யாருமற்ற
பிரகாரத்தில்
சுற்றி வருகிறாள்
இறைவி
கையிருப்பில் இருக்கும்
வரங்களை
எண்ணிக்கொண்டு.
***
நினைவுகளை
விழுங்க முடியாமல்
புரையேற
அருந்த வேண்டுகிறேன்
கொஞ்சம் கண்ணீர்.
***
என் கன்னங்களை
ஊதியது பலூன்
வண்ணங்களாய்
முகப்பருக்கள்.
***
உள்ளும் புறமும்
எப்படி ஓயாமல்
உழல்கிறது இந்தக் காற்று
பாழாய்ப்போன இந்த
காதலைப் போல.
***
என் கணத்த
மெளனத்தை
என்னவென்று
பொருள்கொள்வாய் நீ
வலியின்
ஆழமென்றா
ரணத்தின்
நீளமென்றா
விரக்தியின்
உச்சமென்றா
நிராசைகள் அவை
வழக்கம்போல உணர்வாய்
என் திமிரின்
பெரு உருவம் என்று.
******