கவிதைகள்

விசாரணை 

இரா.கவியரசு

சொல்
உன் பெயர் என்ன ?

” சொற்கள் ”

புரியும் மொழியில் பதிலளி
தப்பிக்கலாம் !

” கபாலத்திலிருந்து வெளியேறும்
ஒளிப்பிழம்பில் மொழி இல்லை
மின்னல்கள் தெறிக்கின்றன ”

திமிராக நிற்காதே
மண்டியிடு !

” குரல்வளை தெரிகிறது
குரல் தெரிகிறதா ?”

யார் உனக்குத் தலைவன் ?

” கூட்டுக்குள் முளைக்கும் குஞ்சுகள்
சிறகு முளைத்தால் பறக்கின்றன ”

எதற்காகப் பயணம் செய்கிறாய் ?

” மலையைக் குடையும் எறும்பு
குகைப் பாதையை சமைக்கிறது ”

உன்னுடன் மொத்தம் எத்தனை பேர் ?

” இரண்டாகக் கிழித்தால் இரண்டு
நான்காக உடைத்தால் நான்கு ”

போதை தரும் வஸ்தை
எங்கே ஒளித்திருக்கிறாய் ?

” தேனெனப் பருகும்  அமுதம்
சல்லி சல்லியாகப் பிளக்கிறது மூளையை”

நேரடியாகப் பேசவே மாட்டாயா ?

” மண்ணுக்குள்ளிருந்து நீர் வருகிறது
தங்கம் கூடத் தோண்டியே எடுக்கிறார்கள்”

ஏன் இப்படி
எப்போது மாறினாய் ?

” நான் பார்க்க ஆரம்பித்தேன் ”

நீ பேசும் மொழி
எங்களைச்  சித்ரவதை செய்கிறது
போதும் நிறுத்து
ரத்தம் கசிகிறது.

” ஆமாம் எனக்குள்ளும் கிளிஞ்சல்கள்
ஒவ்வொரு நாளும் வெடிக்கின்றன”

உன்னை விட்டு விடுகிறோம்
ஆனால்
மீளவும் சந்திக்கும் போது
புரியும் மொழியில் பேசு !
இப்போதாவது சொல்
நீ பிறக்கும் போது வைத்த பெயர் என்ன ?

” கவிதை “.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button