இணைய இதழ்இணைய இதழ் 53தொடர்கள்

அகமும் புறமும்; 2 – கமலதேவி

தொடர் | வாசகசாலை

மொட்டவிழும் கணம்

ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின்
கோடை அவ் வளி குழலிசை ஆக,
பாடு இன் அருவிப் பனி நீர் இன் இசை
தோடு அமை முழவின் துதை குரல் ஆக,
கணக் கலை இகுக்கும் கடுங் குரற் தூம்பொடு,
மலைப் பூஞ் சாரல் வண்டு யாழ் ஆக
இன் பல் இமிழ் இசை கேட்டு, கலி சிறந்து,
மந்தி நல் அவை மருள்வன நோக்க,
கழை வளர் அடுக்கத்து, இயலி ஆடு மயில்
நனவுப் புகு விறலியின் தோன்றும் நாடன்
உருவ வல் விற் பற்றி, அம்பு தெரிந்து,
செருச் செய் யானை செல் நெறி வினாஅய்,
புலர் குரல் ஏனற் புழையுடை ஒரு சிறை,
மலர் தார் மார்பன், நின்றோற் கண்டோர்
பலர்தில், வாழி தோழி! அவருள்,
ஆர் இருட் கங்குல் அணையொடு பொருந்தி,
ஓர் யான் ஆகுவது எவன்கொல்,
நீர் வார் கண்ணொடு, நெகிழ் தோளேனே?

அகநானூறு: 82 – பாடியவர்: கபிலர் – திணை: குறிஞ்சி

அகநானூற்றில் ‘களிற்று யானை நிரை’ என்ற முதல் பகுப்பில் வரும் பாடல். தலைவி தோழிக்கு கூறியது.

‘அவனை ஆயத்தார் பலரும் கண்டாரென வந்தோன் முட்டியவாறும்,அவருள் நெகிழ்த்தோளான் யானே எனத் தானே கூறியவாறும்’ காண்க என்பர் நச்சினார்க்கினியர் என்று உரையில் எழுதப்பட்டுள்ளது.

கல்லூரியில் முதுநிலை பட்டப்படிப்பு இறுதியாண்டு திட்டக்கட்டுரை சமர்ப்பித்தலிற்கான ஆய்விற்காக திருச்சியில் நான்கு மாதங்கள் இருந்தோம். உறையூரின் ஒரு அடுக்ககத்தின் எட்டாவது மாடிக்குடியிருப்பில் பதினைந்து தோழிகள் தங்கியிருந்தோம். பத்துநிமிட நடையில் ஆய்வகம் இருந்தது. நாங்கள் நுண்ணுயிரியல் [Microbiology] மற்றும் உயிர் தொழில்நுட்பவியல் [Biotechnology] துறை மாணவிகள். எங்களுடன் திருச்சி கல்லூரியிலிருந்து மணிகண்டன் என்பவன் வந்து சேர்ந்திருந்தான். சரியாக நேரத்திற்கு வந்து சென்றுவிடுவான். 

ஒருநாள் மணிகண்டன் விடுமுறை எடுப்பதாக இருந்தான். அவனுடைய முயல்களுக்கு உணவு தந்து, தண்ணீர் ஊட்ட சொல்லி [water feed] தோழி ரெஜியிடம் கேட்டான். ரெஜியின் முயல் கூண்டு, அவன் கூண்டின் அருகில் இருந்தது. அவள் பதில் ஏதும் சொல்லாததால் நான் சரியென்று சொன்னேன். ரெஜி நெற்றியைச் சுருக்கியபடி ஆய்வகத்தின் படிக்கட்டுகளுக்குச் சென்று விட்டாள். மெதுவாக அவன் எங்கள் அனைவருக்கும் நல்ல நண்பன் ஆனான். ரெஜி மட்டும் அவனிடம் சரியாகப் பேசவில்லை.

ஒருநாள் மதிய விடுமுறையில் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலுக்குச் சென்றோம். உறையூரிலிருந்து சாலை ரோடு வழியாக கல்லூரிச் சாலையில் நடந்தால் மலைக்கோட்டை நுழைவாயில் வந்துவிடும். பேசிக்கொண்டே நடக்கலாம் என்று முடிவு செய்தோம். உற்சாகமாக வந்த ரெஜி, அவனும் நிற்பதைக் கண்டதும் பேருந்தில் ஏறிவிட்டாள். இரவு அவளை அனைவரும் கடிந்து கொண்டோம். அவள் பதில் சொல்லாமல் கோவித்துக்கொண்டு பால்கனிக்குச் சென்று அமர்ந்து கொண்டாள். இரவு உணவிற்கும் பக்கத்திலிருந்த மாமி மெஸ்ஸிற்கு வரவில்லை. நான் கோபமாக, “என்னாச்சு உனக்கு…அவன் நல்ல பையன் மாதிரிதான் இருக்கான். ஒரு இடத்துல படிக்கறோம். அவன மட்டும் தனியா விட்டுட்டுப் போலாமா? இன்னொருத்தன் இருந்தாக்கூட பரவாயில்ல,” என்றேன். சற்று நேரம் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தோம். அங்கிருந்து திருவரங்கத்தின் கோபுரம் அந்த இரவில் மின்விளக்குகளுடன் அழகாகத் தெரிந்தது.

அவள் நிதானமாக ‘He bothers me’ என்றாள்.

எனக்கு சட்டென்று ஆங்கிலத்தின் ஆழத்தைப் பிடிக்க முடியாது.

“நீயா தப்பா எதையாச்சும் புரிஞ்சுக்காத”, என்று கோபமாக எழுந்து நின்றேன்.

“நாவல்லாம் படிக்கிற…நான் சொல்றது புரியலையா”, என்றவளின் கண்களைப் பார்த்தேன். சிவந்து கலங்கியிருந்தது. 

அந்த நான்கு மாதங்களும் நான் அவள் அருகில் இருந்து அவளிடமிருந்து கோபமாகவே வெளிப்பட்டுக் கொண்டிருந்த வேறொன்றைக் கவனித்தேன். எங்கள் அனைவருக்கும் நண்பனாக இருந்த அவனுக்கே தெரியாத அழகிய கள்ளம் அது. அவளுக்கு மட்டும் தன்னைப் பிடிக்கவில்லை என்றே அவன் கடைசி நாள் வரை நினைத்தான். 

இதை எழுதி முடித்து வெளிநாட்டிலிருக்கும் அவளை அழைத்தேன். நான் தயங்கியபடி,”சிறுகாம்பூர் தலைவனை ஒரு கட்டுரையில் எழுதிட்டேன்”, என்றேன். [எழுதிவிட்டு இதுபோல் உற்றவரிடம் பதட்டமாகச் சொல்வது அடிக்கடி நடக்கிறது]

“நீ ஒரு lovable idiot டீ… என்னத்த எழுதி வச்சிருக்க”, என்றாள். எப்போதும் Lovable idiot என்பதுதான் அவளின் உச்சப்பட்ச அன்பின் வெளிப்பாடு.

“சிறுகாம்பூரான் என்ற பெயரே சங்ககாலத்து பெயர் மாதிரியே இருக்குல்ல”, என்று இந்தக் கட்டுரையை கூறினேன்.

அவள் வழக்கம் போல ஆங்கிலத்தில்,” fraud…do it like this.. betray everyone for your stories”, என்று சிரித்தாள்.

எனக்கும் வழக்கம் போல பேசி முடிக்கும் போதுதான் அவள் என்ன சொன்னாள் என்று விளங்கியது.

“யாருடைய உண்மையான பெயரையும் எழுதல”, என்றேன். ‘உண்மையான பேரை எழுதினா தான் என்ன?’ என்று மீண்டும் சிரித்தாள்.

Bothers Me என்ற வார்த்தை இந்த சங்கக்கவிதைக்கு மிகத்துல்லியமாக பொருந்துகிறது என்று நினைக்கிறேன். அதை கடந்து வர இருபத்துமூன்று வயதில் அவள் எவ்வளவு அலைவுற்றாள் என்று அருகில் இருந்து உணர்ந்திருக்கிறேன். அவள் உயிர்தொழில் நுட்பவியலில் நுண்ணிய அறிவும் தேடலும் உள்ளவள். குட்டி மேதை என்று கூடச் சொல்லலாம். அதிகாலையில் எழுந்து படிப்பது அவள் வழக்கம். நானும் அந்த வழக்கத்தை உடையவள். ஆனால், நாவல், கவிதைக்காக எழுவேன். ஒருநாள் காலையில் ஐந்துமணிக்கு எழுந்த போது அவளைக் காணவில்லை. அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தனர். எதிரில் இருக்கும் மாமியின் மெஸ்ஸில் தேநீர் குடிக்கச் சென்றிருக்கலாம் என்று நினைத்து குளிக்கச் சென்று திரும்பிய பின்னும் அவள் திரும்பவில்லை. எனக்கு அவளைப் பற்றிய பதற்றம் இருந்தது. நன்றாகப் படிக்கும் பிள்ளைகளின் கிறுக்குத்தனங்களை ஏற்கனவே சிலரிடம் பார்த்திருக்கிறேன். மெஸ்ஸில் அவள் இல்லை. அவளிடம் ஒரு குட்டி நோக்கியா அலைபேசி இருந்தது. மெஸ்ஸிலிருந்து அவளை அழைத்தேன். 

அந்த விடியாத காலையில் உறையூர் வெக்காளியம்மன் கோவிலுக்குச் சென்றிருந்தாள். அடுத்த குறுக்கு சந்தின் கடைசியில் கோவில் இருந்தது. நான் கோவிலுக்குள் நுழையும் போது ஆறுமணி பூஜை முடிந்து கூட்டம் கலைந்திருந்தது. ஏழுமணிக்கு மேல் கோவிலில் அப்படியொரு கூட்டம் இருக்கும். இரவு வரை அம்மனுக்கு ஓய்விருக்காது. கருவறைக்கு எதிரே நடைசுற்றில் அமர்ந்திருந்தாள். அம்மனை வணங்கிவிட்டு அவளருகில் வந்து அமர்ந்தேன்.

படிக்க முடியல தேவி..அதான் கோவிலுக்கு வந்தேன் என்றாள். [அறிவாளிகள் இப்படித்தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்] என்ன பேசுவது என்று தெரியாமல் திரும்பி வெட்டவெளி கருவறையை பார்த்துக் கொண்டிருந்தேன். வெக்காளியம்மன் கோவில் கருவறை மேற்கூரை இல்லாதது. விண்ணை நோக்கி திறந்திருக்கும். இப்போது தோன்றுகிறது மனமும் கூட அப்படித்தானே; சிலவற்றைக் கடந்து செல்லலாம் தவிர்க்க முடியாது. 

தன்னுடைய கவனக்குறைவிற்காக ஆய்வத்தில் அடிக்கடி கலங்கும் கண்களுடன் UV chamber -இன் உள்புறத்தை பார்த்தபடி முகத்தை மறைத்து நிற்பவளை, தனக்கு என்னவாயிற்று என்று தன்னையே புரிந்து கொள்ள முடியாது பால்கனியில் நிற்பவளை இப்போது நினைத்துக் கொள்கிறேன்.

காற்றில் துளையுண்ட மூங்கில்கள்
அசையும் இந்த மலையில்
மேற்கிலிருந்து வரும் காற்று
அந்தத்துளைகளில் புகுந்து இசையாகிறது,
குளிர்நீர் அருவி
இன்னிசை தொகுதி என ஒலிக்கிறது
அடிக்குரலில் கலைமான் கூட்டம் வங்கியம் போல ஒலியெழுப்புகிறது
மலையகத்துப் பூங்காட்டை 
வண்டுகள் யாழ் என இசைக்கிறது
இந்த மலையிசை கேட்டு வியந்து
மந்திகள் மிரண்டு பார்க்கின்றன.
மூங்கில் வளரும் மலையடுக்கத்தில்
நாட்டிய மங்கையாய் மயில்கள் உலவும்
நாட்டில் தோன்றியவன் அவன்
கைகளில் பெரியவில்லும் அம்பு கொண்டு
நீண்டதந்தமுடைய யானையைத் தேடி..நம்
திணை புனத்தின் வாயிலில் வந்து நின்றான்
காடு ஒலிக்கும் அந்த அதிகாலையில்
அவனை பார்த்தவர் பலர் தோழி நீ வாழ்க
அவர்களுள் நான் மட்டும்
காடு ஓசையிடும் நள்ளிரவில்
தலையணையில் முகம் புதைத்து
நீர் நிறையும் கண்களுடன் நெகிழ்வது ஏனோ!

(தொடரும்…)

kamaladevivanitha@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button