‘அது, சூரியன் அஸ்தமிக்கும் வேளை. நான் என்னுடைய நண்பர்களுடன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தேன். தீடீரென வானம், ரத்த சிவப்பு நிறமாகக் காட்சியளித்தது. நான் நடப்பதை நிறுத்தினேன். என்னைச் சுற்றிய உலகம், உருமாறிக் கொண்டே இருந்தது. மேகக் கூட்டங்கள், அதன் பெரிய நாக்கைக் காட்டி என்னை பயமுறுத்தின. என்னுடைய நண்பர்கள் வழக்கம் போல, சாதாரண மனநிலையில்தான் இருந்தார்கள். ஆனால், நான் பதட்டத்தின் உச்சியில் இருந்தேன்…’
உலகின் புகழ்பெற்ற ஓவியங்களுள் ஒன்றான ‘The Scream’ பற்றி, அதை வரைந்த ஓவியர் எட்வர்ட் மூங்க் (Edvard Munch) சொன்ன வார்த்தைகள் இவை. மூங்க்கிற்கு நடந்த இந்த உண்மைச் சம்பவம்தான், பின்னாளில் ‘The Scream’ ஓவியமாக மாறியது.
இப்படி ஒரு நிகழ்வு, உண்மையில் மூங்க்கிற்கு நடந்திருக்குமா என்ன? யார் இந்த மூங்க்? பார்த்தாலே திகிலைக் கிளப்பும் இப்படி ஒரு ஓவியத்தை அவர் வரையக் காரணம் என்ன? இருண்ட உலகை மட்டுமே ஓவியங்களில் வரைந்த அவர், தன் வாழ்க்கையில் அனுபவித்த உளவியல் சார்ந்த பிரச்சினைகள் என்னென்ன?
*
மூங்க், 1863-ஆம் ஆண்டு நார்வேயில் உள்ள Adalsbruk எனும் சிற்றூரில் பிறந்தவர். அவருடைய தந்தையான கிறிஸ்டியன் ஒரு மருத்துவர். தாய், கேத்ரின். மூங்க் உடன் பிறந்தவர்கள் மொத்தம் நான்கு பேர்.
மூங்க் ஐந்து வயதுச் சிறுவனாக இருந்த போது தாய் கேத்ரின் காசநோயால் இறந்துபோனார். இது, ஒட்டுமொத்த குடும்பத்தையும் பாதித்தது. குறிப்பாக ஆரம்பத்தில் தன்னுடைய குழந்தைகளுக்கு நீதிக்கதைகள், தேவதைக் கதைகள் என சொல்லி வந்த கிறிஸ்டியன், கேத்ரின் இறந்தபிறகு குழந்தைகளிடம் நேரத்தை செலவிடுவதைக் குறைத்துக் கொண்டார்.
மதம், அவருடைய சிந்தனைகளை திசை திருப்பியது. எந்நேரமும் பைபிளை மட்டுமே வாசித்துக் கொண்டிருந்தார் அவர். ‘நீங்கள் செய்யும் ஒவ்வொரு தவறையும், உங்கள் தாய் கேத்ரின் சொர்க்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். அவர் உங்களைத் தண்டிப்பார்…’ என திரும்பத் திரும்ப குழந்தைகளிடம் வலியுறுத்தியிருக்கிறார் கிறிஸ்டியன்.
மேலும் சாத்தன் கதைகளைப் பற்றி, தவறு செய்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் பற்றி என குழந்தைகளிடம் மூட நம்பிக்கைகளை விளைவித்தார். இதனாலேயே மூங்க்கும், அவருடன் பிறந்தவர்களும் ஒருவித இறுக்கமான சூழ்நிலையிலேயே தங்களுடைய பால்ய காலத்தைக் கழித்தனர்.
பிற்காலத்தில் மூங்க் வரைந்த ஓவியங்கள் பெரும்பாலும், இருண்ட சூழலைப் பின்னணியாகக் கொண்டு வரையப்பட்டதன் முக்கியக் காரணம் இதுதான்.
*
‘நான் பிறந்தது முதலே மரணம் என்னைப் பின்தொடர்கிறது. உறைய வைக்கும் பனியிலும் சரி, சுடர் பரவும் சூரிய ஒளியிலும் சரி, அது என்னுடன்தான் இருக்கும். மாலையில் நான் கண் உறங்கும் வேளையில், என்முன் வந்து என்னை மிரட்டும். சில சமயங்களில், நடுநிசியில் நான் கண்விழித்து எழும்பொழுது, நகரத்தில் இருப்பதைப் போலவே நான் உணர்வேன்…’
இப்படித் தன்னுடைய வாழ்வின் இருண்ட பக்கங்களை, தானே பதிவு செய்திருக்கிறார் மூங்க்.
தனது சகோதரிகளுள் ஒருவரான சோஃபியா மீது அதிக அன்பு வைத்திருக்கிறார் மூங்க். ஆனால், தாயைப் போலவே சோஃபியாவும் காசநோய்க்கு இரையானார். அப்போது மூங்க்கிற்கு பதினைந்து வயது. சோஃவியாவின் மரணம் மூங்க்கை மேலும் பாதித்தது.
ஆனாலும் படிப்பில் சிறந்து விளங்கிய மூங்க்கிற்கு, சிறுவயதிலேயே ஓவியம் வரையும் ஆர்வம் உண்டானது. இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்த அவர், படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு ஓவியம் வரைவதில் நேரத்தை செலவிட்டார்.
மூங்க்கின் புகழ் பெற்ற ஓவியமான, ‘The Sick Child’ தங்கையின் நினைவால் அவர் வரைந்ததே! தங்கையைத் தன்னால் காப்பற்ற முடியவில்லை என்கிற குற்ற உணர்வு, அவரிடம் இருந்திருக்கூடும். அதன் வெளிப்பாடுதான் ‘The Sick Child’ ஓவியம்.
‘The Sick Child’ வரையப்பட்டு மூன்று ஆண்டுகள் கழித்து, அதாவது தன்னுடைய இருபத்து ஆறாவது வயதில் தந்தையையும் இழந்தார் மூங்க். தந்தையுடன் இணக்கமான உறவில் இல்லாத போதிலும், அவருக்கிருந்த ஒரே ஆறுதலும் இப்போது இல்லாமல் போனது.
இந்த காலகட்டத்தில்தான், குடிப்பழக்கம் அவரைத் தொற்றிக்கொண்டது. மன அழுத்தம் மேலோங்கி, தீவிரமானது. அப்போது அவர் வரைந்த ஓவியங்களின் பட்டியலைப் பாருங்கள்:
1. Melancholy (1891)
2. The Lonely Ones (1891)
3. Despair (1892)
4. Death in the Sick room (1893)
5. Anxiety (1894)
6. Separation (1896)
ஓவியங்களின் பெயரைக் கவனித்தாலே புரிந்துவிடும், மூங்க் அப்போது எந்த அளவிற்கு மன அழுத்தத்தில் இருந்தார் என்பது.
*
‘The Scream’ ஓவியமும், இந்தக் காலகட்டத்தில் வரையப்பட்டதுதான். மூங்க் வரைந்த ஓவியங்களிலேயே, அதிகளவில் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டது ‘The Scream’ ஓவியமே.
தனக்கு நேர்ந்த ஓர் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டே, மூங்க் இந்த ஓவியத்தை வரைந்தார் எனப் பார்த்தோம் அல்லவா? அது உண்மைதான். மூங்க்கிற்கு இருந்த மன அழுத்தத்தின் வெளிப்பாடே அந்நிகழ்வு.
ஓவியத்தில் இருப்பது ஆணா பெண்ணா என்கிற விவாதம் இன்றுவரை தொடர்கிறது. மூங்க், தன்னுடைய சொந்த அனுபவத்தைத்தான் ஓவியமாக வரைந்தார் என்பதால், இதிலிருப்பது ஆண் என்றே புரிந்து கொள்ளலாம்.
வாய் பிளந்தபடி, இரு கைகளையும் தலையில் வைத்துக் கொண்டு ஓலமிடுவது, மூங்க்கிற்கு இருந்த மன அழுத்தத்தைதான் வெளிப்படுத்துகிறது. ‘நான் எல்லாவற்றையும் இழந்துவிட்டேன்…’ என்பதன் குறியீடே அது!
ஒவியத்தின் பின்னணியில் இரண்டு பேர் நடந்து வருகிறார்கள். மூங்க் சொல்லியிருப்பதைப் போல, அது அவருடைய நண்பர்களாக இருக்கலாம். அவர்களுக்கு எவ்விதமான பதட்டமும் இல்லை. சாதாரணமாகவே சாலையைக் கடக்கிறார்கள். அவர்களுக்கு மூங்க்கின் அலறல் கேட்கவில்லை. இதன்மூலம், தான் தனித்து விடப்பட்டிருப்பதை அறிவுறுத்துகிறார் மூங்க்.
மேலும், எங்கே போவது என திசை தெரியாமல் கையறு நிலையில் இருக்கும் சூழ்நிலையை, ஓவியத்தில் உள்ள பாலம் காட்டுகிறது.
ஓவியத்தின் பெரும்பகுதியை, உருக்குலைந்து போன இயற்கை காட்சிகள்தான் ஆக்கிரமித்திருக்கின்றன. அவையாவும், மூங்க்கின் குழப்பமான மனநிலையே தவிர வேறொன்றும் இல்லை.
இதைத் தாண்டி பதட்ட நோயின் உச்சமான, Panic Attack-ஐ இது குறிக்கிறது எனவும் சிலர் விவாதிக்கின்றனர். தன்னிலை இழந்து,’நாம் எங்கே இருக்கிறோம், என்ன செய்து கொண்டிருக்கிறோம்…?’ என்றே தெரியாத, Depersonalization Disorder எனப்படும் சுயம் இழத்தல் நோயையும் இது குறிக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
ஹாலிவுட்டில் புகழ்பெற்ற திகில் திரைப்படங்களுள் ஒன்று ‘Scream’. இதுவரை ஆறு பாகங்கள் வெளியாகியிருக்கின்றன. இதில் கொலையாளி அணிந்து வரும் முகமூடி, ‘The Scream’ ஓவியத்தின் பாதிப்பே!
‘The Scream’ ஓவியம், நான்கு பதிப்புகளில் வரையப்பட்டது. அதன் முதல் மற்றும் புகழ்பெற்ற பதிப்பு, தற்போது நார்வேயில் உள்ள ‘National Museum of Norway’ ல் உள்ளது. இவ்வோவியத்தைச் சுற்றி, சர்ச்சைகளும் இல்லாமல் இல்லை. மோனாலிசா ஓவியம் எப்படி திருடப்பட்டு, பின்பு மீட்கப்பட்டதோ அதே போல ‘The Scream’ ஓவியமும் இரண்டு முறை திருடப்பட்டு மீட்கப்பட்டிருக்கிறது. இப்போது நார்வேயில் இருக்கும் ஓவியம் கூட அசல் பதிப்பே இல்லை என்கிற வதந்தியும் உண்டு
*
மூங்க்கிற்கு தன்னுடைய மன அழுத்தம் பற்றிய புரிதல், நன்றாகவே இருந்தது. அதுமட்டுமல்ல, ஓவியம் வரையும் கலையை அவர், தன்னுடைய மன அழுத்தத்துடன் பொருத்திப் பார்த்துக் கொண்டார். ‘மன அழுத்தத்தின் தீவிரம் ஓவியம் வரையத் தூண்டுகோலாக இருக்கிறது…’ என்றார் அவர்.
எனவே, ஆரம்பத்தில் மன அழுத்தத்திற்கான சிகிச்சையை அவர் எடுத்துக் கொள்ளவில்லை. ‘என்னுடைய மன அழுத்தமும் பதட்டமும் எனக்குத் தேவை. அவை இருந்தால் மட்டுமே என்னால் ஓவியம் வரைய முடியும். அவை இல்லாமல் போனால், துடுப்பு இல்லாத படகைப் போன்று நான் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பேன்…’ என தன்னுடைய நாட்குறிப்பில் எழுதியிருக்கிறார் மூங்க். ஆக, மூங்க் தன்னுடைய மனநோயையும் கலையையும் பிரித்துப் பார்க்கவில்லை என்பது புரிகிறது.
1905 முதல் 1909 வரையிலான காலகட்டத்தில், நார்வேயில் உள்ள மனநல மருத்துவமனையில் பல முறை உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருக்கிறார் மூங்க். அவருக்கு டேனியல் ஜகாப்சன் என்கிற மருத்துவர்தான், சிகிச்சை அளித்திருக்கிறார். தனக்கு சிகிச்சை அளித்த ஜகாப்சனையும், ஓவியமாக வரைந்திருக்கிறார் மூங்க். ஏழு மாத காலம் ஜகாப்சனிடம் உள்நோயாளியாக சிகிச்சை பெற்ற மூங்க், அதன்பிறகு குடிப்பழக்கத்திலிருந்து விடுபட்டார். அவருடைய மன அழுத்தமும் முன்னேறியது. அதன் அடையாளமாக, 1908-க்குப் பிறகு அவர் வரைந்த ஓவியங்களில் அவருக்கே உரித்தான அந்த இருண்ட சூழல்கள் காணாமல் போனது.
ஆனாலும், அவருக்கு இருந்த Social Anxiety, மற்றவர்களிடம் இருந்து அவரை தள்ளியே வைத்தது. பொது இடத்தில் பிறருடன் பேசவே அவர் கூச்சப்பட்டார். மூங்க் தான் வரையும் ஓவியங்களில் பெரும்பாலும் கை நகங்களையும் காதுகளையும் வரைவதைத் தவிர்த்திருப்பார். இதற்குக் காரணம் அவரிடம் இருந்த சமூக ஒவ்வாமையே!
கைகளும் காதுகளும் தானே சமூகத்துடன் நம்மை இணைத்திருக்கிறது?
*
மூங்க் தன் வாழ்நாளில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்திருக்கிறார். நார்வேயின் பசுமை நிலங்கள், மலைகள், கடல் பகுதிகள் என நிலப்பரப்புகளை வரையும் ஆர்வம் அவருக்கிருந்தது. உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முகங்களை வரைவதும் அவருக்குப் பிடித்தமான ஒன்று.
மூங்க்கின் ஓவியங்களுக்கு இன்றும் உலகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். வாழந்த காலத்தில், புகழின் வெளிச்சத்திலிருந்து ஒதுங்கியே இருந்த அவருக்கு, பெண்களிடம் கூட திடமான உறவுகள் இருந்ததில்லை. திருமணம் என்ற ஒன்று, அவர் வாழ்க்கையில் இல்லாமல் போனது. மனநோய் ஒருபக்கம், ஓவியம் ஒருபக்கம் என ஓடிக்கொண்டே இருந்த மூங்க், தன்னுடைய எண்பதாவது வயதில், 1944-ஆம் ஆண்டு இறந்து போனார்.
டச்சு ஓவியரான வான்கோவின் வாழ்க்கையைப் போலவே இருக்கிறது மூங்க்கின் வாழ்க்கையும். ‘The Starry Night’ ல் எப்படி வான்கோ ஒளிந்துகொண்டு நம்மை கவனிக்கின்றாரோ, அப்படித்தான் ‘The Scream’ ல் நம்மைப் பார்த்தபடி ஓலமிடுகிறார் மூங்க்.
ஒருசிலருக்கு மட்டுமதான் அது காதில் விழும்!