
மழைக்கால வேட்டை
குடைக்கும், மழை கோட்டிற்கும்
இருமலுக்கும், ஜலதோஷத்திற்கும்
ஆயத்தமாகிக் கொண்டிருக்கும்
மழைக்காலம் அது.
நானும் அப்பாவும் மட்டும்
வேட்டைக்குத் தயாராவோம்.
மன்னர்களைப் போல,
அம்மாவையும் தங்கையையும்
ஆச்சரியப்படுத்தும்
புலி வேட்டை;
நரிக்குறவர்களின் சாமர்த்தியத்திற்க்கு
இரையாகும்
முயல் வேட்டை;
பொந்தில் புகை மூட்ட
புறந்தள்ளி ஓடிவரும்
ஆடவர்களின் எலிப்பிடி வேட்டை – அல்ல
எங்கள் வேட்டை.
மழை பெய்த
ஈரமான தரையின் பதத்தை
சூரியன் உண்ணுவதற்குள்,
எங்கள் வீட்டு வடைச்சட்டியில் வதங்கி
என் தொண்டைப் பசியைப் போக்க
காத்திருக்கும் மழைக்காளானின் வேட்டை.
முடிவில், கைநிறைய மழைக்காளான்களுடன்
வந்தாலும் வருவோம் !
அன்றி, கண்ணார மரக்காளான்களை
இரசித்த நினைவோடும் வருவோம்.
*
சாபத்தின் சாயல்
இளரத்தம் கொதித்தெழும்
இருபதுகளின் ஆரம்பம் அன்று.
“நூறு வருஷம் நல்லா இரு”
என்ற அப்பா அம்மாவின் ஆசி போதாது போல
கோவில் முன் மண்டியிட்டது
மூளையின் மையத்தில்
மௌன ஊஞ்சல் ஆடுகிறது இன்றளவும்.
நெடு நெடுவென வளர்ந்து வளைந்த
கிழட்டு மூங்கிலில்
மல்லியின் மணம் வீசக்கண்டேன் – எந்தன் அல்லியவள்
நினைவு துளிர் விடும்போதெல்லாம்.
பால்ய சிநேகிதன் முகம்,
தாரத்தின் உரசல்,
ஐந்தாம் வகுப்பு ஆசிரியையின் அழகு,
இவற்றைத் துறந்து அல்ல, மறந்த
துறவியாய் அடியெடுத்து வைக்கிறேன்
தொண்ணூறாவது பிறந்தநாளில்.
மங்கலான கண்ணொளியிலும்
பிராகசமாய்த் தெரியும்
அந்த ஒற்றை விண்மீன்
உரக்க அழைக்கிறது என்னை.
பேத்தியை ஊன்றுகோளாக்கி
மீண்டும் அதே கோவில் முன் நிற்கிறேன்
‘விடைகொடு’ எனக் கண்களில் நீர் ததும்ப;
எந்தக் கடைசி கண்ணீர்த் துளி
முற்றுப்புள்ளி ஆகுமோ..!