இணைய இதழ்இணைய இதழ் 100கட்டுரைகள்

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் ‘தீவுகள்’ நாவல் – இன்றைய வாழ்கையின் ஒரு முன்னோடி சித்திரம் – முஜ்ஜம்மில்

கட்டுரை | வாசகசாலை

எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி ஐயா அவர்களின் ‘தீவுகள்’ என்ற நாவலை சமீபத்தில் வாசித்தேன். இந்த நாவல் சற்று மேல் வர்க்க குடும்பத்தை பற்றிய ஒரு கதை. ஒரே குடும்பத்திற்குள் நடக்கின்ற கதைதான் இந்த மொத்த நாவலும். வழக்கமாக மத்திய தர குடும்பம் அல்லது கீழ் மத்திய தர குடும்பம், அல்லது அதைவிட அடித்தள நிலையில் உள்ள வாழ்க்கை பற்றிதான் பெரும்பாலும் நாம் நாவல்களில் வாசிக்கின்றோம். அந்த வகையில் சற்று மாறுதலாக உயர்தர வகுப்பைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் கதைக்குள் பிரவேசிக்கும் பொழுது அந்த உலகத்திற்கே உரிய நம்பகத்தன்மையோடும் உண்மைத் தன்மையோடும் இந்த நாவல் நம்மை உள்ளே அழைத்துச் செல்கிறது. கதை வட இந்திய பகுதியில் நடப்பதாக உள்ளது. இந்த நாவலில் மைய கதாபாத்திரம் என்று ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தைச் சொல்லிவிட முடியாது. ஒவ்வொரு கதாபாத்திரமும் அதன் அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே உள்ளது. நிறைய கதாபாத்திரங்கள் வந்தாலும் முக்கியமாக மறக்க முடியாத கதாபாத்திரங்களாக எனக்குத் தோன்றியது மூன்று நபர்களை. ஒன்று இந்த நாவல் முழுவதும் ஆக்கிரமித்து இருக்கும் கபூரின் மனைவி மோகினி என்ற பெண். நாவலில் வயது குறித்து குறிப்பிடவில்லை. ஆனால், சுமார் ஒரு ஐம்பது வயதைத் தாண்டிய ஒரு பெண் என்று கணிக்கலாம். அடுத்தது அவரின் கணவர் கபூர் என்ற தொழிலதிபர். இன்னொரு முக்கியமான கதாபாத்திரம் இந்த வீட்டில் உள்ள ஒரு குழந்தையான ரூபி என்ற பிள்ளைக்கு ஆசிரியை ஆக வீட்டிலேயே தங்கிய வேலை பார்த்துக் கொண்டிருக்கும் விஜயா என்ற தென்னிந்திய பெண். இன்னும் எண்ணற்ற கதாபாத்திரங்கள் இந்த நாவலில் வந்தாலும் எனக்கு மிக முக்கியமாகப்பட்டது இந்த மூன்று பாத்திரங்கள் தான்.

தீவுகள் என்ற பெயர் இந்த நாவலுக்கு மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது. நாவல் ஆசிரியரே குறிப்பிடுவது போல எப்படி ஆயிரக்கணக்கான தீவுகள் தனித்தனியாகப் பிரிந்து பிரிந்து ஆங்காங்கே இருக்கிறதோ அதுபோலவே நிறைய குடும்பங்களில் உள்ள மனிதர்களும் ஒருவரோடு ஒருவர் ரத்த பந்தத்தைத் தவிர எந்த வகையான தொடர்புமற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை இந்நாவல் காட்டுகிறது. இந்த வீட்டில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் இன்னொருவரோடு பெரிய அளவில் மனதளவில் ஒன்றாதவர்களாக அவரவர்கள் உலகங்களில் மூழ்கியவர்களாக இருக்கிறார்கள். ஏன் ஒவ்வொருவரும் அவரவர்கள் உலகத்தில் தனித்திருக்கிறார்கள், பிறரோடு ஒன்றாமல் இருக்கிறார்கள் என்பதற்கான வலுவான காரணங்கள் எதையும் இந்நாவலில்  நாம் காண முடியவில்லை. இந்த ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பின்னால் உள்ள கதை என்ன, அவர்கள் ஒருவரோடு மற்றவருக்கு இருக்கக்கூடிய தொடர்பு என்ன, எதனால் அவர்களுக்குள் ஒரு பிணைப்போ நெருக்கமோ இல்லாமல் போனது, அது ஏதோ சில காரணங்களால் உருவானதா அல்லது இயல்பாகவே அவர்களுக்குள் மனம் ஒட்டாமல் போய்விட்டதா என்பது போன்ற கேள்விகளுக்கு நாவல் நமக்கு பதில் தராமல், நாமாக யூகித்துக் கொள்ள வைக்கிறது.

ஒரு பெண் வீட்டுக்குள் சிகரெட் பிடித்துக் கொண்டு, யாரைப் பற்றியும் பெரிதாக கவலை இல்லாமல் அவள் பாட்டிற்கு இருக்கிறாள். வீட்டில் உள்ள கல்லூரி படிக்கும் வயதுள்ள ஒரு இளைஞனும் தன்னுடைய பொறியியல் சார்ந்த ஆராய்ச்சிகளிலேயே மூழ்கியுள்ளான். அவன் பெரும்பாலும் தன்னுடைய அறையை விட்டு வெளியே வருவது இல்லை எப்பொழுதும் மாலையைப் போட்டுக் கொண்டு உள்ளேதான் இருக்கிறான். வீட்டின் பெரியவரான கபூர் எந்த விவரங்கள் பற்றியும் எந்த விவகாரங்கள் குறித்தும் பெரிதாகத் தலையிடாமல் சற்று விலகியே உள்ள நபராகவே இருக்கிறார். அவருக்கு வீட்டில் ஒரு மிகப்பெரிய முக்கியத்துவம் எதுவும் இல்லை. ஆனால், அவருடைய மனைவியான மோகினிதான் இந்த நாவல் முழுக்க ஆக்கிரமித்து இருக்கிறாள். எப்போதும் எல்லோரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கும் ஆதிக்கம் செலுத்துவதற்கும் மட்டுமே முனைந்து கொண்டே இருக்கும் ஒரு கதாபாத்திரம். அமைதியாக இருப்பவர்களிடமும் வேண்டுமென்றே அவர்கள் அமைதியைக் குலைக்கும் வகையில் எரிச்சல் ஊட்டக்கூடிய வகையில் நடந்து கொள்வதே அவருடைய வேலையாக இருக்கிறது. தன்னுடைய மகனோ மகளோ கணவரோ யாரிடமும் அன்பாக பழகக்கூடிய ஒரு பெண்ணாக அவர் இல்லை. அந்த வீட்டில் உள்ள சிறு குழந்தையான ரூபி என்ற பெண்ணிற்கு கூட தன்னுடைய பாட்டியை பார்த்தால் வெறுப்பாகவே உள்ளது. எல்லோருமே கடுமையாக வெறுத்து ஒதுக்க கூடிய அளவிற்குதான் அவள் நடந்து கொள்கிறாள். அவளை முழுமையாகத் தவிர்க்கவும் முடியாமல், அவளை விட்டு முழுமையாக ஓடி விடவும் முடியாமல் ஒரு வகையான சிக்கலில்தான் எல்லா கதாபாத்திரங்களும் மாட்டி உள்ளார்கள்.

தாயாகவும் மற்றும் மனைவியாகவும்  அவள் ஆகிவிட்டாள் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே ஒவ்வொருவரும் அவளை சகித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவளை இத்தகைய நிலையில் செயல்படுவதற்கு தூண்டக்கூடிய அடிப்படை காரணியாக நாம் ஏதாவது ஒன்றைச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், பரம்பரையாக வந்த பணக்கார அந்தஸ்தும், அது சார்ந்த அகங்காரமும் கர்வமும்தான் என்பதாகக் கூறலாம். வேறு ஏதேனும் பெரிய காரணங்கள் இருப்பதாகத் தோன்றவில்லை. எப்போதும் சண்டை வளர்ப்பதும் சும்மா இருப்பவர்களையும் ஏதாவது ஒன்று சொல்லி சீண்டித் துன்புறுத்துவது மட்டுமே அவருடைய வழக்கமாக இருக்கிறது. இதுபோக வீட்டுக்கு களைத்து வரும் அவளுடைய கனவரான கபூரிடமும் சீண்டுதல்களைச் செய்து அவரை பொறுமை இழக்கச் செய்வதுதான் அவளுடைய வாடிக்கையாக இருக்கிறது. இதற்கெல்லாம் கபூர் பெரிதாக எதிர்வினை ஆற்றாமல் எப்பொழுதுமே இது போன்ற சந்தர்ப்பங்களை முடிந்த அளவு தவிர்த்தே வந்திருக்கிறார். அது போன்ற சந்தர்ப்பங்களில் ஏதாவது சாக்கு போக்கு கூறி தப்பித்து விடுபவராக இருக்கிறார். ஆனால், அவருள்ளும் அவருடைய மனைவியை குறித்து முற்றிலும் சகித்துக்கொள்ள முடியாத அளவிற்கான எண்ணங்கள்தான் நிரம்பி உள்ளன. அவ்வளவு கசப்பான எண்ணங்கள் உருவாவதற்கான எல்லா காரணங்களும் அந்தப் பெண்ணிடம் இருக்கத்தான் செய்கிறது.

கபூர் ஏன் இந்த பெண்ணிடம் மாட்டிக் கொண்டு நேரடியாகவும் எதிர்க்க முடியாமல் தவிக்கிறார் என்று சொன்னால், அவர் பரம்பரையாக பணக்காரராக வந்தவர் அல்ல; சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்தான். ஆனால், இந்த பணக்கார குடும்பத்தில் சம்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு இவர்களுடைய உதவியைக் கொண்டு முன்னேறி பெரிய இடத்தில் இருப்பவர்தான் அவர். என்னதான் இன்று சம்பாரித்து மிகப்பெரிய தொழிலதிபராக இருந்தாலும், மோகினியின் கணவராக இருந்தாலும் கூட அவர் பரம்பரை பரம்பரையாக பணக்காரராக இருந்தவர் அல்ல என்ற காரணத்தினால் மோகினிக்கு தன் கணவர் மீது எப்போதும் ஒரு குறைவான எண்ணம் இருக்கத்தான் செய்கிறது.

நினைக்கும் போதெல்லாம் கணவரின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கும் அதிகாரம் செலுத்துவதற்குமான உரிமையை அவள் தனக்குத்தானே கொடுத்திருக்கிறாள். இந்த நாவலில் உள்ள கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும் தனித்தனி தீவுகளாக யாருடன் யாரும் ஒட்டாமல் இருப்பதற்கான ஒரு முக்கியமான காரணமாக நாவலில் நமக்கு புலப்படுவது மோகினியின் தன்மைதான். ரூபியின் தாய் கணவனை இழந்த பெண்ணாக இருக்கிறாள், இப்பொழுது எதைப் பற்றியும் கவலைப்படாத, மனம் போன போக்கில் வாழக்கூடிய ஒரு பெண்ணாக இருக்கிறாள். அது தவிர பல ஆண்களோடு அவளுக்கு தொடர்பும் இருக்கிறது. ஊர் உலகத்தைப் பற்றியோ, குடும்பத்தை பற்றியோ கவலை இல்லாமல், மனம் போன போக்கிற்கு ஏற்ப சுற்றி அலைகிறாள். அந்தப் பெண் ஓரிடத்தில் தன்னுடைய கணவன் இறந்து போனதற்கு கூட தன்னுடைய தாயான மோகினிதான் முக்கியமான காரணம் என்பதாகத் திட்டுவாள். அவ்வகையில் எல்லோருடைய நிம்மதியிலும் மகிழ்ச்சியிலும் ஏதோ ஒரு வகையான பிரச்சனையை ஏற்படுத்தக்கூடிய ஒரு புள்ளியாக மோகினி இருந்து கொண்டிருக்கிறாள் என்றாலும் கூட அக்கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரும் ஒருவர் மீது ஒருவர் பற்றற்று இருப்பதற்கு மோகினி மட்டுமே முக்கியமான காரணம் என்று நாம் கூறி விட முடியாது. நவீன கால வாழ்க்கையின், குறிப்பாக நகர வாழ்க்கையின் ஒரு சிக்கலாக கூட இந்நிலையை நாம் எடுத்துக் கொள்ளலாம். சமூக பொருளாதார காரணங்கள் ஒருபுறம், பொருள் மோகமும், அதிகார மோகமும் அது சார்ந்து உருவாகி வரும் அல்லது உருவாக்கிக்கொள்ளும் போலி பிம்பங்களும், சமூக அடையாளங்களும் தரும் போதை, உண்மையான அன்பை செலுத்துவதில் இருந்து மனிதர்களை வெகு தூரம் துரத்தி அடித்து விடுகிறது. ரூபியின் தாயோ வாழ்க்கை மீது ஒரு பெரிய பற்று எதுவும் இல்லாமல், உறவு மற்றும் அன்பின் மீதும் பெரிய நம்பிக்கை இல்லாமல் பார்க்கின்ற ஆண்களோடு சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறாள்.

 தன்னுடைய குழந்தையான ரூபிக்கு விஜயா ஒரு தாயாக இருக்க வேண்டும் என்றும், அப்படியாக அவளைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது போன்ற ஒரு வாக்குறுதியை விஜயாவிடம் கேட்கிறாள். அதற்கான காரணமாக அவள் சொல்வது என்னவென்றால் தான் இனி எந்த பந்தத்திற்குள்ளும் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை என்பதாக கூறுவாள். வாழ்க்கையில் நடந்த சில கசப்பான அனுபவங்களின் காரணத்தினால் அவள் இத்தகைய முடிவுகளை நோக்கிச் செல்கிறாள். ஆனால், மோகினியின் மகனான ராகேஷ், தனிமைப்பட்ட வாழ்க்கையில் இருந்து மீண்டு தன் தாயினால் வீட்டில் ஏற்பட்ட கசப்பான சூழலில் இருந்து தப்பித்து, அன்பின் மூலம் அடைக்கலம் பெறுவதற்கு விஜயாவே அவனுக்குத் தெரிந்த விடையாக இருக்கிறாள். உண்மையான அன்பிற்கான ஏக்கம்தான் அவனை விஜயாவை நோக்கி செலுத்தி இருக்கிறது. பணம் அந்தஸ்து போன்றவற்றையெல்லாம் தூக்கிப்போட்டுவிட்டு விஜயாவிற்காக அவன் வீட்டை விட்டும் வெளியே வந்து விடுவதற்குத் தயாராகிறான். அதற்கான எல்லா முனைப்பிலும் அவன் ஈடுபடுகிறான். நாவல் அந்த கோணத்திலும் நகருகிறது. அவனுக்கும் விஜயாவிற்கும் நடக்கின்ற உரையாடல், அந்த உரையாடலில் கலந்து கொள்ளும் கபூர், ராகேஷ் என எதிர்காலம் மற்றும் அவனுடைய குடும்ப பின்புலம், பொருளாதார நிலைமைகள் , மற்றும் கலாச்சாரம் ஆகியவை ராகேஷிற்க்கும் விஜயாவிற்குமான உறவில் எந்த வகையான ஒற்றுமையையோ அல்லது இடைவெளியையோ ஏற்படுத்தலாம் என்பது பற்றி கபூர் பேசுகிறார். ஆனாலும் கூட கபூர் இவர்கள் இருவருக்குமான திருமணத்தை எந்த வகையிலும் எதிர்ப்பவராகவோ விரும்பாதவராகவோ இல்லை. அவருக்கு விஜயா மீது முழுக்க முழுக்க அன்பும் பாசமும் மரியாதையும் இருக்கத்தான் செய்கிறது. உறவு கசந்து போன வாழ்க்கையை அனுபவித்தவரான கபூருக்கு உண்மையான அன்பைச் செலுத்தும் விஜயா இப்பொழுது மிக உயர்வாகத்தான் தெரிகிறாள். அதனால் அவர் தன்னுடைய பணம் அந்தஸ்து போன்றவற்றை பற்றி கூட கவலைப்படுபவராக இல்லை. அது மட்டுமன்றி தான் விஜயா குடும்பம் தற்போது இருக்கின்ற பொருளாதார சூழலை விட மிகவும் பின் தங்கிய ஒரு நிலையிலிருந்துதான்தான் உருவாகி வந்தவன் என்று ஒரு இடத்தில் கூறுகிறார். இந்த மூவரும் சந்திக்கும் புள்ளியை, நாவல் ஒரு புறம் நகர்த்தி செல்கிறது.

தன் மகன் ராகேஷிற்கு தன்னிடம் வேலை பார்க்கும் விஜயா மீது ஏற்பட்ட காதலை ஏற்றுக் கொள்ள முடியாத மோகினி, விஜயாவை வேலையை விட்டு வெளியேற்றி விடுகிறாள்.. விஜயாவும் இதுபோன்றதான விஷயங்களுக்கெல்லாம் தயாராகத்தான் இருக்கிறாள். அதனால் அவளும் இந்த குடும்பத்தில் இதற்கு மேல் வேலை செய்ய முடியாது என்ற மனநிலையில் இருப்பதால் அங்கிருந்து வெளியேறி விடுகிறாள். ஆனாலும் அவளுடைய குடும்ப பொருளாதார சூழலின் நெருக்கடியின் காரணமாகவும், தன்னுடைய தங்கைகளை எல்லாம் படிக்க வைக்க வேண்டும் என்ற ஒரு நெருக்கடியின் காரணத்தினாலும் மீண்டும் அவள் கப்பூரிடமே சென்று வேலைக்கு கேட்கிறாள். அவருடைய அலுவலகத்திலேயே விஜயாவிற்கு அவர் வேலை வழங்குவதாக கூறுகிறார். ஆனால், அது மீண்டும் கணவன் மனைவிக்கு இடையிலான ஒரு போட்டியை போல ஆகிவிடுகிறது. அதனால் மோகினி மீண்டும் தான் வெளியேற்றிய ஒரு பெண்ணை எப்படி தன்னுடைய கணவர் வேலைக்கு வைத்துக் கொள்ளலாம் என்பதாக சண்டையிடத் தொடங்குகிறாள். இவ்வளவு சிக்கல்கள் இருந்தும் இவ்வளவு பிரச்சனைகளை சந்தித்தும் கூட விஜயா மீண்டும் மீண்டும் பொறுமையாக அவ்விடத்திலேயே இருப்பதற்கான காரணம் அவளுடைய வாழ்க்கை சூழல்தான். அந்த வாழ்க்கை சூழலும் நெருக்கடியும் அவளை நிதானம் படைத்தவளாகவும் சகிப்புத்தன்மை கொண்டவராகவும் மாற்றி விடுகிறது. ராகேஷ் அவளை உண்மையாக நேசித்து திருமணம் செய்து கொள்கிறேன் என்று உறுதிமொழி கூறினாலும் கூட அவளுடைய முக்கியமான கேள்வியாக இருப்பது தந்தை இல்லாத தன்னுடைய குடும்பத்தை எப்படி காப்பாற்றுவது, அதற்கான பொருளாதார வழிகள் என்ன என்பது மட்டும்தான். ராகேஷிற்க்கு எப்படி விஜயா ஒரு அன்பிற்கான வழியாக இருக்கிறாளோ அதேபோலத்தான் குழந்தை ரூபிக்கும் விஜயா தேவைப்படுகிறாள். எப்பொழுதும் விஜயா எங்கே என்பதாக அந்த குழந்தை வீட்டில் உள்ள எல்லோரிடமும் கேட்டுக் கொண்டிருக்கிறாள். ஒருவகையில் தனித்து விடப்பட்ட தீவுகளில் அந்தக் குழந்தையும் ஒரு சிறு தீவாகத்தான் இருக்கிறாள். அவளும் உண்மையான அன்பிற்கான ஏக்கம் கொண்டவளாக இருக்கிறாள். இவர்கள் இருவருக்கும் விஜயா மூலம் ஒரு நிறைவு கிடைக்கிறது. அதேபோல கபூரும் அன்பையும் மனநிறைவையும் தேடி அலைகிறார். பணம் எல்லாம் இப்பொழுது அவருக்கு மிகப்பெரிய மதிப்பாகவே இல்லை. கஜல் பாடக்கூடிய ஒரு பெண்ணோடு தொடர்பு கொள்கிறார். அவள் பாடக்கூடிய கஜல் பாடலில் அவர் மனம் உருகுகிறார். அதில் கிடைக்கக்கூடிய மன சந்தோஷத்தை அவர் பெரிதும் விரும்புகிறார். அதற்காக எவ்வளவு லட்சத்தையும் தூக்கி கொடுக்கலாம் என்பதாக அவர் முன் வருகிறார். அந்த கஜல் பாடக்கூடிய ஷம்மின் என்ற பெண்ணிற்கு எவ்வளவு பணம் வேணுமோ கேட்டு பெற்றுக்கொள் என்பதாக அவர் கூறுகிறார். வீட்டில் பெரும் கலவரங்களை செய்து கொண்டிருக்கும் மோகினிக்கும் நிறைய ஆண் தோழர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இது குறித்தெல்லாம் அவளுடைய கணவருக்குத் தெரிந்தாலும் அதைப்பற்றி பெரிதாக கவலைப்படாமல் இருக்கிறார். அவளுடைய ஆண் நண்பர்களோடான அவளுடைய தொடர்புகள் எப்படிப்பட்டவை, அது சார்ந்த விஷயங்கள் எதுவும் நாவலில் வரவில்லை. கபூரும் கூடவே இதே போலவே தன் திருமணம் தாண்டி வேறு வகையில் தனக்கான மகிழ்ச்சியை நிறைவைத் தேடுகிறார். என்னதான் தனக்கு நிறைய ஆண் தோழர்கள் இருக்கிறார்கள் என்றாலும் கூட தன்னுடைய கணவர் யாரோ ஒரு பெண்ணோடு தொடர்பு கொண்டிருக்கிறார் என்ற செய்தி மோகினிக்கு தெரிந்ததும் உடனே கொதித்து எழுந்து விடுகிறாள். உடனடியாக கணவனைப் பற்றிய துப்பு துலக்குவதற்காக காரை எடுத்துக் கொண்டு இரவு நேரம் என்று கூட பார்க்காமல் கிளம்பி விடுவாள். தன்னுடைய கணவன் எங்கெல்லாம் செல்கிறார் யாரோடெல்லாம் பழகுகிறார் என்பதாக அவரை வேவு பார்ப்பாள். அதன் பிறகான கதையை நாவலில் வாசியுங்கள். 

நாவல் வெளிவந்த காலத்திலிருந்து இப்போது உள்ள காலத்தை ஒப்பிட்டுப் பார்த்தாலும் கூட எல்லா வகையிலும் இப்பொழுதும் வாசிக்க முடிகின்ற வகையில்தான் உள்ளது. அதுவே நாவலின் மிகப்பெரிய சிறப்பாகப் படுகிறது. இதற்கு முன்பு எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் ‘அவுரங்கசீப்’ என்ற நாடகம் வாசித்தேன். அதன் பிறகு தீவுகள். இந்நாவல் வாசித்து விவாதிக்க வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இலக்கியப் படைப்பு. 

mmuzzammil470@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button