கட்டுரைகள்
Trending

பரவி வரும் கொரோனா: சோதனை முறையில் மாற்றமே உடனடித் தேவை!

பார்த்திபன் நெடுஞ்செழியன்

உலகம் முழுக்க அனைத்து நாடுகளிலும் கொரோனாவின் பாதிப்பு உச்சத்தை அடைந்திருக்கிறது. இந்தியாவில் இனிமேல் தான் அதன் ருத்ரதாண்டவம் இருக்கப் போகிறது என்பது எனது தனிப்பட்ட கருத்து. தொற்று எண்ணிக்கையில் இந்தியா குறைவாக இருக்கக் காரணம் நாம் சோதனை செய்திருப்பதே மிக மிகச் சிலருக்கே என்பதால்தான். ஆம், 10 லட்சம் பேரில் 93 பேர் என்ற அளவிற்கே இந்தியாவில் கொரோனா தொற்றுக்கான சோதனை செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளில் இந்த சதவீதம் பல மடங்கு அதிகம். இந்தியாவில் இதுவரை சோதனை செய்த 1,50,000 பேரில் 7500 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் இன்னும் சோதனை செய்யப்படாமல் இருக்கும் 99.99% மக்களுக்கும் சோதனை செய்யப்பட்டால் பாதிக்கப்பட்டோர் எவ்வளவு இருக்கலாம்???

இந்தியா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இத்தகைய பரவலான சோதனை சாத்தியமில்லை; மேலும் அந்த சோதனை செய்வதற்கான கட்டணம் அதிகம் என்று பலர் கூறுவதைக் கேட்க முடிகிறது. அது ஒருவகையில் சரியும் கூட. அதன் காரணமாக கொரோனா அறிகுறிகளைக் கொண்டுள்ள ஆட்களை மட்டுமே சோதனை செய்வது போதும் என நாம் நினைக்கலாம். அதிலும் கொரோனா தொற்று ஏற்பட்ட 50-60% நபர்களுக்கு எந்த விதமான அறிகுறிகளையும் அது காட்டுவதில்லை. மேலும் 10-20% சதவிகித நபர்களுக்கு மிக நீண்ட நாட்கள் கழித்தே அறிகுறிகளைக் காட்டுகிறது. எனவே இப்படியான 50-70% சதவிகித நோய்த்தொற்று ஏற்பட்டவர்களை நாம் கண்டறியாததால் நாம் இன்னேரம் அவர்களுடன் சாதாரணமாக பழகிக் கொண்டு இருக்கலாம்; அவர்கள் மூலம் நமக்கும் நோய்த்தொற்று வந்திருக்கலாம்; நம் மூலம் நிறைய பேருக்கும் பரவிக் கொண்டிருக்கலாம். இதில் வயதானவர்கள், நோயாளிகள், எதிர்ப்பு சக்தி இல்லதாவர்கள் நம்மால் இறக்கவும் நேரிடலாம். இதையெல்லாம் நாம் செய்திருக்கிறோம் என அறியாமலே நாம் பேஸ்புக்கில் போஸ்ட் போட்டு கொண்டிருக்கலாம். இப்படியான ஆட்களால் தான் கொரோனா தொற்று மிக அதிவேகமாக பரவி வருகிறது என்பதே நிதர்சனம்!

இதில் இந்த தனிப்பட்ட நபர்களை நான் குறை கூறமாட்டேன். தனக்கு இருக்கிறது என்று தெரிந்து அவர்கள் செய்வதில்லை. அத்தியாவசம் தவிர்த்து வெளியே செல்லாதவர்களை மட்டுமே இதில் நான் சொல்கிறேன். இது தான் சாக்கு என ஊர் சுற்றியவர்களை அல்ல! இவர்களுக்கு சோதனை செய்யாத அரசையே நான் குறை கூறுவேன். பணத்தை விட மனித உயிர்களே மேலானவை என்று கூட உணராத நிலையிலா அரசுகள் இருக்கின்றன? அடுத்த ஒரு வருடத்திற்கு எந்த விளைச்சலும், உற்பத்தியும் இல்லையென்றாலும் கூட மக்களுக்கு உணவளிக்க கூடிய அளவுக்கு லட்சக்கணக்கான டன் உணவு பொருட்கள் நாடுமுழுவதும் தானியக்கிடங்குகளில் உள்ளது. அவற்றையெல்லாம் எலி சாப்பிட்டு கொண்டிருப்பதை மனிதன் சாப்பிட கொடுக்கலாம்!

சரி விஷயத்துக்கு வருவோம் அதிக பேருக்கு டெஸ்ட்டும் எடுக்க வேண்டும்; அதேநேரம் அதிக செலவும் ஆக கூடாது அது தானே இப்போதைய நிலை? அதற்கான தீர்வு தான் சிங்கிள் RT-PCR டெஸ்ட்!

இந்த சோதனை முறையில் குறைந்தபட்சம் 10ல் இருந்து அதிகபட்சம் 64 பேர் வரை ஒரே நேரத்தில் ஒரே முறையில் சோதனை செய்யலாம். ஓரே சாம்பிளில் 25-27 பேர் என்பது துல்லியமாக இருப்பதாக ஆய்வு முடிவுகளில் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது 25 பேரிடம் சாம்பிள் எடுத்து ஒன்றாக கலந்து கொரோனா தொற்று சோதனை செய்வது. நெகடிவ் என வந்து விட்டால் அந்த 25 பேருக்கும் நோய் இல்லை. பாஸிடிவ் என வந்தால் அந்த 25 பேருக்கும் தனித்தனியாக சோதனை செய்து நோய்த்தொற்று உள்ள ஒருவரையோ அல்லது ஒரு சிலரையோ கண்டறிவது! இந்த முறையின் மூலம் மிக அதிகமான நபர்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் சோதனை செய்ய முடியும் என்பதோடு மட்டுமில்லாமல் மிக வேகமாகவும் செய்து முடிக்க இயலும்.

இம்முறையில் ஒரே நேரத்தில் 25 பேருக்கு சோதனை என எடுத்துக் கொண்டு, ஒரு முறை சோதனை செய்ய ரூ.4000 கட்டணம் என வைத்துக் கொண்டாலும், 25 நபர்களுக்கு தனித்தனியாக சோதனை செய்ய ஆகும் கட்டணமான ரூ.1 லட்சத்தில் ரூ. 96000 மிச்சம் ஆகும் என்பது நமக்கு முக்கியமல்லவா?

அதைவிடவும் சராசரியாக ஒரு சோதனை (25 நபர்கள்) முடிந்து முடிவுகள் தெரிய 4 மணி நேரம் ஆகும் என வைத்துக் கொண்டாலும், அத்தனை பேருக்கும் தனித்தனியாக சோதனை செய்ய ஆகும் 100 மணி நேரத்தில் 96மணி நேரம் மிச்சமாகிறது என்பது இந்த சூழ்நிலையில் நமக்கு நல்வாய்ப்பல்லவா?

இந்த முறைய அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி போன்ற வளர்ந்த நாடுகள் செய்ய தொடங்கிவிட்டன. தொற்றைக் கட்டுப்படுத்தி, உயிர்ப்பலியைக் குறைக்க வேண்டுமானால் இந்தியாவுக்கு இப்போதைய உடனடி தேவையும் இதுவே!

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button