சிறுகதைகள்
Trending

அவள் ஒரு பிஞ்சு – அண்டனூர் சுரா

சிறுகதை | வாசகசாலை

பயணிகளின் கைகளில் பதினொன்றாம் விரலாக ஆண்ட்ராய்டு முளைத்திருந்தது. அவர்கள் முகநூல், வாட்ச்அப் இரண்டில் ஒன்றில் மூழ்கி, தங்களை அதற்குள் கரைத்துகொள்வதாக இருந்தார்கள். பலரின் முகநூல் , வாட்ச்அப் புரோபைல் படமாக ஆஷிபா இருந்தாள். அவர்களின் கட்டை விரல், ஆண்ட்ராய்டு திரையைக் கீழிருந்து மேல் நோக்கித் தள்ளுவதாக  இருந்தன. கணவனின் கட்டளைக்குப் பயந்தோடும் மனைவியைப் போல, திரை கீழிருந்து மேல் நோக்கி ஓடுவதாக இருந்தது. ஓடிய அத்தனை வேகத்திலும் ஆஷிபா முகம், தனித்துத் தெரிவதாக இருந்தது. கத்தரிப்பூ ஆடையில் ஆங்காங்கே மஞ்சள் நிறம் தெறிக்க, தரையில் குப்புறக் கிடந்தவளாக இருந்தாள் அவள். அது வெறும் புகைப்படம்தான், ஆனாலும் அப்படம் பலரையும் இரங்க வைக்கவும், கோபமூட்டவும் செய்வதாக இருந்தது.

ஆஷிபா பால் வடியும் முகமாக இருந்தாள். கன்னங்கள் இரண்டும் தங்கக் கின்னங்களாக இருந்தன. உதடு நிறையும் சிரிப்பு. ரோஜா இதழ் சருமம். ஒன்றிரண்டு பேர் அவளைத் திரையில் நிறுத்தி பார்த்தவண்ணமிருந்தனர். சிலர் ‘இச்…’ கொட்டிக்கொண்டார்கள்.

ஒருவரின் கையில் தினசரி இருந்தது. அதை நீள்வாக்கில் மடித்து ஆஷிபா முகம் தெரியும்படியாக வைத்துக்கொண்டு, அவள் குறித்தச் செய்தியை வாசித்துக்கொண்டிருந்தார். ஒரு பெரியவர் தினசரியை எட்டிப்பார்த்துவிட்டு சொன்னார் ”ஏன்தான் இவள் குதிரையை தனி ஒருவளாக நின்று மேய்த்தாளோ…?”. அவர் சொல்லி வாய்மூடவில்லை. அவருக்கானப் பதில், பின் இருக்கையிலிருந்து சென்றது. அப்பதிலைச் சொன்னவர், ஒரு மத்திய வயதுடைய பெண்ணாக இருந்தார். ”ஏன் மேய்த்தாள்? வயிறு கழுவத்தான்..”

முன்னவர் பின்னவரைத் திரும்பிப் பார்த்தார். ”என்ன இருந்தாலும், அவள் பெண். குழந்தை வேறு இல்லையா? காலம் கெட்டுக் கிடக்கிறது. இப்படியான காலத்தில், அவள் ஒத்தையாளாக குதிரை மேய்த்திருக்கத்தான் வேண்டுமா?”

”அதுக்காகப் போகிற இடமெல்லாம் பொம்பளைப்பிள்ள யாரையேனும் துணைக்கு அழைச்சிக்கிட்டா போகமுடியும்…”

”பின்னே வேண்டாமா…?”

”இப்ப இவ செத்து குழிக்குப் போயிருக்கா, அவளுக்குத் துணையா யாரை அனுப்பி வைக்கிறதாம், ம்?” அவள் கேட்ட கேள்விக்கு, முன் இருக்கைப் பெரியவரிடம் பதில் இருந்திருக்கவில்லை. பேருந்திலிருந்த அத்தனைப் பேரும் அவரைத் திரும்பிப் பார்த்தார்கள். பதிலற்ற அவர், தன்னை அவமானமாகக் கருதினார். தலையைக் கீழே தொங்கவிட்டுக்கொள்வதைத் தவிர, அவருக்கு வேறொன்றும் தெரிந்திருக்கவில்லை.

பேருந்தில் அவ்வளவாகக் கூட்டமில்லை. இரண்டு பேரைத் தவிர மற்றவர்கள் சாவகாசமாக உட்கார்ந்து, அடுத்தவர்களின் மேல் தூங்கிவிழுவதும், அலைபேசியில் மூழ்குவதுமாக இருந்தார்கள். பேருந்தில் ஒரு பழைய பாடல் ஓடிக்கொண்டிருந்தது. நடத்துநர் பின் படியில் நின்றுகொண்டு ஒரு காலை பேருந்திற்குள்ளும் மற்றொரு காலை படியிலும் வைத்துகொண்டு, பேருந்தில் ஒலிபரப்பாகிக்கொண்டிருந்த பாடலுக்கேற்ற பின்னணி இசையை, பேருந்தின் மேற்கூரையில் விரல்களால் கொடுத்துக்கொண்டிருந்தார்.

நடத்துநர் காக்கிச் சீருடை அணிந்திருந்தார். காதில் சொருகப்பட்டிருந்தது ஒரு பேனா. தோளில் நீண்டு தொங்கிக் கிடந்தது சில்லறைப்பை. பேருந்து ஒரு குலுங்கு குலுங்கி, திசை கிழிய சென்றுகொண்டிருந்தது. தனியார் பேருந்து அது. பேருந்துக்குள் வெளிச்சம் பகல் போல் பாய் விரித்திருந்தது.

சுப்ரியா, ஒரே இடத்தில் நின்றபடி , சில்வர் கம்பியை இறுகப் பிடித்துக்கொண்டு சன்னல் வழியே பேருந்துக்கும் பின்னால் ஓடும் மரம், செடி, கொடிகளைப் பார்க்கவுமாக இருந்தாள். அடுத்த நிறுத்தத்தில் அவள் உட்காருவதற்கு ஓர் இடம் கிடைத்திருந்தது. பின் இருக்கையிலிருந்து நான்காவது இருக்கை அது. அவள் தன் மடியில் பையை வைத்துக்கொண்டு, இருக்கையின் நுனியில் உட்கார்ந்தாள். பை நெஞ்சோடு அணைந்திருந்தது. அவள் சன்னல் வழியே, தான் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டதா,  இறங்கிய வேண்டிய இடத்தில் நடத்துநர் விசில் கொடுப்பாரா, எனப் பார்க்க இருந்தாள்.

அவளுக்கும் அருகில் ஒரு தாய், மடிக்குழந்தையுடன் உட்கார்ந்திருந்தாள். அவள் குழந்தையுடன் பாதித்தூக்கத்தில் இருந்தாள் . சுப்ரியா மெல்ல எழுந்தாள். முன்பகுதியை எட்டிப் பார்த்தாள். அவளுக்குத் தெரிந்த, உறவினர் யாரேனும் பேருந்திற்குள் இருக்கிறார்களா, எனத் தேடினாள். யாரும் இருந்திருக்கவில்லை..

நடத்துநர்  சத்தமிட்டார் ”பாப்பா, உட்காரு. இன்னும் ரெண்டு ஸ்டாப் இருக்கு…”

எழுந்து நின்றவள், முகவாட்டத்துடன் உட்கார்ந்தாள். நடத்துநரைப் பார்த்தாள். நடத்துநருக்கு அவளது மாமா வயதிருக்கும். அவர், வாய் விசிலோடு அவளைப் பார்த்து சிரிப்பதும், மாட்டு வண்டிக்கு விசில் கொடுத்துப் பேருந்தை வழி நடத்துவதுமாக இருந்தார். பேருந்து ஒரு நிறுத்தத்தில் நின்றது. பேருந்தில் நின்றிருந்த இரண்டு பேர் பேருந்திலிருந்து இறங்க, ஒருவர்  ஏறியிருந்தார். நடத்துநர் விசில் கொடுத்ததும், பேருந்து ஒரு குலுங்கி குலுங்கி, அவ்விடத்திலிருந்து கிளம்பியது.

நடத்துநர் பின் படியிலிருந்து முன் படிக்கு வந்தார். ஒரு பாடல் முடிந்து மறுபாடல் வந்திருந்தது. அவளுக்குப் பிடித்தமானப் பாடல் அது. தொலைக்காட்சியில் அப்பாடல் ஒளிபரப்பானால், கண் கொத்திப் பாம்பெனப் பார்க்கிறவள் சுப்ரியா. தலையைச் சிலுப்பி, கதாநாயகியைப் போல ஆடுவாள். அப்பாடலை ரசிக்கும் படியான மனநிலை அப்போதைக்கு அவளுக்கு இல்லை. அவள் நினைவெல்லாம், பேருந்து நிறுத்தத்திற்கு வருவதாகச் சொல்லியிருந்த அப்பா மீதே இருந்தது.

அவள் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்திருந்தது. நடத்துநர் ”ஓல்டேன், ஓல்டேன்…” என்றார். பேருந்து சக்கரங்களைத் தேய்த்துகொண்டு நின்றது. நடத்துநர், அவள் பக்கமாகத் திரும்பி ”பாப்பா, நீ இறங்க வேண்டிய எடம்….” என்றார். அவள் புத்தகப்பையை  தோளில் கிடத்திக்கொண்டு, பின் படிக்கு ஓடி, தாவிக்குதித்து இறங்குவதற்கு முன்பாக, வெளியைப் பார்த்தாள். வெளி இருண்டு இருந்தது. பேருந்து நிழற்குடையையொட்டி, ஒருவர் நிற்பது தெரிந்தது. தன் அப்பாவாகத்தான் இருக்க வேணும்,  படியிலிருந்து குதித்தவள், அவ்வுருவத்தை ஊடுருவிப் பார்த்தாள். ஏமாற்றம் அவளது முகத்தில் ‘சப்…’ பென அறைந்தது. ‘ அ…ப்…’ என அழைக்க இருந்த பிற்பகுதியைத் தொண்டைக்குள் விழுங்கிக்கொண்டாள்.

அப்பா எப்பொழுது அவளை அழைக்க வந்தாலும், அவர் பேருந்தின் படி வரைக்கும் வரச் செய்வார். கீழே நின்றபடி, அவரது கை அவளை நோக்கி நீளும். ஒரு கை அவளைத் தாங்கவும் மற்றொரு கை அவளது பையைத் தாங்கவும் செய்யும். ஆனால் இன்று…?

பேருந்து சற்று நேரம் நின்று இளைப்பாறியது. சன்னல் வெளிச்சம், கட்டங்களாகப் பாய் விரித்திருந்தது. அவ்வெளிச்சத்தில் நின்றபடி அப்பாவைத் தேடினாள். அப்பா இல்லாத பேருந்து நிறுத்தத்தை நினைக்கையில் அவளது கண்கள் இருண்டு வந்தன. கண்களைத் தேய்த்துக்கொண்டு விழித்துப் பார்க்கையில் அவளை ஏற்றி வந்திருந்த பேருந்து மொத்த வெளிச்சத்தையும் துடைத்து அள்ளிச் சுருட்டிக்கொண்டு அவ்விடத்தைவிட்டுக் கிளம்பியிருந்தது.

அவளது பார்வைக்கு தூரத்தில் புள்ளியாகத் தெரிந்த பேருந்தையும், அப்பா வந்திருக்க வேண்டிய திசையையும் பார்த்தவளாக இருந்தாள். ஏமாற்றத்தின் வெறுமை அவளது முகத்தில் பூசுவதாக இருந்தது. அவள் தன் பையை மார்போடு அணைத்துகொண்டு, பேருந்து நிறுத்த நிழற்குடைக்குள் ஒடுங்கினாள்.

அப்பா, ஏன் இன்றைக்கு வரவில்லை, ஏழரை மணி பேருந்துக்கு வந்து நிற்பதாகச் சொல்லியிருந்தாரே, எப்பொழுதும் பேருந்து வருவதற்கு முன்பே, சைக்கிளில் வந்து நிற்கும் அப்பா, இன்றைக்கு ஏன்…? அவளது கண்களுக்குள் என்னவோ முட்டுவதைப் போலிருந்தது.

அவள் சொல்லி, இதுநாள் வரைக்கும் அப்பா அவளை அழைக்க வராமல் இருந்ததில்லை. இன்றைக்கும் எப்படியேனும் அப்பா வந்துவிடவே செய்வார். அப்பா வர வேண்டிய திசையைப் பார்த்து நின்றாள். அவளைச் சுற்றிய வெறுமையும், இருண்மையும் அவளது கால்களைத் தடதடக்கச் செய்தன.

தூரத்தில் ஒரு சைக்கிள் வருவது தெரிந்தது. சைக்கிள் செயின் அரைபடும் சத்தமும், கிண்,கிண்யென மணி அடிக்கும் சத்தமும் அவளுக்குக் கேட்கச் செய்தன. அப்பாவாகத்தான் இருக்க வேணும், கண்கள் அவளை நோக்கி வந்திருந்த, சைக்கிள் மீது குவிவதாக இருந்தன. சைக்கிள் தார்ச்சாலையில் ஏறி, பேருந்து சென்ற திசையில் திரும்பியது. அவளுக்கு ‘இச்’ என இருந்தது.

வேறு யாரேனும் தெரிந்தவர்கள் வருவார்களா? அவள் நினைத்த நேரத்திற்கு ஒரு மோட்டார் சைக்கிள் அவளைக் கடந்து செல்வதாக இருந்தது. அவ்வெளிச்சத்தில், எதிர்புறம் நின்றுகொண்டிருந்த நபரைப் பார்த்தாள். அவர் நீண்ட தாடியுடன், வாயில் நெருப்பிலாத பீடியை வைத்துகொண்டு நின்றுகொண்டிருந்தார். யாரோ.?, இதற்கு முன் பார்த்திராத நபராக அவர் இருந்தார். அவ்வுருவம் அவளை பயமூட்டச் செய்தது.

” அப்பா, சுப்ரியா பேசுறேன்கப்பா…”

”சொல்லடி கண்ணு…”

”வீட்டுக்கு வாறேன்ப்பா…”

”எப்படிடி வருவே? அங்கேயே இரு. நாளைக்கு வந்து உன்ன அழைச்சிக்கிட்டு வாறேன்…”

”இல்லேங்கப்பா, நான் வரணும். ஏழரை மணி பஸ்ல சித்தி என்னை ஏற்றி விடுறாங்களாம். நீங்க ஏழு மணிக்கே பஸ் ஸ்டாப்புல வந்து நில்லுங்கப்பா…”

”ஒத்தையாளாகவா வற்றேங்கிறே?”

”அப்பா, நான் என்ன சின்னப் பிள்ளையா. சிக்ஸ்த் முடிச்சி செவன்த் போகப்போறேன்ப்பா. ஸ்கூலுக்கு நான் தனியாத்தானே பொயிட்டு வாறேன்….”

”இருந்தாலும்….”

”பஸ்லதானேங்கப்பா, வாறேன்….”

”சரி, பத்திரமா பஸ் ஏற்றிடச்சொல்லி வந்திரு. நான் ஸ்டாப்புல நிற்கேன்…”

உரையாடல், அப்பா மீது கோபத்தையும், விரக்தியையும் மூட்டியது.

எவ்வளவு நேரம்தான், இதே இடத்தில் நின்றுகொண்டிருப்பதாம்? நடந்தே வீட்டுக்குச் சென்றுவிடலாமா, என யோசித்தாள். அவளது கால்கள் முன்னே இழுக்க, அவளது உடல் பின்னே இழுத்தன. அவள் கூர்ந்து எதிரில் நின்றுகொண்டிருந்த உருவத்தைப் பார்த்தாள். அவ்வுருவம் அவளையே பார்ப்பதைப் போலிருந்தது. அவர் என்னை நோக்கி வந்துவிடுவாரோ, அப்படியாக வந்தால் நான் ஓடுவதா, அழுவதா? கேள்விகள் அவளைப் பிசையச் செய்தன.

அவளை நோக்கி ஒரு நாய்க்குட்டி வந்தது. மெல்லக் குரைத்தபடி, அவளை உரசி, அவளது கால்களை நுகர்ந்து பார்த்தது. அந்நாய்க்குட்டியைப் பார்க்க அவளுக்குப் பொறாமையாக இருந்தது. இந்தக் குட்டிக்குத்தான் என்னவொரு தைரியம்?  இரவில், பயமில்லாமல், தனியாக….

அந்நாய்க் குட்டி இன்னும் சற்று நேரம் அவளுக்குத் துணையாக நிற்குமென எதிர்பார்த்தாள். அக்குட்டி, தனக்கு வேலை நிறைய இருப்பதைப்போல காட்டிக்கொண்டு, ஓடுவதாக இருந்தது. அக்குட்டி மறைந்த சற்று நேரத்தில், ஒரு சிறுவன் சாலையில் குறுக்கிட்டான். அவன் சட்டை அணியவில்லை. தனக்குத்தானே பேசிக்கொண்டு, பேருந்து வந்த திசையில் ஓட்டமே நடையாக நடந்துகொண்டிருந்தான்.

அச்சிறுவனைப் பார்க்க, அவளுக்கு வியப்பாக இருந்தது. என்னை விடவும் இளையவன். சிறுவன். அவன் தனியாக, இரவு என்று கூட பாராமல் அவனால் நடக்க முடிகிறதே. அவனை நினைக்கையில், அவளுக்குள் உத்வேகம் பிறந்தது. பையை நெஞ்சோடு அணைத்துகொண்டு, கால்களை இரண்டடி நீட்டி எடுத்து வைத்தாள். அவள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அவளுக்குள் யாரோ நடப்பதைப்போலிருந்தது. அவளுக்குள் துடித்த இதயத் துடிப்புதான் அப்படியாக அவளுக்குக் கேட்டது.

பேருந்து நிறுத்தத்திலிருந்து அரை மைல் தூரம் நடந்திருந்தாள். இன்னும் அவள் ஒரு மைல் தூரம் நடந்தாக வேண்டும். அவள் நடப்பது தார்சாலைதான் என்றாலும் சாலை கொப்பளமும், புண்ணுமாக இருந்தது. சாலையின் இரு புறமும் முந்திரிக்காடு. அதைத் தாண்டினால் தைல மரக்காடு. அதைத் தாண்டினால் மானாவாரியான வேளாண் பூமி. அதிலிருந்து ஒத்தையடிப் பாதை வழியே மேலத்தெரு சென்று,  வடக்குப் பக்கமாகத் திரும்பி, வாரிக்குள் இறங்கி ஏறினால், அவளது வீடு. மனதிற்குள் வரைபடத்தைத் தீட்டிக்கொண்டாள்.

அவள் போகவேண்டிய தூரமும், திருப்பங்களும் கண்முன்னே வந்து நின்றன. மரங்களின் அசைவுகளும், சருகுகளின் சலசலப்பும் கேட்டபடி இருந்தன. அவள் எதையும் காதினில் வாங்கிக்கொள்ளவில்லை. எந்தப் பக்கமும் திரும்பிப் பார்க்கவில்லை. நிமிர்ந்த தலை குனியாது நடந்தபடி இருந்தாள். அவள் நடக்கவா செய்தாள், ஓட்டமே நடையாக இருந்தது.. அவள் எப்படியோ முந்திரிக்காட்டை கடந்திருந்தாள். தைலமரக் காட்டிற்குள் நுழைகையில், பேருந்துக்குள் அவள் கண்ட காட்சிகள் நினைவுக்கு வருவதாக இருந்தன.

தினசரியில், வாட்ச்அப்பில், முகநூலில் சிரித்த முகமாக இருந்த ஆஷிபா, அவளது கண்களுக்குள் நிறைவதாக இருந்தாள். அவளது சிரித்த முகம், ரோஜா இதழ்களையொத்த கன்னம், உருண்டுத் திரண்ட  கருவிழிகள்,…அவளது வழிகளின் வழியே நெஞ்சுக்குள் இறங்குவதாக இருந்தன. ஆஷிபா, அவளுக்கு நேர்ந்த மரணம், அவள் குறித்த உரையாடல்,..சுப்ரியாவுக்குள் கலவரத்தை மூட்டியது.

”என்ன இருந்தாலும், அவள் பெண். குழந்தை வேறு. காலம் கெட்டுக்கிடக்கிறது. இப்படியான காலத்தில், அவள் ஒத்தையாளாக குதிரை மேய்க்கப் போயிருக்கத்தான் வேண்டுமா?” அந்தப் பெரியவர் கேட்டிருந்த கேள்வி, தன்னைக் குறித்து கேட்பதைப்போல உணர்ந்தாள். அக்கேள்வி அவளுக்குள் எதிரொலிப்பதாக இருந்தது. பேருந்து உரையாடல்கள் செவி வழியே நெஞ்சிற்குள் இறங்க, அவளது உடம்பு அவளுக்குக் கனக்கச் செய்தது. அந்நேரம் வரைக்கும் விரைந்து எடுத்து வைக்க முடிந்த கால்கள், மெல்ல துவழச்செய்தன.

நான் தனியாக இப்பயணத்தைச் செய்திருக்கக் கூடாதுதானோ? அப்பாவிற்காக எந்நேரமானாலும் பேருந்து நிறுத்தத்திலேயே, காத்திருக்கத்தான் வேண்டுமோ? அவளது நடையை அக்கேள்விகள் வழிமறிப்பதாக இருந்தன.

ஒருவேளை நான் அங்கேயே நின்று, யாரேனும் ஒரு ஆண், பேச்சு கொடுக்க முன் வந்தால், அவருடன் நான் பேசலாமா? நான் உன்னை வீட்டில் விடுகிறேன், என அழைத்தால், நம்பி அவரது வாகனத்தில் ஏறலாமா? கேள்விக்குள்ளாக கேள்விகள். அவளுக்கு மயக்கம் வருவதைப் போலிருந்தது.

தைலமரக் காட்டின் இலை, தழைகளின் சலசலப்பு சன்னமாகக் கேட்டது. கொட்டிக்கிடந்த சருகுகளுக்குள் ஊர்ந்த ஊர்வனத்தின் அரவம், அவளது காதிற்குள் ஊர்வதைப் போலிருந்தது. அவளால் முன்னைப் போல அத்தனை வேகமாக நடக்க முடியவில்லை. ஒரு காலை, மறுகால் பின்னச் செய்தது. இந்நேரம் வரைக்குமில்லாத ஓர் அரவம், அவளுக்குக் கேட்கச் செய்தது. நடையின் வேகத்தைச் சற்றே குறைத்தாள். காதினை மெல்ல பின்பக்கமாகத் திருப்பி, கவனித்தாள். ஓர் ஆணின் ஆளரவம் அவளைப் பின்தொடர்வதாக இருந்தது. பேருந்து நிழற்குடையில், தாடி வைத்த, நெருப்பில்லாது பீடியை வைத்திருந்த உருவம்தான் அது. அவளுக்கு ‘ திக்..’ என இருந்தது.

துவண்டிருந்த நடையை முடுக்கினாள். அவள் முடுக்கிய வேகத்திற்கு, அவளைப் பின்தொடர்ந்த நடையின் வேகமும் வருவதாக இருந்தது. அவளுக்கு மேல், கீழ் மூச்சு வாங்கியது. தொண்டைக்குள் என்னவோவொன்று விக்கியது. கணுக்கால்களுக்கும், கெண்டைக் கால்களுக்குமிடையில், ‘விண்ண்…விண்ண்…’ என வலி தெறித்தது. உடம்புக்குள் வியர்த்தக்காடு.

இந்த இருட்டிற்குள் கண்ணைத் திறந்துகொண்டு நடப்பதும், மூடிக்கொண்டு நடப்பதும் ஒன்றுதான். கண்களை இறுக மூடிக்கொண்டு நடந்தால் பயம் சற்று தணிவதைப்போலிருந்தது. கண்களை இறுக மூடி, பாதையின் போக்கை மனதிற்குள் உள்வாங்கி, அவளது அப்பாவை மனதிற்குள் திட்டித் தீர்த்தபடி, நடையைக் கூட்டினாள். அவளைப் பின்னால் துரத்தி வந்திருந்த நடை, அவளை மேலும் நெருங்கியிருந்தது. இதற்கு மேலும் என்னால் ஓட முடியுமா, ஓட நெஞ்சில் பலம் இருந்தாலும், கால்களில் இல்லாதது போல உணர்ந்தாள்.

என்ன செய்வதாம், இரு காதுகளையும் இறுகப் பொத்திக்கொண்டு உரக்கக் கத்தவேண்டும் போலிருந்தது. கத்துவதால் என்ன வந்துவிடப் போகிறது? யார் ஓடி வந்து உதவப் போகிறார்கள், என நினைத்தவள், அவளது பைக்குள் ஜியோமண்ட்ரி பாக்ஸ் இருப்பதும், அதற்குள் இரு ஊசிகளுடைய கவராயம் இருப்பதும் நினைவுக்கு வந்தது. நடந்துகொண்டே, பைக்குள் கையை நுழைத்து, பாக்ஸை வேகமாகத் திறந்து, அதற்குளிலிருந்த இரண்டு கவராயங்களை எடுத்து, குத்துவதற்கு இலகுவாக, இரண்டு கைகளிலும் வைத்துகொண்டு நடையின் வேகத்தை மேலும் கூட்டினாள். நடையை  இதற்கும் மேலும் கூட்ட அவளிடம் பலமிருந்தாலும் வலு இருந்திருக்கவில்லை. உந்தி எடுக்கும் காலை தரையில் வைக்கமுடியவில்லை. வைத்தக்காலை எடுக்க முடியவில்லை. வலியால் கெண்டைக் கால்கள் கடுகடுக்கச் செய்தது. இன்னும் கொஞ்சத்தூரம்தான். இந்தக் காட்டைக் கடந்துவிட்டால், வெட்டவெளிதான்.

அவளைப் பின் தொடர்ந்த காலடிகள், கைநீட்டி அவளைப் பிடிக்குமளவிற்கு நெருங்கியிருந்தது. அவள், தன் தோளில் கிடந்தப் பையை, ஆடையை உரிப்பதைப்போல கழட்டி புதருக்குள் விட்டெறிந்தாள். இரு கைகளிலும் கவராயங்களையும், குத்திக் கிழிப்பதற்கு இலாவகமாக வைத்துக்கொண்டு, மூர்க்கத்தை நாசிக்குள் இறக்கி, விடைத்து, நிமிர்ந்து திரும்பி நின்றாள். அவளது பாதங்களிலிருந்து வெஞ்சூட்டு இரத்தம் தலையை நோக்கிப் பாய்ந்தது.

அவளைப் பின்தொடர்ந்து வந்திருந்த ஆணரவம், சற்றும் நிற்கவில்லை. நின்று என்ன, ஏது, யாரெனப் பார்க்கவோ, கேட்கவோ இல்லை. முன்னே விடவும், படுவேகத்தில் அவளிடமிருந்து விலகி, முன்னே சென்று, ஒரு புள்ளியாக மறைந்தது.

விடைத்து நின்றிருந்த சுப்ரியாவின் உடம்பு, தளர்வுக்கு வந்தது. சுற்றும் முற்றும் நாலாபுறமும் திரும்பிப் பார்த்தாள். அவளுக்கு அழுகை நெஞ்சுடைத்து வந்தது.

*** *** ***

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

2 Comments

  1. பிஞ்சு குழந்தை கதை பர பரப்பான எடுத்துரைப்பில் சு,ரா கதையை நகர்த்தி இருக்கிறார் . ஊடகங்களும் மனிதர்களும் பொதுவெளியில் ஓர் அவலத்தை விவாதிப்பது என்ன மாதிரியான பயபிம்பத்தைக் கட்டியமைத்து வதைக்கிறது என்று சொல்ல நினைக்கிறாரா , இதற்குத்தான் ஆசிகாவின் கொலையை பின்புலமாகக் கொள்கிறாரா என்றெல்லாம் கேட்கத் தோன்றுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button