
இதுவரை…
தங்களின் கருப்பு வெள்ளைத் தீவுக்கு நிறைய வண்ணங்கள் தேடி தீவைத் தாண்டிப் போக சிறுவர்கள் முடிவு செய்தனர். அதற்கான ஏற்பாடுகளைத் தயார் செய்து, வலசை மீன்களின் உதவிக்காகக் காத்திருந்தனர். அதன் பிறகு என்ன ஆனது? வாங்க பாக்கலாம்.
இனி…
ராம், பாலா, மகேஷ் மூவரும் வேலையைப் பிரித்துக் கொண்டு, எல்லாப் பொருட்களையும் சேகரித்து தாத்தா வீட்டில் வைத்தனர்.
தாத்தா கப்பலைச் சரி செய்து கொண்டிருந்தார்.
பாலா: தேவையான பொருள்கள் எல்லாம் கொண்டு வந்துட்டோம் தாத்தா. சரியா இருக்கான்னு நீங்க ஒரு முறை பாத்துடுங்க.
தாத்தா: சரி கண்ணு.
பாலா: ஏதாவது உதவி பண்ணட்டுமா தாத்தா?
தாத்தா: கப்பல் ரெடி ஆகிடுச்சு. இந்த ரிப்பேர் சாமான்களை எல்லாம் எடுத்து வீட்ல வச்சுடு.
பாலா: ஓகே தாத்தா.
தாத்தா: ராம், மகேஷ்…ரெண்டு பேரும் கப்பலைச் சுத்தம் செய்ய வர்றீங்களா?
ராம்: நாங்க பண்றோம் தாத்தா. நீங்க கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க.
தாத்தா: இன்னைக்கு கப்பல சுத்தம் பண்ணி வச்சிடுவோம். தேவையான பொருட்கள எல்லாம் நாளைக்கு எடுத்து வச்சுட்டு, கப்பல எப்படி இயக்கனும்னு சொல்லித் தரேன். சரியா?
இருவரும் கோரஸாக “சரி” என்றனர்.
எல்லா வேலைகளையும் செய்து முடித்த களைப்பில் இருவருக்கும் தூக்கம் கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது. கப்பலிலேயே அயர்ந்து தூங்கிவிட்டனர்.
பாலா: என்னங்கடா இப்படி தூங்கிட்டு இருக்கீங்க?
சத்தம் கேட்டு இருவரும் அதிர்ந்து எழுந்தனர்.
மகேஷ்: ஹி ஹி…
ராம்: ரொம்ப நேரமா சுத்தம் செஞ்ச அலுப்புல அப்படியே தூங்கிட்டோம்.
பாலா: ஓக்கே ஓக்கே… தாத்தா கிட்ட போயி அடுத்த என்ன வேலை செய்யனும்னு கேக்கலாமா? இல்ல கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாமா?
பேசிக்கொண்டிருக்கும்போதே தாத்தா வந்தார்.
தாத்தா: எல்லாரும் கொஞ்ச நேரம் ஓய்வெடுங்க, அப்போதான் கப்பல் ஓட்டறது பத்திச் சொல்லும்போது நல்லா கவனிக்க முடியும்.
எல்லோரும் கப்பலிலேயே ஓய்வெடுத்தனர்.
அதே சமயம், வலசை மீன்களைத் தேடிச் சென்ற ‘புயல் வேக’ மர்லின் மீன் அவர்களைக் கண்டுபிடித்தது.
மர்லின்: ஹேய் இரும்பு மண்டையா, எப்படி இருக்க? உங்களதான் தேடி வந்தேன்.
இரும்பு மண்டையன்: என்ன மர்லின், எங்களைத் தேடி வந்திருக்க? என்ன விஷயம்?
மர்லின்: லூனா ஒரு முக்கியமான விஷயமா உங்களத் தேடிட்டு இருந்தா. உங்க உதவி நம்ம தீவுக்குத் தேவை. எப்போ திரும்புவீங்க?
இரும்பு மண்டையன்: நம்ம தீவுல இருந்து கிளம்பி ரொம்ப நாளாச்சு. இங்க வந்த வேலையும் முடிஞ்சது. அதனால உடனே கிளம்ப வேண்டியதுதான். நாம சேர்ந்தே போலாம். நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. சாப்பிட்டுக் கிளம்புவோம்.
ஓய்வெடுத்த நேரத்தில், மொத்த வலசை மீன்களுக்கும் தீவுக்கு வண்ணங்கள் தேடிப் போகும் கதையைச் சொல்லி முடித்தது மர்லின். வலசை மீன்கள் எல்லாம் துள்ளிக் குதிக்க ஆரம்பித்தன.
இரும்பு மண்டையன்: ஆஹா! இனி வண்ணங்களப் பார்க்க வேற இடத்துக்கு வர வேண்டாம். நம்ம தீவுலயே பாத்துடலாம். ஹைய்யா, சூப்பர்… சூப்பர்…!
மர்லின்: ஆமா. எல்லோருக்கும் இது மகிழ்ச்சியான விஷயம்தான்.
வலசை மீன்களுடன் எல்லோரும் அவ்விடம் விட்டு மகிழ்ச்சியாகக் கிளம்பினார்கள்.
தூங்கி எழுந்திருந்த ராம், பாலா, மகேஷ் மூவரும் தாத்தாவிடம் கப்பல் ஓட்டும் விதம் குறித்துப் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தனர். கப்பலைப் பறக்க வைக்குமளவுக்குப் பொறியியல் படிக்க தாத்தாவுக்கு ஆசையாம். ஆனால் எவ்வளவு முயன்றும் அவரால் முடியவில்லை என்று கூறிக் கொண்டிருந்தார்.
பயிற்சியின் முதல் நாள் என்பதால் அன்று ஓரளவிற்குக் கற்றுக் கொண்டனர்.
மூவரும் கொஞ்ச தூரம் ஓட்டிப் பார்த்தனர். ஆரம்பத்தில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தாலும் போகப்போகப் புரிய ஆரம்பித்தது.
சில நுணுக்கமான விஷயங்களையும், ஆபத்து ஏற்பட்டால் தப்பிப்பது பற்றியும் தாத்தா வெகு நேரம் கூறிக் கொண்டிருந்தார்.
அடுத்த நாள், மூவரும் ஃப்ரெஷாக தாத்தா வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். லூனாவுடன் மர்லின் மற்றும் வலசை மீன்களும் வந்திருந்தன. பயணத்திற்கு வேண்டிய எல்லாம் தயார் என்பதால் எல்லோரிடமும் உற்சாகம் பொங்கி வழிந்து கொண்டிருந்தது.
அடுத்து வரப்போகும் ஆபத்துகளை அறியாமல் ஆட்டம் பாட்டத்துடன் அந்த இடமே மகிழ்ச்சியில் நிறைந்திருந்தது.
தொடரும்…