இணைய இதழ் 113சிறுகதைகள்

சிரார்த்தம் – கிருஷ்ணமூர்த்தி

“நமஸ்காரம். நான் சங்கரன் பேசறேன். ஞானவாபில நம்ம நம்பர் குடுத்தா. சார் வாசுதேவன் தானே?”

“திதி என்னிக்கு வருது?”

“கார்த்திகை மாசத்துல, பௌர்ணமி கழிஞ்ச பஞ்சமி திதியா?”

“நவக்கிரஹ ஹோமமுமா?”

“கம்ப்ளீட் பேக்கேஜா கேக்குறேளோ?”

“காசென்னன்ணா ஆகப் போறது? அப்பாக்கு மனசார செய்றதுலன்ணா ஷேமம். இந்த காலத்துல யார் பண்றா? எள்ளு வாங்க யோசிக்கற ஜெனரேஷன். என்னமோ சொல்றாலே… ஆங்.. ஜென்-ஸி!”

“ஞானவாபில அமௌண்ட் சொல்லிட்டாளா? பேருதான் ஞானவாபி. யதார்த்தமா அது ஞான லாபி. நீங்க அவா வழியா வந்தேள்னா ஆகறத விட என்கிட்ட நேரடியா சொன்னா முப்பது பெர்சண்ட் கம்மியாகும்”

“அதெப்படியா? ஜாமானுக்குனு ஒரு அமௌண்ட் சொல்லுவா. அது ரொம்ப ஜாஸ்தியா இருக்கும். அதுல பாதி ஜாமான் மிச்சமாகும். எல்லாம் ஞானவாபிக்கு போய்டும்! நானா இருந்தேன்னா என்ன தேவையோ அத மட்டும் வாங்கிண்டு வருவேன். அவா வழியா வர்றேள்னா எனக்கான தட்சணையும் பிடிச்சுண்டுதான் கெடைக்கும். நேரடியா எங்கிட்டயே சொன்னேள்னா கணக்கு வேற. ஒரு பிராமணா பசிய போக்குன கணக்காவும் உங்களுக்கு புண்ணியம் வரும்”

“பேஷ்! பண்ணிடலாம். ஜாமான் நானே வாங்கிண்டு வந்துடறேன். காலம்பற சாவகாசமா ஒரு எட்டரைக்கு ஆரம்பிச்சுடலாம். எட்டு மணிக்கு வந்துட்டா அரேஞ்ச் பண்ண வசதியா இருக்கும்”

“ஹோமத்துக்கு பதினாரு செங்கலும் அரை மூட்டை மணலும் வேணும். சவுரியமா?”

“ஒண்ணும் சிரமமில்ல. வர்ற வழில ஏற்பாடு பண்ணிடலாம்”

“பெரிய ரூல்ஸ் எல்லாம் இல்லை. பையனுக்கு ஒரு வேளைதான் சாப்பாடு. அதுவும் திதி முடிச்ச பெறகுதான். காலைல கண்டிப்பா கெடையாது. நைட் பசிச்சதுன்னா பட்சணம், ஸ்நாக்ஸ் சாப்டுக்கலாம். அப்பா ஆத்மா பசியார்ற வகைல சிறப்பா செஞ்சிடலாம்”

***

எட்டு மணிக்கு டி.வி.எஸ் – எக்ஸ்.எல்லை வீட்டின் வாசலில் நிறுத்தினார். பொறித்த அப்பளங்களும் சிறு பாக்கெட்களில் திண்பண்டங்களும் கொண்டு விற்பவனின் வண்டி போல அது பொருட்களால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. இரண்டடுக்கு வீட்டை மேலும் கீழுமாக பார்த்தார். தூசிக்கு இடமன்றி மிளிர்ந்து கொண்டிருந்தது. வராந்தாவில் நின்றுகொண்டிருந்த மினி கூப்பர் காரின் மீது படாமல் சாமான்களை வீட்டிற்குள் எடுத்து வந்தார். கொண்டு வந்த சாமான்களை வீட்டின் மைய அறையில் பரப்பி வைத்துக் கொண்டிருந்தார். கைகளின் லாவகத்திற்கு ஏற்ப கண்கள் வீட்டிலிருந்த பொருட்களின் மீது மேவின. பளபளக்காத மார்பில்களால் தரை பாவப்பட்டிருந்தது. பாதி திரையரங்கை நினைவூட்டும் தொலைக்காட்சியும், பார்த்த மாத்திரத்தில் அசதி நீங்கும் ரெக்லைனரும் பொறாமைத் தீயின் திரியைப் பற்ற வைத்தன. மனதிற்குள் தொகையை சற்று அதிகமாக கேட்டிருக்கலாமோ என்று யோசித்தார்.

சமையலறையிலிருந்து வந்த மைதிலி சங்கரனுக்கு வணக்கம் வைத்தாள்.

“டீ காபி எதாவது சாப்பிடுறீங்களா?”

மொழியில் பிராமண வாடை சிறிதும் வீசாமல் இருந்தது. சங்கரனுக்கு சின்னதான அசௌகரியமும் தொற்றியது.

“காலம்பற பட்டினிதான். திதி முடிச்ச கையோட சாப்பிடறேன். திதிக்கு சாப்பாடு என்ன செஞ்சிருக்கேள்?”

“வாசுதேவன் ஆர்டர் போட்டிருக்கார். லெவனுக்கு வந்துரும். டிலே எதுவும் இருக்காது”

“பேஷ்! நான் போய்ட்டு செங்கல்லும் மண்ணும் எடுத்துண்டு வந்துர்றேன். குக்கர்ல சாதம் மட்டும் வச்சிருங்கோ. குழைவா வந்தா பேஷ். இது படைக்கறதுக்காக கேக்கறேன்.”

வாசலில் வாசுதேவன் நடைபயிற்சி முடித்து திரும்பியிருந்தார். சங்கரனை அடையாளம் கண்டவராய் வணக்கம் வைத்தார். மைதிலியின் அதே கேள்விகளும், அதே விதமான பதில்களுமாய் உரையாடல் முடிந்தது. வாசுதேவன்-மைதிலி தம்பதியருக்கு வயது நாற்பதுகளில் இருக்கக்கூடும் என்று அனுமானித்தார். எந்த பிராமண வீட்டிற்கும் காரியமாக செல்லும்போதும் தன்னை ‘மாமா’ எனும் அடைமொழியுடன் அழைப்பது சங்கரன் அறிந்திருந்த வழக்கம். மரியாதை நிமித்தமாக அர்த்தம் பெறும் சொல். அதன் வழியே அந்த வீட்டுடன் சங்கரன் சகஜமாகி விடுவார். இங்கோ அந்நியமாகவே உணர்ந்தார். வாசுதேவன் குடும்பத்தாரின் வேர்கள் மட்டுமே பிராமண சம்மந்தமாக இருந்தது. பழக்கங்களும் வழக்கங்களும் அதன் சாயலை இழந்திருந்தன.

செங்கல்லும் மணலும் வாங்கிக்கொண்டு திரும்பினார். வரும் வழியிலேயே அன்றைய செய்தித்தாள் ஒன்றும் வாங்கிக்கொண்டார். மனதுள் கேள்விகள் ஓடின.

அந்த வீட்ல நியூஸ்பேப்பர் இருக்குமா?

அவாளப் பாத்தா நியூஸ் பேப்பர் படிக்கிறவா மாதிரி தெரியலையே?

அவா ஏன் நியூஸ் பேப்பர் படிக்கணும்? இவ்வளவு வருமானம் வந்தா வரி இல்லைனு வர்ற நியூஸ்ஸுக்கும் இவாளுக்கும் என்ன சம்மந்தம் இருக்கப் போறது? இவா எகனாமிக் டைம்ஸ் வாங்கறவாளா இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். எதுக்கும் நாமளே வாங்கிண்டு போறது சாமர்த்தியம்!

அஷ்ட லட்சுமியும் ஒரே வீட்ல ஏன் குடியிருக்கா? நம்ம அட்ரெஸ்லாம் அவ கண்லயே படாதோ?

பகவான் பக்கத்துல ஆரத்தி எடுக்கறவாளுக்கும் ஸ்பெஷல் தரிசனத்துல வர்றவாளுக்கும் கடாக்‌ஷத்துல எப்பவுமே பாரபட்சம்தான்!

வண்டியை நிறுத்திவிட்டு வாசலை கவனித்தார். சாலை மூளியாக இருந்தது. ஒத்தாசைக்கு கிருஷ்ணமூர்த்தி இருந்தால் தேவலை என்று பெருமூச்சு விட்டார். கிருஷ்ணமூர்த்தி தங்கை மகன். தங்கை மற்றும் தங்கையின் கணவருடைய மறைவிற்கு பிறகு சொந்த மகனாக வளர்க்கிறார். சங்கரன் கிருஷ்ணமூர்த்திக்காக திருமணமும் செய்து கொள்ளவில்லை. அவனுக்கு படிப்பு வரவில்லை. பாடசாலையிலும் தத்தி. எடுபிடிக்காக இருக்கட்டும் என்று ஞானவாபிக்கு உடன் அழைத்துச் சென்றார்.

ஞானவாபி பிராமணர்களுக்கான சிறு நிறுவனம். வேதங்களைப் பயிற்றுவிக்கும் பாடசாலை. அத்துடன் பல்வேறு விதமான ஹோமங்களுக்கும், சிரார்த்த வேலைகளுக்கும், திருமண வைபவங்களுக்கான குருக்களுக்கும் பிராமணர்கள் ஞானவாபியை அணுகுவர். பிராமண உட்பிரிவுகளான நான்கு வேதங்களுக்கும் மந்திர உச்சாடனங்கள் மாறுபடும். அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவராக இருந்தார் சங்கரன். தங்கை மரணிக்கும் வரை அனைத்து விதமான ஆசார அனுஷ்டானங்களையும் முன்னின்று நடத்தினார். மறைவிற்கு பிறகு சிரார்த்தம் மட்டுமே செய்ய ஒப்புக்கொண்டார். அவரின் இந்த முடிவு ஞானவாபியில் உள்ள பிற குருக்களுக்கு முதலில் அதிர்ச்சியளித்தது. ஆனாலும், சங்கரன் முடிவில் எந்த மாற்றமுமில்லை. சங்கரனின் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு கிடைக்கப் போகிறார்கள் எனும் அர்த்தத்தில் பிற குருக்கள் விரைவிலேயே ஆசுவாசம் அடைந்தனர். சங்கரன் பணியற்று இருக்கும் நேரங்களில் தங்களுக்கு வரும் சிரார்த்த காரியங்களை அவருக்கு கொடுக்கவும் அவர்கள் தவறுவதில்லை. தொடர்ந்து கிடைத்த சிரார்த்தங்களில் சங்கரனுக்கு காலம் ஓடியது.

சங்கரனே முயன்று பார்த்தும் கிருஷ்ணமூர்த்திக்கு மந்திரங்களும் முறைமைகளும் மனனம் ஆகவில்லை. சங்கரன் கேட்காத வண்ணம் பலர் அசமந்தம் என்று குறிப்பிடுவர். சங்கரன் காதில் விழும்போது மனக்கிலேசம் அடைவார். அதற்காக யாரிடமும் முரண்பட்டதில்லை. சங்கரனும் வாய்ப்புள்ள நேரமெல்லாம் கிருஷ்ணமூர்த்தியை அழைத்துச் செல்லத் தவறுவதில்லை. ஞானவாபியிலுள்ள பிற குருக்களும், சிரார்த்தம் செய்கிறவர்களும் கிருஷ்ணமூர்த்தியையோ அல்லது எடுபிடிகளுக்காக இருப்பவர்களையோ அழைக்கும் போது தங்களுடைய வருமானத்தில் குறிப்பிட்ட பகுதியை அளிக்க வேண்டும். சங்கரன் ஒரே வீட்டில்தானே வசிக்கிறோம் எனும் சலுகையைக் காட்டி கொடுப்பதில் குறைத்துக் கொள்வார். வாசுதேவன் வீட்டு வாசலிலிருந்தே அலைபேசியில் அழைத்துப் பார்த்தார்.

“கிட்டு, வரமுடியுமா?”

“இங்கதான் செகண்ட் அக்ரஹாரம் தாண்டி பங்களா தெருக்கு”

சிறுவயது முதலே அழைத்து வந்ததால் சங்கரன் மட்டும் கிட்டு என்று அழைப்பது பழக்கமானது. முன்னர் வாங்கி வந்த பொருட்களுக்கு அருகில் செங்கல்லையும் மணலையும் வைத்தார். வாசுதேவன் நடைபயிற்சி செய்த உடையுடனும், மைதிலி சுடிதார் ஒன்றிலும் நின்று கொண்டிருந்தனர். அவர்களுக்கு குழந்தைகள் இருப்பதற்கான சாத்தியம் கொண்ட பொருட்கள் எதுவும் பார்வையில் தட்டுப்படவில்லை. நேரம் எட்டரையாகியிருந்தது. வாசுதேவனின் அலைபேசியில் எட்டரைக்கு அலாரம் ஒன்று அடித்தது.

“ஆரம்பிக்கலாமா?”

வாசுதேவனுடைய குரலில்தான் எத்தனை தோரணை!

“நீங்க டிரஸ் மாத்திண்டு வந்துருங்கோ. கிட்டு வர்றேன்னு சொல்லிருக்கான். வந்தவொடன ஆரம்பிச்சிடலாம்”

மைதிலியைப் பார்த்து, “பஞ்ச பாத்திரம், வெண்கல சொம்பு, ஒரு அஞ்சு தாம்பாளம் வேணுமே?”

சமையலறையிலிருந்து தூசி படர்ந்திருந்த மூட்டையொன்றை தூசி மேலே படாதவாறு எடுத்துவந்து சங்கரனுக்கு அருகில் வைத்தாள்.

“போன வருஷம் செஞ்ச பாத்திரம். அப்படியே பேக் பண்ணி வச்சிட்டோம்”

“பேஷ்! நான் எடுத்துக்கறேன்”

கிட்டுவின் வருகை ஆசுவாசப்படுத்தியது. வாசுதேவன் அங்கேயே நின்று கொண்டிருந்தார். சங்கரன் பார்த்தவுடன் பள்ளி மாணவனைப் போல, “எனக்கு பஞ்சகச்சம் கட்டத் தெரியாது”

எத்தனை முறை கேட்ட சொற்கள் இவை. ஹோமங்களுக்கு செல்லும்போது ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் வயது நிரம்பிய தலைமுறையின் கோரிக்கை. பலருக்கு சங்கரனே கட்டி விட்டிருக்கிறார். வெற்றுடம்பும், தொந்தியும், சில நேரங்களில் வியர்வையும், இடுப்பற்ற ஒல்லியான தேகங்களும் நினைவில் மண்டின. கட்டிப் பழகிய சங்கரனின் கைகளுக்கு கட்டிவிடுவது பொருட்டே அல்ல. ஆனாலும் நினைவில் ஓர் வியர்த்தம். வாசுதேவனைப் பார்க்கும்போதும் மனதுள் குமுறல்கள் ஓடியது.

இவ்ளோ சம்பாதிக்கறா? மார்பிளால இழைச்சிருக்கா? ஒரு பஞ்சகச்சம் கட்டத் தெரியாதா? சம்பாதிக்க கத்துகிட்ட விஷயங்கள்ள கடுகளவு இருக்குமா பஞ்சகச்சம் கட்ற வேலை? காசு சேந்துட்டா பிராம்ணாவா இருக்கறது வேற ரூபம் எடுத்துடறது!

உள்ளுக்குள் ஓடும் உரையாடலிலிருந்து விடுவித்துக் கொண்டு வாசுதேவனைப் பார்த்தார்.

“பரவாயில்லை சார். வெறுமனே வேஷ்டி கட்டிண்டு வாங்கோ”

மைதிலிருக்கு நிச்சயம் மடிசார் கட்டத் தெரியாது என்று அனுமானத்திற்கு வந்திருந்தார். அதனாலேயே எந்த கோரிக்கையையும் முன்வைக்கவில்லை. ஹோமம் வைப்பதற்கான இடத்திற்கு அடியில் கண்யா கோலம் போடத் தெரியுமோ? ஏன் வீணாய் கேட்டுக் கொண்டு என்று மைதிலியைப் பார்ப்பதையே தவிர்த்தார். மைதிலி வைத்த மூட்டையில் பித்தளையும் செம்பும் நிறம்மாறத் துவங்கியிருந்தன.

“கிட்டு, இன்னிக்கு வேலை செத்த ஜாஸ்தி. சலிச்சுக்காம செய்யணும். கேட்டியோ?”

வேலைகள் செய்வதில் கிட்டு கெட்டிக்காரன். சங்கரனிடம் கெட்ட பெயர் வாங்கக்கூடாது எனும் வைராக்கியம் எப்போதும் அவனிடம் இருக்கும்.

“ஒரு கிண்ணத்துல புளியும், குடிக்க ஜலமும் கிடைக்குமா?”

கிருஷ்ணமூர்த்தியிடம் பணிக்கான கட்டளைகளை இடத் துவங்கினார். பாத்திரங்களை புளியை வைத்து சுத்தமாக்கி தருவதும் முடித்த கையுடன் ஹோமத்திற்கான கண்யா கோலமிடுவதும் முதற்கட்ட பணியானது. வீட்டில் எங்குமே பெரியவர்களின் புகைப்படம் இல்லாமலிருந்தது. அப்பாவின் புகைப்படத்தைக் கேட்டவுடன் உள்ளறையிலிருந்து வாசுதேவன் துடைத்துக் கொடுத்தார். நெற்றி நிறைய திருநீற்றுடன் அவர மிக அழகாகத் தென்பட்டார். அப்புகைப்படத்தை சங்கரன் ஒருமுறை துடைத்து சந்தனம் குங்குமம் இட்டு தரையில் அதனை நிற்க வைத்தார்.

கிருஷ்ணமூர்த்தி சுத்தம் செய்வதற்குள் சந்தனத்தில் பிள்ளையார் பிடிப்பதும், மலர்களை ஒழுங்கிபடுத்தி வைப்பதும் செய்து முடித்தார். பதினைந்து நிமிடத்தில் ஹோமத்திற்கான இடங்கள் அனைத்தும் ஏற்பாடாகின. வாசுதேவன் வந்தமர்ந்தவுடன் மந்திர உச்சாடனங்களுடன் சிரார்த்தத்தைத் தொடங்கினார். ஒவ்வொரு சொல்லிற்கும் கைகளை எங்கு வைக்க வேண்டும் எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதையும் சிறுவனுக்கு சொல்வதைப் போல விரிவாக எடுத்துரைத்தார். வாசுதேவனுக்கு மந்திரங்கள் அட்சர சுத்தமாக சொல்ல இயலவில்லை என்பதும் சங்கரனுக்கு சங்கடமானது. அப்பாவிற்கு சிரார்த்தம் செய்ய வேண்டும் எனும் எண்ணம் இருக்கிறதே எனும் சிந்தனையே அன்று நிகழும் சடங்கில் சங்கரனுக்கு சமாதானமாய் அமைந்தது.

“அப்பா பேரு?”

“நாராயணன்”

“அம்மா?”

“விசாலாஷி”

வாசுதேவனின் முகபாவத்தில் இருவரும் இல்லை என்பதை புரிந்து கொண்டார். அப்பா வழி மூத்தோர் இரண்டு தலைமுறைப் பெயர்களையும் விசாரித்தார்.

“தாத்தா-பாட்டி பேரு ஷேஷாத்ரி – ருக்மணி. அவங்க அப்பா அம்மா பேரு தெரியலையே”

சங்கரனுக்கு அடுத்த சங்கடம். மூன்றாம் தலைமுறையின் பெயர் தெரியாமல் இருப்பது அவர் செல்லும் வீடுகளின் மற்றொரு வாடிக்கை. அப்படித் தெரியாது என்று சொல்லும் இடங்களில், “ராமச்சந்திரா! என்ன ஜெனரேஷனோ. ஒண்ணும் சொல முடியாது. நாங்கல்லாம் அஞ்சு தலைமுறை பேரு தெரிஞ்சு வச்சிருப்போம். இப்ப ஒரு தலைமுறை ஞாபகம் வச்சுக்கறதே பெரிய விஷயமாப் போயிடுத்து!”

அதேபோன்று இன்றும் சொல்லத் தோன்றியது. ஆனால், தைரியம் வரவில்லை.

“நம்ம அப்பாவ வழியனுப்பி வைக்கறோம். மூணு தலைமுறைக்கு சேத்தாப்ல இந்த சிரார்த்தம். அப்பாக்கு செய்றப்போ கொள்ளு தாத்தா பரலோகம் போய் சேந்துடுவார். தெய்வத்தோட ஐக்கியம் ஆகிடறார். ஐக்கியமாற எடத்துல பேருக்கு அர்த்தம் என்ன இருக்கு! தெய்வத்தோட பேரே வச்சிடலாம். எல்லாம் தெய்வக் கணக்கு!”

வாசுதேவனின் கொள்ளுத் தாத்தா மற்றும் கொள்ளுப் பாட்டியின் பெயராக பெருமாள்-லக்ஷ்மி என்று குறிப்பிட்டார். லக்ஷ்மி எனும் சொல்லைக் கேட்டவுடன் கிருஷ்ணமூர்த்தியின் முகத்தில் கண்ணீர் துளிர்ப்பதைக் கவனித்தார்.

“சிரார்த்தம் முடியப் போறது. வாசல தெளிச்சு பெருசா கன்யா கோலம் போடணும். அதுக்குத் தேவையான ஜாமான எடுத்து வைடா கிட்டு”

கண்ணீர் தளும்புவதை பிறர் பார்க்க விரும்பாதவனாய் ஒதுங்கி, தலைகுனிந்தவாறு நடந்தான். கொள்ளுத் தாத்தா மற்றும் கொள்ளுப் பாட்டியின் பெயரை அடிக்கடி சொல்ல வேண்டிய நிர்பந்தம் சிரார்த்தத்தின் முறைமையில் ஏற்பட்டது. மூன்று கையளவு உருண்டையாக சோற்றைப் பிடிக்க வேண்டும் என்று மைதிலியிடம் கூறினார். சுடுசோற்றில் மைதிலியின் கைகள் நடுக்கமெடுத்தன. இரண்டொரு நிமிடம் காத்திருந்தார். பின் சாதம் இருந்த தாம்பாளத்தை தன் பக்கம் இழுப்பதாக பாவனை செய்தார்.

“எல்லாம் ஒரு பாவனைதான். நீங்கதான் பிடிக்கணும். உருண்டை செதறவும் கூடாது. அது பெரியவாளுக்கு ஆகாது. நான் உருண்டை பிடிச்சுடறேன். நீங்க கடைசியா ஒரு தடவ மேலாப்ல ஒரு தடவ உருட்டிட்டு வச்சாப் போதும்”

உள்ளங்கையில் எள்ளை வைத்துக் கொள்ளச் சொன்னார். பின் உத்தரீணியில் நீரை எடுத்து எள்ளை வழிந்து மூன்று உருண்டை சாதத்தின் மீது விழும் வகையில் செய்கையை பாவனை செய்தார். எள் சோற்றுருண்டையின் மீது படர்ந்தது.

“ஒவ்வொரு ஆத்மாவும் சாப்டதுக்கு சமம். அவா வயிறு நிறைய உங்க வீட்ல செல்வம் சேரும்”

ஒவ்வொரு உருண்டையின் மீது பாவனையை நிகழ்த்தும் போதும் அது யாருக்கானது என்று தம்பதிகளின் பெயரை உச்சரித்தார். கடைசி உருண்டையின் மீது செயல்படுத்தும்போது

“கேசவபெருமாள்-சீதா லக்ஷ்மிக்கு”

என்று கூறினார். சிரார்த்தத்தின் இடையே அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்த வாசுதேவனிடமும் மைதிலியிடமும் பெயர் மாற்றம் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. வாசல் கதவிடையே அடுத்தகட்ட பணிக்கான ஆணைக்காக காத்திருந்த கிருஷ்ணமூர்த்தியிடம் திடுக்கிடல் தென்பட்டது. சங்கரனைக் கோபமும் ஆதுரமும் கண்ணீரும் நிறைந்த பார்வையில் பார்த்தான். சங்கரன் கட்டுப்படுத்தி கிருஷ்ணமூர்த்தியைப் பார்க்காமல் பார்வையைத் தவிர்த்தார்.

“சிரார்த்தம் முடிஞ்சது. கிட்டு இத எல்லாம் ஒரு பக்கெட்ல எடுத்து வாசல்ல வச்சிரு. வாசல தெளிச்சு பெருசா கன்யா கோலம் போட்ரு. முடிச்சிட்டு சொல்லு. நவக்கிரஹ ஹோமத்தை ஆரம்பிச்சிடலாம்”

சிறிய இடைவெளியை எடுத்துக்கொண்டு காபியைப் பருகினார். சத்தமான மந்திர உச்சாடனங்களுடன் ஹோமத்தை செய்து முடித்தார். வீட்டிலுள்ளவர்களை அவர்தம் ராசி நட்சத்திரங்களைக் கூறி ஆசிர்வதித்தார். தட்சணை அளிக்க வேண்டிய பகுதி வந்தது. முன் கூறிய பணத்தை ஏற்கனவே ரொக்கமாக எடுத்து வைத்திருந்தனர். அளிக்க முன்வரும்போது, “பண்ணதுலயே சிறப்பான நவக்கிரஹ ஹோமம் இதுதான். பகவான் அனுக்கிரஹம் நன்னா இருக்கறது. சரஸ்வதி என் நாக்குல சாஷ்டாங்கமா உக்காந்துட்டா. இல்லாட்டி அட்சரம் பிசகாம இப்படி ஸ்லோகம் வருமோ! ஏண்டா கிட்டு இத மாதிரி கணீர்னு ஒரு ஹோமத்த கடைசியா எப்ப பண்ணோம்?”

சத்தமாக சிரித்துக்கொண்டே, “பாருங்கோ மாமா, சின்னப்பயல் இந்த கிட்டு. எங்கூடதான் எல்லா ஹோமத்துக்கும் வர்றான். அவனால யோசிக்கவே முடியல. ஹோமம் பண்றச்ச அவன பாத்தேனே. கண்ல தண்ணியா கொட்றது. அதென்ன ஹோமப் பொகைனாலயா? அனுக்கிரஹம். சொன்னா என்னைய காமெடி பண்ணுவா. பகவானே பகடிதான் இந்தக் காலத்துல”

பேசிக்கொண்டே தட்சணை அளிக்க வேண்டிய தாம்பாளத்தை வெற்றிலைப் பாக்கு, வாழைப்பழம் சகிதமாக தயார் செய்தார். ரொக்கத்தை எப்படி இரண்டாகப் பிரிக்க என்று வாசுதேவன் காதில் கூறினார். அதை அவர்கள் பிரித்து வைக்கும்போது, “விட்டா நான் கண்டத பேசிண்டே இருப்பேன். சொன்னததான் தரணும்னு இல்லை. பாத்து செய்ங்கோ மாமா. எங்க வயித்துக்கும் உங்க தோப்பனார்தான் இன்னிக்கு அதிபதி”

வாசுதேவன் பர்ஸிலிருந்து மேலும் இரண்டு ஐநூறு ரூபாய் தாள்களை இரண்டு தட்டுகளிலும் சேர்த்தார். சிரித்துக் கொண்டே சங்கரனும் கிருஷ்ணமூர்த்தியும் பெற்றுக் கொண்டனர். ஹோமத்தின் கடைசியில் சங்கரன் தம்பதியை ஆசிர்வதித்தார். காகத்திற்கு சோறுவைத்து விட்டு வரச் சொன்னார்.

பிராமணனுக்கு அன்னமிடும் வழக்கத்தை சுருக்கிக் கொண்டு சிரார்த்தம் செய்பவருக்கு இட்டுக் கழிப்பதாக காலப்போக்கில் முறைமை மாறியிருந்தது. சங்கரனும் கிருஷ்ணனும் வரவழைத்திருந்த உணவை வயிறார சாப்பிட்டனர். கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து மட்டும் சாப்பிடும் போது அசௌகரியம் தென்பட்டது. மைதிலி அதைக் கவனித்தவாறு, “சாப்பாடுல ஏதவது கொறையா?”

சங்கரன் புரிந்துகொண்டவராய் பதிலளிக்க முந்தினார்.

“சாப்பாட்டா? இது அமிர்தம். அவன் வயிறு சுண்டக்காய் வயிறு. வீட்லயே காக்காய்க்கு வைக்கற அளவுக்குதான் அவன் சாப்பிடுவான். இவ்ளோ பட்சணம் பாத்தா கண்லயே பசியாறிடுமே. சாப்பிடறது கொஞ்சம் கஷ்டம்தான்”

சங்கரனின் பகடி சிரிப்பை வரவழைத்து சூழலை மாற்றியது. சாப்பிட்டவுடன் இலைகளை எடுப்பதில் மைதிலியிடம் விருப்பமின்மை தென்பட்டதால் கிருஷ்ணமூர்த்தியிடமே கூறி வாசலிலிருந்த முன்னோர்களுக்கான உணவுடன் சேர்க்கச் சொன்னார். சிரார்த்தம் முழுதுமாக முடிந்தவுடன் சின்ன இடைவெளிவிட்டு ஹோமம் நிகழ்ந்த இடத்தைச் சுட்டினார்.

“சாயங்காலம் அணைஞ்சிடும். அப்ப சுத்தம் செஞ்சிருங்கோ. செங்கல் ஓரமா வச்சிருங்கோ. வருஷா வருஷம் தேவைப்படும். சிரமமா இருந்தா சொல்லுங்கோ.. சாயரச்சே வந்து நானே எடுத்துண்டு போயிர்றேன்.”

“பரவாயில்லை” என்று கூறி வாசுதேவன்-மைதிலி தம்பதியினர் விடைகொடுத்தனர்.

வாசலில் இருந்த மூத்தோர்களுக்கான உணவை பொதுக்கழிவு நீருடன் கலந்தார்.

“ஆத்துல கரைச்சா கோடி புண்ணியம். ஆனால், ஆறு இருக்கவே ஊர்க்காரா கோடி புண்ணியம் செஞ்சிருக்கணுமே!”

முன்னோர்களின் உணவு வைத்திருந்த பக்கெட்டைக் கழுவி கிருஷ்ணமூர்த்தி ஒப்படைத்தவுடன் இருவரும் கிளம்பினர். வீடுவரை சங்கரனும் கிருஷ்ணமூர்த்தியும் பேசாமல் பயணித்தனர். வீடு வந்தவுடன் கிருஷ்ணமூர்த்தியை மட்டும் இறங்கச் சொன்னார். வாசல் கதவைத் திறக்கும் வரை காத்திருந்துவிட்டு வீட்டிற்குள் சென்றார். தங்கையின் குடும்பப் புகைப்படத்தின் முன் இருவரும் நின்றனர். தனக்கு அளித்த தொகையையும் சேர்த்து கிருஷ்ணமூர்த்தியிடமே கொடுத்தார். கிருஷ்ணமூர்த்திக்கு வெடித்து அழ வேண்டும் என்று தோன்றியது. சங்கரனுக்கு தங்கையின் புகைப்படத்தைப் பார்க்க மனமில்லாமல் வாசல்பக்கம் திரும்பினார்.

“அவா மட்டும் கொஞ்சம் கவனமா இருந்திருந்தா ஏன் பேர மாத்தி சொன்னீங்கன்னு கேட்ருப்பா?”

“நானா சொல்லல கிட்டு. தானா அப்படி வர்றது. சொந்த தலைமுறை பேரு தெரியாதவாளுக்கு லக்ஷ்மிக்கும் சீதா லக்ஷ்மிக்கும் என்ன வித்தியாசம் தெரிஞ்சுடப்போறது?”

“அம்மா பேர வேணும்னே சொன்னா மாதிரிதான் எனக்குத் தோன்றது!”

“வேணும்னு சொன்னதாவே வச்சுக்கோயேன்.”

முன்னிருந்த புகைப்படத்தைச் சுட்டிக்காட்டி, “ரெண்டு பேரையும் கொரோனா கொண்டு போனப்போ நியாயத்த யார் கணக்குல எழுதுவ? சீதாவ பாக்கக் கூட இல்ல. முகம் கடைசியா எப்படி இருந்துச்சுனு கூடத் தெரியாது. ஒவ்வொருத்தருக்கும் நான் செய்ற சிரார்த்தம், சீதாக்கு செய்றதாதான் எனக்குள்ள இருக்கு. சிரார்த்தத்தோட பயனே ஒருத்தர் போய்ட்டா அவா வீட்ல இருக்கற எல்லாரையும் ஒருத்தர் இல்லைனு நம்ப வைக்கறதுதான். இத்தன தடவ சிரார்த்தம் செய்றேன். ஆனா, சீதா போனதா மனசு நம்ப மாட்டேங்குது!”

சங்கரன் குரல் தடுமாறியது. காட்டிக்கொள்ள விரும்பாமல் தொண்டையைக் கனைத்துக்கொண்டார்.

“மாட்னானு கேட்டியே? மாட்னா என்ன! தெய்வத்து பேர்ல மாத்த வேண்டியதுதான். அவ்ளோ கோபம் இருக்கு. கொரோனா பேர்லயும் தெய்வத்தோட பேர்லயும். யார் மேல காட்ட முடியும். எல்லாம் என் கர்மா.”

கிருஷ்ணமூர்த்தியின் முன் அழ விரும்பாதவராய் அங்கிருந்து முன்னறைக்குத் கிளம்பினார். கிருஷ்ணமூர்த்தி பணத்தை கேசவ பெருமாள்-சீதாலக்ஷ்மி என்று பெயரிட்டிருந்த அப்பா-அம்மாவின் புகைப்படத்தடியில் வைத்துவிட்டு சமையலறை நோக்கித் திரும்பினான்.

“ஞானவாபி போய் தனியா உக்காந்து அழ வேண்டாம். வெயிட் பண்ணுங்கோ. காபியோட வர்றேன்”.

krishik10@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button