கவிதைகள்

கவிதைகள் -சுப. முத்துக்குமார்

 

1.கண்ணீர்ப் பிரதி

உன்னைப்போல் இல்லை நீ விட்டுச் சென்ற கண்ணீர்

என் வீட்டுத் தண்ணீரில் உப்பு அதிகமென்றது

உன்னைவிட எனக்கு நகைச்சுவை உணர்வு குறைவென்றது

பகல் வெளிச்சம் அதற்குக்கூச்சம் தருவதாயிருக்கிறது

இரவுகளில் உன் கண்ணீர் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறது

குளியலறையில் நான் வெகுநேரம் இருப்பதில்லையெனக்

குறைப்பட்டுக்கொண்டது

வேறு வேறு குரல்களைக் கேளாமல் சுணங்கிப்போனது

பக்திப்பாடல்களை ரசித்துக்கேட்டது

சமையலறை நெடியை ஆழச் சுவாசித்தது

எல்லாப் பாடல்களுக்கும் வாயசைத்தது

தோட்டச்செடிகளிடம் உரக்கப் பேசியது

மதுப்புட்டிகளை கூர்ந்து பார்த்தது

படுக்கையறைச் சுவர்களில் குரல்களைக் கிறுக்கியது

நாட்குறிப்பின் தாள்களில் நிரம்பி வழியும்

உன் கண்ணீரை என்னால் கையாள முடியவில்லை

உடனே வந்து கூட்டிச்செல்.

 

2.பெயர்கள்

அவன் கவிஞன், வசீகரன்,

நண்பன், ஓவியங்களில் பெருவிருப்பம்,

பேச்சால் மயக்குபவன்,

போதையின் உச்சத்தில் 

தெரு நாய்களுடன் அமர்ந்து அழுதவன்,

கையில் குழலில்லாத 

கிருஷ்ணன் சிலையிடமிருந்து விலகாது நின்றவன்,

வெள்ளைப்பல் கறுப்பழகியின் சிரிப்பை

இன்றுவரை சுமந்து திரிபவன்,

நெற்றியின் ஒற்றை முத்தத்தில்

நெருப்பைக் கண்ணீராக்கியவன்,

பிரகாரத்தில் கண்டவளின் உடலுடன்

சுயபோகம் கொண்டவன்,

சில கண்ணீர்த்துளிகளையும் சிரிப்பினையும்

வரும் நாளைக்காய் சேர்த்து வைத்திருப்பவன்,

ஒருவரையும் இவ்விதம் 

நினைவில் கொள்ளத்தேவையில்லை

அவரவர் பெயர்களால்

அவர்களைக் கொலை செய்வோம்.

 

 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button