இணைய இதழ் 114கவிதைகள்

ஷினோலா கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

அந்தூரத்து நினைவு

சற்றும் நகர்த்த முடியா
இந்நினைவை
இழுத்து இழுத்து
இவ்வளவு தூரம் வந்துவிட்டேன்

இனி வெறும்
சறுக்குப் பாதைகளே
உருட்டி விட்டால்
சிதறுவதற்கு இருக்கின்றன
ஆயிரம் வழிகள்

அதில் எதிலாவது விழுந்து
எத்துண்டாவது உடைந்தாலும்
ஏழு ஜென்மத்துக்கும் மூச்சிழுத்து
பிழைத்துக்கொள்ள மாட்டேனா?

கரைசேரா கப்பல்கள்

தெருமுனை தாண்டிடாத
காகிதக் கப்பலை
தெருவெங்கும் விட்டு
யார் கப்பல் கரை சேரும் என்று
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்

அங்கும் இங்குமாய் அது தத்தளித்து
பார்க்கும் எங்களை அலைக்கழித்து
சாரல் மழையில் சற்றே சாய்ந்து
கொஞ்சம் கொஞ்சமாய்
முழுதும் தொய்ந்து
மூச்சுத் திணறி முங்கிற்று

நாங்களோ அடுத்த கப்பலுக்கு
காகிதம் கிழித்தபடி…

ஒரு தடித்த கீறல்

பாதி கழுவிய வலுவலுப்பில்
மங்கியொழுகும் குவளைகள்
அவசரத்திற்கு எப்போதும் கிடைத்திடாத
கரண்டிகள்
பொடிசுகள் தைரியமாய்
கையாள முடிந்த கத்திகள்
தண்ணீர் ஊற்றி சுத்தினாலும்
அரையாது அடம்பிடிக்கும்
தேங்காய் துண்டுகள்
எறும்பின் நகர்வு இல்லாது
சுவைத்திட முடியா திண்பண்டங்கள்
எப்போது போட்டாலும்
அட்டூழியம் பண்ணும்
தொலைக்காட்சி அமைப்புகள்
நாள் பூராய் துவைப்பதாய் சுழற்றிக்கொள்ளும்
சலவை இயந்திரம்

எல்லாம் அதனதன் போக்கில்
சோதிக்கும் சுதந்திரம் கொண்ட
பாட்டி வீட்டிலிருந்து
வெளியேறுகிறாள் சிறுமி ஒருத்தி
விழுந்து கிடந்த ஒற்றைப் பனம்பழம்
எடுக்க வந்த ஆசையுடன்.

shinnodolly1028@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button