அகமும் புறமும்; 15 – கமலதேவி

பொய்க்காத அருள்
ஒருநாட் செல்லல மிருநாட் செல்லலம்
பலநாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாட் போன்ற விருப்பினன் மாதோ
அணிபூ ணணிந்த யானை யியறேர்
அதியமான் பரிசில் பெறூஉங் காலம்
நீட்டினு நீட்டா தாயினும் யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் ததுவது பொய்யாகாதே
அருந்தே மாந்த நெஞ்சம்
வருந்த வேண்டாம் வாழ்கவன் றாளே
புறநானூறு: 101
பாடியவர் : ஔவையார்
திணை: பாடாண் திணை
துறை :பரிசில் கடா நிலை
பரிசில் அளிக்கத் தாமதமான ஒரு சமயத்தில் அதியமான் நெடுமான் அஞ்சியின் கொடைத்திறம் பற்றி ஔவையார் பாடிய பாடல் இது.
‘யானை தன் கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் ததுவது பொய்யாகாதே’
எவ்வளவு பெரிய நம்பிக்கை! கையகத் ததுவது பொய்யாகாதே…யானை தன்னுடைய கொம்புகளிடையே வைத்த உணவு அதன் வயிற்றுக்குப் பொய்யாவதில்லை. அது போல அதியனின் பரிசில் பொய்யாவதில்லை என்று ஔவை பாடுகிறாள். கொடைத்தன்மை என்பதை அளவுக்கு அதிகமாக இருப்பதால் கொடுக்கப்படுவது என்று நினைக்கிறோம். தானத்திற்கும் கொடைக்கும் வேறுபாடு உண்டு என்று நினைக்கிறேன். தானம் என்பது புண்ணியம் என்ற நிறைவை எதிர்பார்த்து அளிக்கப்படுவது. கொடை என்பது மனதில், கைகளில் தானே நிகழ்வது. எண்ணி அளிப்பது தானம். எடுத்தளிப்பது கொடை. இந்த வள்ளல் தன்மை செல்வத்தில் மட்டும் இல்லை. அறிவைக் கொடையாக அளிக்கும் வள்ளல்கள் உண்டு. தாங்கள் செய்யும் தொழிலை வள்ளல் தன்மையுடன் செய்பவர்கள் உண்டு.
இந்தப்பாடலை வாசிக்கும்போது மருத்துவர் வெங்கட்ராமனை நினைத்துக் கொண்டேன். அவர் துறையூரைச் சேர்ந்தவர். இப்பொழுது அவருக்கு எழுபது வயதிற்கும் கூடுதலாக இருக்கும்.
புதுப்பிக்கப்பட்ட பெரிய வீடுதான் தற்போது அவரது மருத்துவமனை. என்னுடைய பள்ளி வயதில் அவரை முதலில் பார்த்தேன். துறையூரில் உருவாகிக் கொண்டிருந்த பெரிய மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அவர். வெள்ளை நிற சஃபாரி அணிந்திருந்தார். சிறப்பு மருத்துவர்கள் உள்ள அந்த மருத்துவமனை துறையூரின் முக்கியச் சாலையில் இருந்தது.
மீண்டும் நான் கல்லூரியில் படிக்கும்போது அவரது மருத்துவமனைக்குச் சென்றேன். புதுப்பிக்கப்பட்ட பழைய காலத்து பெரிய கட்டு வீடு அது. வெளியே பெஞ்சில் வரிசையாக கிராமத்து ஆட்கள்.
இடைப்பட்ட ஆண்டுகளில் அவரை வாழ்க்கை புரட்டிப்போட்டிருந்தது. மூளை புற்றுநோயால் கல்லூரியில் படிக்கும் மகனை இழந்திருந்தார். அந்த இழப்பு அவரை வேறொருவராக மாற்றியிருந்தது.
இந்த மருத்துவமனையில் அவர் மருத்துவம் பார்க்க யாரிடமும் கட்டணம் பெறுவதில்லை. அதனால்தான் கும்பல் வருகிறது என்று சொல்ல முடியாது. தர்மவான் மருத்துவம் பார்த்தால் சரியாகும் என்ற கிராமத்துக்காரர்களின் நம்பிக்கை. அந்த இடம் துறையூரைச் சுற்றியுள்ள கிராமத்து மக்களால் நிரம்பியிருக்கும். சிறப்பு மருத்துவரிடம் சென்றாலும் அனைத்து முடிவுகளையும் இவரிடம் ஒருமுறை காண்பிக்கும் வழக்கம் எனக்கும் உண்டு. அவர் சிரித்தபடி, ‘ஒன்றுமில்லை சரியாகிவிடும்’ என்று சொன்னால் மனதில் தைரியம் உண்டாகும். அவரிடம் மருத்துவம் பார்க்க வருபவர்கள் பாதி. இது போல மற்ற மருத்துவரிடம் சென்ற முடிவுகளைக் காண்பித்து, ”அவரிடம் செல்லலாமா?” என்று கேட்க வருபவர்கள் மீதி. அவர் எத்தனை கும்பலிலும் ஒருவரையும் பார்க்காமல் திருப்பி அனுப்புவதில்லை. கொரானா காலத்திலும் இதையே கடைபிடித்தார்.
அவரது சொற்களும், சிரிப்பும், உரிமையான பேச்சும், அவர் முன்னே உடலும் மனமும் குலைந்து அமர்ந்திருக்கும் நோயாளிகளுக்கு அவர் அளிக்கும் கொடைகள். அவர் முன்னால் விவசாயிகள் குழந்தைகள் போல அமர்ந்திருப்பதைக் காணலாம். கிராமத்துப் பெண்கள் தயக்கம் இன்றி தங்களின் மாதாந்திர சிக்கல்களைச் சொல்வதைக் கேட்க முடியும். மெனோபாஸ் பற்றி அவர்களுக்குப் புரியவைத்து சத்தான ஆகாரங்களைப் பற்றிச் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். இளம் பிள்ளைகளின் சிக்கல்களை அவர்கள் அம்மாக்கள் கூறும்போது தயங்கி அமர்ந்திருக்கும் பிள்ளைகளிடம் , “ கொழந்த, ஒன்னு தெரிஞ்சுக்கோ…நேரத்துக்கு ஒழுங்கா சாப்பிடனும்” என்று மெல்லத் தொடங்குவார். நானுமே அவரிடம்தான் முதன்முதலாக தயக்கம் இன்றி, “சைக்கிள் சரியா இருக்கே டாக்டர்..அப்பறம் ஏன் வலிப்பிரச்சனைகள் வருது?” என்று கல்லூரி வயதில் கேட்டேன். ‘அப்பிடிக் கேளுடிம்மா” என்று தோளில் வேகமாகத் தட்டினார். அங்கு தனியான அறைகள் இல்லை. மிகப்பெரிய கூடத்தை பச்சை திரைசீலைகளால் தடுப்பாக வைத்திருப்பார்கள். தடுப்புகளுக்கு மையமாக உள்ள இடத்தில் அனைவரும் பார்க்கும் படி அவருடைய மேசை நாற்காலி இருக்கும்.
பெரும்பாலும் அவருக்கு கிராமத்துக்காரர்களின் தனிப்பட்ட வாழ்க்கை தெரியும். அவர்கள் தொடர்ந்து அவரிடம் வருபவர்கள். அவர் MD படித்த ஆங்கில மருத்துவர். ஆனால் சரளமான கிராமத்து தமிழில் பேசுவார். என்ன மருந்து என்று நோயாளியிடம் விரித்துச் சொல்வார். நோயாளிகளைத் தொட்டும், திட்டியும், கண்டித்தும், கொஞ்சியும் பேசக்கூடியவர்.
இவ்வளவு பெரிய பொட்டு எதுக்கு என்று அவரது ராமத்தை ஒரு குழந்தை கேட்டால், அதற்கு ஒரு குட்டிக்கதை சொல்லியபடி அதன் நோயைக் கண்டுகொள்ளக் கூடியவர். அவர் எதிரே மகனது பெரிய புகைப்படம் மாட்டப்பட்டிருக்கும். முன்னால் அமர்ந்திருப்பவர்களை அவர் அப்படித்தான் பார்க்கிறாரோ என்னவோ!
என் சோர்வான நாட்களில் ஒருநாள் அவரது மருத்துவமனையின் காத்திருப்பு திண்ணையின் பெஞ்சில் அமர்ந்திருந்தேன். மனதில் அத்தனை சஞ்சலங்களுடன் அந்த பெரிய கடைவீதியை பார்த்துக் கொண்டிருந்தேன். மருத்துவமனை முன்பு தன் காரை நிறுத்திவிட்டு ஊதா நிற ட்ராக் பாண்டும், அதே மென்நிற டீசர்ட்டும் அணிந்து சிரிப்புடன் ஒட்டுநர் இருக்கையில் இருந்து இறங்கினார். காரை கொண்டு சென்று பின்னால் நிறுத்துவதற்காக ஒரு இளைஞன் பக்கத்துக்கடையில் இருந்து ஓடி வருகிறான். அவர் சிரித்தபடி இளைஞன் முதுகில் தட்டிவிட்டுப் படியேறி வருகிறார். பெஞ்சுகளில் அமர்ந்திருக்கும் பலர் எழுந்து கொள்கிறார்கள். அவரது அத்தனை ஸ்டைலான வருகையைப் பார்த்துப் புன்னகைத்தபடி அமர்ந்திருந்தேன். போகிற போக்கில் என் முதுகில் தட்டி, “நிமிர்ந்து ஒக்காந்து பழகனும் இடியட்” என்று கடந்து சென்றார்.
பல வேலைகளால் அன்று இரவு மிகவும் பிந்திவிட்டது. எங்கள் ஊருக்கு கடைசி பேருந்திற்காக அம்மாவும் நானும் காத்திருந்தோம்.
முப்பது வயது இருக்கக் கூடிய இரண்டு கிராமத்து இளைஞர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள்.
“டெஸ்ட் ரிசல்ட் வந்திருச்சு… அந்த டாக்டர்க்கிட்ட அப்பாயிண்மெண்ட் வாங்கிட்டு நாளைக்கு வான்னு அனுப்பிட்டாங்க”
“நாளைக்கா?”
“நம்ம ஊர்லருந்து மறுபடி வரனுமே. ..வயல்ல நடவு வேற இருக்கு. அதான் வெங்கட்ராமன் சாரை பாக்கலான்னு போனேன். வெளிக்கதவை சாத்திக்கிட்டு இருந்தாங்க. கையில ரிப்போர்ட்டை பாத்தவரு என்ன இந்த நேரத்துலன்னு கேட்டு கதவை திறக்கச் சொன்னாரு. வராண்டா லைட்டை போட்டு ரிப்பார்ட்டை பாத்தாரு. படிச்ச பையன் தானே…இதெல்லாம் தெரியாதா..லிக்கர் கம்மியா எடுக்கனும்..எந்த ஊருன்னு கேட்டுக்கிட்டே உள்ள கூட்டிட்டுப்போய் இருவது நிமிசத்துக்கு மேல பேசினாரு. டேப்லெட்ஸ் முடிஞ்சதும் கண்டிப்பா வரனுன்னார். என்னோட மொபைல் நம்பரை டேபிள்ல இருந்த நோட்டில் எழுதச் சொன்னாரு ” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
இதே போல நிறைய சந்தர்ப்பங்களை நிறைய ஆட்கள் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அவர் வாசலில் சென்று நின்ற எவருக்கும் மருத்துவம் பார்க்காமால் திருப்பி அனுப்பியதில்லை. பொய்க்காத வாயில் அவருடையது. இதை கொடை என்று சொல்லலாம் இல்லையா? அறம் என்ற எல்லையை தொடக்கூடிய கொடை. காலத்திற்கு ஏற்ப கொடைகள் மாறுகின்றன. வள்ளல்கள் அதே குணத்துடன் மாறாமல் இருக்கிறார்கள். அவர்களை உலகம் வணங்கிக்கொண்டேதான் இருக்கிறது.
ஒருநாள் அல்ல
இருநாட்கள் அல்ல
பலநாட்கள்
பலரோடு சென்றாலும்
முதல்நாள்
சென்றதைப் போன்ற
அன்பாளன் அவன்.
பூண் அணிந்த யானையின்
தந்தத்தில்
வைத்த உணவைப்போல,
காலம் தாழ்த்தினாலும்
அவன் பரிசில்
தவறுவதில்லை நெஞ்சே
நீ வருந்தாதே..
அவன் அடி வாழ்க.
(தொடரும்…)