
ஒரு சோம்பிக் கிடந்த ஞாயிறு காலை, சேஷாத்திரிபுரத்திலிருந்து ரேஸ்கோர்ஸை நோக்கி நடந்து கொண்டிருந்தான் சுதாகர். பெங்களூரின் இதமான குளிர் காற்று, அவன் சட்டைக்குள் புகுந்து வருடி விட்டுக் கொண்டிருந்தது. எழுபதுகளிலெல்லாம் பெங்களூர் (பெங்களூரூ?) உண்மையிலேயே கார்டன் சிட்டியாகத்தான் இருந்தது. இப்போதைய பெங்களூரு போல் போக்குவரத்து நெருக்கடியும், மாசு படிந்த காற்றும் அப்போதெல்லாம் இருக்கவில்லை. அந்த ஊர் மசாலா தோசையும், பரந்து, பசுமை மண்டிக் கிடந்த கப்பன் பார்க்கும், கண்ணாடி வீட்டைக் கொண்ட லால் பார்க்கும் பெங்களூர் மக்களுக்கு விடுமுறை நாட்களில் பெரும் ஆசுவாசம் கொடுக்கும் இடங்களாக இருந்தன. சேஷாத்திரிபுரத்தில் சுதாகர் இருக்கும் பேச்சிலர் லாட்ஜிலிருந்து நூறு மீட்டர் ஆரத்தில் ஒரு வட்டம் வரைந்தால், அந்த வட்டத்திற்குள் நான்கு தியேட்டர்கள் அடங்கியிருக்கும்.
லாட்ஜிலிருந்து வலதுபுறம் நடந்தால், முதலில் வருவது’ஸ்வஸ்திக்’ தியேட்டர். இந்த தியேட்டருக்குத்தான் நடிகை ஜெயந்தி சினிமா பார்க்க அடிக்கடி வருவார். இன்னும் ஒரு இருநூறு அடி நடந்தால்’கினோ’ தியேட்டர். இந்த தியேட்டரில்தான் சிவப்பு ரோஜாக்கள் படம் அதிக நாட்கள் ஓடியது. லாட்ஜிலிருந்து இடதுபுறம் திரும்பினால் முதலில் வருவது’நடராஜ்’ தியேட்டர். போனால் போகிறது என்று அவ்வப்போது கன்னடப் படம் போடுவார்கள். இன்னும் ஒரு பத்தடி நடந்தால்’சென்ட்ரல்’ தியேட்டர். இங்குதான் கமலின்’மரோசரித்திரா’ என்ற தெலுங்குப் படம் நூறு நாட்கள் தாண்டி ஓடியது. இதுதான் பின்னாளில்’ஏக் துஜே கே லியே’ என்று இந்தியில் எடுக்கப் பட்டது. இது இல்லாமல், சுதாகர் ஆபீஸ் இருக்கும் மெஜஸ்டிக் ஏரியாவில் தடுக்கி விழுந்தால் தியேட்டர் மேலோ அல்லது பாரின் மேலோதான் விழ வேண்டும். தாகம் எடுக்கும் போதெல்லாம், வசதியுள்ள இளைஞர்கள் பலர் தண்ணீருக்குப் பதில் பீர் குடித்துக் கொண்டிருப்பார்கள்.
இதையெல்லாம் இவ்வளவு விலாவாரியாகச் சொல்வது ஏனென்றால், சுதாகர் போன்ற பேச்சிலர்களுக்குச் செலவு வைக்க இத்தனை வசதிகள் இருக்கும் இந்த ஊரில், சுதாகர் வாங்கும் சம்பளம் பதினைந்து தேதிக்கு மேல் வருவதில்லை என்பதை நியாயப்படுத்தத்தான். இவையெல்லாம் போக, ஞாயிற்றுக்கிழமைகளில் அவன் ரூமில் காலையில் தொடங்கி இரவு வரை மஹாபாரத யுத்தம் போல் நீளும் ரம்மி ஆட்டமும், அதில் பறிபோகும் பணமும் அடங்கும்.
இப்போது கூட அவன் ரேஸ் கோர்ஸ் நோக்கி போய்க்கொண்டிருப்பது ரேஸ் ஆட என்று தவறாக நினைக்க வேண்டாம். ரேஸ் பற்றி அவனுக்கு ஒன்றும் தெரியாது. ரேஸ்கோர்ஸ் மைதானத்திற்கு எதிரில் இருக்கும் வெஸ்ட் எண்ட் ஹோட்டலில் Banquet Hall மேனேஜராக இருக்கும் அவனின் நெருங்கிய பள்ளி நண்பன் கிருஷ்ணமூர்த்தி என்ற கிருஷிடம் நூறு ரூபாய் கடன் வாங்கத்தான். கிருஷ் கர்ணனைப் போல….இல்லை என்று எப்போதும் சொன்னதே இல்லை. அதே போல் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டதும் இல்லை. அதற்காக சுதாகர் அடிக்கடி அவனிடம் பணம் கேட்பதுவுமில்லை. எங்கும் கடன் கிடைக்காமல், அடுத்த வேளை சாப்பாட்டுக்குத் தட்டுப்பாடு வரும்போது மாத்திரம் அவனிடம் கேட்பான். நேற்று போன் செய்யும் போது தனக்கு டூட்டி இருப்பதால் ஹோட்டலில் வந்து வாங்கிக் கொள்ளச் சொல்லியிருந்தான். நடைபாதையில் சுதாகரைக் கடந்து சென்ற இருவர், ‘பார்பரோதான் வரும் அது இல்லைன்னா பிளாக் பேர்ட்’ என்று உரத்துப் பேசிக்கொண்டே சென்றனர். கொஞ்ச நேரம் கழித்துத்தான் புரிந்தது, இருவரும் ரேஸ் குதிரைகளைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று. இப்போது சிரித்துக் கொண்டிருக்கும் இவர்களின் முகங்கள் இன்று இரவு எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தான் சுதாகர். அரை போதையுடன் அடுத்த ஞாயிறு ஓடப்போகும் குதிரைகளைப் பற்றி கனவு கண்டுகொண்டிருப்பார்கள் என்று தோன்றியது.
அதற்குள் கிருஷ் வேலை செய்யும் வெஸ்ட் எண்ட் ஹோட்டல் வந்து விட்டது. தங்க நிறத்தில் பளபளத்துக் கொண்டிருந்த அந்த ஸ்டார் ஹோட்டலின் பெயரும், நுழை வாயிலில் கம்பீரமாய் ராணுவ மிடுக்கோடு உயரமாய், சிறந்த உடையலங்காரத்தோடு நின்று கொண்டிருந்த அந்த மனிதனும் அவனுக்குள் ஒரு பயத்தை ஏற்படுத்தினர். ஏனென்றால் சத்தியமாக இதுவரை அவன் நட்சத்திர ஹோட்டலுக்குள் நுழைந்தது இல்லை. அதிக பட்சம் அன்னபூர்ணாவிலும், ஹோட்டல் காமத்திலும் நுழைந்து, ‘ஒந்து மசால் தோசை கொடிரீ’ என்று மட்டுமே பந்தா காண்பித்திருக்கிறான். நடந்து உள்ளே போகும்போது அந்த வாயிற்காப்பாளர் மடக்கி, ஏதேனும் கேள்வி கேட்பாரோ என்ற பயம் இருந்தது. பேசாமல் ஒரு ஆட்டோவில் வந்திருந்தால் நேராக உள்ளே போயிருக்கலாமோ என்று தோன்றியது. அவனின் வறண்டு கிடந்த பாக்கெட் ஞாபகம் வந்து அந்த எண்ணத்தை அடித்துத் துரத்தியது. நல்ல வேளையாக, காரில் வந்த ஒரு கனவான், காரை நிறுத்தி வாயிற்காப்பாளருடன் ஏதோ கேட்டுக் கொண்டிருக்கும் போது விடுவிடுவென நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு உள்ளே நுழைந்து விட்டான் சுதாகர். ரிஷப்ஸன் என்று அம்பு போட்டிருந்த பகுதிக்குச் சென்று கண்ணாடிக் கதவைத் திறந்தபோது சில்லென்ற ஏ.சி. காற்று அவன் முகத்தை அறைந்தது. மெத்தென்ற கார்பெட்டும், பகல் பொழுதை மேலும் பகலாக்கிக் கொண்டிருந்த தொங்கு விளக்குகளும், ஏதோ அரண்மனைக்குள் நுழைந்த பிரம்மையை அவனுக்கு ஏற்படுத்தின. கையில்லாத ரவிக்கை அணிந்து, சந்தன நிறத்தில், வழவழப்பான வாழைத்தண்டைப் போன்ற கைகளைக் கொண்ட அழகான பெண்கள் இருந்த வரவேற்புப் பகுதியை நெருங்கினான். அவர்கள் மங்களூர்ப் பெண்களாகத்தான் இருக்க வேண்டும். அவர்களுக்குத்தான் இயற்கையான இந்த மஞ்சள் நிறம் அமையும். மனப்பாடம் செய்து கொண்டு போன ஆங்கிலத்தில் கிருஷ்ஷைப் பற்றி கேட்டவுடன், தொலைபேசியில் யாருடனோ தொடர்பு கொண்டு நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசிவிட்டு, அவனைப் பார்த்து, ‘தாங்கள் அந்த இருக்கையில் அமர்கிறீர்களா? அவர் வந்து கொண்டிருக்கிறார்’ என்றாள் ஆங்கிலத்தில். உட்கார்ந்து அங்கே கிடந்த டெக்கான் ஹெரால்டை புரட்டிக் கொண்டிருக்கும்போது ‘ஹை’ என்று அவன் தோளைத் தட்டினான் கிருஷ். ‘கம்.. வி வில் கோ டு மை ரூம்’ என்று அவனைக் கூட்டிச் செல்லும்போது ரிஷப்ஸன் அழகிகள் அவனுக்கு முறுவலுடன் கை காட்டினர். ஹோட்டலின் உடுப்பான கோட் சூட்டில் ‘சிவப்பு ரோஜாக்கள்’ கமல் போல் இருந்தான் கிருஷ். போய்க்கொண்டிருக்கும் போதே எதிரே வந்த ஒரு ஹோட்டல் சிப்பந்தி, ‘சார், சீனியர் உங்களை அவசரமாகக் கூப்பிடுகிறார்’ என்றவுடன், கிருஷ் சுதாகர் கையில் நூறு ரூபாயை யாரும் பார்க்காத சமயத்தில் சொருகிவிட்டு,’ஓ.கே. சாரி.. மீட் யூ லேட்டர்’ என்று விடை பெற்றான். வெளியே வரும் போது மீண்டும் மங்களூர் அழகிகளின் அழகைப் பருகத் தவறவில்லை சுதாகர்.
இந்த இடத்திலாவது சுதாகருக்கும், கிருஷ்ஷுக்குமான நட்பின் ஆழத்தைக் கட்டாயம் சொல்ல வேண்டும். டவுனும் அல்லாத கிராமமும் அல்லாத இரண்டும்கெட்டான் ஊரான தென்னிலை உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பிலிருந்து எஸ்.எஸ்.எல்.சி. வரை சுதாகரும் கிருஷ்ஷும் ஒன்றாகப் படித்தவர்கள். கிருஷ்ஷின் அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, தங்கை எல்லோரும் பெங்களூரில் இருந்தாலும், கிருஷ் மாத்திரம் தென்னிலையில் பாட்டி வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தான். தீண்டாமை முற்றிலும் விலக்கப்படாத எழுபதுகளில், சாஸ்திரோசமான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், சுதாகரையும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த ராஜுவையும் பாட்டி இல்லாத சமயத்தில், அவன் வீட்டுக்குக் கூட்டிச் சென்ற சோசலிசவாதி கிருஷ். மூன்று வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்களின் அழகிய நட்பைப் பார்த்துப் பொறாமைப் படாதவர்களே இல்லை அந்தப் பள்ளியில். காலங்கள் கடந்து சுதாகருக்கு மத்திய அரசில் வேலை கிடைத்து பெங்களூரில் போஸ்ட்டிங் கிடைத்தபோது, முதலில் சுதாகர் பெங்களூரில் தேடியது கிருஷ்ஷைத்தான். எப்போதோ அவன் சொன்ன நம்பர் 1, கிரசண்ட் ரோடு என்ற முகவரி மனதில் பதிந்திருந்தது. சுதாகர் போன சமயம் வீட்டில் இருந்த அனைவரையும் அறிமுகப் படுத்தி வைத்தான் கிருஷ். அவனைப் போலவே நல்ல சுபாவம் கொண்டவர்களாக இருந்தனர் அவன் குடும்பத்தினர். ஹோட்டல் சம்பந்தப்பட்ட கோர்ஸ் முடித்துவிட்டு, வெஸ்ட் எண்ட் ஹோட்டலில் வேலை செய்து கொண்டிருப்பதாகக் கூறினான். அதன் பிறகு அவர்களின் நட்பு மீண்டும் துளிர் விட்டது. நேரம் கிடைக்கும்போது கிருஷ் சுதாகரின் ரூமுக்கு மாலை வேளையில் வருவான். ‘கம் லெட் அஸ் கோ ஃபார் எ வாக்’ என்பான். அவர்களின் வாக் மல்லேஸ்வரத்தில் உள்ள ஒரு மதுக்கூடத்தோடு முடிந்து விடும். முகம் தெரியாமல் எப்போதும் மெல்லிய இருள் படர்ந்திருக்கும் அந்த பாருக்கு கிருஷ் ஒரு விஐபி. முதலாளியிலிருந்து அங்கு வேலை செய்யும் அனைவரும் அவனுக்குத் தெரிந்தவர்களாக இருந்தனர். குளிர்ந்த பீருடன் அவர்கள் டின்னர் முடியும். எப்போதும் போல கிருஷ்தான் பில் கொடுப்பான். அலுவலகத்தில் பாண்டுரங்கா, சுதாகரைக் கூப்பிட்டார். சக ஊழியர். பெங்களூர்க்காரர். எல்லா மொழிகளிலும் பேசுவார். எப்போதும் அவர் பேச்சில் நகைச்சுவை இருக்கும். எந்த மொழியில் பேசினாலும், இடையில் கன்னடத்தில் பேசி தன் தாய்மொழிப் பற்றை நிரூபிப்பார். ‘வேல பாக்கற ஒரு பொண்ணு இருக்குது. கல்யாணம் பண்றியா.. வயசாகுது உனக்கு’ என்றார். சுதாகருக்கும் அந்த எண்ணம் இருந்தது. அவனுக்கென்று எந்த உறவும் இல்லாததால் அவன் கல்யாணத்தை அவன்தான் நடத்திக் கொள்ள வேண்டும். ‘பொண்ணு யாருங்க பாண்டு?’ என்றான் சுதாகர். ‘ம்.. எல்லாம் உனக்கு தெரிஞ்ச பொண்ணுதான். டைப்பிங் செக்சனில் வேலை செய்ற ஊர்மிளா. அவ யூ.டி.சி. உன்னை விட சம்பளம் ஜாஸ்தி.. அவ அப்பா மலையாளி, அம்மா தமிழு.. வீட்ல தமிழு மாத்தாடுத்தாரே… ஒரே பொண்ணு.. இந்திரா நகர்ல சொந்த வீடு… அது உனக்குத்தான் ஏனு ஏழுத்தியா?’ என்றார்.
எல்லாம் சரிதான்… ஊர்மிளாவோடு காதல் வாழ்க்கை வாழ்வதை நினைத்தால்தான் பயமாக இருந்தது சுதாகருக்கு. காதல் உணர்வு வரவேண்டிய இடத்தில் பரிதாபம் சுரந்து விடுமோ என்ற சந்தேகம் வரும்படியான உடல்வாகு. ஒரு குச்சிக்கு சேலை கட்டியதைப் போன்ற கெச்சலான தேகம். நிறம் அவனைவிட கருப்பு. கடுகைப் போல சிறுத்துப் போன உருவம். உச்ச கட்டமாக, எப்போதும் சளி பிடித்த மூக்கும், கையில் கைக்குட்டையுமாய் இருப்பாள். ஆனாலும் அவளின் சம்பளமும், அவளால் கிடைக்கும் வசதிகளும் காந்தத்தைப் போல அவனை இழுத்தது. யோசனை செய்து முடிவு சொல்வதாகச் சொல்லி அப்போதைக்கு பாண்டுவிடம் இருந்து தப்பித்துக் கொண்டான்.
ஒரு நாள் வழக்கம்போல் கடுமையான பணத் தட்டுப்பாடு வந்தபோது கிருஷ்ஷின் வீட்டிற்குப் போனான் சுதாகர். கிருஷ்ஷின் செல்லத்தங்கை உஷா கதவைத் திறந்தாள். வீடு அமைதியாக இருந்தது. அண்ணன்களெல்லாம் வேலைக்குப் போய் விட்டதாகவும், அம்மா அப்பா ஒரு கல்யாணத்திற்குப் போயிருப்பதாகவும் சொன்னாள். ‘நீ காலேஜ் போகலயா?’ என்றான் சுதாகர். கல்லூரியில் மூன்றாம் ஆண்டு வணிகவியல் படித்துக் கொண்டிருப்பதாக கிருஷ் கூறியிருக்கிறான். ‘ம்..காலேஜ் லீவு’ என்று கூறி அழகாகக் கொட்டாவி விட்டாள். அன்றுதான் அவளை அவ்வளவு நெருக்கத்தில் பார்த்தான் சுதாகர். மாடர்ன் டிரஸ்சில் இளமைத் துள்ளலுடன் இருந்தாள். முழங்காலுக்குக் கீழே தெரிந்த அவளின் வெளுத்த கால்கள் அவனின் கண்களை சுண்டி இழுத்தன. நண்பனின் தங்கை என்ற உணர்வு அறிவுக்குத் தெரிந்தாலும், அவளின் அழகும், இளமையும் அவனின் மனக் கட்டுப்பாட்டுக்குச் சோதனை வைத்தன.. இனி அங்கு இருந்தால் ஆபத்து என்று உள்ளுணர்வு சொல்லியதால், அங்கிருந்து கிளம்ப முயற்சித்தான். அவன் எழ முயற்சிப்பதைப் பார்த்ததும், ‘உட்காரு..காபி குடிச்சுட்டுப் போ.. இல்லன்னா கிருஷ் என்னைத் திட்டுவான்’ என்றாள்.
அவனின் பதிலை எதிர்பார்க்காமல் சமையல் கட்டுக்குப் போனாள். ஏதோ ஒரு அசட்டுத் துணிச்சலில் பின்னாலேயே சென்று அவள் காபி போடும் அழகை ரசித்துக் கொண்டிருந்தான் சுதாகர். காபி வாசத்தையும் மீறி அவளிடமிருந்து மனதை மயக்கும் ஒரு வாசனை வீசிக் கொண்டிருந்தது.
‘நீ ரொம்ப நல்லவன்னு எங்க வீட்ல எல்லோரும் சொல்றாங்க…அப்படியா?’ என்றாள்.
‘அப்படியா? கிருஷ் ஒருவேளை அப்படிச்சொல்லி வைத்திருப்பான்’ என்ற சுதாகர் அத்தோடு நிறுத்தாமல், ‘நீ அழகா இருக்கே..’ என்று உளறினான். கோபப்படுவாள் என்று எதிர்பார்த்ததற்கு மாறாக உஷா கூலாக, ‘இப்படிச் சொன்ன ஏழாவது ஆள் நீ’ என்றாள். அதுவரை இனிப்பாக இருந்த காபி இப்போது சுதாகருக்குக் கசந்தது. வழக்கம் போல் மாலை ஐந்து மணிக்கு ஆபீஸ் விட்டு மெஜஸ்டிக் சர்க்கிள் வழியாக ரூமுக்கு வந்து கொண்டிருந்தான் சுதாகர். தலை வலிப்பது போல் இருந்தது. ஒரு காபி குடிக்கலாம் என்று காமத் ஹோட்டலுக்குள் நுழைந்தான் சுதாகர். ஒரு காபி சொல்லிவிட்டு சுற்றிலும் பார்த்தபோது உஷாவைப் பார்த்தான். தன் கல்லூரித் தோழிகளுடன் வந்திருந்தாள் உஷா. சுதாகரைப் பார்த்து விட்டு ‘ஹாய்’ என்று அருகில் வந்தாள். நவீனமாகத் தைக்கப்பட்டிருந்த சுடிதாரில் மிக அழகாக இருந்தாள். அவள் மேல் லேசாக இருந்த கோபம் போய் மீண்டும் காதல் வந்தது. ‘போயிடாதே இரு வர்ரேன்’ என்று கூறிவிட்டு தோழிகளை அனுப்பிய பின் அருகில் வந்தமர்ந்தாள். இன்று அவளிடம் இருந்து மல்லிகை மணம் வீசியது. எத்தனை வாசனை திரவியங்கள் வைத்திருப்பாள் என்று யோசித்தான் அவன். அவள் அருகில் உட்கார்ந்திருப்பதே பெருமையாக இருந்தது அவனுக்கு. அவர்கள் இருவரையும் பார்ப்பவர்கள் எல்லோரும் பொறாமையில் பார்ப்பது போலவே இருந்தது. திடீரென்று கேட்டாள், ‘உனக்கு எவ்வளவு சம்பளம்?’ ‘இருநூற்று அறுபது பேசிக்’ என்றான்.
புரியாததால் முறைத்து விட்டுக் கேட்டாள், ‘வீட்டுக்கு எவ்வளவு சம்பளம் கொண்டு போவாய்?’.
‘எல்லாப் பிடித்தமும் போக அறுநூறு ரூபாய்..’ என்றான் பெருமையாக.
‘நீ என்ன வேலை பார்க்கிறாய்?’ என்றாள் சுருதி குறைந்து.
‘எல்.டி.சி.’ என்றான்.
‘அப்படின்னா?’ என்றாள்.
பேசும் போது அசைந்த இதழ்களும், சற்றே தெரிந்த வெண் பற்களும் எந்த இளைஞனையும் நிலைகுலையச் செய்யும். ‘அப்படின்னா.. லோயர் டிவிசன் கிளர்க்.. கிளர்க்குக்கும் கொஞ்சம் கீழே.. பியூனுக்கும் கொஞ்சம் மேலே’ என்று ஹரிச்சந்திரனைப் போலப் பேசி, தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டான் சுதாகர். முக்கியமாக பியூன் என்ற பதத்தை உபயோகித்திருக்கக் கூடாது என்பதை அவள் முகம் போன போக்கை வைத்து லேட்டாக உணர்ந்தான்.
‘நான் சொல்றதால ஃபீல் பண்ணாத.. உன்னோட ஒரு மாச சம்பளம் எனக்கு ஒரு சுடிதார் வாங்கக் கூட கட்டி வராது. என்னோட அண்ணன்கள் எனக்கு ஒவ்வொரு மாசமும் பாக்கெட் மணியா குடுக்கற பணம் உன் சம்பளத்தை விட அதிகம். எனக்கு ரெண்டாவதா ஐ லவ் யூ சொன்னவன் யார் தெரியுமா? என் காலேஜ் சீனியர். அவன் அப்பா கர்நாடகாவின் ஹெல்த் மினிஸ்டர். ராஜாஜி நகர்ல பெரிய வீடு. நாலு கார் வச்சிருக்காங்க. என்னைக் கல்யாணம் பண்ணத் தயாரா இருக்கான். ஆனா என்ன.. ஒரு தடவை நந்தி ஹில்ஸ் போனப்ப அங்க இங்க கை வச்சான். மற்றபடி நல்ல பையன். நீ ஒண்ணும் பேஜார் ஆக வேண்டாம்…. சரியா?’ என்றாள் ஆறுதலாக.
கலவையான உணர்ச்சியில் இருந்த சுதாகரிடம், ‘கிருஷ்கிட்ட இதை…’ அவள் முடிப்பதற்கு முன் சுதாகர் கூறினான், ‘நான் சொல்ல மாட்டேன்’. ‘சொல்லுடா… அப்பத்தான் சீக்கிரம் கல்யாண ஏற்பாடு செய்வாங்க.’ என்றாள் கூலாக.
அடுத்த நாள் அலுவலகத்தில் பாண்டுரங்காவிடம் கூறினேன், ‘ஊர்மிளாவைக் கல்யாணம் செஞ்சுக்கறேன்’.
‘அவ்தா? ஒல்லது… வர்ற ஞாயித்துக்கிழமை காலைல பத்துமணிக்கு நல்ல நேரம் தொடங்குது. அப்ப அவங்க வீட்டுக்குப் போகலாம்’ என்றார் பாண்டு.
அலுவலகக் காலண்டரில் பார்த்தான் சுதாகர். அந்த ஞாயிற்றுக்கிழமை அவன் ராசிக்கு சந்திராஷ்டமம் என்று போட்டிருந்தது. கல்யாணத்திற்குப் பிறகு பெண்கள் உபயோகிக்கும் அழகிய கைக்குட்டைகளும், சளி மருந்துகளும் நிறைய வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். ஊர்மிளாவிற்கு உபயோகப்படும் என்று நினைத்துக் கொண்டான் சுதாகர்.