து தனியாக வாழத் துணிஞ்சிருக்கு.
ஏனென்று அது முகம் பார்த்து கேட்க யாருக்கு துணிவு வரும். அது பாட்டுக்கு தான் உண்டு தன் பிழைப்பு உண்டு என்று தனி பொம்பளையா இருந்தது.
பட்டணத்துக்கு வேலைக்குப் போன நாராயணன் மாமா ஊருக்கு வராமலே இருந்திருக்கலாம். நாராயணன் மாமா பழனியாண்டி மாமாவின் பங்காளி முறை. சித்தப்பார் மகன். சரியான ஊர்சுத்தி. ஒரு இடமா ஒரு வேலையா நிலையாக இல்லாத விட்டேத்தி. பழனியாண்டி மாமாவுக்கு கல்யாணம் ஆனதுக்கு பிறகுதான் உருப்படியாக ஒரு வேலைக்குப் போக வேண்டும் என்ற நினைப்பே நாராயணன் மாமாவுக்கு வந்துருக்கு. ஒரே காரணம் கல்யாண கோலத்தில் இருந்த ஊமை அத்தையின் நரிவிசு. நாமும் வேலைக்குப் போயி சம்பாரிச்சா இப்படி அழகா ஒரு பொண்ணை கட்டிக்கிடலாம் என்ற எண்ணம் வரவே, பட்டணத்துக்கு அன்றைக்கு இரவே கிளம்பிப் போனவர் இன்றைக்குத்தான் வந்திருந்தார்.
மனித சத்தம் செத்துப்போயிருந்த வீட்டில், ஒருக்களித்த கதவண்டையில் , “இன்னும் ஒன்னு” என்ற குரல்.
முன்பெங்கோ கேட்ட அதே குரல். அத்தையின் குரல்! கதவைத் திறந்து கொண்டு அவரசமாக பழனியாண்டி மாமா உள்ளே நுழையவும், சாப்பிட சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்த நாராயண மாமாவின் தட்டத்தில் அத்தை ஆப்பம் வைக்கவும், “போதும்ங்க”, என்று சின்ன மாமா தடுக்கவும், “இன்னும் ஒன்னு” என்று அத்தை சொல்வதற்கும் சரியாக இருந்திருக்கிறது.
பழனியாண்டி மாமாவிற்கு அத்தையின் குரலை வெகுகாலம் கேட்காமல் இருந்து கேட்கவும், அப்படியொரு வேகம் வந்திருக்கு உடம்பில். கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து மீண்டும் இறுக்கிக் கட்டிக்கொண்டு அருவாமனையை எடுத்து அத்தையின் நாக்கை ‘வற.. வற’ என்று அறுத்து விட்டார், “இன்னும் ஒன்னு…இன்னும் ஒன்னு.. ம்ம்ம்…” என்று கத்திக்கொண்டே. துள்ளத் துடிக்க ரத்தம் கொப்பளிக்க சரிந்த அத்தையை ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றும் பலனில்லை.
அவ்வப்போது ஒன்னு ரெண்டு வார்த்தைகள் பேசிக்கொண்டிருந்த அத்தையின் நாக்கு பிளவுற்ற நாவாகிப் போனது. கூடவே இன்னொரு பட்டப் பெயரும் வந்து சேர்ந்துள்ளது. ‘ரெட்டை நாக்குக்காரி!’
பழனியாண்டி மாமா தவறிய செய்தி வந்தவுடன் அத்தையைப் பற்றி, மாமாவைப் பற்றி அம்மா சொன்னவைகள் யாவும் நினைவில் வந்தன. எத்தனை வருடங்கள் ஓடிவிட்டன. மாமாவின் முப்பதுக்கு படைக்கப் போகும் அத்தையின் சக்கராப்பத்தை எண்ணிக்கொண்டேன்.
ஜன்னலோரமாக காற்று இதமாக வீசிக் கொண்டிருந்தது.
இன்றைக்கும் அத்தை ஆப்பம் சுட்டுத்தான் பிழைப்பு நடத்துகிறதா? அப்பம் பழைய ருசி மாறாமல் இருக்குமா? அப்பாவுகென்று தனியாக ஒதுக்கி வைக்கிறாதா? என அடுத்தடுத்து கேள்விகள் முளைத்துக் கொண்டே இருந்தன மனதில்.
மாமாவின் உத்திரகிரியை பத்திரிக்கை அச்சிடும் வரையில் காத்திருக்க வேண்டியுள்ளது, ஊமை அத்தையின் உண்மையான பெயரைத் தெரிந்துகொள்வதுற்கு!
*******