இணைய இதழ் 113கவிதைகள்

காயத்ரி சுவாமிநாதன் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

கடலோரச் சிறகுகள்

மூங்கில் நிழலாய் விழும்,
கதிரவன் பூச்செவியில் நிசப்தம் பேசும் வானில்
நான் பார்த்தது ஒரு கடல்,
என் நாடுகளைக் கடந்து வந்த ஒரு மொழி.
அலைகள் என்னைத் தடவிக் கேட்டன,
“வந்த ஊர் எது?”
நான் பதிலளிக்காத நிஜங்களோடு
அவற்றின் மெல்லிய அசைவில் தேங்கி நின்றேன்.
பின்வட்டிய காலடிச் சுவடுகள்,
ஓர் அழியாத அடையாளமாய்
என் பயணத்தைப் பதிவு செய்தன,
புயல் தாண்டி எழுதப்பட்ட ஒரு கதையைப் போல.
இங்கு நான் யாருமில்லை;
ஆனால் கடலும் சூரியனும்
என்னை வாழ்த்தின
வலசையின் கவிதை எழுதியது
இங்கிருந்த கடற்கரைதான்.

*

அழிந்த நிலத்தில் அழகின் மொழி

பட்டுப்போன மரங்கள்
பழையதாயினும் புதுமையோடும் நிறைந்தவை,
பருவக்காலங்களைப் போலவே
அழிந்து, அழகடைந்தவை.

அவை நிறைந்திருக்கின்றன,
என் ஊரின் மலைசுற்றுப் பாதையில்…
வழி வழியாகச் சிதறியுள்ளன
இலைமலர் இலக்கணங்கள்.
ஒவ்வொரு கிளையும் ஒரு கதை,
ஒவ்வொரு வேரும் ஒரு காலச் செய்தி!

மழைத்துளி தொட்டுப் போன
பச்சை இலைக்கோணங்களில்,
பழைய காதல் வரிகள் எழுதப்பட்டிருக்கின்றன
காற்று பிழைத்துச் சொல்கிறது அவற்றை
நேர்த்தியான சத்தமின்றி…

அந்தப் பாதையில்,
ஒரு பெண் நடக்கிறாள்
அவளோ ஒரே ஒரு நூல் நாயகி!
தோளில் துணிக்கட்டு, கண்களில் தீபம்,
நெஞ்சில் கவிதை, கால்களில் கதைகள்…
அவள் நடந்து செல்லும் ஒவ்வொரு அடியிலும்
மண் ஒரு பக்கம் பதிப்பாகிறது.

அவள் மீது விழுந்த கதிர்கள் கூட
உரைநடை பேசுகின்றன
“ஓ, நீதான் எங்கள் கதையின் கதைவளர்!”
பூக்கள் சிரித்துக்கொள்கின்றன,
வண்டுகள் மெல்லிசை வாசிக்கின்றன,
மலை மரங்கள் தலைகுனிகின்றன…
அந்தப் பாதை, ஒரு நூலகம் போல
நூல்கள் இல்லாத நூலகம்.
ஆனாலும், அவள் நடையே
ஒரு சிந்தனையின் தொகுப்பு,
முழுக் கவிதையின் வாசிப்பு!

*

மலையின் மனம்

பாறையின் மார்பைத் தழுவி,
அந்தி நிழலில் நிசப்தமாய் நிற்கும்
பழமையான குகை வாசல்
பேச மறந்த காலத்தின் மொழி அது.

வழி நடந்த பாதையில்
வெண்மணல் தடம் போலவே,
வெட்டியசைந்த கல்லடி படிகள்,
ஒவ்வொன்றும் ஒரு கதையைக் கூறும்.

இடப்பக்கமோ இலைக் கிளி,
வலப்பக்கமோ பசுமைக் கண்கூர்வு.
இரண்டின் நடுவே,
நானும், என் நினைவுகளும்.

எத்தனை காலங்களாய் இவள் காத்திருக்கிறாள்?
பூமியின் உள்மனம் போல,
இவளுள் மறைந்திருக்கும் பரம்பொருள்,
நம்மை நோக்கி ஒளிந்து பேசுகிறது.

கழல் போட்டு மேலேறும் ஒவ்வொரு படி,
ஒரு நெஞ்சில் சிந்தும் சங்கமம்.
கல் மட்டும் இல்லை இது,
நம் காலச்சுவடுகளுக்கான மௌனத் தூபி.

இலை மேல் இமைகள்
(ஒரு தேசாந்திரி பறவையின் கவிதை)

வெள்ளை அப்பா, வெள்ளை அம்மா,
அவர்கள் இருவருக்கும் நடுவிலே,
பசுமைக் கனவாக ஒரு சிறு வெள்ளை உயிர்.
மூவரும் ஓர் இலை மேல்,
சூரியனின் நிழலோடு சேர்ந்து,
காற்றின் இசையைக் காதுகளாக,
மௌனமே மொழியாக
அவர்கள் வாழ்ந்த பாதையைக் கொண்டு
ஒரு சிறு நினைவுப் பயணம்…
அந்த இலைக்கருகே,
நானும் ஒரு தேசாந்திரிப் பறவையாய்,
என் சிறகு சுருக்கி,
முதல்முறையாக உட்கார்ந்தேன்…
பறக்காமல், பார்க்கும் பயணம்
அவர்களை நோக்கி,
என்னை நோக்கிய பயணம்.
அவர்கள் கண்களில் புன்னகை இல்லை,
ஆனால் ஒரு நிம்மதி இருந்தது.
அவர்களது அமைதி,
என் உள்ளத்தின் கோலாரங்களைத் தொட்டது.
வாழ்க்கை என்பது ஒரு பறவைதான்,
ஆனாலும் அதற்கு இரவு
இரவில் மட்டும் தெரியும்
ஒரு இலை மேல்,
உறங்கும் முன்,
வாழ்ந்த எல்லா நிமிடங்களும்
பாடலாக மாறும்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button