இணைய இதழ்இணைய இதழ் 76பத்தி

வாதவூரான் பரிகள் – இரா.முருகன் – பகுதி 07

பத்தி | வாசகசாலை

ருப்பர் இனம், ப்ரஸீலிய காஃபிக் கலர் இனம், மஞ்சள் சீனர் இனம் என வேறுவேறு இன புனைகதை எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாறு அடிப்படையிலான புதினங்கள் ஏதும் சோடை போனதில்லை

இவற்றின் பொதுவான கதையாடலை சிக்கலெடுத்துப் பார்த்தால் நேர்கோடாக இப்படி வரலாம்மறு நாட்டில் பொருள் தேடிக் குடியேறிய கதை சொல்லி பங்கு பெற்ற நிகழ்வுகளாகக் கதை முன்னேறி, ஒரு கட்டத்தில் வாழ்க்கை குறித்த தரிசனம் கிடைத்து, போதும் இது என்று சொந்த பூமிக்குத் திரும்பப் புறப்படுவதோடு கதை முடியும்

சிமாமண்டாவின் நாவல்அமெரிக்கானாஇந்த இடத்தில் தொடங்குகிறது

சிமாமண்டா எங்கோஸி அடிசெ, கருப்பர் இன உரிமைப் போராளி, வெகுவாக வாசிக்கப்படும் ஆங்கில எழுத்தாளர், பிரபல பெண் எழுத்தாளர், ’எல்லோரும் ஃபெமினிஸ்ட் ஆகணும்என்று முழக்கமிடும் பெண்ணிய வாதி, மனித உரிமைப் போராளி என்று மாய மேலங்கிகள் அணிந்து ஸ்வயம் தொலைந்த காலஇட வெளியில் (space time continuum) சத்தியம் தேடும் சக மனுஷி என்பது பொருள் மற்றும் விஷய கனமான இந்த நாவலில் வெளியாகிறது

நைஜீரியாவிலிருந்து அமெரிக்காவில் குடியேறி கல்லூரிப் படிப்பை நிறைவு செய்யும் இஃபமேலு என்ற இளம்பெண்தான் அமெரிக்கானா நாவலின் உயிர்ப்பிடிப்பான கதை சொல்லி. நான், எனது என்று தன்மை ஒருமையில் நாவல் எந்தத் தடங்கலுமின்றி நகர்கிறது.

இப்படித் தன் கதை சொல்வதான மாயப் புனைவு இழைகளை ஊடும் பாவுமாகச் சேர்த்து நெய்யும்போது பாத்திரப் படைப்பு சகல கல்யாண குணங்களோடுமுள்ளதாகத் திகழ வேண்டியதில்லை. சூப்பர் மார்க்கெட் வரிசையில் பின்னால் நின்று தேகம் பருத்த கதை சொல்லியை உடல் விமர்சனம் செய்கிற யாரோ, ரயிலில் பக்கத்தில் உட்கார்ந்து கையில் வடிய விட்டுக்கொண்டு ஐஸ் க்ரீம் சாப்பிடும் அந்நியன், விமானத்தில் அடுத்த இருக்கையில் அமர்ந்து கருப்புக் குழந்தையை தத்து எடுக்கும் வெள்ளை அமெரிக்கன் பற்றிப் பேசுகிற கம்பெனி மானேஜர் இப்படி கண்ணில் படும், ஒரு நிமிட பேச்சு நடத்திப் போகும் பலரும் நாவல் கதாபாத்திரங்களாக மின்னி மறைகிறார்கள். அந்த கம்பெனி மேனேஜர் உண்மையாகவே கருப்பினக் குழந்தையைத் தத்தெடுத்தவர் என்று பின்னால் வரும்.

 இவர்களில் சிலர் நீண்ட காலம் சென்று மறுபடி இஃபமேலு வாழ்க்கையில் குறுக்கிடும் சுவாரசியமும் கொண்ட கதையாடல் அமெரிக்கானா நிகழ்த்திப் போவது

தன்மை ஒருமையில் எழுதப்பட்ட ஆதிகதை எது என்று தெரியவில்லை. அந்தக் கதைசொல்லி எழுத்தாளன்தான் என்று பரவலாக நம்பிய ஆதிவாசகன் இன்னும் பல பிரதிகளாக உயிர்த்திருக்கிறான்.

நான் இஃபமேலு இல்லை. அவளாக இருந்திருந்தால் என் வாழ்க்கை சுவாரசியமாக இருந்திருக்கும்என்று சிமாமண்டெ விவரம் சொன்னாலும் விளக்கம் கேட்கிறவர்கள் கேட்டபடிதான் இருக்கிறார்கள். எழுத்தாளர் விரல் சுண்டி நாவலில் வரும் இன்னொரு கதாபாத்திரத்தைக் காட்டிச் சொல்கிறார் – ’இந்த பாய் ஃப்ரண்ட் தான் நான். நான் பெண் அவன் ஆண் என்றாலும் அது அப்படித்தான்’.

பாய்ஃ ப்ரண்ட்டுக்குப் பஞ்சம் இல்லாத கதை இது. பதின்ம வயதில் சிநேகிதனும் உடலுறவும் கிடைக்கும் இஃபமேலு அதற்கு அப்புறம் எத்தனையோ பேரோடு உறவு கொள்கிறாள். அவர்கள் மூலம் கிட்டும் நிதர்சனம் கருப்பினம் என்பது ஒற்றை இனப் பகுப்பு இல்லை. அமெரிக்கக் கருப்பர்கள் மற்ற நாட்டு, பிரதேசக் கருப்பர்களை விட சமூகரீதியில் மேம்பட்டவர்கள். பிரஞ்சு பேசுகிற நைஜீரியக் கருப்பர்கள், கரிபியன் கருப்பர்கள், இதர ஆப்பிரிக்கக் கருப்பர்கள் என்று colour gradation மற்றும் மொழி, சமூகம், நாட்டு அடிப்படையில் வேறுபடும் கருப்பர்கள் உண்டு. It would be an interesting exercise to profile all of them.

நைஜீரியப் பெருநகர் லாகோஸிலிருந்து இங்கிலாந்து வழியாக அமெரிக்கா வந்து, நடுத்தர வர்க்க்க தம்பதியர் இல்லங்களில் குழந்தை பார்த்துக் கொண்டு வரும் வருமானம் குறைவுதான் எனினும் மிச்சம் பிடித்து நைஜீரியாவில் அம்மா அப்பாவுக்கு மாதாமாதம் அனுப்பி வைக்க இஃபமேலுவுக்கு முடிகிறது

இதனிடையே இஃபமேலு இண்டர்நெட்டில் ஏற்படுத்திய ப்ளாக் ஏகப் பிரசித்தி அடைகிறது. அதன் மூலம் வருமானமும் உயர்கிறது. ஒரு அமெரிக்க வெள்ளையர் மூன்று வருட சிநேகிதனாகக் கிட்ட, கல்யாணமின்றிக் கூடி வாழ்கிறார்கள் இருவரும்

அவனுக்கு இன்னொரு வெளுத்த அமெரிக்கப் பெண் சிநேகிதம் கிட்டுகிறது. இஃபமேலுவுக்கு அது தெரிய வர, வெறுத்துப்போய் நைஜீரியா திரும்புகிறாள். அவளுடைய முதல்பதின்ம வயது சிநேகிதன் தன் குடும்பத்தைப் புறக்கணித்து இஃபமேலுவுக்கு மறுபடி சிநேகிதனாக, அடுத்த கூடியிருந்து வாழ்தல் தொடங்குகிறது. அமெரிக்கானா கதை நடக்கும் பாதை இது.

கேமிரா பார்வையும், staccoto சொல்லாடலுமாக நாவல் முன்னால் போகிறது. பெண்களுக்கு முடி சீர் செய்யும் சலூனுக்கு இஃபமேலு ஒரு வெப்பமான பகல் நேரத்தில் டாக்சியில் போய்க் கொண்டிருக்கிறாள். டாக்சி ட்ரைவர் ஒரு மத்திய வயது நைஜீரியர். அவர் பெயர், வாழ்க்கை பற்றிய அவரது கண்ணோட்டம், இஃபமலுவோடு அவர் நைஜீரியா பற்றிப் பகிர்ந்து கொண்டது என்று நகரும் டாக்சி, முடி திருத்தகம் வந்து நிற்கிறது

அது அழுக்கான புறநகர்ப் பகுதியில் இருக்கும் திருத்தகம். வெள்ளைக்கார பெண்கள் தப்பித் தவறிக்கூட உள்ளே நுழைய மாட்டார்கள். அப்படியே புகுந்தாலும் ஆயிஷா சலூன், ஆமினா சலூன் போன்ற பெயர்கள் அவர்களைத் திருப்பியனுப்பி விடும்.

உள்ளே இரண்டு பெண்களுக்கு முடி திருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. சுவர் ஓரம் பழைய டெலிவிஷனில் ஏதோ ஒரு நைஜீரியத் திரைப்படம் கரகரவென்று ஒலி, ஒளி தகராறாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தில் கதாநாயகன் மனைவியை அடிக்கிறான். சுவரை ஒட்டி பழைய சோபாவில் முடிதிருத்தும் பெண்ணின் குழந்தை உறங்கிக் கொண்டிருக்கிறது. அவள் டிவி சினிமாவில் ஒரு கண்ணும், உறங்கும் குழந்தை மேல் மற்றதுமாக வாடிக்கையாளர் முடியை சீராக்கிக்கொண்டிருக்கிறாள். ஜன்னலை ஒட்டி தூசி அடைந்து ரிப்பேர் ஆகி ஒரு ஏர் கண்டிஷனர் தட்டுப்படுகிறது. நேர்கீழே ஹேர் ட்ரையர் கிடக்கிறது. அதுவும் பழுதாகிக் கிடக்கிறது. கடை உரிமையாளினி என்று தோன்றும் மத்திய வயதுப் பெண்ணிடம் இஃபமேலு, ‘முடியைப் பின்னல் போடணும்என்கிறாள்.

நாவல் முழுக்க இந்தக் கதையாடலின் மூலம் வாசகரைக் கட்டிப் போடுகிறார் சிமமண்டெ. இஃபமேலு கதை முன்னேற முன்னேற, நம்ம அலமேலு போல் அவள் நமக்கு நெருக்கமாகிறாள். அவள் நைஜீரியாவில் இருந்து மறுபடி அமெரிக்கா திரும்புவாள் என்று ஏனோ எனக்குத் தோன்றிக்கொண்டிருக்கிறது.

**********

நெட்ஃப்ளிக்ஸில்கருப்புக் கண்ணாடி’ Black Mirror திரும்ப வந்து விட்டதை மகிழ்ச்சியோடு கவனிக்கும் பலரில் நானும் ஒருவன். சுவாரசியத்துக்குக் குறைவில்லாத எபிசோடுகள். அதில் ஒன்று – Demon 79.

லண்டன் பல்பொருள் அங்காடியில் விற்பனையாளினி நீட்டா ரொம்ப அடக்கமான, அழகான, சகலத்துக்கும் பயப்படும் கன்னி. இந்திய வம்சாவளிப் பெண். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கெல்லாம் செயற்கையாகப் புன்னகை பூத்து, ஊரறிந்த காமவெறிக் கொலைகாரனுக்கு காலைப் பிடித்து செருப்பு மாட்டி உத்தியோகம் பார்க்கிறவள். பிளாஸ்டிக் டப்பாவில் பிரியாணி கொண்டு வந்து மதிய இடைவேளையில் தனியாக உட்கார்ந்து சாப்பிடும்போது சக ஊழியர்கள் கடை முழுக்க மோசமான பிரியாணி வாடை அடிக்கிறது என்று கடை முதலாளியிடம் புகார் செய்கிறார்கள். கடைக்கு உள்ளே நிலவறையில் உட்கார்ந்து பகல் உணவு சாப்பிடச் சொல்கிறார் கடை உரிமையாளர். ‘எஸ் சார்என்று அடக்கமாகத் தலையசைத்து நிலவறையில் பகல் உணவு சாப்பிடும் நீட்டா அங்கே பழைய மேஜைக்குள் ஒரு தாயத்தைப் பார்க்கிறாள். அதை எடுக்க, உள்ளே இருந்து ஒரு பூதம் வெளியாகிறது. கார்ப் என்ற அந்த பூதம் இன்னும் பயிற்சி எடுக்கும் ஒன்று – demon in training.

உலகம் அழியப் போகிறது. அது நடக்காமல் தடுக்க நீட்டா, யாரென்று இல்லாமல் இந்த வார இறுதியில் வரும் மே தினத்துக்கு முன்னால் மூன்று பேரைக் கொலை செய்ய வேண்டும் என்று கார்ப் எனும் அந்தப் பூதம் நீட்டாவை வலியுறுத்துகிறது. பயந்தாங்கொள்ளி நீட்டா பயப்படாத கொல்லி ஆகி இரண்டு பேரைக் கொலை செய்கிறாள். மூன்றாவருக்குப் பட்டியல் தயாரிக்கிறார்கள் நீட்டாவும் பூதமும். ஆளுங்கட்சியான கன்சர்வேடிவ் கட்சிப் பிரமுகரும், இந்தியத் துணைக்கண்ட வந்தேறிகள் மேல் குரோதம் கொண்டவருமான மைக்கேலும் பட்டியலில் உண்டு. மூன்றாவது கொலை செய்யப் போகும்போது அது தவறிப் போகிறது. நீட்டா காவல் நிலையம் போகிறாள். உலகம் அழிவதைத் தடுக்கவே தான் கொலை செய்ததாகவும் பாக்கி ஒன்று உண்டு என்றும் அவள் சொல்ல மரைகழண்ட கேஸ் என்று முடிவு செய்கிறார்கள். இவங்களைத் திருத்தவே முடியாது என்று கார்ப் பூதம் நீட்டா கையைப் பற்றியபடி நடந்துபோக, அந்த அகால நேரத்தில் சகலமான அணு ஆயுதங்களும் இயக்கிச் செலுத்தப்பட்டு உலக அழிவு தொடங்குகிறது.

ஆர்தர் சி கிளார்க்கின்கடவுளின் ஒன்பது பில்லியன் பெயர்கள்அறிவியல் புனைகதை முடிவு நினைவு வரும், கொஞ்சம் போல். நீட்டாவாக சிங்கப்பூர் தமிழ்ப் பெண் கலைஞர் அஞ்சனா வாசன் அருமையாக நடித்து அசத்தி இருக்கிறார். சென்னையில் பிறந்த தமிழ்ப் பெண் அவர். லண்டனில் வசிக்கும் நாடகக் கலைஞர். மேடை நாடக நடிப்புக்காக சர் லாரன்ஸ் ஒலிவியர் விருது பெற்ற நடிகை. இசைக் கலைஞரும் கூட. கோடம்பாக்கமும், சின்னத் திரை சீரியல் காரர்களும் இன்னும் அவரைக் கண்டுபிடிக்கவில்லையா?

**********

தமிழ், மலையாளம், இங்க்லீஷ் என்று மூன்று மொழியிலும் சரளமாக எழுதக் கூடிய எழுத்தாளர்கள் அபூர்வமாகவே தென்படுகின்றனர். அநேகமாக இல்லை என்றே சொல்லலாம், நீல.பத்மநாபனை தவிர்த்து.

கவிஞர்கள் சிறுகதை எழுதச் சொன்னால் சிரமப்படுவதும், அல்புனைவு என்ற புனைவற்ற எழுத்து நெய்வதில் ஜாம்பவான்கள் கவிதை எழுதக் கேட்டுக்கொண்டால், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இடத்தைக் காலி செய்வதும் நடக்கக் கூடியதே. (எல்லோரும் நாவல் எழுதுவது இன்னொரு கட்டுரைக்கான சமாசாரம்). கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், நாடகம் எனப் பல எழுத்து வகைகளை கையாளும் எழுத்தாளர்கள் சிலரே, நீல.பத்மநாபன் போல.

நீல.பத்மநாபன்

இங்க்லீஷில் தமிழ் இலக்கிய அறிமுகக் கட்டுரை எழுதி, அதன் தொடர்ச்சியாக உறுத்தாமல், seamless ஆக மலையாளத்தில் கவிதை எழுதி, அது நிறைவடையும் இடத்தில் நீட்சியாகத் தமிழ் நாவலைக் கால்கோள் செய்து சகஜமாக மொழி, இலக்கிய வகை சார்ந்த மடை மாற்று எழுத்து, நீல பத்மநாபனுக்கு உரியது

மறைந்த மலையாளக் கவிஞர் மற்றும் இலக்கிய விமர்சகர் டாக்டர் அய்யப்ப பணிக்கர்ரௌத்ரம் இந்தக் கதைத் தொகுதிக்கு வாசகர்களை வயப்படுத்துகிறது. பயமும், கோபமும், தாபமும் இந்தக் கதைகளில் மாறி மாறிக் காவடியாடுகின்றன. சமயத்தில் ஒன்றுபட்டும்’ என்று குறிப்பிட்ட ஒரு மெலிந்த மலையாளச் சிறுகதைத் தொகுப்புபிரளயம்’. நீல பத்மநாபன் எழுதிய குறுநாவல், சிறுகதைகள்.

மலைப்பகுதியில் சிறுநதி. நீர்ப் பெருக்கு சட்டென்று அதிகமாக, நண்பன் வெள்ளத்தில் சிக்கிக் கொள்கிறான். கதை சொல்லிக்கு அவன் மேல் பிரியமும், அதைவிடப் பொறாமையும் உண்டு. என்றாலும் நண்பனை வெள்ளப் பெருக்கிலிருந்து காக்கிறான். தமிழில் வந்த நீல. சிறுகதைதான். மலையாளத்திற்கு அவரே மொழிபெயர்த்தது அந்த வெள்ளத்துக்கு மலையாளத் தனித்தன்மை தருகிறது. இப்படி

களகளாரவம் முழக்கி பதஞ்ஞோடுன்ன செறிய புழ. கரயில் தலயாட்டி நில்குன்ன கேரவ்ருக்ஷங்கள். பரன்னு கிடக்குன்ன பாடங்கள். கரையில் நின்னு ஒழுகுன்ன வெள்ளத்திலேக்கு சரிஞ்சிறங்குன்ன பாறயில் ரெண்டு மூன்னு படிகள் செறுதாயி செதுக்கியிட்டுண்டு

லக்ஷக்கணக்கினு மின்னாமினுங்குகள் தன்றெ கண்ணினகத்து பிரவேசிச்சு பாறிப்பறக்குன்னது போலெ. செவிக்ககத்து சப்தகோலாகலம். ஸ்வஸிக்கான் பற்றாதெ மூக்கிலும் வாயிலும் கூடி அகத்து கடக்குன்ன வெள்ளம். தான் ஒரு ஜடவஸ்துவாகுன்னது போலெ

அடுத்த மாதம் மொழிபெயர்க்கிறேன்

முந்தையது

eramurukan@gmail.com

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button