இணைய இதழ் 112நுண்கதைகள்

ஐந்து நுண்கதைகள் – ஷாராஜ்

நுண்கதை | வாசகசாலை

1.காகியோ கவிதை

   மெட்ரோமேனியா (Metromania) என்பது கவிதை எழுதுவதற்கான கட்டுக்கடங்காத வெறி / மனநோய் / உந்துதல் ஆகும். ஒரு முறை இதன் கடுமையான தாக்குதலுக்கு உள்ளான ஸியோகுஷி காகியோ, “நான் ஒரு கவிதை எழுதியாக வேண்டும்; உடனே ஒரு எழுது தாளும், எழுதுகோலும் கொண்டு வாருங்கள்!” என்று சீடர்களிடம் கட்டளையிட்டார். மறு நிமிடமே கட்டளை நிறைவேற்றப்பட்டது. ஸியோகுஷி காகியோ எனக் கிறுக்கிவிட்டு, தாளை சீடர்களிடம் நீட்டினார். அதைப் பார்வையிட்ட சீடர்கள், “குருவே,… கையொப்பம் மட்டும்தான் இட்டிருக்கிறீர்கள்; கவிதையை எழுதவில்லையே….!” என்றனர்.

   அவர் சொன்னார், “இல்லை,… நான் கவிதை மட்டுமே எழுதியிருக்கிறேன்; கையொப்பம்தான் இடவில்லை!.”

***

2.ஒரு வாத்துக் குஞ்சின் அவலம்

எங்கள் அண்டை வீட்டினர் எங்கிருந்தோ சுமார் ஒரு மாத வயதுடைய இரு வாத்துக் குஞ்சுகளை வாங்கி வந்து வளர்த்துக் கொண்டிருந்தனர். அது தவறான தெரிவு, தவறான ஆசை. ஏனெனில், வாத்துகள் நீர் நிலை விரும்பிகள்; சேற்றுயிரிகளைத் தின்று வாழ்பவை. ஆனால், இது வறண்ட கிராமம். நாங்கள் ஊருக்கு முக்கால் கி.மீ. தள்ளி காட்டுப்பாங்கான பகுதியில் வசித்துக் கொண்டிருந்தோம். அருகில் வாத்துகள் நீந்துவதற்கு ஏற்ப ஆறோ, குளம் – குட்டையோ இல்லை. அவை சேற்று இரைகள் பிடித்துத் தின்ன இங்கே நெல் வயல்களும் கிடையாது. சுற்றி இருப்பவை முழுதும் புன்செய் விளை நிலங்கள்.

வாத்துக் குஞ்சு வளர்ப்பு வீட்டினர், அவற்றுக்கு ஒரு தண்ணீர்த் தொட்டியேனும் ஏற்பாடு செய்யவில்லை.

ஒரு வாத்துக் குஞ்சை, மொசலடிப் பெராந்து (முயல் அடிக்கும் பருந்து) எனப்படும் சிறிய வகைப் பருந்து தூக்கிச் சென்றுவிட்டது. இன்னொரு குஞ்சு ஒற்றையாக வளர்ந்து கொண்டிருந்தது. அது தன்னந்தனியாக மேய்வதைப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருக்கும்.

அண்டை வீட்டினர் கோழிகள் வளர்த்துவதில்லை. ஆனால், எங்கள் வீட்டிலும் எதிர் வசமாக சற்றுத் தள்ளி அமைந்துள்ள ஒரு விவசாயக் குடும்பத்திலும் கோழிகள் வளர்த்தப்படுகின்றன. இதில் ஓரிரு பெட்டைக் கோழிகள் தங்கள் குஞ்சுகளோடு இருந்தன. அவை சுற்றுப்புறங்களில் குப்பைகளையும், கரையான்களையும் கிளறி, தமது குஞ்சுகளுக்கு இரையெடுக்க உதவிக்கொண்டும், அவற்றைக் காகங்கள், கழுகுகள் தூக்கிச் சென்றுவிடாதபடி போர்க்குணத்தோடு காவல் காத்தபடியும் இருக்கும்.

எங்களின் செவலைக் கோழி அப்போது இன்னும் சிறகுகள் முளைக்காத ஏழு குஞ்சுகளுடன் இருந்தது. அண்டை வீட்டு ஒற்றை வாத்துக் குஞ்சு, அந்த கோழிக் குஞ்சு உடன்பிறப்புக் கூட்டங்களைப் பார்த்து மகிழ்ச்சியோடு, “ஹாய்… குட்டிப் பசங்களா…! க்வாக் – க்வாக்…!” என்றபடி நட்புறவு நாடி வந்தது.

கோழிக் குஞ்சுகளும் க்வீச் – க்வீச் என உவகையோடு வரவேற்று, “ஏய்,.. இங்க பாரு ஒரு குட்டி அண்ணா வந்திருக்கறான்!” என ஆவலோடு அதைச் சூழ்ந்துகொண்டன.

“அண்ணா,… உன் பேரு என்ன?”, “உனக்கு மம்மி – டாடி இல்லையா?”, “உன் மூக்கு ஏண்ணா இப்படி பெருஸ்ஸ்ஸா… சப்பையா இருக்கு?”, “நீ ஏன் பம்ஸை ஆட்டி ஆட்டி நடக்கற?” என மழலைக் கீச்சில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான கேள்விகள் கேட்டன.

ஆனால், தாய்க் கோழிக்கு இந்த உறவாடல் பிடிக்கவில்லை. அது வேகமாக அருகே வந்து, “கொக் – கொக்! அந்தப் பயலோட பேசவோ, சகவாசம் வெச்சுக்கவோ கூடாது. அவன் வேற ஜாதி! வாங்க எல்லாரும் இந்தப் பக்கம்!” என தன் குஞ்சுகளை அதட்டி, “போடா அனாதைப் பயலே…!” என வாத்துக் குஞ்சை விரட்டியது.

அப்போது கோடை காலம். வெக்கை அதிகமாக இருந்த ஒரு நாளின் பிற்பகலில் திடீரென தூறல் போட்டது. ஓரிரு நிமிடங்கள் பெய்து ஓய்ந்தும் விட்டது. பெய்த தூறல், மண் உறிஞ்சவே போதவில்லை. பிறகு எங்கே நீர் ஓடவும், தேங்கவும் செய்யும்? அப்படி இருந்தும், எங்கள் மண் வாசலில் ட்ரம் மூடி அளவுள்ள சிறு குழிவில், விரற்கடை ஆழத்தில் செந்நீர் தேங்கியிருந்தது. வாத்துக் குஞ்சு அதைக் கண்டதும் ஆலாப் பறந்தபடி ஓடி வந்து, அந்த விரற்கடையளவு நீர்த் தேக்கத்தில் அமர்ந்துகொண்டு, க்வாக் க்வாக் என உற்சாகமாகக் கத்தியபடி சிறகடித்தது.

அதற்கு உள்ளூர இருக்கிற நீந்தும் ஆசையையும், அதன் நிராசையையும் வெளிப்படுத்திய இந்தக் காட்சி, என் மனதில் கனத்த வலியையும் பரிதாப உணர்வையும் உண்டாக்கியது.

மழை வலுத்துப் பெய்தால் குழிவான இடங்களில் நீர் தேங்கி நிற்கும். அது அந்த வாத்துக் குஞ்சுக்கு ஓரளவேனும் ஆறுதல் அளிக்கக் கூடிய அளவில் இருக்கும். மழையே,… அந்த வாத்துக் குஞ்சுக்காக மீண்டும் சற்று கனமழையாகப் பெய் என எண்ணியபடி வானத்தை அண்ணாந்தேன். ஆனால், அதற்குள் வானம் வெளிறி, பளீரென வெயில் அடித்தது. மழை பெய்ததற்கான சுவடோ, இனி பெய்யும் என்பதற்கான அறிகுறியோ வானில் இல்லை. மேகங்களே இன்றி நிர்மலமான நீலவெளியாக வெறிச்சோடிக் கிடந்தது.

வாசல் குழிவில் தேங்கியிருந்த நீரும், இத்தனை மாதங்களாக வெயிலில் காய்ந்து வறண்டிருந்த, வேட்கை தீராத மண்ணால் உறிஞ்சப்பட்டுவிட்டது.

          வாத்துக் குஞ்சு ஏமாற்றத்தோடு எழுந்து அப்பால் சென்றது.

          அந்த அபலை வாத்துக் குஞ்சு, விரற்கடையளவு மழை நீரில் அமர்ந்துகொண்டு, நீந்த இயலாமல் சிறகடித்து மகிழ்ந்துகொண்டிருந்த காட்சி, என் மனதை விட்டு அகலவே இல்லை.  

          சில நாட்களிலேயே கழுகு அந்த ஒற்றை வாத்துக் குஞ்சையும் தூக்கிச் சென்றுவிட்டது. பக்கத்து வீட்டுப் பெண்மணி அது குறித்து என் அம்மாவிடம் அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள். அம்மாவும் தன் இரங்கலைத் தெரிவித்தாள். அந்தக் குஞ்சு கழுகுக்கு இரையானது எனக்கு ஏனோ மிகுந்த திருப்தியாக இருந்தது.

***

3.நிலா மற்றும் அதன் உறவினர்கள் பற்றிய அந்தரங்க ரகசியங்கள்

நிலவின் நெருங்கிய உறவினர்கள் கவிஞர்கள், காதலர்கள் மற்றும் பைத்தியங்கள். கவிஞர்களும் காதலர்களும் கூட பைத்தியங்கள்தானே என்று நீங்கள் கேட்கலாம். அதுவும் வாஸ்தவம்தான். அதனால்தான் இந்த மூன்று தரப்பினரிடமும் நிலவு அன்னியோன்யம் கொள்கிறது. வெவ்வேறு வகையான இந்தக் கிறுக்குகள் மீது நிலவு நிபந்தனையற்ற நேசம் கொள்ளக் காரணம், அதுவும் ஒரு தினுசான அரை லூசு என்பதுதான்! இனம், இனத்தைச் சேரும் என்பது இயல்பானதுதானே!

          அடடா,… பட்டியலில் ஒன்று விடுபட்டுவிட்டது. நாய்கள்! ஆம், ஆம்,… கடலும் கூட! இவ்விரண்டும் நிலவின் ஒன்றுவிட்ட உறவினர்கள்.

வளர்பிறை நிலா, காதலர்களின் இதயத்தை எரி நட்சத்திரங்களின் ஜுவாலையில் சுட்டுத் தின்னும்போது, அவர்களுக்கு மசோகிஸ பாலியல் இன்பம் உண்டாகிறது என்று சொல்லப்படுகிறது. தேய்பிறை நிலா, கவிஞர்களின் சிறுமூளையை ஏலம், குருமிளகு, கிராம்பு, பட்டை, இந்துப்பு ஆகியவை தூவி, வாணலியில் பொன்னிறமாக வறுத்து, இளம் சூடாக உண்ணும்போது, அவர்களின் உன்மத்த மனதில் படைப்பூக்கம் பீறிடும். கொதி நீரூற்றாக கவிதைகளைப் பொங்குவார்கள். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் பைத்தியங்களின் பெருமூளையை நிலா பச்சையாகவே கடித்துக் குதறும். அதனால்தான் அவர்களுக்கு அப்போது வன்மம் மிகுகிறது.

அன்றைய தினங்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட நாய்களின் துணைப் ப்ரக்ஞையில் ஒழுகும் மதநீரை நிலா நக்கிச் சுவைத்து போதை கொள்ளும். சூட்சுமமாக நக்கப்படுவதில் அந்த நாய்களும் பேரானந்தமுற்று ஊளையிடும்.

முழு நிலவு தனது கிரணங்களால் கடலின் அடிவயிற்றில் முன்விளையாட்டுகள் செய்து சிற்றின்ப சுகம் பெறும். அப்போது கடலின் காமம் மூண்டெழுந்து, மின்னாற்றலாகவும் மாற்றக் கூடிய ஆற்றல் கொண்ட பொங்கு ஓதங்களை எழுப்பி ஆர்ப்பரிக்கும்.

எப்படியாயினும் நிலவும் அதன் உறவினர்களும் பால்புதுமையர்கள்தான் என்பது நிச்சயம்.

***

4.பெரியவர்களுக்கான ஒரு நீதிபோதனைக் கதை

“நீதி, தர்மம், நியாயம், நேர்மை, கடமை என்று இருந்தால் இந்தக் காலத்தில் பிழைக்க முடியாது. இது அநீதி, அதர்மம், அநியாயம், லஞ்சம், ஊழல், ஏமாற்று ஆகியவற்றின் காலம்.

“நீங்கள் அந்த எதிர்மறைக் காரியங்களை, தவறுகளை, குற்றங்களை செய்யுங்கள் என நான் போதிக்கவில்லை. அதைச் செய்கிறவர்களுக்குக் குறுக்கே நிற்காதீர்கள். கதாநாயகனாகவோ, நீதிவானாகவோ உங்களை எண்ணிக்கொண்டு, அவர்களை எதிர்க்க முற்படாதீர்கள். நீங்களோ உங்கள் குடும்பமோ நேரடியாக பாதிக்கப்படாத வரை, தீமைகளிடமிருந்தும், தீயவர்களிடமிருந்தும் ஒதுங்கி இருப்பதே உங்களின் உயிர், உறவுகள், உடமைகள், உடல் உறுப்புகள் ஆகியவற்றைக் காத்துக்கொள்வதற்கான வழி.

“இதை அறிவுரையாக அல்ல; என் அனுபவ உரையாக சொல்கிறேன். அது உங்களுக்கே தெரிந்திருக்கும்…”

மேடையில் இடது கையால் மைக் பிடித்து பேசிக்கொண்டிருந்த சமூகப் போராளி முத்துலிங்கம், அரசியல்வாதிகளின் அடியாட்களால் வெட்டப்பட்டு, புஜப் பகுதியிலிருந்து இல்லாமல் போய்விட்ட, மூளியான தனது வலது கையை உயர்த்திக் காட்டிக்கொண்டே சொன்னார்.

மக்கள் கூட்டம் வேதனையோடும், அனுதாபத்தோடும், நமக்காகக் குரல் கொடுத்த ஒருவருக்கு இப்படி ஆகிவிட்டதே என்ற ஆற்றாமையோடும் பார்த்துக்கொண்டிருந்தது.

***

5.இதய பலகீனர்கள் வாசிக்கக் கூடாத உண்மைக் கதை

சம்பவம் நடந்து 28 ஆண்டுகள் ஆகிவிட்டன.

அப்போது எனக்கும் நண்பனுக்கும் 25 வயது. இரவு சுமார் ஒன்பது மணி இருக்கும். எங்களின் சிறு நகரத்தில், கழிப்பிட வசதி இல்லாத ஒரு பகுதியில், மூத்திரச் சந்துக்குள் சென்று சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தோம். தெரு விளக்கு வெளிச்சம் லேசாக அங்கும் அடித்துக் கொண்டிருந்தது, மற்றபடி அப்பால் இருள். அங்கிருக்கும் பயன்படுத்தப்படாத, பழைய, இடிபாடுகளுடனான கட்டிடம் மங்கலாகப் புலப்பட்டது.

அந்த இருள் கட்டிட தாழ்வாரத்திலிருந்து சுமார் பத்து வயது இருக்கக் கூடிய, அழுக்குப் பழைய ட்ரௌசரும் கந்தல் சட்டையும் அணிந்த, பரட்டைத் தலைச் சிறுவன் ஒருவன் எங்கள் அருகே வந்து நின்றான். வறுமையின் தவப் புதல்வனாகவோ, வீடற்ற விளிம்புநிலைக் கூட்டத்தவனாகவோ, பிச்சையெடுத்தோ குப்பை பொறுக்கியோ வாழும் அனாதைச் சிறுவனாகவோ இருக்கலாம்.

ஒரு நொடி எங்கள் முகத்தை ஏறிட்டுப் பார்த்துவிட்டு, பிறகு எங்களின் ஆணுறுப்பை மாறி மாறி ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தான்.

அவனது செய்கை எங்களுக்கு அதிர்ச்சியூட்டியது.

“டேய்,… என்னடா இப்படிப் பாத்துட்டிருக்கற? போ அந்தப் பக்கம்…!” நண்பன் விரட்டினான்.

“அண்ணா,… பத்து ருவா குடுங்ணா… சப்பறேன்…!”

அதைக் கேட்ட அதிர்ச்சியில் எங்களுக்கு சிறுநீரே ஓரிரு நொடி தடைபட்டுவிட்டது. அந்தச் சிறுவனுக்கு முதுகு காட்டியபடி திரும்பி நின்று சிறுநீர் கழித்து முடித்து, பேன்ட் ஜிப்புகளை மூடித் திரும்பினோம்.

சிறுவன் இன்னும் அங்கேயே நின்றிருந்தான்.

“டேய்…! போடா…!” என் நண்பன் அவனை விரட்டினான்.

அவன் நகரவில்லை. “அஞ்சு ருவாயாவது குடுங்ணா…! ரெண்டு பேருக்கும் சப்பி விடறேன்…!”

காம வெறியர்கள் அந்தச் சிறுவனை இந்த அளவுக்கு ஆளாக்கி வைத்திருக்கிறார்களே என்கிற கொடுமை தாளாது நான் என் முன் தலையில் ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டேன்.

நண்பன் கோபத்தோடு அந்தச் சிறுவனை அடிக்கப்போவது போல கையோங்கினான்.

சிறுவன் கெஞ்சினான்: “அண்ணா,… காசு குடுக்கலன்னாலும் பரவால்ல. சப்பறதுக்காச்சும் குடுங்ணா…!”

***

-shahrajscape@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button