இணைய இதழ் 101சிறார் இலக்கியம்

மூன்று உலக சிறுவர் கதைகள் – ஷாராஜ்

உலக சிறுவர் கதைகள் | வாசகசாலை

முன் குறிப்பு: உலக சிறுவர் கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளான இவை மொழிபெயர்ப்புகள் அல்ல. இணையத்தில் பல்வேறு தளங்களிலிருந்து எடுக்கப்பட்ட ஆங்கில வழிப் படைப்புகளின் மறுகூறல் முறையிலான எனது மறுஆக்கங்கள்.

  1. வாழ்வின் நோக்கம்

    அவர் ஓர் அறிஞர் மற்றும் ஓரளவு பணக்காரர். அவரது பல்துறை சார்ந்த அறிவு, மதி நுட்பம், நிர்வாகத் திறன், முடிவு எடுக்கும் விவேகம், ஆலோசனை அளிக்கும் பாங்கு, நற்குணங்கள் ஆகியவற்றைப் பற்றி மக்கள் பெரும் மதிப்பு கொண்டிருந்தனர்.

    தனது அறிவினாலும், திட்டமிட்ட உழைப்பினாலும் படிப்படியாக முன்னேறி, தற்போது இருக்கும் உயரிய அந்தஸ்துக்கு வந்தவர் அவர்.

     ஆனால், அவரது மகனான இளைஞன், மிகுந்த சோம்பேறி. பகல் நேரங்களைத் தூக்கத்திலும், நண்பர்களுடனான வெட்டிப் பொழுதுபோக்குகளிலும் கழித்துக்கொண்டிருந்தான். எந்த வேலையும் செய்வதில்லை. தந்தையாரும் மற்றவர்களும் சொல்கிற அறிவுரைகளைக் கேட்பதும் இல்லை.

     வருடங்கள் கழிந்துகொண்டிருந்தன. தந்தையாருக்கு வயோதிகம் ஆகிக்கொண்டே இருந்தது. தன்னுடைய காலத்திற்குப் பிறகு மகன் எப்படி வாழப்போகிறானோ என்கிற கவலை அவருக்கு ஏற்பட்டது.

     எனவே, அவனை அழைத்து, “இன்னமும் நீ குழந்தை அல்ல. எப்படிப் பொறுப்பாக நடந்துகொள்வது என்பது பற்றி நீ கற்றுக்கொள்ள வேண்டியதும், வாழ்க்கை என்றால் என்ன என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியதும் அவசியம். அதற்காக நான் உனக்கு ஒரு திட்டம் வைத்திருக்கிறேன்” என்று கூறி, அவனிடம் ஒரு பயணப் பையைக் கொடுத்தார்.

    அதில் நான்கு பருவங்களுக்கும் தகுந்தபடியான நான்கு வித ஆடைகள், வழிச் செலவுக்கான பணம், உலர் உணவு வகைகள் கொஞ்சம், மற்றும் ஒரு வரைபடம் ஆகியவை இருந்தன. அந்த வரைபடத்தில் ஓர் இடம் சிவப்பு மையால் அடையாளம் குறிப்பிடப்பட்டிருந்தது.

     அதைச் சுட்டிக் காட்டிய அவர், “இந்த இடத்தில் புதையல் இருக்கிறது. நீ இதைக் கண்டுபிடித்து எடுத்து வந்தால், அது உனது வாழ்க்கை முழுதுக்கும் போதுமான பொக்கிஷமாக இருக்கும். அதுதான் உனக்கு நான் வைத்திருக்கும் திட்டம். நீ உன்னுடைய நண்பர்களையோ, மற்றவர்களையோ துணைக்கு வைத்துக்கொள்ளாமல் தனியாக சென்றால்தான் அந்தப் புதையல் கிடைக்கும்” என்றார்.

     அவனுக்கும் அந்தத் திட்டம் பிடித்திருந்தது. புதையல் என்றதும் உடனே புறப்பட்டான்.

      இவர்களின் ஊர் இருந்தது நாட்டின் ஒரு கோடியில் என்றால், அவன் செல்ல வேண்டிய இலக்கு மறு கோடியில் இருந்தது. இடையே பல ஆயிரம் கிலோ மீட்டர்கள் இடைவெளி. அதில் சமவெளி, மலைப் பிரதேசங்கள், வனப் பகுதிகள், பாலைவனம் எனப் பல விதமான நிலவெளிகள். பல்வேறு மொழிகளைப் பேசும் மக்கள். பல்வேறு விதமான கலாச்சாரங்களும் பழக்கவழக்கங்களும் கொண்ட மாநிலங்கள். மாறிக்கொண்டே இருக்கும் இவற்றைக் கடந்து பயணிக்கும்போது, பருவ காலங்களும் மாறிக்கொண்டே இருந்தன.

     பெரும்பாலும் அவன் எங்கும் ஓய்வெடுக்க விரும்பாமல் தனது இலக்கில் கவனமாக, அதை அடையும் நோக்கத்தோடு மட்டுமே பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருந்தான். இரவுகளில் மட்டும் தங்கி, பகல் முழுக்கப் பயணம் தொடர்வான். மழைக்காலங்களில் மட்டும் பயணம் தடைபடும். மற்றபடி வெயில், காற்று, பனி எதுவாக இருந்தாலும் பொருட்படுத்தாமல், பயணித்துக்கொண்டிருந்தான்.

     அறியப்படாத இடங்களில், அறிமுகமற்ற மனிதர்கள் பலரும் அவனுக்கு உதவி செய்தனர். ஆனால், சில மோசடிக்காரர்கள் அவனை ஏமாற்றவும், திருடர்கள் அவனிடமிருந்து திருடவும் முயன்றனர். அவர்களிடமிருந்து சில சமயம் தப்பித்தும், சில சமயம் எதையேனும் இழந்தும் அவனது பயணம் தொடர்ந்தது.

     ஏழு மாதங்களுக்குப் பிறகு தனது இலக்கு இடத்தை அடைந்தான். அது மிகவும் ஆபத்தான செங்குத்து மலைப் பகுதி. அதன் உச்சியில் உள்ள ஒரு மரத்தின் அடியேதான் புதையல் இருப்பதாக வரைபடத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அங்கே சென்ற அவன், அந்த மரத்தடியில், குறிக்கப்பட்டிருந்த இடத்தில், தோண்டிப் பார்த்தான். புதையல் எதுவும் இல்லை.

     இடம் மாறியிருக்கலாம் என மரத்தைச் சுற்றிப் பல்வேறு இடங்களிலும் ஆங்காங்கே தோண்டிப் பார்த்தான். இரண்டு நாள் தங்கியிருந்து தோண்டியதில், மரத்தைச் சுற்றிலும் பள்ளங்கள் ஆனதுதான் மிச்சம். மற்றபடி அங்கே புதையல் இருப்பதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை. தன்னுடைய தந்தை பொய் சொல்லி ஏமாற்றி விட்டார் என்பது அவனுக்குத் தெரிந்தது. அவர் மீது கடும் கோபம் கொண்டான்.

     பிறகு அங்கிருந்து திரும்பி வந்தான். வருகிறபோது அவன் தனது பயணத்தில் எந்த அவசரத்தையும் காட்டவில்லை. இப்போது அவனுக்கு ஏதோ ஒன்றை அடைய வேண்டிய நோக்கம் இல்லாததால், மனம் மிகவும் தளர்வாக இருந்தது. அதனால், இயற்கைக் காட்சிகளை ரசித்துக்கொண்டும், சிறப்பிடங்கள் இருந்தால் தங்கி பொறுமையாகப் பார்த்துக்கொண்டும் வந்தான்.

     சில சமயம் ஏதேனும் ஓரிடத்தில் சந்திரோதயமோ, சூரிய அஸ்தமனமோ மிக அழகாக இருந்தால், அதைப் பார்ப்பதற்காகவே அங்கு தங்கினான். வழி ஓரங்களில் இதுவரை பார்த்திராத செடி, கொடி, மரங்கள் பூக்கள், இலைகள், பறவைகள், பிராணிகள் போன்றவை தட்டுப்பட்டால், அவற்றையும் கூட மணிக்கணக்காக இருந்து ரசித்துக்கொண்டிருப்பான்.

     மேலும் அவன் போகும்போது அவனுக்கு உதவி செய்த மனிதர்கள் எந்தெந்த ஊரில் இருந்தார்களோ, அவர்களை எல்லாம் மீண்டும் சந்தித்து, அவர்களோடு தங்கியிருந்து, அவர்கள் செய்த உதவிக்குக் கைமாறாக தன்னால் செய்யக்கூடியதைச் செய்துவிட்டு வந்தான்.

     அப்படி இருந்தும், வழிப்போக்கர்களாக உள்ள பல மனிதர்கள், எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் அவனுக்கும் மற்றவர்களுக்கும் உதவி செய்வது அவனுக்கு ஆச்சரியமளித்தது.

       ஒவ்வொன்றையும் ரசித்து லயித்து அனுபவித்தபடி அவனது திரும்புதல் பயணம் தொடர்ந்தது. இதனால் அவன் இலக்கு இடத்தை அடைவதற்கு ஆன காலத்தைவிட, ஊர் திரும்புவதற்கு மூன்று மடங்கு காலம் ஆனது. அப்படியாக அவன் சுமார் இரண்டரை வருடத்திற்குப் பிறகு வீடு திரும்பினான்.

     அவனைக் கண்டதும் தந்தை மகிழ்ச்சியோடு விரைந்து வந்து, அவனை அணைத்துக்கொண்டு வரவேற்றார்.

     அவனை நலம் விசாரித்துவிட்டு, “புதையல் கிடைத்ததா?” என்று கேட்டார்.

     “இல்லை அப்பா! மரத்தைச் சுற்றிப் பல இடங்களிலும் தோண்டிப் பார்த்துவிட்டேன். புதையல் கிடைக்கவில்லை. ஒருவேளை, முன்பே யாராவது வந்து அதை எடுத்துச் சென்றுவிட்டார்களோ என்னவோ!” அவனது வாயிலிருந்து, அவனே எதிர்பாராத பதில் வந்தது, அவனுக்கே வியப்பாக இருந்தது. தந்தை தன்னிடம் பொய் சொல்லிவிட்டார் என அவர் மீது இருந்த கோபம் இப்போது அவனுக்கு சிறிதும் இல்லை. 

     “சரி,… அது இருக்கட்டும்! பயணம் எப்படி இருந்தது?”

     “போகும்போது புதையல் பற்றிய எண்ணத்திலேயே விரைந்து சென்றுகொண்டிருந்ததால், வழித்தடங்களில் எதையும் கவனிக்கவில்லை. ஆனால், திரும்பி வரும்போது ஆங்காங்கே தங்கி, ஒவ்வொன்றையும் ரசித்து, மக்களோடு பழகி, ஆனந்தமாக வாழ்ந்து வந்தேன். வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்!” மகிழ்ச்சியுடனும், குதுகலத்துடனும் சொன்னான்.

     அதைக் கேட்டு தந்தையும் மகிழ்ந்தார்.

    “உண்மையில் அந்த வரைபடத்தில் நான் குறிப்பிட்டிருந்தபடி அங்கு புதையல் எதுவும் இல்லை. ஆனால் உண்மையான புதையல் என்ன என்பதை இந்தப் பயணத்தில் நீ கண்டு கொண்டிருப்பாய்! வாழ்க்கைக்கு ஓர் இலக்கு தேவை. அதே சமயம், அந்த இலக்கில் மட்டுமே குறியாக இருந்து, மற்ற எதிலும் கவனம் செலுத்தாமல் தவறிவிடக் கூடாது.

     “மனிதர்களாகிய நாம்தான் இலக்கு என்ற ஒன்றை வைத்துக் கொள்கிறோமே தவிர, வாழ்க்கைக்கு என்று இலக்கு எதுவும் கிடையாது. எனவே, நாம் வாழ்கிற நாளில் ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்து வாழ்வதும்; மற்றவர்களோடு இனிமையாகப் பழகுவதும், முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவுவதும்தான் உண்மையான வாழ்க்கை!

     “வாழ்க்கையின் நோக்கம் எந்த இலக்கையும் அடைவதல்ல; வாழ்க்கையை வாழ்வதுதான்! அதைப் புரிந்துகொண்டால், வாழ்வின் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தருணங்களும், தனக்குள் விதவிதமான புதையல்களை ஒளித்து வைத்திருப்பதைக் கண்டுகொள்ளலாம்!”

தந்தை சொல்ல, “உண்மைதான் அப்பா!” என்றான், அனுபவபூர்வமாகவே அதை அறிந்திருந்த அவன்.

*

2. இந்தக் கதையில் எந்த நீதியும் இல்லை!

(பர்மா நாட்டுப்புறக் கதை)

தனது வயதை ஒத்த மற்ற சிறுவர்களைக் காட்டிலும் அவன் அதிக உயரமானதாக இருந்ததால் அவனை எல்லோரும் நெட்டைக்காலன் என்று அழைத்தனர்.

அவன் ஒரு நல்ல பையன். படிப்பதற்கு மிகவும் விரும்பினான். ஆனால் அவனது புத்திக் குறைவு காரணமாக வகுப்பில் ஆசிரியர்கள் கற்பிப்பதை அவனால் புரிந்துகொள்ள இயலவில்லை. இதனால் அவனது முட்டாள்தனத்திற்காகவும் கேலி செய்யப்பட்டான்.

“நீ படிப்பதற்கு லாயக்கில்லை. எருமை மேய்க்கத்தான் லாயக்கு!’ என்று எப்போதும் அவனை ஆசிரியர்கள் திட்டுவார்கள்.

ஒரு வழியாக அவனது படிப்பு முடிந்தது.  வேலை செய்ய வேண்டிய வயதை அடைந்தான். ஆனால் என்ன வேலை செய்வது? அவனது புத்திக் குறைவு காரணமாக அவனுக்கு எந்த வேலையும் கொடுக்க கிராமத்தில் யாரும் முன்வரவில்லை. வேறு வழியின்றித் தனது தந்தையின் எருமைகளை மேய்க்கும் வேலையை செய்யத் தொடங்கினான்.

“ஆசிரியர்கள் சொன்னபடியே கடைசியில் நீ எருமை மேய்ப்பனாக ஆகிவிட்டாய்!” ஊரார் கேலி செய்தனர்.

அதைக் கேட்டு அவன் வருந்தினாலும் அவர்களுக்கு எதிராக ஒன்றும் சொல்ல மாட்டான்.

எருமை மேய்ப்பதிலும் அவனுக்கு ஒரு பிரச்சனை.

தமிழகத்திலும் இந்தியாவிலும் மாடு வளர்ப்பு அதிகம் இருப்பதைப்போல சீனா, ஜப்பான், பர்மா, கொரியா மற்றும் பிற கிழக்கு ஆசிய நாடுகளில் எருமை வளர்ப்பு அதிகம். அவர்களின் ஊரிலும் அப்படியே. மாடுகள் போல வெவ்வேறு நிறங்களில், அடையாளங்களில் இல்லாமல் எருமைகள் ஒரே போல கரிய நிறத்தில் இருப்பதால் அவை அனைத்துமே அவனுக்கு ஒன்று போல் தோற்றமளித்தன. இதனால் மேய்ச்சல் நிலத்தில் மற்றவர்களுடைய எருமையிலிருந்து தனது எருமைகளைப் பிரித்தறியத் தெரியாமல் சிக்கலுக்கு உள்ளானான். அவனது இந்தக் குறைபாடு மற்ற மேய்ப்பர்களுக்கு ஆதாயமாக இருந்தது.

அவர்கள் மரத்தடியில் சுகமாகப் படுத்துக்கொண்டும், அரட்டையடித்துச் சிரித்துக்கொண்டும், விளையாடிக்கொண்டும், புல்லாங்குழலை இசைத்துக்கொண்டும் உல்லாசமாக இருப்பார்கள். அவர்களின் எருமைகள் மேய்ச்சல் நிலத்தை விட்டு அப்பால் விலகிச் சென்றால் அவர்கள், “நெட்டைக்காலா, நெட்டைக்காலா…! உன்னுடைய எருமை அந்தப் பக்கம் போகிறது!” என்று சத்தமிடுவார்கள்.

உடனே அவன் ஓடிச் சென்று அவற்றை மேய்ச்சல் நிலத்திற்குள் திருப்பி ஓட்டிக்கொண்டு வருவான்.

மேய்ப்பர்கள் பலர் இருந்ததாலும், அவர்களின் எருமைகள் பல இருந்ததாலும், ஒன்றை அடுத்து ஒன்றாக ஏதேனும் ஓர் எருமை விலகிச் சென்றுகொண்டிருக்கும். அப்போதெல்லாம் அவர்கள் நெட்டைக்காலனை அழைத்து அதைத் திரும்ப ஓட்டி வரும்படி செய்வார்கள். இதனால் காலை முதல் மாலை வரை மற்றவர்களின் எருமைகளைத் துரத்திச் சென்று பிடிப்பதிலும், திரும்ப ஓட்டி வருவதிலுமாக அவனுடைய பொழுதுகள் ஓய்வின்றிக் கழிந்து கொண்டிருக்கும்.

அதே போல மாலை நேரத்தில் மற்ற மேய்ப்பர்கள் அனைவரும் நேரத்திலேயே வீடு திரும்பி விடுவார்கள். ஆனால், தன்னுடைய எருமைகள் எவை என்று அவனுக்குத் தெரியாததால் அவன் மற்றவர்கள் அனைவரும் சென்ற பிறகு மிச்சமுள்ள தனது மூன்று எருமைகளை வீட்டுக்கு ஓட்டி வருவான். இதனால் அவன் வீடு திரும்புவதற்கு மிகவும் தாமதமாக ஆகும்.

இதன் காரணமாகக் கவலைப்பட்ட அவனது தந்தை அவன் தாமதமாவதற்கும் அதிகக் களைப்போடு இருப்பதற்கும் காரணம் என்ன என வினவினார். அவனால் தக்க பதில் சொல்ல இயலவில்லை.

“இவன் எருமை மேய்ப்பதற்குக் கூட லாயக்கில்லாமல் போய் விட்டானே!” அவனது தாய் வருத்தப்பட்டாள்.

அவன் தாமதமாக வருவது வெகு நாட்களாகத் தொடர்ந்தது.

மற்ற மேய்ப்பர்கள் செய்யும் தந்திரத்தையும், அவனது குறைபாட்டையும் அவனது தந்தை ஒரு நாள் அறிந்துகொண்டார்.

மறுநாள் காலையில் அவர் ஓர் உபாயம் செய்தார். பனை ஓலையில் வளையங்கள் செய்து தனது மூன்று எருமைகளின் கொம்புகளிலும் அவற்றை மாட்டிவிட்டார்.

“மகனே! நமது எருமைகளின் கொம்புகளில் உள்ள இந்தப் பனை ஓலை வளையத்தை நன்றாகப் பார்த்துக்கொள். இப்போது நம்முடைய எருமைகளை இந்த அடையாளத்தை வைத்து உன்னால் அடையாளம் கண்டுகொள்ள முடியும். மற்ற எருமைகளைப் பற்றி நீ கண்டுகொள்ள வேண்டாம்!” என்றார்.

அன்று அவன் மேய்ச்சல் நிலத்தில் இருந்தபோது வழக்கம் போல மற்ற மேய்ப்பர்கள், “நெட்டைக்காலா,… உன்னுடைய எருமை போகிறது!” என்று சொல்லும்போது அவன் நிமிர்ந்து பார்த்தான். கொம்புகளில் பனை ஓலை வளையம் சுற்றியிருக்கிற எருமையாக இருந்தால் மட்டும் அதை விரட்டிச் சென்று திரும்ப ஓட்டி வருவான். ஓலை வளையம் இல்லாத மற்ற எருமைகளாக இருந்தால் கண்டுகொள்ள மாட்டான்.

சற்று நேரத்தில் இவனுடைய அந்த ரகசியத்தை மற்ற மேய்ப்பர்கள் அறிந்துகொண்டனர்.

அவனது தந்தை இன்று தனது மகன் நேரத்தோடு திரும்புவான் என்று வாசலிலேயே காத்திருந்தார். ஆனால் அன்றும் அவன் தாமதமாகவே வந்தான்.

“என்ன ஆயிற்று மகனே? இன்றைக்கும் நீ தாமதமாக வந்திருக்கிறாயே?” என்று கேட்டார்.

நெட்டைக்காலன் வருத்தத்தோடு சொன்னான்: “காலையில் எல்லாமும் சரியாகத்தான் இருந்தது, அப்பா! அப்போது நமது எருமைகள் மட்டுமே கொம்பில் வளையம் சுற்றியிருந்தன. ஆனால், மதியத்திற்கு மேல் எல்லா எருமைகளுமே தமது கொம்புகளில் ஓலை வளையங்களைச் சுற்றிக்கொண்டுவிட்டன!”

*

3. பிசாசுடன் போட்டியிட்ட ஏழை விவசாயி

(செக்கோஸ்லோவாக்கிய நாட்டுப்புறக் கதை)

அவர் ஒரு மீச்சிறு விவசாயி. கிராமத்திற்கு வெளியே அவருக்குக் சிறு துண்டு விளைநிலம் இருந்தது. விழுகிற நிலையில் பரிதாபகரமாக உள்ள, ஒரு குடிசையில் அவரும் குடும்பத்தாரும் வசித்துக்கொண்டிருந்தனர்.

கந்தல் ஆடை உடுத்திய அவரது குழந்தைகள் எப்போதும் பசியால் வாடிக்கொண்டிருந்தனர். அவரது மனைவி எப்போதும் அந்தக் குழந்தைகளுக்குப் போதுமான அளவு உணவு கூட இல்லையே என்பது பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டிருப்பாள்.

அந்த விவசாயி புத்திசாலித்தனமும் சூட்சும புத்தியும் உடையவர். தான் வறிய நிலையில் துன்பப்பட்டுக்கொண்டிருந்தபோதும் தனது குயுக்திகளால் மக்களை மடையர்களாக்கிச் சிரிக்க வைத்துக்கொண்டிருப்பார். பிசாசைப் பார்த்தால் கூட அதை அவர் முட்டாளாக்கிவிடுவார் என்று மக்கள் சொல்வார்கள்.

ஒருநாள் அவருக்கு உண்மையாகவே அந்த வாய்ப்புக் கிடைத்தது. அவரது மனைவி அவரை விறகுக்கட்டு கொண்டு வருவதற்காக காட்டிற்குள் அனுப்பியிருந்தாள்.  திடீரென அவருக்கு முன்பு எந்த முன்னறிவிப்பும் இன்றி, கரிய நிறமும் மின்னுகிற கண்களும் கொண்ட, மனிதனும் மிருகமும் இணைந்தது போன்ற ஓர் உருவம் தோன்றியது. அது ஒரு பிசாசு என்பதை விவசாயி தெரிந்துகொண்டார். ஆனால், அதைப் பார்த்து அவர் பயப்படவில்லை. மாறாக, அதைப் பார்த்து, “இந்த நாள் நன்னாள் ஆகட்டும்!” என்று முகமன் கூறினார்.

எளிமையாக இருந்த அந்தப் பிசாசும் அவருக்கு பதில் முகமன் கூறி, வாழ்த்துக்களையும் தெரிவித்துவிட்டு, “இந்தக் காட்டில் என்ன செய்கிறாய்?” என்று கேட்டது.

அப்போது விவசாயிக்கு அவருடைய பாட்டி சொன்ன ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வந்தது. பிசாசுகள் எலுமிச்சை மரத்தைக் கண்டு பயப்படும். காரணம், எலுமிச்சை மரப் பட்டை நாரினால் பிசாசுகளின் கைகளையும் கால்களையும் கட்டிவிட்டால் அவற்றால் அந்தக் கட்டை அவிழ்க்கவோ, அறுக்கவோ முடியாது. அதனால் பிசாசுகளைப் பிடிக்கும் மாந்தரீகர்கள் எலுமிச்சை நாரினால்தான் அதைக் கட்டுவார்கள்.

விவசாயிக்கு அது ஞாபகம் வரவே, “நான் இங்கு எலுமிச்சை மரத்தைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அதிலிருந்து மரப் பட்டைகளை உரித்து நார் எடுக்க வேண்டும். பிறகு நான் அதன் மூலம்…” என்று சொல்லி இடைநிறுத்தி, “பிசாசுகளின் கைகளையும் கால்களையும் கட்டுவேன்” என்றார்.

அதைச் சொன்னபடியே பிசாசின் எதிர்வினை என்னவாக இருக்கிறது என்பதை ஓரக் கண்களால் கவனித்தார். பிசாசின் கன்னங்கரிய சருமம் வெளிறியது. அது பயந்துவிட்டது என்பது அதன் முகத்திலும் கண்களிலும் அப்பட்டமாகத் தெரிந்தது. எனவே, இந்தப் பிசாசு ஒரு மங்குணி என்பதை விவசாயி அறிந்துகொண்டார்.

“தயவுசெய்து அதைச் செய்து விடாதே!” எனப் பதறிய பிசாசு, “நாங்கள் உனக்கு என்ன தொல்லை செய்தோம்?” என்று அப்பாவியாகக் கேட்டது.

அது ஒரு பயந்தாங்கோழிப் பிசாசு என்பதை அறிந்துகொண்ட விவசாயி, “அதைக் கண்டிப்பாக செய்யத்தான் போகிறேன். பிசாசுகளின் தொல்லை பூமியில் அதிகமாகிவிட்டது. அவற்றைக் கட்டுக்குள் கொண்டு வராவிட்டால் பூமிக்குக் கேடு. இந்தக் காட்டுக்குள்ளும் சில பிசாசுகள் அவ்வப்போது வருவதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். நீயும் அவற்றில் ஒருவன் என்பது எனக்குத் தெரியும்.  பிசாசுகளால் மக்களுக்கு ஏற்படும் துன்பத்திலிருந்து நான் மக்களைக் காப்பாற்றினால் அவர்கள் எனக்கு நிறையப் பணம் தருவார்கள்.”

“தயவுசெய்து நான் சொல்வதைக் கேள்!” பிசாசு கெஞ்சியது. “நீ எங்களை உன் கட்டுக்குள் கொண்டு வராமல் விட்டுவிடுவதாக இருந்தால் நான் உனக்கு ஒரு பெரிய பை நிறையத் தங்கத்தைக் கொண்டு வருகிறேன். அதை வைத்து நீ பணக்காரனாக ஆகிவிடலாம்!”

சூட்சும புத்தி உடைய அந்த விவசாயி உடனடியாக அதற்கு ஒத்துக் கொள்ளாமல், பணத்தாசை இல்லாதவர் போலக் காட்டிக்கொண்டார். பிறகு மெல்ல மெல்ல அந்தப் பிசாசின் கெஞ்சுதலுக்கு ஒத்துக்கொள்ளும் முகபாவத்தைக் காட்டினார்.

“சரி, போனால் போகிறது! உன்னைப் பார்த்தாலும் பாவமாகத் தெரிகிறது. . அதனால் உன்னுடைய கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறேன். ஒரு மணி நேரத்தில் எனக்குப் பை நிறையத் தங்கத்தைக் கொண்டு வந்து கொடுத்தால் உன் இனத்தாரை நான் எலுமிச்சை நாரினால் கட்ட மாட்டேன். ஆனால் நீ தாமதிக்கக் கூடாது. அப்படிச் செய்தால் ஒருவேளை என் மனம் மாறிவிடலாம்!”

மடத்தனம் மிகுந்த அந்த இளம் பிசாசு, “இல்லை, இல்லை! நான் ஒரு மணி நேரத்திற்குள் நிச்சயமாக வந்து விடுவேன். நீ இங்கேயே இரு!” என்று சொல்லிவிட்டு மறைந்தது.

பிறகு ஒரு மணி நேரம் கழித்து மூச்சிரைப்போடு திரும்பி வந்தது. ஒரு பெரிய பை நிறையத் தங்கத்தை விவசாயியிடம் கொடுத்துவிட்டு, “இது போதுமா?” என்று கேட்டது.

அவர் அதிகப் பணத்தைக் கூட ஒரு முறையேனும் கண்ணால் பார்ப்பதும் கிடையாது. அப்படிப்பட்டவருக்குப் பை நிறையத் தங்கம் கிடைத்தால் சொல்லவா வேண்டும்! இருந்தாலும் அவர் தனது புளகாங்கிதத்தை வெளியே காட்டிக்கொள்ளவில்லை.

“இது நான் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இருந்தாலும் பரவாயில்லை; ஏற்றுக்கொள்கிறேன்!”

மங்குணிப் பிசாசு அவரது சமரசத்தைக் கேட்டு மகிழ்ந்து, அவருக்கு நன்றி கூறி விட்டு, நரகத்திற்குத் திரும்பியது.  அங்கே இருக்கும் அதன் தோழர்களான சக பிசாசுகள் அனைவரையும் அழைத்து, எலுமிச்சை நாரினால் பிசாசுகள் அனைத்தின் கைகளையும் கால்களையும் கட்டுவதற்குத் திட்டமிட்டிருந்த ஒரு விவசாயியிடமிருந்து அவற்றை அது எப்படிக் காப்பாற்றியது என்பது பற்றி சாகச உணர்வோடு கூறியது.

முழுக் கதையையும் கேட்ட மற்ற பிசாசுகள் வெகு நேரம் கெக்கலி கொட்டிச் சிரித்தன.

“நரகத்தில் இருக்கும் பிசாசுகளிலேயே நீ ஒருவன்தான் மடச் சாம்பிராணி! கேவலம், ஒரு மனிதன் உன்னை முட்டாள் ஆக்கிவிட்டான்!” எனப் பரிகசித்தன.

விவசாயியிடம் ஒரு பிசாசு பை நிறையத் தங்கத்தைக் கொடுத்து ஏமாந்த தகவல் வெளியே கசிந்தால் உலகத்திலுள்ள மனிதர்கள் யாரும் பிசாசுகளைக் கண்டு பயப்பட மாட்டார்கள். எனவே, மேற்கொண்டு என்ன செய்யலாம் என அந்தப் பிசாசுகள் தங்களுக்குள் கலந்துரையாடி ஒரு முடிவு செய்தன.

“நீ அந்த விவசாயிடம் திரும்பிச் சென்று, அவனிடம் மல்யுத்தப் போட்டிக்கு அழை! உங்கள் இருவரில் யார் ஜெயிப்பார்களோ, அவர்களுக்குத்தான் அந்தத் தங்கம் என்று சொல்!” என மங்குணிப் பிசாசிடம் கூறின.

எனவே அது மீண்டும் பூமிக்கு வந்து விவசாயியை மல்யுத்தத்திற்கு அழைத்தது.

விவேகமுள்ள அந்த விவசாயி, “எனது இளம் நண்பனே! நீ என்னுடன் மல்யுத்தம் செய்கிற அளவுக்குத் தகுதி உடையவன் அல்ல. நான் மிகவும் வலுவானவன். உன்னை நண்பனாக நினைக்கிறேன். என்றாலும் மல்யுத்தம் என்று வந்துவிட்டால் நட்பு, உறவு, பாசம், இரக்கம், பரிவு, ஜீவ காருண்யம் ஆகிய எதற்கும் இடம் கொடுக்க மாட்டேன். உன்னை மிகவும் மோசமாகத் தாக்கிவிடுவேன். அது உன் உயிருக்கே ஆபத்தாக முடியலாம். அதனால் உன் பலத்துக்குத் தகுந்த மாதிரி ஒரு மாற்று ஏற்பாடு சொல்கிறேன். நீ என் கொள்ளுத் தாத்தாவுடன் மல்யுத்தம் செய்! அவருக்கு 99 வயது ஆகிவிட்டது. அவருடைய பலமும் உன்னுடைய பலமும் சமமாக இருக்கும்.”

மங்குணிப் பிசாசு அதற்கு ஒத்துக்கொண்டது. விவசாயி அந்தப் பிசாசை அழைத்துக்கொண்டு காட்டுக்குள் உள்ள குகைக்குச் சென்றார். அங்கே ஒரு பெரிய பழுப்பு நிறக் கரடி படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தது.

“அதோ எனது கொள்ளுத் தாத்தா! நீ அவரை எழுப்பி அவருடன் மல்யுத்தம் செய்யலாம்!”

மங்குணிப் பிசாசு கரடியைத் தொட்டு உலுக்கியது. “எழுந்திரு கிழவா – எழுந்திரு! நாம் மல்யுத்தம் செய்யலாம்!”

கரடி தனது சிறிய கண்களைத் திறந்து பார்த்தது. பிறகு எழுந்து நின்று மங்குணிப் பிசாசைத் தனது உறுதியான பிடியால் அணைத்து இறுக்கியது. அந்தப் பிடியிலிருந்து பிசாசினால் தப்பவே இயலவில்லை. பிடி மேலும் மேலும் இறுகியது. பிசாசுக்குத் தனது எலும்புகள் நொறுங்கி விடும் போல் தோன்றியது.

“என்னுடைய விலா எலும்பு! என்னுடைய விலா எலும்பு!” என்று கூச்சலிட்டது. “என்னை விட்டுவிடு! தயவு செய்து விட்டுவிடு!” கெஞ்சி அழுது, ஒரு வழியாக கரடியின் பிடியிலிருந்து தப்பித்து நரகத்திற்கு ஓடியது.

“அந்த விவசாயி பயங்கரமானவன்! அவ்வளவு ஏன், அவனது கொள்ளுத் தாத்தாவான 99 வயதுத் தொண்டு கிழவர் கூட எவ்வளவு வலுவாக இருக்கிறார் தெரியுமா? அவர் என்னை நசுக்கியே கொன்றிருப்பார். நல்ல வேளையாக அவரது கோரப் பிடியிலிருந்து எப்படியோ தப்பித்து வந்துவிட்டேன்!”

நடந்த சம்பவங்களை முழுமையாகக் கேட்ட மற்ற பிசாசுகள் மீண்டும் கைகொட்டிச் சிரித்தன.

“மீண்டும் அந்த விவசாயி உன்னை முட்டாளாக்கிவிட்டான். நீ சொல்வதை வைத்துப் பார்க்கும்போது அது ஒரு கரடி என்றுதான் தோன்றுகிறது. நிச்சயமாக விவசாயின் தாத்தாவாக இருக்க முடியாது!”

மங்குணிப் பிசாசுக்கு இன்னொரு வாய்ப்புத் தரப்பட்டது.

“இந்த முறை நீ அவனிடம் ஓட்டப் பந்தயத்திற்கு அழை! ஆனால் மறுபடியும் அவனிடம் முட்டாளாகிவிடாதே! கவனமாக இரு!”

“எனது நொறுங்கிய எலும்புகள் சரியான பிறகு போகிறேன்!”

சில தினங்கள் கழித்து அதன் எலும்புகள் குணமாயிற்று. மங்குணிப் பிசாசு மீண்டும் பூமிக்கு வந்தது.

விவசாயி இப்போது ஒரு பெரிய பண்ணையை விலைக்கு வாங்கியிருந்தார். அவருக்கு ஒரு மாளிகை கட்டுவதற்கான வேலையும் நடந்துகொண்டிருந்தது.

பிசாசு அவரிடம் சென்று, ஓட்டப் பந்தயத்திற்கு சவால் விடுத்தது.

“நிச்சயமாக இந்தப் பந்தயத்திற்கு நான் சம்மதிக்கிறேன். ஆனால், என்னோடு போட்டியிட்டால் உன்னால் ஜெயிக்க முடியாது. ஏனென்றால், நான் காற்றுப் போல வேகமாகச் செல்வேன். ஆதலால் உனக்கு ஒரு மாற்று ஏற்பாட்டைச் சொல்கிறேன். நீ என்னுடைய குட்டிப் பையனுடன் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்ளலாம். அவனுக்கு ஒரு வயதுதான் ஆயிற்று. ஒருவேளை நீ அவனை ஜெயிக்கலாம்.”

பேய் பிசாசுகளின் உலகில் எங்குமே பார்க்க முடியாத அளவிற்கு மூடனாக இருந்த அந்த இளம் பிசாசு அதை ஒத்துக்கொண்டது. விவசாயி அதை ஒரு புல்வெளிக்கு அழைத்துச் சென்றார். அங்குள்ள புதர்களிடையே ஒரு முயல் வளையைப் பிசாசுக்குக் காட்டினார்.

“அதோ என்னுடைய குட்டிப் பையன் தூங்கிக்கொண்டிருக்கிறான். அவனை வெளியே அழைத்து அவனுடன் ஓட்டப்பந்தயம் செய்!”

“குட்டிப் பயலே, வெளியே வா! என்னுடன் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்!” என அழைத்தது பிசாசு.

பிசாசைக் கண்ட முயல், அது தன்னைப் பிடித்துத் தின்ன வந்திருப்பதாக அஞ்சி, உடனடியாக வெளியே பாய்ந்தது. புல்வெளியில் தாவிக் குதித்து அதி விரைவாகக் கடந்து சென்றது. அதன் பின்னே ஓடிய பிசாசினால் முயலைத் தாண்டி ஓட முடியவில்லை. அதற்கு உடல் சோர்ந்து மூச்சு வாங்கியது. முயலோ சளைக்காமல் குதித்துக் குதித்து வேக வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.

இறுதியில் அவை இரண்டும் பள்ளத்தாக்கை அடைந்தன. முயல் ஒரு பாய்ச்சலால் பள்ளத்தாக்கைக் கடந்து அப்பால் சென்றுவிட்டது. பிசாசும் அதே போலத் தாவ முயற்சித்தது. ஆனால், அதனால் முடியாமல் இடையிலே விழுந்து, பாறைகளிலும் முட் புதர்களிலும் பட்டு, கீழே, கீழே, கீழே என உருண்டு அதல பாதாளத்தில் விழுந்து, இடுப்பெலும்பையும் முறித்துக்கொண்டது. ஆங்காங்கே பலத்த அடியும், ரத்தக் காயங்களும் ஏற்பட்டிருந்தன.

முயல் எங்கே போயிற்று என்று தெரியவில்லை. மங்குணிப் பிசாசு ரணகளமான உடலோடு நரகத்திற்குத் திரும்பியது.

“அந்த விவசாயியை ஓட்டப்பந்தயத்தில் ஒலிம்பிக் வீரர்களால் கூட ஜெயிக்கவே முடியாது! உங்களுக்குத் தெரியுமா; அவனுக்கு ஒரு குட்டிப் பையன் இருக்கிறான். ஒரு வயதுதான் ஆயிற்று. ஆனால் ஓட்டத்தில் அவனை ஜெயிக்க உங்கள் ஒருவராலும் முடியாது. என்னாலும் முடியவில்லை. அந்தச் சின்னஞ்சிறு குழந்தையையே ஜெயிக்க முடியாதபோது, விவசாயியை எப்படி ஜெயிக்கமுடியும்?”

மற்ற பிசாசுகள் முழுக் கதையையும் கேட்டுவிட்டு அந்த அடிமுட்டாள் பிசாசை பார்த்து எள்ளி நகையாடின.

“விவசாயி மீண்டும் தந்திரோபாயமாக உன்னை ஏமாற்றிவிட்டான். அது அவனது மகன் அல்ல. முயல்!”

மங்குணிப் பிசாசின் முகத்தில் அசடு வழிந்தது.

“நீ இன்னொரு முறையும் அவனிடம் திரும்பச் சென்றாக வேண்டும். அதைச் செய்யாவிட்டால் பிசாசுகள் அனைத்தும் முட்டாள்தனமானவை என்று மக்கள் எண்ணத் தொடங்கிவிடுவார்கள். நம் மேல் அவர்களுக்கு உள்ள பயம் போய்விடும்!”

“ஆனால் அவனிடம் மீண்டும் நான் மல்யுத்தத்திற்குச் செல்ல மாட்டேன். ஓட்டப் பந்தயத்திற்கும் என்னால் முடியாது!”

“இந்த முறை சீழ்க்கை அடிக்கும் போட்டியை வைத்துக்கொள். அதில் நீ நிச்சயமாக அவனை வெல்ல முடியும். ஆனால் அதி கவனமாக இரு! மீண்டும் அவன் உன்னை ஏமாற்றிவிடுவதற்கு இடம் கொடுத்து விடாதே!”

பாதாளத்தில் விழுந்து பட்ட அடியும், எலும்புமுறிவும் குணமான பிறகு   மங்குணிப் பிசாசு மீண்டும் பூமிக்கு வந்து விவசாயியைச் சந்தித்தது.

இப்போது அவரது மாளிகைக் கட்டுமானப் பணிகள் ஓரளவுக்கு வளர்ந்திருந்தன. அவரது மனைவி பட்டு ஆடைகள், நகைகள் அணிந்து நடமாடிக்கொண்டிருந்தாள். அவரது குழந்தைகளும் உயர் ரகப் புத்தாடைகள் உடுத்தி, உடல் கொழுத்திருந்தனர்.

“இது எல்லாமே என்னுடைய பணம்!” என எண்ணிக் கொண்ட பிசாசு, “நாம் இன்னொரு போட்டியை வைத்துக் கொள்வோம். சீழ்க்கை அடிக்கும் போட்டி. ஆனால் இந்த முறை நான் ஏமாற மாட்டேன். உனக்கு பதிலாக வேறு யாரும் பங்கேற்கக் கூடாது. நேரடியாக நீயும் நானும்தான் மோதிக் கொள்ள வேண்டும்!”

“நல்லது, உன்னுடைய விருப்பப்படியே ஆகட்டும்!”

அவர்கள் இருவரும் காட்டுக்குள் சென்றனர். பிசாசையே முதலில் சீழ்க்கை அடித்துச் சொன்னார், விவசாயி.

காடே அதிரும்படி பிசாசு கூய் கூய் என சீழ்க்கை அடித்தது. மரங்களில் உள்ள இலைகள் அதிர, விலங்குகள் யாவும் நடுங்கின; பறவைகள் கலவரமாக எழுந்து பறந்தோடின.

பிசாசு இரண்டாவது சீழ்க்கை அடித்தது. கிளைகள் வெடிப்பு விட்டு உடைந்தன. விலங்குகளும் பயந்து கூக்குரல் எழுப்பின.

பிசாசு மூன்றாவது சீழ்க்கை அடித்தது. நிலமே நடுங்கியது. பெரிய கிளைகள் முறிந்து நிலத்தில் விழ, மிருகங்கள் பதறியடித்துப் பதினாறு திக்கிலும் ஓடின. பறக்கும் பறவைகள் கீழே விழுந்து துடிதுடித்தன.

“இதை உன்னால் ஜெயிக்க முடியுமா?”

விவசாயி அரண்டுவிட்டார். ஆனால் அதை வெளிக் காட்டாமல், “அட பிசாசுப் பயலே! இவ்வளவுதானா உன்னால் செய்ய முடியும்?” என்று ஏளனமாகக் கேட்டார். 

“நான் சீழ்க்கை அடிக்கும்போது உன்னுடைய காதுகளை நீ மூடிக்கொள்ளாவிட்டால் கண்டிப்பாக செவிடாகிவிடுவாய்! மரங்கள் முறிந்து உன் மீது விழுந்து உன்னைக் கொன்றாலும் கொன்றுவிடும்! நான் தொடங்கட்டுமா?”

“கொஞ்சம் பொறு!’ எனக் கெஞ்சியது பிசாசு, “நீ சீழ்க்கை அடிப்பதற்கு முன்பாக நான் காதைப் பொத்திக்கொள்ளலாமா? ஏனென்றால், நான் செவிடாக விரும்பவில்லை!”

விவசாயியும் இதைத்தானே எதிர்பார்த்திருந்தார்! எனவே அவர் ஒரு பெரிய கைகுட்டையை எடுத்து, “அந்தக் காட்சிகளைக் கண்டாலே நீ பயந்துவிடுவாய். எனவே கண்களையும் கட்டிக்கொள்வது நல்லது” என்றபடி பிசாசின் காதுகளோடு கண்களையும் சேர்த்து மூடி இறுக்கிக் கட்டினார்.

“இப்போது நான் ஆரம்பிக்கிறேன். கவனமாக இரு!”

சீழ்க்கை அடித்தபடியே அவர் நிலத்தில் கிடந்த ஒரு பெரிய கிளையை எடுத்து பிசாசின் மண்டையில் ஒரு போடு போட்டார்.

“ஐயோ, என்னுடைய தலை! என்னுடைய தலை!” பிசாசு தன் தலைக்கு மேல் இரு கைகளையும் வைத்து அழுத்தியபடியே அலறியது.

விவசாயி, “இப்போது விழுந்த மரம் உன்னைக் காயப்படுத்தி இருக்காது என்று நம்புகிறேன். நான் அடுத்த சீழ்க்கையை அடிக்கிறேன். நீ இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.”

இந்த முறை அவர் சீழ்க்கை அடிக்கும்போது பிசாசின் தலையில் முன்பை விட பலமாகத் தாக்கினார்.

“போதும், போதும்!” பிசாசு சத்தமிட்டது. “இன்னொரு மரம் என் தலைமீது விழுந்துவிட்டது. சீழ்க்கை அடிப்பதை நிறுத்து!”

“இல்லை, நீ மூன்று முறை சீழ்க்கை அடித்திருக்கிறாய். எனவே நானும் மூன்றாவது முறை பூர்த்தி செய்தாக வேண்டும். அப்போதுதான் கணக்கு சரியாகும். தயாராகிக்கொள்!”

இந்த முறை சீழ்க்கை அடித்தபடியே பிசாசின் தலையில் மட்டுமன்றி தோள்பட்டையிலும் உடலிலும் பலமாகத் தாக்கினார். ஒட்டுமொத்தக் காட்டு மரங்களும் தன் மீது விழுந்ததாகப் பிசாசு எண்ணிக்கொண்டது.

“சீழ்க்கை அடிப்பதை நிறுத்து! இல்லாவிட்டால் நான் செத்துவிடுவேன்!’

விவசாயி நிறுத்தாமல் சீழ்க்கை அடித்தபடியே பிசாசை சரமாரியாகத் தாக்கிக்கொண்டிருந்தார்.

பிறகு நிறுத்திய அவர், “நான் இன்னும் சற்று சீழ்க்கை அடிக்கட்டுமா?” என்று கேட்டார்.

“வேண்டாம், வேண்டாம்! கைக்குட்டையை அவிழ்த்துவிடு! இனிமேல் நான் இந்தப் பக்கம் திரும்பி வரவே மாட்டேன்!”

விவசாயி பிசாசின் காதுகளையும் கண்களையும் கட்டியிருக்கும் கைகுட்டையை அவிழ்த்தார். இன்னும் திகில் தீராமல் இருந்த பிசாசு, உண்மையாகவே சுற்றிலும் மரங்கள் விழுந்திருக்கிறதா எனப் பார்க்கக் கூட நிற்கவில்லை. பிடரியில் கால் பட ஓடி மறைந்தது.

அதன் பிறகு அந்த மங்குணிப் பிசாசு பூமிக்குத் திரும்பி வரவேயில்லை. தங்கம் முழுதும் விவசாயிக்கே உடைமையானது.

“நான் இந்த சொத்துக்கள் விஷயத்தில் எனது பாட்டிக்குக் கடன்பட்டிருக்கிறேன்” என்பார் அந்த விவசாயி. “அவள்தான் எனக்கு எலுமிச்சை நாரில் பிசாசுகளைக் கட்டுவது பற்றிச சொன்னவள்.” 

**************

  • shahrajscape@gmail.com
மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button