இணைய இதழ் 113கவிதைகள்

கிருத்திகா கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

சற்றுமுன் பெய்து முடித்த
அடைமழையோ
சாலையில் தேங்கிக் கிடந்த
மழைநீரோ
மழைநீரில் பிரதிபலித்த
எதிர் வீட்டுக்கூரையோ
கூரையின் மேல் அமர்ந்திருந்த
பறவையோ
அந்தப் பறவை உதிர்த்த
ஒற்றைச் சிறகோ
இவற்றுள் எதுவோ ஒன்றில்
தொடங்கக் காத்திருந்தது
அந்த ஓவியரின் வரையப்படாத ஓவியம்.

*

ஒரு கொத்து மொட்டுகளில் மலர்ந்திருக்கும்
ஒரே ஒரு பூவைப் போல
ஒரு கூடை காய்களில் கனிந்திருக்கும்
ஒரே ஒரு பழத்தைப் போல
ஒரு வெற்று மரத்தில் துளிர் விட்டிருக்கும்
ஒரே ஒரு இலையைப் போல
நம் வாழ்வை அவ்வப்போது உயிர்பித்துச் செல்லும்
மனிதர்களை வணங்குவோமாக!

*

நான் அமர்ந்திருக்கும் படிக்கட்டில் இருந்து பார்த்தால்,
அந்தத் தங்க அரளி மரத்தின்
மேற்கிளைகள் நன்றாகத் தெரியும்
கூடவே அதில் கூடு கட்டி வாழ்ந்து வரும்
மைனாவும் அதன் சிறு குஞ்சுகளும்…
சுள்ளிகளும் சருகுகளும் சேர்த்துக் கட்டிய அக்கூட்டில்,
அவ்வப்போது மைனாக்களின்
மஞ்சள் நிற அலகுகள் மட்டும் தென்படும்
சிறிய தங்க அரளி மலர்கள் போல…
தினசரி இரை தேடி உண்ணும் மைனாக்களுக்காக
நான் படிக்கட்டில் விதைகள் விட்டுச் செல்வதுண்டு
இன்று ஏனோ மைனாக்களும் அதன் கூடும்
எவ்வளவு தேடியும் காணவில்லை!
நான் எப்போதும் அமரும் படிக்கட்டில் மட்டும் கிடந்தன,
சில சுள்ளிகளும் ஒரு காய்ந்த சருகும்.
*

gkiruthika17@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button