
(22.06.19 அன்று ‘வாசகசாலை’ சார்பாக எழுத்தாளர் சாம்ராஜின் ‘ஜார் ஒழிக’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பேசிய உரையின் எழுத்து வடிவம்.)

வாசகசாலை நண்பர்களுக்கு வணக்கம். தமிழகந்தோறும் இலக்கிய சந்திப்புகளை நிகழ்த்தி வருவது என்பது சாதாரண வேலையில்லை. மாதக் கூட்டங்கள் நடத்துவதில் நானும் எனது சில நண்பர்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். வெண்முரசு நாவலுக்கான கூட்டங்கள் மூலம் அதை நடத்துகையில் அதில் உள்ள ஆனந்தத்தோடு சேர்த்து அதிலிருக்கும் இடர்களையும் அறிவோம். அவ்வகையில் வாசகசாலை இன்னும் பலதரப்பட்ட படைப்புகளையும் அறிமுகம் செய்து, வெவ்வேறு வாசகர்களையும் சந்திக்கிறது. இதை முன்னெடுப்பதற்கு இன்னும் நிறைய பக்குவமும் விடாமுயற்சியும் தேவைப்படும். கார்த்தி உள்ளிட்ட வாசகசாலை நண்பர்களுக்குப் பாராட்டுக்கள். நானும் சில கூட்டங்களில் இவ்வாறு வாசகனாக கலந்து கொண்டிருக்கிறேன். ஜோடி குரூஸ் கலந்துரையாடலும் வாசகசாலையின் விருது விழாவும் அதில் நினைவில் இருக்கின்றன. ஸ்டார் எழுத்தாளர்களின் அரங்கிற்குத் தான் நானும் வந்திருக்கிறேன் என்பதை ஒருவித குற்ற உணர்ச்சியுடன் ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.
இன்றும் ஒரு ஸ்டார் எழுத்தாளரின் அரங்கு. அந்த வகையில் குற்ற உணர்ச்சி தொடருகிறது என்றே வைத்துக் கொள்ளலாம்.
இலக்கிய உலகம் என்பது எப்பொழுதும் ஒரு தனித் தீவு போலத் தான். பொது வாசகர் உலகத்திலிருந்து விலகியே இருப்பது. பொது வாசகர்களுக்கு இலக்கியகர்த்தாக்கள் நேர்மறையாக அறிமுகமாகிறார்கள் அல்லது எதிர்மறையாக. நேர்மறையாக என்றால் கற்றதும் பெற்றதும், கதாவிலாசம் வழியாக என வைத்துக் கொள்ளலாம். தற்பொழுது எல்லாம், தமிழ் இலக்கியத்தில் பல எழுத்தாளர்கள் சர்ச்சை மூலமாகத் தான் பொது வாசகருக்கு அறிமுகமாகிறார்கள். அதன் பின் அவரது படைப்புக்களை வாசகன் படிக்கத் துவங்குகிறான். அவ்வாறு, அந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து வரும் வாசகர்கள், அதன்பின் சமூகம் இயல்புநிலைக்குத் திரும்பிய பின்னரும் அந்த எழுத்தாளரை சர்ச்சைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு அவரின் எழுத்துக்களுக்காக தொடர்ந்து வாசிக்கிறார் என்றால் அது அந்த எழுத்தாளர் அடைந்த வெற்றி என்று வைத்துக் கொள்ளலாம். அவ்வாறு தொடர்ந்து வாசிக்க வைக்கும் எழுத்தாளர்கள் வெகு சிலரே.
நான் ஜெயமோகன் சாம்ராஜ் இருவரையும் அறிந்தது இப்படிப்பட்ட சர்ச்சைகள் வழியாகத் தான். அந்த வகையில் அதில் இரண்டாமிடத்தை சாம்ராஜ் க்கு அளிக்கலாம்.
சர்பத் கடையைத் தாண்டி முவிலேண்ட் வந்த பிறகு தான் அவர் படைப்புகளை வாங்கிப் படிப்பதற்கான ஆர்வம் ஏற்பட்டது. பட்டாளத்து வீடு தொகுப்பைத் தொடர்ந்து அடுத்த சிறுகதைத் தொகுப்பு இந்த “ஜார் ஒழிக!”
அவரின் இந்த ஜார் ஒழிக தொகுப்பினைப் பற்றி பேசுகையில் அவர் எதற்காக எழுதுகிறார் என்பதை முதலில் நாம் கவனிக்க வேண்டும் என்று தோன்றியது. அதன் வழியாக இந்த உரையைக் கொண்டு செல்லலாம் எனத் தோன்றியது. இதில் எனக்கு இரு நிலைகள் தோன்றுகின்றன. முதலாவது யாருக்காக எழுதுகிறார் என்பது, இரண்டாவது ஏன் எழுதுகிறார் என்பது
முதலாவதில் அவரது வாசகராக யாரைக் கருதுகிறார் என்று ஒரு உட்கேள்வி இருக்கிறது. அதிலிருந்து துவங்கலாம் என்று நான் நினைக்கிறேன்
உதாரணமாக, ஒரு விஷ்ணு கோயில் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்தக் கோயில் வாசலில் ஒருவர் கரும்பலகையில் இவ்வாறு எழுதி வைத்திருக்கிறார்.
‘எழுந்தால் பாம்பு தலையில் கொத்தி விடும், நகரவிடாமல் இவன் காலை ஒருத்தி இறுக்கிப் பிடித்திருக்கிறாள். அதையும் உதறி இறங்கினால் இருப்பதோ ஒரு கடல். அப்படியிருக்கையில் இவனே தூங்கவில்லை. தூங்குவதுபோல நடிக்கிறான். இவனா நம் கஷ்டத்தை தீர்த்து வைப்பான்’ என்று அதில் இருக்கிறது.
இதைக் காணும் ஒரு வைணவர் மிகவும் புண்பட்டுப் போவார். எழுதியவனைப் பார்த்துத் தூற்றுவார். இதை ஒரு நாத்திகரோ அல்லது இடதுசாரியோ ( அல்லது சைவரோ) கண்டால் எழுதியவரைப் பாராட்டுவார்கள்.
இனி அந்த உரையின் கீழே ஒரு ஆழ்வார் பெயரை இடுகிறோம். அதை எழுதியவர் பேயாழ்வார் என்று. அப்பொழுது இதைப் பற்றி முன்பு உரைத்தவர்கள், அப்படியே தான் உரைத்ததற்கு எதிர்நிலையை எடுப்பார்கள்.
ஆனால் இருபக்கங்களிலும் ஒரு சிலர் இருப்பார்கள், அவர்கள் முன்பும் சரி இப்பொழுது அவர் யாரென தெரிந்த பின்பும் சரி அதை ஒரு பெரும் புன்னகையோடே கடந்து செல்வார்கள். “ஆமாம்யா. நம்ம பிரச்சனை தான் சாமிக்கும் இருக்கு.. தலைக்கு மேல வீட்டுக்கடன் கொத்த ரெடியா இருக்கு.. நகர விடாம வீடு இறுக்க பிடிச்சுகிட்டே இருக்கு. தப்பிச்சு போகலாம்னா, மொத்தமா மூழ்கித் தான் போகணும். அதனால், இந்த வீடே இப்போதைக்கு பரவால்ல. ஆண்டவா உன்னமாதிரியே தூங்குன மாதிரி இருக்க எனக்கும் வழி பன்ணா நானுமே சமாளிச்சுடுவேன்.” னு வேண்டி கிட்டு வருவார் ஒருவர். மற்றவரோ, “பாவம் நம்ம கஷ்டம் தான் இவருக்கும் போலிருக்கு. நம்பிக்கையா இருங்க தோழர்”னு சொல்லி சிரித்து விட்டுச் செல்வார். இவ்வாறு இரு பிரிவிலும் இதை உணர்ந்து கடக்க சிலர் இருப்பார்கள். அவர்களே சாம்ராஜின் வாசகர்கள் என்று சொல்லலாம் அந்த ஒரு புரிதல் இருப்பவரே சாம்ராஜை அணுக்கமாகப் புரிந்து கொள்ள முடியும்.
சாம்ராஜின் தொழில் புரட்சி கதையை வைத்து இதை அணுகுவோம். மிராச்லோவ் பென்கோ எழுதிய சிறுதையை ‘லெனினை வாங்குதல்’ என்ற பெயரில் சுகுமாரன் மொழி பெயர்த்திருக்கிறார். அந்தக் கதையைப் பற்றி நண்பர் பாரி சில மாதங்கள் முன்பு உரையாடினார். நான் அவரின் அந்த ஒரு கதையத் தான் படித்திருக்கிறேன். அது முழுக்க முழுக்க கம்யூனிஸ்டுகளைக் கிண்டல் செய்யும் கதை. அதைப் படித்தால் தான் கம்யூனிஸ்டுகளை கிண்டல் செய்வதற்கும் பகடி செய்வதற்கும் உள்ள வேறுபாடு புரியும். மிராச்லோவ் ஒரு கம்யூனிஸ்டாக இருந்தவர் தான். ஆனால் ஒருவர் தன் வெறுப்பால் கிண்டல் செய்வதற்கும் இதற்கும் வித்தியாசம் உண்டு.
லெனினை வாங்குதல் கதைக்கு, சாம்ராஜின் தொழிற்புரட்சி கதையை ஒரு சோற்றுப் பதமாக எடுத்துக் கொண்டு சாம்ராஜின் கதைகளை அணுகலாம்
அதை ஒரு மோசமான கிண்டல் எனச் சொல்லலாம். ஆனால் இது பகடி நம் பாஷையில் சொன்னால் கலாய்ப்பது.
அப்பர் எழுதிய பாடல் ஒன்று உண்டு.
“நாகத்தை நங்கை அஞ்ச நங்கையை நாகம் அஞ்சி ….திங்களை மின்னென்று அஞ்சி” என்று,
இந்தப்பாடலை விளக்கிய என் ஆசிரியர் சுற்றிலும் நாகத்துக்கும் நங்கைக்கும் பயந்த பக்கதர்களைக் கண்டு தான் இறைவன் புன்னகைக்கிறான். இது அப்பர் செய்யும் பகடி என்று ஒரு விளக்கம் அளித்தார். அப்படியும் பொருள் கொள்ளலாம் தான். அதனால் பக்தர்கள் கோபித்தால் அது யார் தவறு.
இந்த புரிதலோடு சாம்ராஜின் கதையை அணுகுபவர்கள் கூட அவர் இதில் மறைத்து வைத்திருக்கும் பல கன்னிவெடிகளுக்குள் சிக்கக் கூடும். அதில் அவர்களின் அகங்காரமே சிதறக் கூடும். அல்லாவிடில், அது சம்பந்தப்பட்ட மக்களே அதைக் கவனிக்காமல் காலை வைத்து கலங்கவும் கூடும்.
குள்ளன் பினு தன் வண்டியை நிறுத்த இடம் தேடுவது, நீரோட்டம் பார்ப்பவன் தண்ணீர் தேடுவது போல இருக்கும் என்று சொல்வார். ஒரு நவநாகரீக இளைஞனை குள்ளன் என்ற பதமே தொந்தரவு செய்யும். இது வெகுஜன இதழில் வந்திருந்ததா என்று தெரியவில்லை. வந்திருந்தால் அவர்களே மாற்றச் சொல்லியிருப்பார்கள் என்றும் கூட எதிர்பார்க்கலாம். ஆனால், ஒட்டுமொத்தமாக பார்த்தால் தான் புரியும் இது குள்ளன் கதை அல்ல. அவன் உயரமானவன் என்று சொல்லும் கதை என்று.. இறுதியில் அவன் காணும் பிம்பம் அவனிடம் சொல்கிறது, “தம்பி, இனி உனக்கு மூர்த்தி சிறுசானாலும் கீர்த்தி பெருசு” என்று. இங்கே அவர் கிண்டல் செய்யவில்லை அது ஒரு கரிசனம் தான். முன்பு அதைச் சொன்னால் தான் பின்பு இது உரைக்கும். ஒரு பகடியிலிருந்து ஆக்ரோஷத்துக்கு வந்து திகைப்பில் முடியும் அந்த சிறுகதை.
பொதுவாகவே இடதுசாரிகள் பரிதாபத்திற்குரிய ஜீவன்கள் அனைவர் மீதும் கரிசனம் கொண்டவர்கள். அதைத் தீவிரமாக அணுகாமல் சற்று இளகிய மனதுடன் அணுகினால் வருவது இவர் படைப்புகள். ஏனெனில், மிகத்தீவிரமாக அல்லது அதே தீவிரத்தோடு அதைக் கடத்தும் போது அந்தப் பட்டியலில் இருக்கும் பல எழுத்தாளர்களோடு ஒருவராக இவரும் சென்று அமர்வார் என்று எண்ணத் தோன்றுகிறது. அவ்வரிசையிலிருந்து இப்படி தனித்திருக்க மாட்டார் என்று சொல்லலாம்.
உதாரணமாக, மல்லிகாவை கூட்டிப் போகிற ஆறுமுகம் அவளை என்ன செய்யப் போகிறான் என்பதை நமக்கு நேரிடையாகச் சொல்வதில்லை. ஆறுமுகம் அவளிடம் வந்து சொல்லும் ஒரு விஷயம். “பரங்கிமலையில ஜோதின்னு ஒரு தியேட்டர் இருக்காம் அதுல நான் வேலைக்குப் போறேன்” என்று, இதிலிருந்து நாம் தான் சிலவற்றை விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது. ஒருவேளை அவன் இவளை வெறும் காமத்திற்காக மட்டுமே வைத்திருக்கிறானா என்பது. அதற்கான மர்ம முடிச்சான இடமாக இது இந்தக் கதையில் உண்டு. ஆனால் பிறகு அவளை அவள் அண்ணன் பிரித்து அடித்து இழுத்து வருகிறான். இப்படி உறவுகளால் அலைக்கழிக்கப்பட்டாலும் அவளின் தனிப்பட்ட ரசனை அந்த சினிமா ஆர்வம் தானே. அது உடனே மாறுவதில்லை. அவள் பொய் சொல்லிவிட்டு சினிமா பார்க்க கிளம்பத்தான் செய்கிறாள். சில ஏமாற்றங்களுக்காக அவளின் சினிமா பைத்தியம் இல்லாமல் போய்விடுமா என்ன? பொதுவாகவே, அப்படிப்பட்ட பைத்தியங்கள் விட்டு போகக் கூடியவையா என்ன? அந்த பைத்தியங்கள் விட்டுப் போவதில்லை. நமக்குமே அது பொருந்தும் தானே. இங்கே எத்தனை பேர் இலக்கிய கூட்டத்துக்கு போகிறேன் என்று வீட்டில் ஒவ்வொரு முறையும் சொல்லிவிட்டு கிளம்புகிறீர்கள். உங்களின் உத்தமர் யாரோ அவரே முதலில் கை உயர்த்துங்கள்.
சாம்ராஜை தன் புலி எதிர்ப்பு கவிதைக்காகவும் பகடிக்காகவும் ஷோபாசக்தியுடன் ஒப்பிடுபவர்கள் உண்டு. ஆனால், அவர்கள் இருவருக்கும் இருக்கும் முக்கிய வேறுபாடு என்று நான் நினைப்பது இதுதான். ஷோபா செய்வதும் ஒருவகையில் கிண்டல். கண்டிவீரனில் ஒரு இடம், கண்டிவீரன் தன்னைக் கடத்தி வைத்திருப்பவரைத் தாக்க வரும் பெரும் இயக்கத்தினரைச் சுட்டு விடுகிறான். அப்போது ஷோபா சக்தி அதை வர்ணிக்கும் பொழுது, “துப்பாக்கிச் சத்தம் கேட்டால் எப்படி ஒளிந்து கொள்ள வேண்டும் என அவர்களின் இயக்கம் கற்றுக் கொடுத்திருந்தது அதன்படி அவர்கள் அனைவரும் சென்று ஒளிந்து கொண்டனர்’ என்று சொல்வார.
இது லட்சியவாதிகளை நோக்கி அவர் செய்யும் கிண்டல் என்றே வெளிப்படுகிறது. அது பொதுவாக வெளியே இருப்பவர் செய்வது. அதில் ஒரு நக்கல் இருக்கிறது..
சாம்ராஜின் கதையிலும் ஒரு இடம் வருகிறது,
விசைத்தறி ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த சத்தத்திற்கிடையே புரட்சி பேசும் தோழர் ஒருவர், ‘தோழர் நாம் இந்த அரசாங்கத்தை ஏதாவது செய்யனும் தோழர்.. ‘என்று ஒருவர் உரக்கப் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது திடீரென மின்சாரம் போய் விடுகிறது. இடமே அமைதியாகி விடுகிறது. அப்பொழுது பேசிக் கொண்டிருப்பவர் திடீரென சத்தத்தைக் குறைத்து, ‘ஏதாவது பண்ணனும் தோழர் ‘ என்பார் மிகவும் மெதுவாக.
இதில் ஒரு அப்பாவித்தனமே வெளிப்படுகிறது. இதை உள்ளே இருப்பவர் தான் செய்ய முடியும். முன்பு சொன்ன அந்த ஆழ்வார் போல, அப்பர் பாடல் போல.
அவர் ஏன் எழுதுகிறார் என்று பார்க்கும் போது, ஒரு இடத்தில் நான் கண்ட என் அனுபவத்தை வைத்துத் தான் பொருத்தப் பார்க்கிறேன். சில வருடங்களாகவே புரட்சியாளராகத் தன்னை உணர்பவர்களுக்கு ஒரு சிக்கல் இருக்கிறது என நான் நினைக்கிறேன். அது இன்றைய முதலாளித்துவ உலகில் இடதுசாரிகளை கேலியாக பார்க்கும் பார்வை அதிகரித்து விட்டிருக்கிறது. முன்பு சொன்ன மிராச்லோவ் பென்கோவின் கதை போல இப்போதும் கேலிக் கதைகள் எழுதப்படுகின்றன . நான் அறிந்த எங்கள் ஊர் நண்பர்களே, இதிலிருந்து மீள தங்களுக்கான சாதிக் கட்சி ஆதரவாளராக மாறி வருகிறார்கள். ஆகவே அதையே சாம்ராஜ், ஒரு நையாண்டி மூலம் கடந்து வருகிறாரோ என்ற எண்ணம் எனக்கு உண்டு.
அதில் இவர் பல கூறுகளை உள்ளே நுழைக்கிறார். பல நுட்பமான பகடிகள் உண்டு. பல புராண சம்பவங்களையும் கோர்க்கிறார். குருசேத்திர யுத்தத்தில் துரோணரிடம் தருமன் சொல்கிறான். “இறந்தது அஸ்வத்தாமன் என்கிற ஒரு யானை என்று”அப்போது யானை என்று சொல்லும்போது கிருஷ்ணன் சங்கு ஊதி அதைக் கேட்க விடாமல் செய்தான் என்பது நாமறிந்த புராண கதை. அதை யதார்த்த களத்தில் பார்க்கும் போது ஜார் ஒழிக’வில் கணேசன் பெண் பார்க்கச் செல்கையில் அவன் சரளமாக புழங்கும் ‘ங்கொம்மாளோக்க ‘ என்ற வார்த்தை வெளிப்படுகையில் ஒருவர் ஒரு தாம்பாளத்தை தவறிக் கீழே போட்டு விடுவார். அதில் அந்த வார்த்தை கேட்காமல் போய் அவனுக்கு திருமணமே நடந்துவிடும்..
மருள் என்னும் கதை. அங்கு தொழிற்சங்கம் தோற்று விட்டது. முதலாளி சூப்பர்வைசர் எல்லாம் கண்டால் அனைவருக்கும் பயம். சங்கம் வைக்க முயலும் ஒருவன் இறந்தே போகிறான்..ஆனால் ஒரு கிறுக்கன் அங்கு ஒரு நாள் வேலைக்குப் போகிறான். அனைவருக்கும் அந்த பயத்தை விலக்கி விட்டு தனிப் பேருந்தில் ராஜாவாகத் திரும்புகிறான். அவன் அங்கு தொழிலாளர்களுக்கு ஒரு நம்பிக்கையை அருளி விட்டான். தொழிலாளர்க்கு என்றில்லை, பாவப்பட்ட அனைவருக்குமே நம்பிக்கையும் நியாயமும் கிடைக்க வேண்டும். சாம்ராஜைப் பொருத்தமட்டில் அவருக்கு அதை நிறைவேற்ற அவர் நம்பும் சங்கம் தேவை இல்லை கோஷம் தேவை இல்லை. ஆனால் ஒரு கிறுக்கன் இதை சாதித்தாலுமே போதும். ஒரு மாந்திரீகன் தூண்டி விட்டாலுமே போதும். தார் மிதித்த காலில் அவன் ஞானமடைந்தாலும் போதும். லட்சுமி சாமியாவதும், பினு உயரமாவதும், செவ்வாக்கியம் முதலாளியம்மாவாவதும் அவர்கள் மீது அவர் கொள்ளும் அந்தக் கரிசனத்தால் தான். அங்கு ஒரு சாமியாடி வருவதோ ஒரு ஏவல் பில்லி, மாந்திரீகம் வருவதோ அவருக்கு ஒரு நெருடலாக இல்லை. கதையும் அதை வைத்து நகரவில்லை.
இது தவிர முக்கியமான இன்னொரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். அது அவரது கதைகளின் நடை. ஒன்று, அது எங்கும் உணர்ச்சிவசப்படுவதில்லை இரண்டு அது நகைச்சுவை என்பதால் எங்கும் சம்பவங்களை எழுத்தின் மூலம் விவரித்துச் சொல்லும் முறையைக் கொள்வதில்லை. உதாரணமாக, முன்பு சொன்ன ஷோபா சக்தியின் வரிகள் போல வசனங்களில் உள்ள நகைச்சுவை அல்ல. அது சுஜாதா பாணி. கொச்சின் ஹனீபாவை குட்டி பாட்டிலுக்குள் அமுக்கி வைத்ததைப் போல என்று இதிலேயே ஒரு வரி வருகிறது. ஆனால் அதுவல்ல நான் சொல்வது.. சாம்ராஜின் பலமாக நினைப்பது, நான் சொல்வது அந்த நிகழ்வில் நடக்கும் ஒரு அபத்தம். அதை அப்படியே கடத்தும் எழுத்துத்திறன். தொழிற்புரட்சி போல, ஓம்லக்கா சொல்வதைப் போல, மருள் கதையில் நடராஜன் சிலையின் மணிக்கட்டில் கட்டியிருக்கும் சிவப்பு ஷால் போல..மல்லிகாவின் செவிட்டுக் காதில் ரகசியம் சொல்லிப் போகும் ஆறுமுகம் போல அதை நாம் ஒரு காட்சியாக உணர்ந்து உடனே அந்த அபத்தத்தை எண்ணி புன்னகையும் பூக்கிறோம். அவர் அவ்விதத்தில் ஒரு தனித்துவமான எழுத்தாளராக இருக்கிறார்.
இவ்வாறு இடதுசாரிகளின் கரிசனம் பற்றி மட்டுந்தான் பேசுவியா. அவர்களின் குரூரம் பற்றி பேச மாட்டாயா என்று உங்களில் ஒருவர் அதே பகடியோடு கேட்கலாம். ஆகவே, இடதுசாரிகளின் குரூரம் பற்றியும் நாம் இங்கு சொல்லியாக வேண்டும். லட்சியம் என்று பேசி தன் எதிரிகளைக் கொன்று குவித்த ரஷ்ய சீன வரலாறும் நம் கண் முன் இருக்கிறது தானே.
சாம்ராஜிடமும் அது இருக்கா என்றால் இருக்கு என்று சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை. முத்திருளாண்டி நரம்புத் தளர்ச்சி வந்து திண்ணையோடு ஒடுங்கி இறந்தும் போகிறார். சரி விட்டுரலாம்.. ஆனால் அங்கே ஒரு பெருச்சாளி வந்து அவரின் குறியைக் கடித்துக் குதற வேண்டுமா? அது செவ்வாக்கியமே செய்தாள் என்றாலும்? பரமேஸ்வரியின் மாமனார் படுத்த படுக்கையானது போதாதா..சர்க்கரை நோயாளியான அவருக்கு தினமும் சர்க்கரை அதிகம் போட்டக் காபி தான் கொடுக்கணுமா..இதெல்லாம் உங்களின் குரூரம் தானே என்று கேட்கலாம். இப்படிக் கேட்டு இதைக் குரூரமாக நிறுவுவது தான் உன் குரூரமா என்று அவர் பதிலுக்கும் கேட்கலாம்.
நான் முன்பு கண்ட ஒரு திரைப்படம் நினைவிற்கு வருகிறது. முரளிகோபியின் லெப்ட் ரைட் லெப்ட்.. அதில் அவர் ஒரு தோற்றுப்போன இடதுசாரி.. அவர் முன் அமர்ந்திருக்கும் பாட்டி தன் மகள் சிறு வயதில் கவனிப்பாரற்று இறந்த கதையை அவர் மனைவிக்குச் சொல்லிக் கொண்டிருப்பாள். அப்போது அவருடைய ரத்த அழுத்தம் எகிறும்.. அப்போது அவள் மனைவி இடைமறித்து சுவாரசியமான சம்பவங்களைக் கேட்பார். அவர் ரத்த அழுத்தம் குறையும்.
யாருக்காக எழுதுகிறார் என்ற என் முதல் கேள்விக்கு மீண்டும் வந்தால் அவர், அனைத்துக் கதைகளையும் தனக்காகத் தான் எழுகிறார், தன் ரத்த அழுத்தத்தைக் குறைத்துக் கொள்வதற்காக எழுதுகிறார் என்று சொல்லலாம். தன் வாசகரின் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் எழுதியிருக்கிறார் என்றும் சொல்லமுடியும். சாம்ராஜ்க்கு முதலில் நன்றி சொல்லவேண்டியிருப்பது அதற்காகத்தான்.