இணைய இதழ்இணைய இதழ் 100கவிதைகள்

க.மோகனரங்கன் கவிதைகள்

கவிதைகள் | வாசகசாலை

மாய மலர்

எனக்கு
எனக்கு என்று
எல்லோரும்
ஓடியோடி
செடி கொடிகளில்
பூத்திருந்தையெல்லாம்
பறித்துத் தொடுத்துக்கொண்டிருந்த
மலர்வனத்தின் நடுவே
ஒருத்தி மாத்திரம்
ஒன்றும் நடவாதது போல
தன் வசமிருந்த
ஒற்றையொரு மலரையும்
ஒவ்வொருவருக்கும்
ஒரோர் இதழென
பேதமேதுமின்றி
பிய்த்து தந்துகொண்டிருந்தாள்.
வரிசையில் நின்று
வாங்கிக் கண்ணில் ஒற்றியபடிக்
கலைபவர்களை,
சிரித்துப் பழகியிராத
கடுத்த முகத்தினன் ஒருவன்
காட்சிக்கு வெளியேயிருந்து
கவனித்துகொண்டிருந்தான்.
கடைசியில் அவளது
கையில் எஞ்சப்போவது என்னவோ
வெறும் காம்பு மாத்திரமே
என்றவன் எண்ணுகையில்,
கவலைப்படாதே என்பதுபோல
கரிசனத்தோடு அவனிருக்கும்
திசைநோக்கி ஏறிட்டு நகுகிறாள்.
திரண்ட அவளது தேகம் மெலிந்ததொரு தண்டாகித் தவிக்க
முகம் முழுதும் பூரித்தது
முன்னெவரும் கண்டிராத
முகையொன்று அலர்வதாக.
பூத்ததைப் பார்த்ததாக
சொல்ல அவனிடம்
சூக்குமமான சொற்களில்லை.

அழுகை அறை

யாருமில்லை
என்கிற நினைப்பில்
எதையோ எண்ணி
அழுதபடி வந்தவள்
அசந்தர்ப்பமாக
என்னை எதிரிட நேர்ந்ததும்
வெட்கியவளாக
கண்ணீரைக்
கட்டுப்படுத்திக்கொண்டு
சிரிக்க முயன்றாள்.
கரிய நிழல்கள் கலைந்து
சட்டென்று வெளிவாங்கிய
அம் முகத்தில்
அதுகாறுமில்லாத
அபூர்மானதொரு ஒளி
துலங்கிட,
சுடர்ந்த அக்கணத்தின்
சுழிப்பில் மூழ்கி
சமைந்து நின்றவர்கள்,
ஒரு வார்த்தையும் பேசிக்கொள்ளாமலே
ஒருவரில் ஒருவர் நிரம்பினோம்.
அதன் பின்
இறுகிய முகத்தோடு
அவ்வறைக்கு
அவள் வரும் போதெல்லாம்
வழி தொடர்ந்து
ஆறுதலான சொற்களோடு
அங்கிருப்பதை வழக்கமாக்கிக்கொண்டேன்.
வருவதற்கான
காரணங்கள் அருகி
காண்பதற்காகவே விரும்பி
அவள் வரத்தொடங்கியதும்
அழ மறந்ததோடு அல்லாமல்
ஆவல் ததும்ப பேச்சின் நடுவே
அவ்வப்போது நகைக்கவும்
தொடங்கினாள்
அனைத்தும்
ஆவதென்னவோ
அவளால்தான் என்றாலும்
அதற்கும் காரணம்
நான்தானென
என் நெஞ்சுக்கு நேராய்
விரல் நீட்டுவாள்.
அவள் சொல்வதில்
அப்படியொன்றும் உண்மையில்லை என்றாலும்
இளஞ்சிவப்பு வண்ண
நகப் பூச்சுடன் மிளிருமந்த
மெலிந்த விரலைப் பார்ப்பதற்கு
மெத்தவும் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
கூம்பி சுருங்கிய அரும்பொன்று
விரும்பி அலர்ந்தாற் போல
மலர்ந்த வதனத்தோடு
வாழ்வின் வசத்திற்கு
திரும்பியவளை பிறகு
நேரிட்டுக் காணவும்
நேரமில்லாது போனது.
ஆளரவமற்ற அவ்வறையை
அரிதாகக் கடக்க நேரிடுகையில்
அங்கிருக்கும் கண்ணாடியில்
என் முகத்தை யாருடையதோ போல
ஏறிடும்போதெல்லாம்
இதழ்பிரிகிறதொரு
இனம்புரியாதவொரு
இளிவரல் நகை.

திறப்பு

உற்ற ஒருவர்
வேண்டாமென வெறுத்து
விலகிப் போனால்
என்ன செய்யவியலும்?
தொந்தரவாக முன் நில்லாமல்
தூரமாக எங்கேனும் சென்று
தொலைந்து போகலாம்!
சரிதான்
இருக்குமிடம் விட்டு
வேறு புகல் நாடி
இத் தேகம் ஏகலாம்
எனினும்
மறுகி அங்கும் நிற்கும்
மனதை துறந்து விட்டு
மறைந்தெங்கே போவது?
கனி அழிந்த பிறகும்
விதையை விடாமல்
குடையும் வண்டென
புலன்களடங்கிய பிறகும்
புத்தியை அரித்திடும் புதிரானது
தீர்க்க முயலுந்தோறும்
திருகலடைந்து மேலும் திண்ணமாகும்.
எதனால் நிகழ்ந்தது
இப் பிரிவு
என்பதற்கான விடையை
வீம்பிற்காக வேண்டி
வீணாகத் தேட முனையாமல்
விவேகத்தோடு அந்த
வினாவைத் திறக்க முற்பட்டால்
வெளியேற அதுவே
ஒருவேளை கதவாகலாம்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button