இணைய இதழ்இணைய இதழ் 93கட்டுரைகள்

கொஞ்சம் வானமும், நிறைய மலைகளும். பயணக்கட்டுரை – ஜெய்சங்கர்

கட்டுரை | வாசகசாலை

காலத்தையும் தொலைவையும் தமக்குள்ளே சுருட்டி வைத்துள்ள மலைகளில் அலையும் போது அன்றாடத் துன்பங்கள் எவையும் நினைவில் முன்வந்து நின்று பயமுறுத்துவதில்லை. சுயத்தைத் தூக்கிக் கொண்டு தலை நோக வாழும் வாழ்வினை சில நாட்களேனும் தள்ளி வைக்க வேண்டியாவது மலைகளை, வனங்களைத் தேடி ஒடுகிறது மனது. மலைப் பயணங்களைத் திட்டமிடும் போது, மலையின் ஒரு திசையில் ஏறிச் சென்று அதே பாதையில் திரும்புவதை அநேகமாக தவிர்த்து விடுவோம். ஏற்கனவே சென்ற இடமெனில் புதிய பாதைகளை, புதிய ஊர்கள் வழியாகச் செல்லும் சாலையைத் தேர்ந்தெடுப்பது வழக்கம். புதிய வழிகளில் செல்வது என்பது புதியதாக அவ்விடத்திற்கு செல்லும் அனுபவத்தை மீட்டுத் தருகின்றது. மலை அழகியின் இடுக்குகளிலெல்லாம் ஊர்ந்து செல்லும் சிறிய சாலைகள் வழியே பயணித்து அத்தனை அழகையும் காண வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக, பயணப்பையோடு ஒட்டிக்கொண்ட ஒன்று. இம்முறை மலைகளின் இளவரசியை, அவளின் அழகிய வளைவுகளை, மறைத்து வைத்திருக்கும் ரகசியங்களைக் கண்டு வரக் கிளம்பினோம். 

நான், மணி, யமஹா எஃப்.இசட் மூவரும் புதன்கிழமை அதிகாலையில் கிளம்பத் திட்டமிட்டு, வழக்கம் போலத் தாமதமாகித் திருச்சியிலிருந்து திண்டுக்கல்லை அடைய, காலை எட்டரை மணி ஆகிவிட்டது. அங்கிருந்து தேனி செல்லும் சாலையில், செம்பட்டியைக் கடந்து ஆறாவது கிலோமீட்டரில் வலது பக்கம் திரும்பி, சித்தையன் கோட்டை என்ற ஊரை அடைந்தோம். ஊரில் திருவிழாக் கூட்டம் நிறைய இருக்க உணவகங்கள் எல்லாமும் மூடிக்கிடந்தன. நல்ல வேளையாக, ‘ஹாட் இட்லி’ என்ற கடை திறந்திருக்க அங்கே இட்லி கிடைக்காததால் தோசை மற்றும் பூரியுடன் காலை உணவை முடித்தோம். ஒன்பதரை மணிக்கெல்லாம் வெயில் சாலையைக் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு ஆடத்தொடங்கியிருந்தது. சித்தரேவு என்ற ஊர் செல்லும் சாலையில் வண்டியைச் செலுத்தினோம். நாங்கள் திட்டமிட்ட வழித்தடத்தில் சித்தரேவு தான் மலையடிவாரம், அங்கே வனச் சோதனைச் சாவடி உண்டு. அதைத் தாண்டியவுடன் இருபக்கமும் முட்புதர் குறுங்காடு வரவேற்க, சிறிது தூரத்தில் அனல் பறக்கச் சாலை மலையேறத் தொடங்குகிறது. இருபுறமும் காய்ந்த கிளைகளும், முட்களும், குத்துச் செடிகளும், யானைக் கற்றாழை மடல்களும் கொண்ட இலையுதிர் காட்டில் பெரிய மரங்கள் வித விதமான வண்ணங்களில் இலைகளைத் தாங்கி நிற்கின்றன. இளம்பச்சை, பச்சை, அடர்பச்சை, இள மஞ்சள், மஞ்சள், மஞ்சளும் சிவப்பும் கலந்த இலைகள், காய்ந்த பழுப்பு நிற இலைகள் சாலைகளில், அதன் ஓரங்களில் கொட்டிச் சிதறிக் கிடக்க அடிவாரக் காடுகள் எப்போதும் வண்ணமயமாக, உயிர்ப்புடன் அழகாக உள்ளன. மலையுச்சி ஏறிவிட்டால் பச்சை வண்ணமே எங்கெங்கும் நிரம்பிக் கிடக்கிறது. அவ்வருத்தத்தை போக்கவே மலை மேல் மலர்கள் மலர்ந்து வழிகின்றன.

கொண்டை ஊசி வளைவுகளின்றி சாலை வளைந்து நெளிந்து மலைகளைத் தாண்டி ஏறிச்செல்கிறது. சிறிது நேரத்திற்குப் பிறகு முகத்தில் அனல் குறைந்து சிலுசிலுவென மென்காற்று வீசத் தொடங்குகிறது. வலப்பக்கம் மலைச் சரிவில், தொலைவில் அழகிய நீர்த்தேக்கம் ஒன்று கிடக்க, ஆத்தூர் அணை என்று கூகுள் மேப் தகவலுடன் அதை சில புகைப்படங்கள் எடுத்தோம். ஒன்றிரண்டு இருசக்கர வாகனங்கள் மட்டுமே எதிரில் வர, மலைப் பாதையில் பைக்கை செலுத்துவது காரில் செல்வதை விட சுகானுபவம் தான். இரண்டு பக்கமும் மரங்களை, மலைச்சரிவை நன்கு காண முடியும். காற்றை, குளிரை நேரடியாக உடலில், மனதில் அனுபவிக்க முடியும். 

மலையின் சரிவுகளில் சென்ற பாதை இறுதியில் மலைகளுக்கிடையே நுழைகிறது. மேடுகள் நழுவிச் செல்லச் செல்ல காற்றில் சிலுசிலுப்பு இறுகிக் குளிர் கூடுகிறது. கண்ணுக்குப் புலப்படாத பள்ளத்திலிருந்து, நீரின் சலசலப்பு அவ்வப்போது கேட்கிறது. கரும்பச்சை செடிகள், உயரமான மரங்கள் தெரிய, சரிவுகளில் கம்பி வேலிகளுக்குள் ஏலக்காய் செடிகள் வளர்ந்து நிற்கின்றன. எஸ்டேட் பகுதிகள் தொடங்கி விட்டது. மலைகளில் வெயில் பரவிய பகுதிகளை மட்டுமே காடுகளாய் விட்டு வைத்திருக்கிறோம். குளிர் ஏறத் தொடங்கும் உயரங்கள் எல்லாமும் காபியும் மிளகும், ஏலக்காயும் வளர்க்கத் தொடங்கிவிடுகிறோம். 

அடிவாரத்திலிருந்து பதினான்கு கிலோ மீட்டர்கள் பயணம் செய்த பிறகு, புல்லாவெளி அருவி என்ற அறிவிப்புப் பலகையைப் பார்த்து நின்றது வண்டி. பள்ளத்தில் நீர் ஒடும் சத்தம் கேட்டது. காலை பெய்த மழையின் ஈரத்தால் கீழ் நோக்கி சரிந்து செல்லும் இளகிய மண் பாதையில் கவனமாக வண்டியைச் செலுத்தினோம். அழகிய நீரோடை ஒன்று மரங்களுக்கிடையே ஓடிக் கொண்டிருந்தது. விளம்பரப் பலகையில் தெரிந்த அருவி கண்களுக்குத் தெரியவில்லை.  சுற்றிலும் பூச்சிகள், பறவைகள் ஒலிகள் மட்டுமே இருந்தது. மனிதர் எவரும் இல்லாததால் விசாரிக்க வழியும் இல்லை. நீரோடையை, அதன் மேலாக அமைந்திருந்த சிதைந்த மரப்பாலத்தைப் பார்த்து விட்டு திரும்பிச் சாலையை அடைந்தோம். 

மஞ்சள் பரப்பு, பெரும்பாறை, மணலூர் கிராமங்கள் தொடர்ந்து வர, மணலூர் தாண்டியவுடன் சிறிது தூரத்தில் சுற்றிலும் பசுமை சூழ்ந்த, நிமிர்ந்து நோக்கினாலும் வானம் தெரியாத சாலை சந்திப்பு ஒன்று வருகிறது. அங்கேயுள்ள சிறிய பாலத்தின் கீழே சில்லென்று நீர் ஓட, சுற்றிலும் ஒங்கி வளர்ந்து நிற்கும் மரங்களின் பட்டைகளில் பாசிகள், சிறு தாவரங்கள் கூடுதல் பச்சை நிறத்தில் மிளிர்கின்றன. ஒட்டன்சத்திரம் வழியே மலையேறும் சாலை, பன்றிமலை, ஆடலூர் வழியே கொடைக்கானல் வரும் சாலை ஆகியவை இவ்விடத்தில் தான் சந்திக்கின்றன. நின்று ரசிக்க வேண்டிய இடமது. குளிர் கூடிக் கொண்டே போனது. விரல்களில் மதமதப்பு தொற்றிக்கொண்டது.

அங்கிருந்து பயணித்து, தாண்டிக்குடிக்கு சற்று முன்னதாக ஒரு காபிக்கடையைக் கண்டு உள்ளம் கொதிக்கத் தொடங்க, குளிருக்கு இதமாக சூடான காபி. மழைச் சாரல் தூவும் மலையின் மடியில் காபியோடு சற்று இளைப்பாறினோம். கடைக்கு எதிரேயே காபித் தோட்டங்கள். வேலியில் ஊதா நிற பூக்கள் தூவப்பட்டிருந்தன. கோப்பையின் வெப்பம் விரல்களில் இறங்கியது. “ச்சே, காபி செம்மயா இருக்குல்ல, இங்கே விளையுற காபிச்செடி விதையில ரெடி பண்ணுன, பொடியா இருக்குமோ?” கேள்வியை இருவரும் கடைக்காரரிடம் மாற்றிவிட்டோம். சிரித்துக் கொண்டே, “ப்ரூ காபிதான்”, என்றார். “சூப்பரா போட்டிருக்கீங்க!”, என்றபடி கிளம்பினோம்.

தாண்டிக்குடியை அடைந்து, அங்கிருந்து முருகன் கோவில் போகும் வழியை விசாரித்துச் சென்றோம். கோவில் ஊருக்கு மேற்கே ஒரு மலையின் மேலே உள்ளது. போகும் வழியில் பெருங்கற்காலத்தினைச் சார்ந்த கற்திட்டைகள் நிற்பதை அடையாளங்கண்டு இறங்கினோம். தொல் பழங்கால கிராமத்தின் எச்சங்களென, கற்களால் அடுக்கி வைத்த சுவர் போன்ற அமைப்புகள், செங்குத்தாக தூக்கி நிறுத்தி வைக்கப்பட்ட தடிமனானப் பலகைக் கற்கள் அங்கே இருந்தன. கற்றாழைச் செடிகளில் உயரமான மூங்கில் முளைத்தது போல மஞ்சரிகள் விளைந்து நின்ற மலையின் உச்சியில், குளிர் சூழ வாழும் முருகனை சந்தித்து விட்டுக் கிளம்பிப் பண்ணைக்காடு நோக்கி வண்டியைச் செலுத்தினோம். தாண்டிக்குடி பண்ணைக்காடு இடையே சாலையின் இருபுறமும், பறவைகள் பூச்சிகளின் ஒலியும், நெடிதுயர்ந்த மரங்களிலிருந்து மிதந்திறங்கும் பச்சை ஒளி தரையில் சிந்தி நிரம்பிய அடர் வனப்பகுதி நம்மை வருடி அணைத்துக் கொள்கின்றது.

பண்ணைக்காடு நகரக்காடு போலவே நெருக்கமான கட்டிடங்களோடு வீற்றிருக்க அதை வேகமாகக் கடந்து, வத்தலகுண்டிலிருந்து கொடைக்கானல் செல்லும் முக்கியச் சாலையில் இணைந்து கொண்டபோது மணி மதியம் இரண்டைத் தொட்டிருந்தது. பெருமாள் மலையினை நெருங்கும் போதே தூறல் தொடங்கியது. வெள்ளி அருவியைத் தாண்டி, நகரத்திற்குள் நுழைந்து, ஏரியைத் தாண்டும் போது வலுவான மழை பிடித்துக் கொண்டது. ஒரு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்தும் மழை நிற்பது போல இல்லை. எனவே தங்குமிடம் சென்று விடுவோமென தோற்சட்டையை மாட்டிக் கொண்டு வண்டியை நகர்த்தினோம். 

கொடைக்கானலிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் வில்பட்டிக்கு இறங்கிச் செல்லும் சாலையில் இருந்தது எங்கள் தங்குமிடம். எங்களுக்கு நேரெதிர் மேலே கொடைக்கானல், நடுவில் நாங்கள், கீழே சரிவில் வில்பட்டி கிராமம். மலைச்சரிவு முழுக்க, பசுமைப் படிக்கட்டுகள். சுற்றிலும் காய்கறி தோட்டங்கள். பல்வேறு வகை பூச்சிகளின் சத்தங்களுடன் இரவை அங்கேக் கடத்தினோம்.

வில்பட்டி சாலையில் காலை நடை. குளிருக்குத் தலைப்பாகைக் கட்டிக்கொண்டு, கதை பேசிக்கொண்டே சுற்றிலும் தெரியும் காலை நேர கரும்பச்சை நிறத்தினை, நீல மலைகளை, கொடிகளில் முந்தைய நாள் மழைத் துளிகளுடன் ஊதா, இளஞ்சிவப்பு நிறத்தில் அன்றலர்ந்த மலர்களை கண்களில் ஒற்றிக் கொண்டே நடந்து சென்றோம். சிறிது தூரத்தில் இடப்பக்கம் திரும்பிய போது அழகிய அருவி ஒன்று வெண்ணிறத்தில் கொட்டிக் கொண்டிருந்தது. இரண்டு பக்கமும் செதுக்கிய மலைகளுக்கு நடுவே அருவியும், அதனருகில் கோவில் ஒன்றும் இவற்றை இணைக்கும் விதமாக மரப்பாலமுமென அழகிய ஓவியம் போல அந்த இடம் இருந்தது. தங்கியிருந்த இடத்தின் அருகிலேயே இப்படி ஓர் அருவியை எப்படி கவனிக்காமல் போனோமென்று எண்ணியபடியே மேப்பைத் துழாவிய போது, தனியார் இடத்தில் உள்ள அருவி என்று காட்டியது. எனில் தனிக்கட்டணங்கள், அனுமதி இருக்குமென்று பேசிக்கொண்டே நடந்து வில்பட்டியை அடைந்தோம். அங்கே சுடச்சுட, மொறுகலான, சுவையாய் உளுந்து வடை கிடைத்தது. குளிரில் இரண்டு வடைகளும், சூடான தேநீரும் விடியலை இதமாய் ஆக்கின. 

தங்குமிடத்தைக் காலி செய்து விட்டு, காலை உணவை கொடைக்கானலில் முடித்து விட்டுக் கிளம்பினோம். பூம்பாறை வழியாக மன்னவனூர் சென்று அங்கே வியாழன் இரவு தங்கி, மறுநாள் நேரமிருப்பின் கூக்கால் கிராமத்தைப் பார்த்துவிட்டு, மூன்றரை மணிக்குள் கொடைக்கானலிலிருந்து அடுக்கம் வழியாக பெரியகுளம் செல்லும் சாலையின் வனச் சோதனை சாவடியைத் தாண்டிவிட வேண்டும் என்பது திட்டம். 

அப்பர் லேக் வியூவை பார்த்து விட்டு கிளம்பும்போது, பத்து மைல் சுற்றுச் சாலையில் இருசக்கர வாகனத்திற்கு, ஒருவழிப் பாதை இல்லை, மேற்கொண்டு செல்லலாமென்று தவறாக ஒருவர் வழிகாட்டியதால் எதிர்த் திசையில் முன்னேறிச் சென்று வசமாக மாட்டிக் கொண்டோம். எதிரே இடைவெளி இல்லாமல் வரிசையாக வாகனங்கள் வந்து கொண்டே இருக்க, எங்களின் வண்டி மட்டும் எதிர்நீச்சல் போட்டது.   மிகச் சிரமமான நீச்சல். குணா குகை பகுதியை அடையவே மதியம் ஆகிவிட்டது. நீச்சலின் சோகம் தணியக் குகையை மட்டும் பார்த்து விட்டு கிளம்பலாம் என்று உள்ளே நுழைந்தோம். கல்லூரிக் காலத்தின் நினைவுகள் மேலெழும்பி வர, வலைப்பின்னல் வேர்களில் அமர்ந்து இளைப்பாறினோம். சற்று நேரத்தில் அவ்விடத்தைப் பனிப்புகை சூழ்ந்து எதிரே இருப்பவர் தெரியாமலாக தூறல் தொடங்கியது. தூறல் பெருகி மூடுபனியை விரட்டி மழைப் பொழியத் தொடங்கியது. பெருமழை. நேரம் மூன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. நிற்பதாகத் தெரியவில்லை. மழை நீர் பெருகிப் பாதங்களில் ஊசியைப் போல இறங்கத் தொடங்கிய நேரத்தில், தலைக்கு மேலே தகரக் கூரையில் தட தடவென்று சத்தம் கொட்டியது. ஆலங்கட்டி மழை. கீழே விழுந்துத் தெறித்த சிறிய கற்கண்டுக் கட்டிகளை கையில் எடுக்கும் போது உருகி வழுக்கிக் கொண்டு சென்றன.

மன்னவனூர் செல்வது குறித்த திட்டம் மழையில் கொஞ்சம் கொஞ்சமாக கரையத் தொடங்கியது. மழை விடுவதாகத் தெரியவில்லை. இருட்டுவதற்குள் வனப்பகுதியை கடந்து மன்னவனூர் சென்றுவிட முடியுமா? இல்லை இப்படியே திரும்பலாமா என்று மனதில் ஊசலாட்டம். எங்கள் பயணத்தின் இலக்கே அதுதான் என்றிருக்கையில் திரும்புவது சரியா என்று கேள்விகள் கேட்டுக் கொண்டோம். இன்னும் இருபத்தெட்டு கிலோ மீட்டர்தான். ஐந்தரைக்குள் சென்று விடலாமென்று மணி வேகப்படுத்தினான். மழையும் விலகிக்கொள்ள, பைன் மரக்காடுகள், மோயர் பாய்ண்ட் பகுதிகளைத் தாண்டி, பூம்பாறை செல்லும் சாலைக்குள் நுழைந்த போது நேரம் நான்கு. நீர் சொட்டிக் கொண்டிருந்த உயரமான பைன் மரக்காடுகள் வழியே வேகமாகப் பயணித்தோம். சாரல் காற்றில், காட்டின் பொங்கும் அழகில் விலகிப் போன உற்சாகம் மீண்டும் தொற்றிக் கொள்ள, எங்கேயும் நிறுத்தாமல், பூம்பாறையை நெருங்கிக் கொண்டிருந்தது வண்டி.

இந்தப் பயணத்தில் மனதைத் தொலைத்த இடமெனில் பூம்பாறைக்கு செல்வதற்கு முன் உள்ள பழனிக் கோயில் காட்சி முனை. இங்கிருந்து பார்க்கையில் கண்ணெட்டும் தூரம் வரை மலைச் சரிவு, வலப்பக்கம் அழகாய் இறங்கும் அருவி அதற்குச் சற்று மேலே பனி சூழ்ந்த, பொறாமையை மூட்டும் சிறியக் கிராமம். பச்சை வண்ணத்தின் பல்வேறு துணை நிறங்கள் மலையில், மலைச்சரிவில், பள்ளத்தில், வனத்தின் மரங்களில் சிதறிக் கிடக்க, தொலைவை அணைத்துக் கொண்டது நீலநிறம். காட்சி எல்லையின் இறுதியில்   தெரியும் நீர்த்துளி, ஒரு பெரிய ஏரி அதன் பின்னே பலமுறை கண்களை குறுக்கி, நுணுகிப் பார்த்த பிறகு மங்கலாகத் தெரியும் குன்றுதான் பழனிமலைக் கோவில். நாங்கள் சென்றபோது மழை பெய்து ஓய்ந்திருந்ததால் தெளிவான காலநிலை எனவே மறக்கவியலாத அத்தனை அழகானக் காட்சியை மனதில் நிரப்பிக் கொள்ள முடிந்தது.

ஊசியாய் பாயும் குளிர்க்காற்றில், கையில் ஒரு தேநீர்க் கோப்பையுடன் எதிரே பரவியிருக்கும் இயற்கையை நோக்கியபடி, காலம் முடியும் வரை அங்கேயே அமர்ந்திருக்கும் வாழ்க்கை அமையாதா என்ற ஏக்கம் பொங்கி வழிந்தது. இம்மட்டுமாவது கிடைத்ததே எனக் கருப்புத் தேனீர் பருகியபடி நின்று ரசித்தோம். விழிகளில் தெரிந்த காட்சியை எப்படி முயன்றும் செல்பேசிக் காமிராவில் கொண்டு வர இயலவில்லை. மறுநாள் இதே வழியில் திரும்பியபோது சாலையே தெரியாத அளவிற்கு பனிமூட்டம் விரவிக் கிடந்தது. 

காணும் புகைப்படங்களில் எல்லாம் வெண்புகை சூழக் காட்சி தரும் பூம்பாறை கிராமமும், அடுக்கடுக்காய் அமைந்திருக்கும் இல்லங்களும் இப்போது தெளிவாய், அமைதியாய் தாழக் கிடந்தது. இருள் சூழ்ந்து கொண்டிருந்ததால் நாளை நேரமிருப்பின் கீழே இறங்கிப் பார்க்கலாம் என ஊருக்குள் இறங்கும் பாதையை விலக்கி விட்டு முன்னேறினோம். சாலை குறுகிச் செல்லக் காடு இருபக்கமும் அடர்த்தியாகிக் கொண்டே சென்றது. நீண்டே நேரத்திற்கு எதிரே வாகனங்கள் எதுவும் வரவில்லை. மரங்கள், புதர்கள் பூச்சிகளின் ஒசை, பச்சை வண்ணம் முடிவில்லாமல் வந்து கொண்டே இருந்தது. ஒரே இடத்தில் சுற்றிக் கொண்டிருப்பது போல மயக்கம் எழுந்தது. முடிவில்லாமல் நீண்டு கொண்டே சென்றது போல பயணம் தொடர்ந்தது.

ஐந்து கிலோ மீட்டருக்கு முன்பே மலையிலிருந்து பள்ளத்தில் இறங்கிக் கொண்டிருக்கும்போது ஊர் கண்களுக்குப் புலனாகிறது. ஊரை விட அதிகமாய், பரந்து விரிந்த பச்சைப் புல்வெளி சூழக் காட்சி தரும், பெரிய நீர்ப்பரப்பு நம்மை வரவேற்கிறது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை குளிர்ச்சியான பச்சை நிறத்தின் நடுவே அமைதியாய் தளும்பிக் கொண்டிருக்கிறது மன்னவனூர் ஏரி.

நாங்கள் ஊரை அடையும் போதே இருட்டத் தொடங்கி விட்டது. மன்னவனூர் பிரிவு சாலையிலுள்ள மண்டல செம்மறி ஆடு ஆராய்ச்சி நிலையம் அருகில் தங்குமிடம் முன்பதிவு செய்திருந்தோம். அறையில் பயணப்பைகளை வைத்துவிட்டு, ஊரைச் சுற்றிப் பார்த்துவிட்டு வருவோம் என்று கிளம்பினோம். அங்கிருந்து ஒன்றரை கிலோமீட்டர் சென்றால் ஊரை அடையலாம்.

எங்கு பார்த்தாலும் படிக்கட்டுகளாக காய்கறித் தோட்டங்கள். அழகு மிளிர்ந்தது. ஆனால், ஊரின் வீடுகள் நிலை கவலைக்குரிய நிலையில் இருந்தது. பச்சைமலை, கொல்லிமலை போன்ற சிறிய மலைகளில் கூட இது போன்று நெருக்கமான வீடுகளைக் கண்டதில்லை. அங்கே வீடுகள் ஓரளவு இடைவெளிகள் விட்டு விசாலமாக இருக்கும். ஆனால், இங்கே இடைவெளி இல்லாமல் அமைந்த சிறிய வீடுகள். குனிந்துதான் உள்ளே நுழைய முடியும் என்ற அளவில் இருந்தன.  சில வீடுகள் மண் சுவர்களால் ஆனது. சுற்றிலும் இருக்கும் பசுமை அங்கே வாழும் மக்களின் வாழ்க்கையில் இல்லை என்பதை வீடுகளைக் கண்டபோதே தெரிந்து கொள்ள முடிந்தது. 

இங்கே தங்கியிருந்த போது நான் வியந்த இரண்டு விஷயங்களில் ஒன்று அடிக்கடி இந்த ஊருக்கு வரும் பேருந்துகள். வத்தலகுண்டிலிருந்து அரசு மற்றும் தனியார்ப் பேருந்துகள் கொடைக்கானல் வழியாக மன்னவனூர் வரை வந்து, அங்கிருந்து தொலைவில் உள்ள கவுஞ்சி, கிளானவயல் போன்ற ஊர்களுக்குச் செல்கின்றன. மற்றொன்று மக்கள் இங்குத் தெளிவான சமவெளித் தமிழ் பேசுகிறார்கள். மலையாளக் கலப்பு இல்லை.

இரண்டு உணவகங்கள் திறந்திருக்கின்றன. இட்லி, தோசை கிடைக்கின்றது. பசிக்கு சாப்பிடலாம். சற்றுத் தள்ளி ஒரு கடையில் சுடச் சுட சிக்கன் 65 கிடைத்தது. காரமான மிளகுத்தூள் தூவி சாப்பிட்டது குளிருக்கு அத்தனை அருமையாக இருந்தது. தோசையின் ஏமாற்றத்தை தணித்தது கோழி. இரவில் நல்ல குளிர். அமைதியான சூழ்நிலை. பயணக் களைப்பில் நல்ல உறக்கம். விடியற்காலையில் எதிரே தெரிந்த பசும் புல்வெளியை ரசித்துக் கொண்டே நடை சென்றோம். கவுஞ்சி செல்லும் சாலையில் நடந்து அரசு மேல்நிலைப் பள்ளியினைத் தாண்டி, சிறிது தொலைவு சென்று திரும்பினோம். 

காலை கிளம்பி ஏரியின் கரையில் அமைந்துள்ள மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம் சென்று பார்த்தோம். செம்மறி ஆராய்ச்சி நிலையத்தின் பின்புறம், ஏரியை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளது. படகு சவாரி, மலையேற்றம் போன்றவை உண்டு. ஒரு புறம் உயரமான மரங்களடர்ந்த காடு, மறுபக்கம் பரந்து விரிந்த புல்வெளி அதில் மேயும் செம்மறி ஆடுகள், நடுவில் சில்லிட்டு உறைந்து நிற்கும் வெள்ளிப் பரப்பென ஏரி, வெளிநாட்டில் இருக்கும் உணர்வை நீர்ப்பரப்பும், பச்சைப் புல்வெளியும் அத்தனை அழகாய் நமக்கு கடத்துகின்றன. அதே சாலையில் சென்றால் சிறிது தூரத்தில் இடப்பக்கம் ஒரு சிறிய சாலை பிரிந்து செல்கிறது. அடர்ந்த வனத்தின் ஊடே பேரிஜம் ஏரிக்கு செல்லும் வழித்தடம். முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒன்று. வனத்துறை மட்டுமே பயன்படுத்த முடியும். கடுமையான எச்சரிக்கை விடுக்கும் அறிவிப்புப் பலகைகள் நம்மைத் தடுக்க, அதோடு திரும்பி விட்டோம்.

மண்டல செம்மறியாடு ஆராய்ச்சி நிலையம் உள்ளே சென்று பல்வேறு வகை, வண்ணம் மற்றும் அளவில் முயல்கள் கூண்டுகளில் உள்ளதைப் பார்த்தோம். முழுக்க கறுப்பு நிறத்தில் மிகப்பெரிய முயல் முதன்முறையாக பார்த்தேன். அங்கே எடுக்கப்பட்ட நிறையத் திரைப்படங்கள் குறித்த விளம்பரப் பலகை இருந்தது.  

கண்கள் நிறைக்கும் புல்வெளியை கடைசியாய் ஒருமுறை பார்த்துவிட்டு கிளம்பினோம். வரும் வழியில் கூக்கால் ஏரியை தொட்டுவிட்டு மழைத்தூறல் தொடங்கவே வேகமாக வண்டியை விட்டோம். பூம்பாறை, பழனிக் கோவில் காட்சி முனை வரை சாலை முழுக்க வெண் பனிப்புகை மூடிக் கொண்டது. சாலை தெரியாததால் வாகனங்கள் ஓரமாய் பனி விலகக் காத்திருந்து பின் கிளம்பின. பன்னிரெண்டு மணி போல கொடைக்கானல் வந்தபோது பயங்கர மழை. உணவகம் ஒன்றில் ஒதுங்கி மதிய உணவை முடித்துக் கொண்டு, அருகில் மழையில் நனையும் பிளம்ஸ் மரமொன்றை வேடிக்கை பார்த்துக் கொண்டு காத்திருந்தோம்.

கொடைக்கானல், வெள்ளி அருவியைத் தாண்டியவுடன் வரும் பெருமாள் மலைப் பகுதியில், பழனி செல்லும் சாலைப் பிரிவைத் தாண்டினால், சிறிது தூரத்தில் வலப்பக்கம் அடுக்கம் கிராமத்தின் வழியாக பெரியகுளம் செல்லும் சாலை ஒன்று சோதனைச் சாவடியுடன்  தொடங்கி மலையின் கீழே இறங்குகிறது. பிற்பகல் மூன்று மணி வரை மட்டுமே சிறிய ரக வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. வனத்தின் ஊடாக இறங்கிச் செல்லும் மிகச் சரிவான மலைப்பாதை. இங்கிருந்து முப்பத்தைந்து கிலோ மீட்டரில் பெரியகுளம்.

இதுவரை சென்ற மலைப் பாதைகளில் மறக்க முடியாத காட்சியனுபவம் கிடைத்தது இவ்வழியில். அடுக்கம் கிராமம் தாண்டியவுடன் அடர் வனத்துக்கிடையே ஓடும் சாலையில் நாங்கள் மட்டுமே சென்றோம். ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவும் நீர் வீழ்ச்சிகளால் அலங்கரிக்கப்பட்டு, நீரின் ஓசை நம்மைத் தொடர்ந்து கொண்டே வருகின்றது. தொலைதூரம் வரை நீலங்கலந்த பச்சை பின்னணியில் அடுக்கடுக்காய் தெரியும் மலை முகடுகளின் காட்சி அனுபவத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. நேரடியாய் கண்டுணர வேண்டிய மகத்தான அனுபவம் அது. எத்தனை சிறியவன் நான் என்று தோன்றிய எண்ணத்தை மாற்ற இயலவில்லை அங்கே. நிமிர்ந்து பார்த்தால் கொடைக்கானல் மலையின் உயரம் நம்மை பிரம்மிக்க வைக்கிறது. அத்தனை உயரத்தில் தெரியும் டெண்ட் தங்குமிடங்கள் வானத்தில் மிதப்பது போலத் தெரிகின்றன.  

சித்தரேவு அடிவாரத்தில் கண்ட வறண்ட தாவரங்களின் காய்ந்த, வண்ணமயமான பச்சை நிறம், மலையேறிக் கொண்டிருக்கும்போது மாறிக்கொண்டே வந்து, கொடைக்கானல் தாண்டி, வனப்பகுதி ஊடே செல்கையில் அடர்த்தியாகி மன்னவனூர் புல்வெளிகளில் மனதைக் கவர்ந்து, மழைச் சொட்டுகளில் கரைந்து, பச்சை நிறம் மலையிலிருந்து வழிந்து பூமிக்கு வந்து கொண்டேயிருக்கிறது. பயணம் விரைவில் முடிந்து போனதே என வருத்தம் கொள்கிறது மனது. நாட்கள் கடந்த பின்னும் விழிகளை விட்டு நீங்காமல் நிரம்பிக் கிடக்கிறது பசுமை. 

**********

goldeneyesankar@gmail.com 

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button