
ஒரு கணம்
இதற்கு முந்திய நாட்களிலெல்லாம்
அப்படியொன்றும் நடந்துவிடவில்லை
மொட்டு விரிந்து மலராவதை
யாரேனும் பாரத்ததுண்டா?
இந்தவொரு இரவுக்காகத்தான்
இத்தனை இரவுகள் காத்திருந்தேன்
அணைக்கப்படாத விளக்குகளும்
நிறுத்தப்படாத தொலைக்காட்சியும்
கலைந்து கிடக்கும் உடைகளும்தான்
வீடுகளை வீடுகளாய் வைத்திருக்கின்றன
அழைப்பு மணி ஒலித்தவுடன்
அனிச்சையாக உடைகளைத்
திருத்திக் கொள்கிறாய்
உன்னில் நானும்
என்னில் நீயும்
ஏதோவொன்றைத் தேடிக்
கொண்டிருந்தோம்
பகல்பொழுது முழுவதும்
ஆறுதல் அளிக்கும் இரவுகளை
அழைத்துக் கொண்டிருந்தேன்
இரவு வானத்தில் எனக்காக
காத்திருக்கின்றன நட்சத்திரங்களும்
நிலவும்
நகரமே உறக்கத்தில் ஆழ்ந்திருக்கும்
இந்த நள்ளிரவு, என் மனதை
வேட்கை கொள்ள வைக்கிறது
அவளைக் கண்டவுடன்
அணையுடைத்துக் காட்டாறெனப்
பாயக்கிறது என் காமம்.
*
எனது தேவைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்
உனது நிழலை முத்தமிட்டதை
இப்போது நினைத்துப் பாரக்கிறேன்
வாடிய மலர் கூட மகத்துவம் பெறுகிறது
உன் கூந்தலிலிருந்து விழுந்ததால்
அந்த ஒரு மழை நாளை
நம் இருவராலும் மறக்க இயலாது
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல்
கடலாக வேண்டுமென்றால்
எழுந்து வா அலையில்
கால் நனைக்கலாம்
எனது துயரங்களைப்
பகிர்ந்துகொள்ள நிலவும்
நட்சத்திரங்களும் இருக்கின்றன
ஓய்வு நாளில் கூட
ஓய்வு கொள்ளாது
என்னைக் காண
வருகின்றன அவை
எனக்குள் நிரம்பி வழிகிறது
காதல்
வெந்து தணிந்தது காடு
உனது நினைவுகள் என்னைச்
சாம்பலாக்குகிறது
ஒருநாளும் என் மதுக்கிண்ணம்
காலியாக இருந்ததில்லை
எனது மரணத்தில் போது
காதலுக்காக மரித்தவர்களெல்லாம்
உயிர்த்தெழுவார்கள்
உன் தோளில் தலைசாய்த்துக் கொள்கிறேன்
என்னை அழ விடு
காதலுக்காக ஒருமுறையேனும்
கண்ணீர் சிந்த விடு
இதோ பூமழை தூவுகிறது
வானம்
எங்கள் காதலைப்
புனிதப்படுத்தும் விதமாக.