கவிதைகள்

சிறு திருக்குளம் பேசியபோது

உமா மோகன்

இருள் மிதக்கும்
பரப்புக்கடியிலிருந்து
வாலை உயரத்தூக்கி குனிந்திறங்கிய மீனின்
அலட்சிய “ஹும்”
எனக்கோ
மேற்படிப் பூனைக்கோ.
படிகளுக்கப்பால் நின்ற அரசமரம்
 இலைவழிஉறவாடலில்
அவ்வப்போது கேட்ட தட் தட்
பகைதீர்த்த குறுவாள் ஒலி.
படித்துறைக்கு மேலிருந்து
இறங்கி இறங்கி ஏறுகிறது
தூரத்து விளக்கொளி
சிறுமீன்களின்
தெருவிளையாட்டு விதிகளை உடைத்து
குறுக்கே புகுந்த
நிலவைக் கடிந்து மீசை துடிக்க
நகரும் பூனையின் ” மியாவ்”
எல்லாம் கலைத்துவிடுகிறது
என்றோ இடிந்து ஒட்டியிருந்த
படியின் கல்லொன்றை
அறியாது தட்டி விழவைத்து
“தளக்” எழுப்பிய
உங்கள் தடம்.
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button