13 ஆம் நாளின் Moment of the show தான் நேற்றைய முழு நிகழ்ச்சியாக இருந்தது. “எனக்கு மதுவா மீராவானு கேட்டா இப்போ நான் மீராவைத் தான் எதிர்ப்பேன். அவ தான் எனக்கு ரொம்ப ட்ரபுள் கொடுத்துட்ருக்கா” என சாக்ஷியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் அபிராமி. எனக்குப் புரியவேயில்லை மீரா அப்படி என்ன ட்ரபுள் கொடுத்தார் என்று. அபிராமிக்காக மொத்த நண்பர்களும் முதலில் மீராவை எதிர்த்தனர். பிறகு மதுமிதாவை எதிர்த்தனர். இப்போது மதுமிதா மொத்தமாக ஓரங்கட்டப்பட்டு விட்டார். ஆனால் தன் பிரதான போட்டியாளராக அபிராமி கருதும் மீரா நல்ல பெயர் வாங்கி வருகிறார். இதைத் தான் தாங்க முடியாமல் தவிக்கிறார் அபிராமி.
முதலில் அது உன் விருப்பம் என அபிராமிக்கு சப்போர்ட் செய்த ஷெரின் மற்றும் சாக்ஷியை மிகச்சரியாக மடை மாற்றி விட்டார் வனிதா. “உன்னால தான் உனக்காகத் தான் ஆரம்பத்துல இருந்தே இந்த வீட்ல பிரச்சனை. உனக்கு ஏத்துக்கிட்டு போய்த் தான் மீரா கிட்டயும் மதுமிதா கிட்டயும் சண்ட போட்டோம். உன்னால தான் கவினும் சாக்ஷியும் எவிக்சனுக்கு நிக்குறாங்க. ஆனா நீ இப்போ நல்லவ ஆய்டுவ. உனக்கு சப்போர்ட் பண்ணுன நாங்கெல்லாம் பைத்தியமா?” என நியாயமான கேள்விகளை முன் வைத்தார். இதை விட வனிதா சொன்ன முக்கியமான விஷயம், “அபிக்கு தன்னோட கோவத்துல கூட கன்சிஸ்டன்ஸி இல்ல.” என்பது தான். இது மிகவும் யோசிக்க வைத்தது. கோபம் வேறு பிடிவாதம் வேறு. ஒருவர் மீதான கோபத்தை அப்படி சூழலுக்குத் தக்கபடி மாற்றிக் கொள்ள முடியுமா என்ன?
அவரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத அபி, பாத்ரூமிற்குச் சென்று அழத் தொடங்கினார். “கன்பெசன் ரூமுக்கு கூப்டுங்க பிக்பாஸ். நான் வீட்டுக்கு போறேன்” என்று சொல்லத் தொடங்கினார். ஏம்மா இதெல்லாம் தெரிஞ்சு தான் பண்றயா? நீ சொன்னதும் கதவைத் தொறந்து வெளிய போம்மானு அனுப்பிருவாய்ங்களா? எனக் கேட்கத் தோன்றியது. அடுத்து நடந்ததுதான் செம்ம காமெடி. அபி மனமுடைந்து அழுது கொண்டிருப்பதைக் காண சகியாமல் ஓடோடி ஆறுதல் சொல்ல வந்தார் மதுமிதா. ஆறுதலுக்கு அவர் சொன்ன விஷயங்களைப் பார்க்க வேண்டுமே. ” உன் கண்ணு எவ்ளோ அழகு தெரியுமா? ஆனா நீ ஏன் எப்பவும் அழுதுட்டே இருக்க? உன் கலருக்கு ஹைட்டுக்கும் வெளிய இன்டஸ்ட்ரில ஹீரோயின்ஸ் இல்ல தெரியுமா? இந்த ஷோ வை அதுக்காக யூஸ் பண்ணிக்கோ” என ஆற்றத் தொடங்கினார். இந்த மதுமிதா யாரெனத் தெரிகிறதா? மீரா அழும் போது ஆறுதல் சொன்ன சாக்ஷி, அபிராமியை நிற்க வைத்துக் கேள்வி கேட்டாரே அவர் தான். அந்த ஆறுதல் அப்பட்டமான நடிப்பென்று அவர் பயன்படுத்திய வார்த்தைகளே சொன்னன. அபிராமி நேக்காக “சரி நான் என் ஃப்ரண்ட்ஸ் கிட்ட போறேன்” எனச் சொல்லி ஓடி வந்து விட்டார்.
சாக்ஷி ஷெரினிடம் வந்து, “நான் கமல் சார் வந்ததும் கேட்டு வெளியே போய்ட்றேன்.” எனச் சொன்னார் அபி. அவர்கள் இருவரும் ” எந்தப் பிரச்சனைனாலும் அப்டியே ஓடிருவயா? உன் கிட்ட ஒரு தப்புனு சொன்னா அதைத் திருத்திக்க. உள்ள இருந்து நிரூபி” என சொல்லிக் கொண்டிருந்தனர். என் கணிப்பு சரியென்றால் இனி அபியின் நேரடி எதிரி வனிதா தான். ஆனால், அபிராமி ஆடப்போவது சிங்கிள் கேமா டபுள் கேமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
வழக்கம் போல செம்ம க்ளாஸ் லுக்கில் வந்தார் கமல். முதலில் எவிக்சனுக்கு தயாராகி நிற்பவர்களிடம் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா எனக் கேட்டார். இடையில் ‘ப்ரூட்டி காலர் ஆஃப் தி வீக்’ என்ற போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் பார்வையாளர்களில் ஒருவர் வீட்டில் இருக்கு ஒருவரை ஒரு கேள்வி கேட்கலாமாம். புதுத் திட்டம் போல. அந்தத் திட்டத்தின் கீழ் கால் செய்த பெண் கவினிடம் பேச விரும்பினார். எக்குத்தப்பாக சிக்கப் போகிறார் என நினைத்தால், “வீட்டில் யாரை உண்மையாகக் காதலிக்கிறீர்கள் ?” எனக் கேட்டார். “யாரையும் இல்லை. எனக்கு முறைப்பெண்கள் நிறைய உண்டு. அவர்களிடம் பேசுவதைப் போலத் தான் இவர்களிடம் பேசுகிறேன். சீரியஸாக எதுவுமில்லை.” என பதிலளித்தார்.
பின்பு “இவர்களில் யார் வீட்டிலேயே இருக்க வேண்டுமென விரும்புகிறீர்கள்?” என மற்ற போட்டியாளர்களிடம் கேட்டார். பெரும்பான்மையானோர் சேரனைச் சொன்னனர். இதில் இருந்து ஒருவரை இப்போது காப்பாற்றி விடலாம் எனக் கூறி பெரிய பீடிகைகள் ஏதுமின்றி கவின் காப்பாற்றப்படுவதாக அறிவித்தார். அதற்குப் பிறகும் அதிக காலம் தாழ்த்தாமல் சிறிய விளையாட்டின் மூலம் பாத்திமா பாபு எவிக்ட் ஆகிறார் என அறிவித்தார் கமல். எதிர்பார்த்த சம்பவம் தான் என்பதால் அதைப் பற்றிப் பேச ஏதுமில்லை.
பின்பு அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்ட பாத்திமா பாபுவிடம் “உங்களுக்கு கொடுத்த மெடலை உடைத்து விட்டு வெளியே செல்லுங்கள்” என்றார் பிக் பாஸ். இது தான் அனைவரையும் மனதளவில் பாதித்தது. வழக்கம் போல ஓரமாக உட்கார்ந்து அழத் தொடங்கினார் மோகன் வைத்யா. இவரே நாமினேட் பண்ணுவாராம் அப்றம் இவரே உக்காந்து அழுவாராம். “இந்தாளுக்கு வேற வேலையில்ல” என போட்டியாளர்கள் அவரை கண்டுக்காமல் விடப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.
வெளியே வந்த பாத்திமாவிடம் வீட்டினரைப் பற்றி கேட்டுத் தெரிந்து கொண்ட கமல், கேப்டன் பதவிக்கான போட்டியாளர்களாக மூன்று பேரை பாத்திமாவிடம் தேர்ந்தெடுக்கச் சொன்னார். தர்ஷன், அபிராமி, சாண்டியை தேர்ந்தெடுத்த பாத்திமா அதற்காகச் சொன்ன காரணங்கள் பாராட்டத்தக்கவை. “மிகவும் சென்சிட்டிவான பெண் அபிராமி. அவருக்கு இப்போது வெளியே போக வேண்டும் எனத் தோன்றத் தொடங்கியிருக்கிறது. அவருடைய ஆளுமையை அவருக்கே அவர் நிரூபிக்க வேண்டிய நேரம் இது. கேப்டன் ஆனால் அபியை யாரும் நாமினேட் செய்யவும் முடியாது. சாண்டி தன் பாணியில் அருமையாக வீட்டின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க வாய்ப்பிருக்கிறது. சூழலை அமைதிப்படுத்தும் கலை சாண்டிக்கு தெரியும். தர்ஷன் கடைசி நாள் வரை வீட்டில் இருக்கப் போகும் போட்டியாளர். அவன் குரல் இன்னும் வீட்டில் ஒலிக்கவே இல்லை. அதனால் அவன் கேப்டனாக வேண்டும்.” எனக் குறிப்பிட்டார். “இனி எதாவது சந்தேகம்னா உங்களைக் கேட்டுக்குறேன்” எனப் பாரட்டினார் கமல். பின்பு அடுத்த வாரம் சந்திப்போம் எனப் போட்டியாளர்களிடம் கூறி விடைபெற்றார்.
பிறகு வீட்டில் மீரா தனியாக உட்கார்ந்து அழுது கொண்டிருக்க, “நீங்க ரெண்டு பேரும் தான் காரணம். போய்ப் பேசுங்க” என தர்ஷனையும் முகேனையும் விரட்டிக் கொண்டிருந்தார் சாண்டி. அவர்கள் மீரா வெளியே போக வேண்டும் எனக் குறியிட்டது தான் காரணமாம். ஆனால் முந்தைய நாள் நடந்த சம்பவத்திற்கு அடுத்த நாள் எதற்கு அழுது கொண்டிருந்தார் என்பது தான் விளங்கவில்லை. பிறகு முகேனும், சாக்ஷியும் மீராவுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தனர். தன் பிரச்சனைகளுக்கு சேரனிடம் அறிவுரை கேட்டுக் கொண்டிருந்தார் அபிராமி.
நேற்றைய Moment of the show, “வீட்டில் யாரையும் உண்மையாகக் காதலிக்கவில்லை. இனியும் அப்படித் தான்” என கவின் சொன்னதும் சட்டென ஒரு நொடி இருண்டு மீண்ட சாக்ஷியின் முகம் தான்.08