
சட்டென அரும்பி
சட்டென மொக்கெடுத்து
சட்டென மலர்ந்து
சட்டென உதிர்ந்து
சடாரென ஒருநாள்
செத்தும் போகிறது
ஆம்,
இந்த உறவுகள்
முறியவும்
நெறித்து வளரவும்
சஞ்சலமின்றி
கதைகளாகிறது காலம்.
*
சரசரவென புரள்கின்றன
சருகுகள்
மளமளவென
வளர்ந்ததைப் போலவே!
*
யாருக்கும் எதுவும் ஆகிவிடக் கூடாது
என்று நினைத்தேன்
எனக்குதான் என்னமோ ஆகிவிட்டது.
*
மலை போல் நம்பினேன் உன்னை
நீ மணல் சரிவாக மாறிய போதும்
புதைபடும் நொடியில்
முளைத்தெழுவேன் என்றே
புன்னகைத்தேன்
இப்போதும்
காத்திருக்கிறேன்
ஒரு மலர் வளையமாவது கொணர்வாய் என.
*
சைக்கிள் குறுக்கே வந்த சிறுமி
வெடுக்கென ஒதுங்கினாள்
சைக்கிளில் இடிபட
அஞ்சி மருண்டனள் என
திரும்பிப் பார்க்கிறேன்.
நமட்டுச் சிரிப்போடு
நான் நிலை தடுமாறியதை
நின்று இரசித்துகொண்டு இருந்தாள்.
இப்படியும் விளையாட
யார் சொல்லித் தந்தது?