
கல்லொன்றை எறிந்தேன்
அலைகள் எழுந்தன
ஒன்றையொன்று
அடித்துக் கொண்டன
பின் எப்படியோ அமைதியாகின
பிரச்சினை ஓய்ந்ததென
கிளம்பி விட்டேன்
அப்படியே கிடக்கிறது
குளத்தின் அமைதிக்குள் மூழ்கிய கல்.
*
என்னோடு இருந்தவையெல்லாம் உதிர்ந்துவிட்டன
எல்லோரும்
பாவம் பார்க்கிறார்கள்
வெறுமையெனக் கூறுகிறார்கள்
வெறும் கிளையோடு நான்
எவ்வளவு லேசாக இருக்கிறேன் தெரியுமா?
*
துயரமொன்று
நிலவாகிக் கொண்டிருந்தது
படபடப்புகள் நட்சத்திரங்களாக
மாறிக் கொண்டிருந்தன
காற்று களைத்து விட்டிருந்தது
எதையும் பேசாமல்
என்னவென்று கேட்காமல்
தலைசாய்த்து ஒரு பிடி
கூடுதல் அழுத்தத்தில் வருடுகிறாள்
கருமேகம் படர்கிறது
பலத்த இடி
கூடவே ஒரு பெருமழை
இறுதிச் சொட்டின் சத்தம் நின்றதும்
மலையொன்று
சமவெளியாக மாறியிருந்தது
தன் வருடல்களை முடித்துக்கொண்டு
நெற்றியில் முத்தமிடுகிறாள்
இந்த இரவு
பகலெனும் தன் முகமூடியை
முழுதாய் கழற்றி வைத்திருந்தது.
kaviyarasu1411@gmail.com