
ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் இயக்கத்தின் சொத்துக்களை அதன் நிதிப்பொறுப்பில் இருந்த இளந்திரையன் மறைநாணயமாக மாற்றி (crypto currency) விடுகிறார். எதிர்காலத்தில் அது தவறானவர்கள் கையில் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக அதன் கடவுச்சொல்லாக சில குறிப்புகளை, இயக்கத்தின் நம்பிக்கைக்குரிய மூவருக்கு மட்டும் புரியும் வண்ணம் விட்டுச் செல்கிறார். அதில் இருவர் இறந்து விட, மீதம் இருக்கும் ஒருவரான ப்ரொபசர் ஜெயச்சந்திரனை தமிழக அரசியல் கட்சித் தலைவரும், முன்னாள் இயக்க பொறுப்பாளர் ஒருவரும் சேர்ந்து கடத்துகிறார்கள்.
ப்ரபொசர் ஜெயச்சந்திரன் மூலம் கடவுச்சொல்லை கண்டுபிடித்தார்களா? மறைநாணயத்தை பணமாக மாற்றி மீட்டார்களா? இதுவே கதை.
முதல் அத்தியாயத்திலேயே நாவலாசிரியரின் பகடி வெளிப்பட ஆரம்பித்தது விடுகிறது. ஆடிட்டர் நந்தா, காரைக்கால் கவர்னர் சம்பந்தப்பட்ட பகுதியை வாசிக்கும் பொழுது சிரிப்பை அடக்க முடியவில்லை.
மணிப்பல்லவத்தீவுதான் நயினார்தீவு என்று கதையில் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். 2004ம் ஆண்டு உருவான சுனாமியிலயே மணிபல்லவத்தீவு கடற்கொண்டு விட்டது. ஆனால் 2007 ம் ஆண்டில் அதில் தங்கத்தை கடத்துவதாக கதையில் வருகிறது. முன்னுரையிலேயே எல்லா நிகழ்வுகளும், கதாப்பாத்திரங்களும் கற்பனையே என்று சொல்வதால் விட்டு விடுவோம்.
ஆனால் முன்னாள் போராளி ஒருவரை கற்பனைக்காக கூட தவறாக சித்தரிப்பதை ஏற்க முடியாது.
சுஜாதாவின் கணேஷ் வசந்தை இவரின் கார்த்திக் ஆல்டோ நினைவுபடுத்துகிறார்.
இந்நாவலின் புனைவுக்காகவும், இதில் கூறப்பட்டுள்ள வரலாற்றுத் தகவல்களுக்காகவும் ஆசிரியரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். மணிபல்லவத்தீவு என்ற நயினார் தீவு, ஆபுத்திரன், சோழன் கிள்ளிவளவன், தொண்டைமான் இளந்திரையன், திருவாலங்கானத்து பாண்டியன் நெடுஞ்செழியன், என இவ்வளவு வரலாற்றுத் தகவல்களையும், தமிழீழ இயக்கத்தை அடித்தளமாகக் கொண்ட கதைக்களத்தையும், அருமையான எழுத்தாற்றலையும் கொண்ட எழுத்தாளர் இதைக் குறுநாவலாக படைத்து விட்டாரே என்பதே சின்ன மனக்குறை.
சேட்டிலைட் போனில் ரெண்டு பேசுகிறார் என்று சொல்லும்போதே வாசிக்கும் நமக்கும் உடல் சிலிர்க்கிறது. “இந்த புனைவுக்கதை உண்மையாக இருக்க கூடாதா! ஆடிட்டர் நந்தாவும், விபுலேந்திரனும் நல்லவர்களாக இருக்க கூடாதா, இந்தப் பணம் உண்மையாக இருக்கக் கூடாதா, இதை வைத்து திரும்பவும் இயக்கத்தை கட்டமைக்க முடியாதா…!”என ஏங்க வைக்கிறது. நாவலை வாசித்து முடித்த பின்பும் இந்த எண்ணங்களிலிருந்து மீள முடியவில்லை.
மண்டபம் அகதி முகாமில் உள்ள முன்னாள் போராளி ஒருவர் சொல்லும், “எங்கள வச்சு எவனெவனோ பொழைக்கிறான்…எங்க பொழப்புதான் நாறிக்கெடக்கு” எனும் வரிகள் முகத்தில் அறையும் உண்மை. உண்மையான தமிழீழ தியாகிகள் அல்லல்படுவதையும் அவர்களை வைத்து அரசியல் செய்பவர்கள் சொகுசாகத் திரிவதையும் இந்த ஒற்றை வரியிலேயே உறைப்பதுபோல் சொல்லிச் செல்கிறார் ஆசிரியர்.
பிரச்சனைக்குரிய ஒரு கதைக்களத்தை தைரியமாக தேர்ந்தெடுத்து, வாசகர்களுக்கு அலுப்புத் தட்டா வண்ணம் கதையைப் பல எதிர்பாரா திருப்பங்களோடு விறுவிறுப்பாகக் கொண்டு சென்ற எழுத்தாளருக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.