
அலாரம் அடிக்கத் தொடங்கியதும் வேதா வேகமாக எழுந்து அலாரத்தை அணைத்தாள். கலைந்த கூந்தலை இரு கரங்களை உயர்த்தி கொண்டை போட முயற்சிக்கையில் கலைந்த சேலை இன்னும் கொஞ்சம் இடுப்பை விட்டு இறங்கியது. இருள் சூழ்ந்த அறையில் வெள்ளொளியைப் போல்
பளிச்சிட்டது அவளின் உடுக்கை இடுப்பு. அருகில் படுத்திருந்த பாலன் தன் கரங்களால் இழுத்து மார்பில் அவளைப் போட்டுக்கொண்டான்.
“என்னங்க, விடுங்க சமைக்கப்போகனும்”
“ப்ளீஸ் வேதா, கொஞ்சநேரம்”
“அத்தை தனியா வேலை பார்த்துக்கிட்டு இருப்பாங்க”
“ப்ளீஸ்டா”
அவன் கெஞ்சலில் புன்னகையோடு மௌனம் கொண்டாள். அதிகாலை குளிரில் அந்த இதம் அவளுக்கும் பிடித்திருந்தது. அதனைவிட அவன் கெஞ்சலும், கொஞ்சலும் காலைச் சுற்றும் செல்லப்பிராணியைப்போல் உணரத் தொடங்கினாள். இந்த சிறுதுளி அன்பில்தான் காலம் காலமாய் அடிமைப்பட்டு இருப்பது விளங்குவதேயில்லை. அன்பு போதை வஸ்துவைப் போல் மனிதர்களை ஆட்கொண்டிருக்கிறது .
சிறிதுநேரம் கழித்து குளித்துவிட்டு தன் மாடி அறையை விட்டு பதற்றத்துடன் சமையல் அறைக்குள் நுழைந்தாள். ஒரு அடுப்பில் சோறு வெந்து கொண்டிருந்தது. மறு அடுப்பில் கூட்டு இருந்தது. என்ன குழம்பு வைப்பது என்ற யோசனையில் திரும்பியவள் கத்தரிக்காய், முருங்கைக்காயைப் பார்த்த உடன் ‘அவருக்குப் பிடிச்ச எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு வைத்திடலாம்’ என்று வேகமாக கத்திரிக்காயை நான்காகக் கீறி தண்ணீரில் போட்டாள். முருங்கைக்காயை சுட்டுவிரல் அளவில் நறுக்கி, சின்ன வெங்காயம், வெள்ளைப்பூண்டு, பச்சை மிளகாய், தக்காளி என வெட்டி எடுத்துக்கொண்டாள். கூட்டை இறக்கி வைத்துவிட்டு மண்பானைச் சட்டியை அடுப்பி வைத்து நல்லெண்ணை ஊற்றி, அது காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு வெடித்ததும், வெங்காயம், வெள்ளைப் பூண்டு, கீறிய பச்சைமிளகாய், கத்திரிக்காய், தக்காளி போட்டு சுருள வதக்கினாள். எண்ணெய்யும் காயும் பிரிந்து வர புளியைக் கரைத்து ஊற்றி, மஞ்சள் தூள்,மசால் தூள்,
உப்பு, பெருங்காயத் தூள் எனப் போட்டு நன்கு கொதித்து சுண்டிய பின் சிறிது வெல்லத்தைப் போட்டு இறக்கினாள்.
அந்தியில் கரைந்து கிடக்கும் சூரியனின் சிவப்பு ஒளியைப் போல் அது ஒளிர்ந்தது. சிறிது கையில் ஊற்றி குடித்துப் பார்த்தாள். நாக்கு சப்புக்கொண்டியது. தனக்குத்தானே ‘ஆகா’ என சொல்லிக்கொண்டாள்.
“வேதா சோப்பு எடுத்திட்டு வா” – என பாலா அழைப்பது கேட்டவுடன் வேகமாக மாடிக்கு விரைந்தாள்.
கீழே உள்ள குளியறையிலிருந்து வெளியில் வந்த பாலாவின் அம்மா
லட்சுமி வேகமாக சமையல் அறைக்குள் நுழைந்தாள்
“வேதபுரி…வேதபுரி”
“என்ன அத்தை?”
“ஏ ஆத்தா, குழம்புல ஏன் இம்புட்டு உப்பு?”
“அத்தை சரியாத்தான் போட்டேன்”
“என்னத்தப் போட்ட..வந்த நாளிலிருந்து சொல்லிக்கிட்டுத்தான் இருக்கேன் உப்பைக் கொறன்னு. போட்டா இப்படி போடறது. இல்லைன்னா சப்புனு செய்யறது. போயி வாசலத் தொளி” என்றாள்
‘காலையிலே தொடங்கிருச்சு’ – தனக்குள்ளே முணுமுணுத்தபடி வாசலைத்
திறந்தாள். சூரியன் வானப்போர்வையிலிருந்து அலுப்பை முறித்தபடி விரலை மெல்ல வெளியே விட்ட படியிருந்தான்.
பறவைகள் சாமரம் வீசுவதைப்போல் பறந்து சென்றன. கருப்பு நிறத்தில் சிறிது வெள்ளையும், மஞ்சளும் கலந்த நவீன ஓவியத்தைப்போல் வானமிருந்தது. பறவைகளின் பேச்சொலி அருவியின் சாரலைப்போல் காற்றில் கலந்து பரவியது. பார்க்க ரம்மியமாய் இதமாய் இருந்த அதிகாலையை ரசித்துக்கொண்டிருந்தாள்.
“ஏ…வேதபுரி…இன்னுமா வாசல் தொளிக்கிற?” சத்தம் கேட்டவுடன். ‘இந்த கெழட்டு சிறுக்கி சும்மாவே இருக்கமாட்டா’ – என மனசுக்குள் முணங்கிக் கொண்டே வேகமாக வாசலைப் பெருக்கி கோலம் போட்டுவிட்டு உள்ளே நுழைந்தாள்.
“ஏ ஆத்தா.. வெங்காயத்த வெட்டு. அவன் போற நேரத்துக்கு தேங்காய் சட்னி கெட்டுப் போகும். வெங்காய சட்னி போட்டுக் கொடுப்போம்” – வேதபுரியிடம் லட்சுமி சொல்லிக்கொண்டிருந்தாள்.
பாலன் துலுக்கபட்டி சிமெண்டு பேக்டரியில் சூப்பர்வைசர் வேலைக்குச் செல்வதால் அதிகாலை 4 மணிக்கே சமையல் செய்யத் தொடங்கிவிடுவார்கள். 8 மணி வேலைக்கு ஆறுமணி பேருந்தை பிடித்தால்தான் சரியாகப் போக முடியும். காலை உணவு, மதிய உணவு சேர்த்தே கட்டிக்கொடுத்து அனுப்பிவிடுவார்கள்.
“அம்மா..அம்மா..” என்று கூப்பிட்டபடியே பாலன் வந்தான்.
“இந்தாங்க டீ” என்று வேதா நீட்டினாள். வாங்கிக்கொண்டு குடிக்க ஆரம்பித்தான்.
“யாரு சமையல்?”
“உங்க அம்மாதான்”
“நிம்மதி. இல்லையினா எல்லாம் உப்பாக இருக்கும்” சொல்ல ஆரம்பித்தான்.
“நிறுத்துங்க, செம்மையா உப்பு போட்டு சாப்பிடாம நான் செய்யிற சமையலை குறை சொல்ல வந்துவிடுவீங்க” – முணுமுணுத்தபடியே சாப்பாட்டுப் பையை நீட்டினாள்.
“உண்மையைச் சொன்னா பொறுக்காதே” என்றான்.
“நானும் உண்மையைத்தான் சொல்லுறேன் “என்றாள்.
“வேலைக்குப் போறவன் கூட என்ன காலையிலேயே சண்டை வேதபுரி? வரவர உனக்கு வாய் ஜாஸ்தியாப் போச்சு” – லட்சுமி சொல்லிக்கொண்டே வந்தாள்.
அடுப்படியில் சுற்றித்திரிந்த பூனை வீட்டு முதலாளியைக் கண்டவுடன் திருதிருவென முழிக்குமே அப்படி இருந்தாள் வேதபுரி .
“சரிம்மா நான் கிளம்புறேன்” என்று லட்சுமியிடம் சொன்னவன், வேதாவின் பக்கம் திரும்பி, “போயிட்டு வர்ரேண்டி” என்றான்.
வெறுமனே ‘ம்’ கொட்டினாள் வேதபுரி.
“பார்த்துப் போடா” என வாசல் வரை மகனுடன் சென்று லட்சுமி பின் திரும்பினாள்.
வேதா அவள் அறைக்குச் சென்றாள்.
விரித்த படுக்கை அப்படியே இருந்தது. ‘வா..வா.. படுத்துக்கொள்’ என்று அது அழைப்பதைப் போலிருந்தது. அவள் மனசுக்கும் உடலுக்கும் அது தேவைப்பட்டது. உடம்பைக் கிடத்தினாள் ஏதேதோ நினைவுகள் ஆட்கொண்டன.
அவளையும் மீறி விழிகளின் ஓரத்தில் கண்ணீர் சொரிந்தது. கல்யாணமாகி ஐந்து மாதம் ஆகிவிட்டது. ‘ஒவ்வொரு நாளும் நான் செய்யும் சமையலை குறை சொல்வதே வேலையாப் போச்சு. என் நாக்குக்கு உப்பு சரியாத் தோணுது. அத்தை வைக்கிற குழம்பு ஒரு உப்பு குறைவாத் தெரியுது. நான் என்ன செய்ய? நானும் பலமுறை பார்த்துப் பார்த்துத்தான் உப்பு போடுறேன்.’ தனக்குள் தன் வருத்தத்தைப் பதிவு செய்ய கண்ணீர் ஆறுதலை கன்னத்தில் எழுதியது..
“ஏ ஆத்தா வேதபுரி” வேதாவை முழுபெயர் கொண்டுதான் லட்சுமி அழைப்பாள். சத்தம் கேட்டது. எந்த சத்தத்திற்கும் பதில் தரவிருப்பம் கொள்ளவில்லை. கண்களை இறுக்க மூடிக்கொண்டாள்.
“என்ன படுத்துட்ட, ஒண்ணு சொல்லிடக் கூடாது உன்ன. மாமாவும் ராதிகாவும் எழுந்துட்டாங்க எந்திரிச்சு காப்பி போட்டுக் கொடு.” – லட்சுமியின் குரல் எதிரொலித்தது அறை முழுவதும்.
வேகமாக எழுந்து பாயை மடக்கி வைத்தாள்.
“இந்தக்கால பிள்ளைகளை ஒண்ணு சொல்ல முடியல. என் காலத்தில
இப்படியெல்லாம் கோபம், தாபமெல்லாம் படக்கூட முடியாது” – லட்சுமி தன் சுயபுராணத்தைப் பாட ஆரம்பித்தாள்.
காபியைப் போட்டுக் கொடுத்துவிட்டு அடுத்த வேலையைத் தொடங்கினாள். இப்படியாகத்தான் அவளின் அன்றாடங்கள் போய்க் கொண்டிருந்தன.
திடீரென்று ஒருநாள் பாலன் லட்சுமியிடம், “அம்மா, எங்க அலுவலகத்தில் வேலை பாக்கிறவங்களுக்கு வீடு தராங்க. அங்கேதான் இருக்கணும்னு சொல்லியிருக்காங்க.. என்ன செய்யறது? நம்ம எல்லோரும் அங்க போயிருவோமா? “
“அதெப்படிடா ராதிகா பள்ளிக்கூடம் இங்க இருக்கு. அப்பா வேலை பார்க்கிற இடம் இங்க. இத்தனை நாள் வாழ்ந்த ஊர், வீடு எல்லாத்தையும் விட்டுட்டு எப்படிடா வர்றது?”
“என்ன அம்மாவும் மகனும் குசுகுசுன்னு பேசுறீங்க. அப்பான்னு ஒரு ஆளு இருக்குறதையே மறந்து போல?”
“இல்லப்பா. வீடு தந்திருங்காங்க “என இழுத்தான். எப்போதும் அம்மாவிடம் பேசுவதைப்போல் அப்பாவிடம் ஆண் பிள்ளைகள் பேச முடிவதில்லை, அதற்கு மரியாதை கலந்த பயம் என நாம் பெயரிட்டுள்ளோம்.
“நானும் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன். நீயும் மருமகளும் போய் இருங்கடா” என்றார்.
ஒரு நல்ல நாள் பார்த்து லட்சுமி தன் கையால் பால் காய்ச்சி வேதபுரியையும், மகனையும் தனிக்குடித்தனம் வைத்துவிட்டு வந்தாள். ‘அப்படி ஏன்டா வச்சிட்டு வந்தோம்?’னு நினைக்கிற அளவுக்கு குடும்பமே நிம்மதி இல்லாம போயிருச்சு சில நாட்களில்.
வேதபுரி வாங்கிட்டு வந்த சாபமா என்னவென்று தெரியவில்லை. அவள் கையால் எது செய்தாலும் உப்பு.. உப்பு. சண்டை போட ஆரம்பித்தான் பாலன்.
“என்னம்மா, எங்கிருந்து கட்டிவச்ச இவளை. சாப்பாடு செஞ்சாவே உப்பாத்தான் செய்றா. என் நாக்குக்கு உப்பு சரியாயிருக்கு நான் என்ன செய்யறதுன்னு கேட்கிறா. என்னால இவளோட மல்லுக்கு நிக்க முடியல” என பாலன் அடிக்கடி போன் செய்து லட்சுமியிடம் புலம்புவதுமுண்டு.
ஞாயிற்றுக்கிழமை என்றாலே அம்மா வீட்டுக்குப் போய் விடுவான். அந்த ஞாயிற்றுக்கிழமை வேலை இருந்தது
“மதியம் சாப்பாட்டுக்கு வந்துடுவேன். கறி வாங்கி குழம்பு வை. உப்பு அதிகமாப்போட்டு தொலைச்சிடாத”
“நான் வேணும்னே உப்பு போடுற மாதிரி சொல்லுறீங்க. நான் கொஞ்சமாத்தான் உப்பு போடுறேன். எப்படி உப்பு பிடிக்குதுன்னே தெரியல. நானும் பக்கத்து வீட்டு லதா அக்காட்ட அளவு காமிச்சு உப்பு போட்டாலும் உப்பு பிடிக்குது. நான் என்னமோ வேணும்னே செய்யிற மாதிரி நீங்களும் சொல்லுறீங்க உங்க அம்மாவும் சொல்லுறாங்க. கல்யாணம் முடிச்ச நாளிலிருந்து நிம்மதியில்ல. எங்க வீட்ல ஒருநாளும் உப்புனு சொன்னதில்ல”
“உங்க வீட்டுல மட்டும் என்ன வாழுது? அங்கேயும் எல்லாம் உப்புதான். மறுவீட்டுக்கு வந்தவன்தான். திரும்ப வரவேயில்லையே.”
இருவரும் மாறி மாறிப் பேசியதில் வாய் வார்த்தை முற்றி பாலன் வேதபுரியை அடித்துவிட்டு, ‘சீ, என்ன வாழ்க்கை?’ என்றபடி அலுவலகத்திற்கு புறப்பட்டு விட்டான்.
வேதபுரி இனி ஒருநிமிசம் கூட இங்க இருக்க கூடாது. அப்பப்பா.. நரக வாழ்க்கை. அப்பா வீட்டுக்கே போய்விடலாம் என்று ஓவென்று அழுதபடி துணிகளை பேக்கில் எடுத்து வைத்துக்கொண்டு, வீட்டை பூட்டி வீட்டின் மேற்பகுதியில் சாவியை வைத்துவிட்டு புறப்பட்டு விட்டாள்.
சிமெண்ட் பேக்டரி குவார்டர்சைத் தாண்டி பஸ் ஸ்டாண்டுக்கு நடந்தாள். விருதுநகர் பஸ் வந்தது. உடனே ஏறி அமர்ந்து கொண்டாள். விருதுநகர் பஸ் ஸ்டாண்டில் இறங்கி போடி பஸ்சுக்கு சிறிதுநேரம் காத்திருந்த பின் வந்தது. ஏறி அமர்ந்துகொண்டாள். வேகமாக நிறைந்து விட்டது பேருந்து. ‘ஏ டிரைவர் தம்பி..பாட்டப் போடுங்க’ என பின்னாளிருந்து குரல் வந்தது. பேருந்து எடுக்காமல் இருந்ததால் வெட்கை சூழ்ந்து புழுக்கத்தைத் தந்தது. வேதபுரி கழுத்து, முகத்தை முந்தானையில் துடைத்துக்கொண்டிருந்தாள். ‘ஏம்ப்பா, ஆளுங்க ஏறிட்டாங்க. பஸ்ஸை எடுப்பா. வெட்கை தாங்க முடியலை’ என ஆளாளுக்கு குரல் எழுப்பினர். பஸ் புறப்படத் தொடங்கியது. புழுக்கம் நீங்கி காற்று வீச, இதமான பாடலில் சராசரி நிலைக்கு வந்தாள் வேதா. ‘பெரிய தப்பான முடிவு எடுத்துட்டோமோ’ என்று தோணியது. ஊருக்குத் தனியாகப் போனால் பாட்டி, அம்மா, அப்பா, பக்கத்து வீட்டுக்காரங்க இவங்க எல்லாம் என்ன சொல்வாங்க என்று நினைத்தவுடன் வயிறு புரட்டியது. ‘பொண்ணுனா பொறுமை வேணும், அவசரப்பட்டு முடிவு எடுக்கக்கூடாது. அவ எடுக்கிற முடிவு அவளை மட்டும் பாதிக்காது. குடும்பத்தையே பாதிக்கும். சதுரங்க ஆட்டத்தைப்போல் நேர்த்தியா, நிதானமான ஆடத்தெரியனும்!’ – பாட்டி வாய்க்கும், கைக்கும் சொல்லும். ‘அம்மா என்ன சொல்லி ஒப்பாரி வைக்கப் போதோ? இனிமேல் பாலன் வீட்டிலிருந்து யாரும் கூப்பிட்டு போகமாட்டாங்க. நான் வாழாவெட்டியாத்தான் வாழனும். எனக்கு பின்னாடி நிக்கிற இரண்டு தங்கச்சி, தம்பி வாழ்க்கை என்னவாகும்? அப்பா என்ன சொல்வார்?’ என்று ஒவ்வொன்றாய் நினைக்க, நினைக்க துக்கம் தொண்டையை அடைத்தது. உப்பு ஒன்றைத் தவிர பாலனும் சரி, பாலன் வீட்டிலும் சரி நல்லாத்தான் பார்த்துக்கொண்டனர். நானும் கொஞ்சம் பொறுப்போடு சமையலில் கண்ணும் கருத்துமாய் இருந்திருக்கலாம். ‘சோற்றில் உப்புப்போட்டு சமைக்கும் முறை உங்கள் அம்மா வீட்டில் இல்லை ஆனால், குழம்பில் அதிகப்படியாய் உப்பு போட்டு பழக்கம். இங்க சோறுலையும் உப்பு போட்டு சமைப்பதால் உனக்கு நிதானம் வரமாட்டேங்குது’ – என்று பக்கத்து வீட்டு லதா அக்கா சொன்னது நினைவுக்கு வந்தது. தன்னைத்தானே நொந்து கொண்டவள், திரும்ப ஊருக்கு போயிடலாம்னு முடிவு எடுத்த நிலையில், ‘போடி டிக்கெட்லாம் இறங்குங்க’ என நடத்துநரின் குரல் கேட்க, சுதாரித்து இறங்கினாள். இறங்கியவுடன் உப்புக்கோட்டை பஸ் வர ஏறிக்கொண்டாள்.
அலுவலகம் முடிந்து வீட்டுக்கு வந்தவன் வீடு பூட்டியிருப்பதைப் பார்த்து மேலே கைகளை வைத்து துழாவினான். சாவி தட்டுப்பட வீட்டைத் திறந்தான். காலையில் வீடு எப்படி இருந்ததோ எல்லாம் அப்படி அப்படியே கிடந்தது. ‘எங்க போனா வீட்டை இப்படி போட்டுவிட்டு’ என்று யோசித்தவாறே வெளியில் வந்து பார்த்தான். அக்கம்பக்கம் வீட்டில் அவரவர்கள் இருப்பது குரலில் கேட்டது. அம்மா வீட்டுக்கு போயிட்டாளோ என யோசனை ஓட, உடனே அம்மாவுக்கு போன் போட்டான்
“ஹலோ பாலா, ஏண்டா இன்னைக்கு வரல?”
“வேலை இருந்துச்சும்மா, நேத்தே தங்கச்சிகிட்ட சொல்லிட்டேன்”.
“ஆமாடா சொன்னா. வேதபுரி எப்படி இருக்கா?” என்றவுடன் அங்கில்லை என்பது அவனுக்குள் எட்டியது
“அம்மா..” என அவன் இழுக்க, “என்னடா சொல்லு” எனவும் நடந்த விவரத்தை முழுவதுமாகச் சொன்னான்.
“என்ன பாலா சொல்லுற..பொம்பளப் பிள்ளைய அடிக்கலாமா? நீ செஞ்சது தப்புடா. பக்கத்துல தேடிப் பார்த்தியா?”
“இல்லம்மா”
“பக்கத்துல எங்கேயாவது போயிருப்பா பார்த்துச் சொல்லு.” எனவும், உடனே போனை துண்டித்துவிட்டு பக்கத்துவீட்டு லதா அக்காவிடம் சென்று, “அக்கா, வேதா வந்தாளா?” எனக்கேட்டான்.
“இல்லையே தம்பி” என்றாள். கறிக்கடைக்கு போய் அங்கேயும் விசாரித்தான். பஸ் ஸ்டாண்டுக்குப் போய் பார்த்தான். மனசு ரொம்பவும் பயப்பட ஆரம்பித்தது. ‘திட்டினாலே பொறுக்க மாட்டா இரண்டு நாளு பேச மாட்டா. அடிக்க வேற செஞ்சுட்டோம். என்ன செய்தாளோ?’ அதனை நினைத்தவுடன் பதைபதைத்தது.
ரயில்வே ஸ்டேஷன் பக்கம் போய் பார்த்துவிட்டு மிகவும் விரக்தியோடு வீடு திரும்பினான். அதற்குள் பக்கத்தில் இருக்கிறவர்களுக்கும் தகவல் தெரிந்து விட்டது.
“பாலா தம்பி, நான் சொல்லுறேன்னு தப்பா நினைக்காதீங்க. உங்க அம்மா வீட்டு குழம்பு எங்களுக்கு ஒரு உப்பு குறைச்சல்தான் அதே நேரத்தில் வேதா செய்யுற குழம்பு கொஞ்சம் உப்புதான். சாப்பிட முடியாத அளவுக்கு இல்ல. அவ தினமும் புலம்புவா தம்பி. என் கிட்ட அளவு காமிச்சுத்தான் போடுவா. எப்ப பேசினாலும் உப்பைப் பத்தித்தான் பேசுவா. கனவு கூட உப்பளத்துக்கு நடுவில உட்காத்து இருக்கிற மாதிரி கனவு வருதுக்கா. உப்பிட்டவரை உள்ளளவும் நினை மாதிரி வசனம்தான் வருதுன்னு சொல்லி புலம்புவா தம்பி. நான் ஏதோ சாமி குத்தம் இருக்குதுன்னு நினைக்கிறேன். நீங்க வேதபுரியோட ஊரு உப்புக்கோட்டைக்கு போயி அவங்க வீட்டுல விசாரிங்க தம்பி” என்று லதா கூறினாள்.
“சரிங்க அக்கா” என்று சொல்லிய பாலனுக்கு கொஞ்சம் வியப்பாகவும் நகைப்பாகவும் இருந்தது. எவ்வளவு காலம் மாறினாலும் நவீனத்தைக் கையில் எடுத்தாலும் மூடநம்பிக்கைகள் கைவிடாமல் நிற்கும் குழந்தையைப்போல் நிற்கிறது. மண்டிக்கிடக்கும் மனக்கசடுகளுக்கு எங்கே வெளிச்சம் பிறக்கப்போகிறது?
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்
திருட்டை நாளும் ஒழிக்க முடியாது.
என்றபாடல் காற்றில் அலைந்து பாலன் காதுகளை எட்டியது.
‘உண்மைதான். நானும் கொஞ்சம் ஓவரா நடந்துகிட்டேன். வேதா சொல்லுற மாதிரி எனக்கு செம்மையான உப்பைப்போட்டு வளர்க்கவில்லை. ‘சப்’ என்று சாப்பிட்டு பழகியதால், அவள் சாப்பாடு உப்பாகத் தெரிகிறது. அவளும் எவ்வளவோ முயற்சி எடுத்திருக்கிறாள். நான்தான் அவளைப் புரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை. உப்பு குறைந்துவிட்டால் உப்பேயில்லை என கடிந்துகொள்வது. கொஞ்சம் கூடுதலாகி விட்டால் எரிச்சல் படுவதுமாய் இருந்துவிட்டேன். அவளைப் புரிந்துகொள்ளவோ, அவள் பக்க கருத்துகளைக் கூட காது கொடுத்து கேட்கவில்லை. ஒருவண்டியில் இரண்டு மாடுகளும் சரியாக இருந்தால்தானே வண்டி ஓடும். புத்தகத்தை படித்து என்ன செய்ய? பிற மனங்களைப் புரிந்துகொள்ளத் தெரியவில்லை.’ – தனக்குள்ளே நொந்து கொண்டான் பாலன்.
அப்பாவிடம் இருந்து அழைப்பு வந்தது.
“ஹலோ பாலா, அப்பா டா”
“பக்கத்துல விசாரிச்சியா?”
“அங்கே இல்லப்பா.”
“உப்புக்கோட்டைக்கு வந்திருக்காளான்னு கேட்டியா?”
“இன்னும் இல்லப்பா”
“எதனையும் பேசித் தீர்க்கவேண்டியதை அடிப்பாங்களா? நாளை அவங்க முன்னாடி என்ன தலைகுனிய வச்சிட்டியே பாலா.”
“தப்புத்தான் அப்பா.”
“ஒண்ணும் கவலைப்படாத. நாங்க கிளம்பி வர்றோம். நாளைக்கு ஆபிஸ்க்கு லீவு சொல்லிவிடு” என்றார்.
இரவோடு இரவாய் பேருந்தைப்பிடித்து உப்புக்கோட்டை போவதென்று முடிவு செய்தனர்.
அதற்கு முன்பே அங்கு சென்றுவிட்ட வேதபுரி நடந்தவற்றை வீட்டில் சொல்லி அழ ஆரம்பித்தாள்.
“அப்பா, கல்யாணமாகி அஞ்சு மாசத்துல உப்பு…உப்பு இதனை தவிர வேறு பேச்சேயில்லை. கனவு, நனவு எந்த நேரத்திலும் உப்பைத்தவிர வேற
சிந்தனையே இல்லை. என் வாழ்க்கை நரகமா இருக்குப்பான்னு” ஓவென்று அழுதாள்.
“அவனுக்கு எவ்வளவு தைரியம் பிள்ளையை அடிச்சிருப்பான். அவனா நானா பார்த்திடனும்!” – ஆத்திரம் தீர ஆவேசமாய் கைலாசம் கத்தினான்.
“ஏன்டீ, புருசன், பொண்டாட்டிக்கு நடுவுல சின்ன, சின்ன சண்டையெல்லாம் பெரிசாக்கி வீட்டை விட்டு வர்ரது நல்லதா வேதபுரி? உனக்கு பின்னாடி தங்கை, தம்பி இருக்காங்க மறந்திட்டியா? கல்யாணத்துக்கு வாங்கிய கடனைக்கூட கட்டி முடிக்கலடீ. அதுக்குள்ள இப்படி வந்துட்டாயே” – என ஒப்பாரி வைத்து வேதபுரியின் அம்மா அழுதாள்
கேட்டுக்கிட்டேயிருந்த வேதபுரியின் பாட்டி, ‘ஓ’ வென்று சாமி வந்தவள் மாதிரிக் கத்தினாள்.
‘என்னாச்சு அம்மா?’, ‘என்னாச்சு அப்பத்தா.. அத்தை’ என்று அனைவரும் மாறி மாறிக் கேட்க, “உன் குலதெய்வம் உப்பேஸ்வரி வந்திருக்கேன்டா. வாக்கு தவறிட்டடா.. அதுனாலதான் உன் பிள்ளை வாழ்க்கை தத்தளிக்குது. வெள்ளைக்காரன் ஆட்சி தடை உத்தரவு போட்ட போது அவங்களுக்கு எதிராக உப்புக்காய்ச்சி ஊரு ஊரா கொண்டு போய் போட்டாரு உங்க தாத்தா. ஒரு தடவை வெள்ளைகாரன்கிட்ட மாட்டிக்கிற மாதிரி சமயத்துல தப்புன போது, ‘உப்பேஸ்வரி குலதெய்வமே, அவங்ககிட்டயிருந்து என்னைக் காப்பாத்தினதுக்கு நன்றிக்கடனா எங்க வம்சத்தில் பிறக்கிற ஒவ்வொருவரும் மாசி மகத்தில் உன் வாசலில் உப்பு இறக்குவோம்’னு சத்தியம் பண்ணுனான் உங்க தாத்தா. அதை அவன் தவறாம செஞ்சான். ஆனா, உங்க அப்பன் அதை சரியா செய்யல.”
“அம்மா தாயே உப்பேஸ்வரி மன்னிடுச்சுடு. என் கண்ணைத் திறந்து விட்டுட்ட. எங்களுக்கு தண்டனை கொடுத்திடாத தாயே. இனி தவறாம உன் சன்னதில உப்பு இறக்குகிறோம் தாயே” என எல்லோரும் கதறி அழுதனர். கொஞ்சம் கொஞ்சமாக சாமி மலை ஏறியது.
அதிகாலை பாலன், அம்மா, அப்பா, தங்கையோடு வேதபுரி வீட்டிற்கு வந்தனர். வேதபுரியின் அப்பா கைலாசம் அவர்களை, “வாங்க மாப்பிள்ளை, வாங்க சம்மந்தி, வாங்க தங்கச்சி” என்று வரவேற்றார்.
“வேதபுரி, இங்கே வா. யார் வந்திருக்கார்ன்னு பாரு?” என்றார்
“அங்கதான் விடியறதுக்கு முன்னே எழுப்பி கொடுமைப் படுத்துவாங்க இங்கேயுமா?”
“ஏய், இங்க வாரியா இல்லையா?” என்று அப்பா போட்ட அதட்டலில் பாட்டி, தம்பி, தங்கைகள், அம்மா எல்லோரும் நடுக்கூடத்திற்கு வந்து விட்டனர். எல்லோரும் ‘வாங்க…வாங்க’ என வந்தவர்களைப் பார்த்துச் சொல்ல, வேதபுரி மெதுவாக எழுந்து வந்தவள். பாலன் குடும்பத்தைப் பார்த்தவுடன் அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. “வாங்க அத்தை, வாங்க மாமா” என்று மட்டும் கூப்பிட்டாள். பாலன் அவள் முகத்தை மிட்டாயைத் தொலைத்த பிள்ளையைப்போல் பரிதாபமாகப் பார்த்தான். அவள் அவன் பார்வையை புரிந்து கொண்டு, தலைகுனிந்தபடி நின்றுகொண்டாள்.
“வேதபுரி, எல்லாருக்கும் காப்பி கொண்டு வாம்மா” என்றார் கைலாசம்.
லட்சுமி இப்போது, “அண்ணே” என்று தன்பேச்சைத் தொடங்கினாள்.
“மாப்பிள்ளை மேல தப்பில்லைம்மா. நேத்து எங்க அம்மா மூலமா குலதெய்வம் வந்து” என்று நடந்த கதையை கைலாசம் சொல்ல ஆரம்பித்தான்.
பாலனும், “ஆமாம் மாமா. பக்கத்து வீட்டு லதா அக்காவும் இதைத்தான் சொன்னாங்க. ஆனா, எனக்கு இதுல நம்பிக்கை இல்லை மாமா. நான் கொஞ்சம் வேதாவைப் புரிந்திருக்கனும். எனக்காக பல முயற்சிகள் எடுத்திருக்கா, அத நான் புரிஞ்சிக்கல. சமையல் என்றால் பெண்கள்தான் செய்யனும்ங்குற பழமைவாதம் எனக்குள்ளயும் இருக்கு” என்றான்.
“சரிங்க மாப்பிள்ளை, உங்களுக்கு விருப்பமில்லை என்றாலும் எங்களுக்காக குளிச்சு சாப்பிட்டு குலதெய்வம் கோயிலுக்கு சேர்ந்து போயிட்டு வந்திருவோம்” என்றார் கைலாசம்.
“எல்லோரும் குளிங்க. நான் போய் உப்பு மூட்டை வாங்கி வர்றேன்” என கைலாசம் கிளம்ப, “நானும் வர்றேன் சம்மந்தி. போலாம் வாங்க” என பாலனின் அப்பாவும் இணைய, வெளியில் கிளம்பினார்கள்.
‘ஆடத்தெரியாதவன் தெருக்கோணல்னு சொன்னானாம்’ என்று பாட்டி பழமொழி சொல்ல, பாலனும் வேதபுரியும் ஒரு சேர, “ஆமா பாட்டி” என்றனர்
நேற்று கொம்பு சீவி விட்டுக்கொண்டிருந்த வேதபுரியையும், அவன் அப்பனையும் எப்படி அடக்குவது என்று பாட்டிக்குப் புரிந்திருந்தது. பாட்டியின் புன்னகை வேதபுரியின் அம்மாவுக்கு இப்போதுதான் விளங்கியது.
லட்சுமி வேதாவிடம், “ஏம்மா வேதபுரி, உங்களுக்குள்ள சண்டையினா என்கிட்ட சொல்ல வேண்டியதுதானே. அங்க வந்திருக்க வேண்டியதுதானே. அம்மா வீட்டுக்கு இப்படி வரலாமா?”
“அண்ணி வந்தது கூட நல்லதுதாம்மா. இப்படி ஒரு விசயம் இப்பதானே மாமாவுக்கே தெரிய வருது.” என்று பாலானின் தங்கை ராதிகா சொல்ல, “இனிமே அந்த உப்பேஸ்வரி நம்ம குடும்பத்த காப்பாத்துவா அடுத்த வருசம் பேரன் பிறக்கட்டும் அவ பெயரை வைச்சிடலாம்” என்று பாட்டி சொல்ல, “அப்படியே செய்திடலாம்மா” என லட்சுமி வழிமொழிந்தாள்.
உடனே ராதிகா, “உப்பேஸ்வரன்னு பேரு வச்சா கிண்டல் பண்ணுவாங்க பாட்டி” என்றாள். வேதாவின் தங்கை தம்பி இருவரும் அதை “ஆமாம்ல” என்று கூறி சிரிக்க ஆரம்பித்தனர்.
இதையெலாம் கேட்டும் கேட்காதவாறு வேதபுரி அறைக்குள் சென்றாள்
‘வேதா..வேதா’ என்றவாறே அவளைப் பின்தொடர்ந்த பாலன் அவள் கரங்களைப்பற்றி அவன் கண்களின் மேல் வைத்து “சாரி வேதா.. சாரி” என்று பேச இயலாமல் அழ, அவள் மேல் கைப்பகுதியில் வழிந்த கண்ணீர் தரையை நனைத்தது. “அய்யோ என்னங்க” என்ற வேதா அப்படியே அவனை இறுக அணைத்துக் கொண்டான்.
********
உப்பேஸ்வரி கதை யதார்த்தமானது இல்லற வாழ்வில் மாமியார் – மருமகள் சண்டை பணம், நகை,வரதட்சணை எனப் பல காரணங்களால் நடைபெற இதில் உப்புக்காக ஒரு சண்டை. விளைவு கணவன் மனைவி அந்த சண்டை உப்புச்சப்பில்லாத ஒன்று என உணர முடிகிறது.பேச்சில் புனிதம்,எழுத்திலும் ஜோதியாய் மின்னும் புனிதஜோதியை வாழ்த்துகிறேன்.நிறைவான கதை.வாழ்த்துகள்.