
முதல் ஸ்பரிசம்
மறக்கவே முடியாத ஒன்றாயினும்
கடந்த காலத்தைச் சுமக்க
நான் விரும்பவில்லை
என் மனம் ஓடிக்கொண்டிருக்கும் நதி
நீங்கள் காயப்படுத்தினால் கூட
எனக்கு வலிக்காது
எனது தேர்வுக்காக
நான் வருத்தப்பட்டதில்லை
ஏனெனில் எங்கேனும்
ஓரிடத்தில் சிலுவையை
இறக்கிவைத்துதான் ஆகவேண்டும்
மூழ்கிக் கொண்டிருக்கும்
எனது படகுக்கு நம்பிக்கை அளிக்க
ஒரு புன்னகை
தேவையாய் இருக்கிறது
நாளை என்பது ஒரு கனவு
அதற்காக இந்தக் கணத்தை
என்னால் அடகு வைக்க முடியாது
முடமான என் கால்களை
நினைத்து துக்கிக்க மாட்டேன்
என்னிடம் வானை அளக்க
சிறகுகள் இருக்கின்றன
இழந்ததற்காக ஒருபோதும்
நான் வருத்தப்பட்டதில்லை
என்னிடம் வந்தடைந்தவையெல்லாம்
எதிர்பாராது என் கரைசேர்ந்தவை
என் வானத்தில் நிலவில்லையே
என நான் ஏக்கம் கொண்டதில்லை
சின்னச் சின்ன நட்சத்திரங்கள்
தரும் ஒளியே
எனக்குப் போதும்
இந்த வாழ்க்கை என்னிடமிருந்து
எதையும் எதிர்பார்க்கவில்லை
அதேநேரம்
புதையலை காவல் காக்கும்
பேய்களிடம் அது என்னைச்
சிக்க வைக்கவில்லை
இந்தப் பிரபஞ்சம்
இரவை என்னிடம் தந்துவிடட்டும்
முகமூடி அணிந்து
பகலின் முகத்தில் விழிப்பதற்கு
எனக்கு தயக்கமாக இருக்கிறது
கடவுள் பன்னிருகரங்களுடன்
நம்முன்னே தோன்றமாட்டார்
ஏதோவொரு மனத்தில் கருணையெனும்
பூவை மலரவைக்க
விதையாய் மட்டுமே
அவர் இருப்பார்
பேனா பிடித்தவர்களெல்லாம்
பிழைக்கத் தெரியாதவர்களல்ல
ஒரு விதையில் காடு
ஒடுங்கியிருக்கிறது என்ற
தீர்க்கதரிசனத்தைக் கண்டு
சொல்பவர்கள் அவர்கள்!
*
எனது உலகத்தில் யாருமில்லை
என்னைத் தவிர
எனக்கு வெளிச்சம்
போதுமானதாய் இருக்கிறது
எனது இரவுகளை கடக்க
அது போதுமானது
பாலைவன மணற்பரப்பில்
என்னுடைய காலடித்தடங்களையே
நான் காண்கிறேன்
வேறு யாருக்குமாக
பெய்யவில்லை மழை
எனது கைகள் பட்டவுடன்
பூமி உறங்கும் விதமாக
யாழிலிருந்து இசை
எழுந்தது
என் இச்சைகளைத்
தூண்டுவதற்காகவே
ஆர்ப்பரித்து அடங்குகிறது கடல்
இந்த மலரில்
இயற்கையின் ஒட்டுமொத்த
அழகையும் எனது கண்கள்
காணக்கடவது
இந்த சிருஷ்டி
விசேஷமாய் இருக்கின்றது
அதைப் படைத்தவனைப் போல
நிலவு தேய்ந்து வளர்வதைப்
பற்றி நான் என்றுமே
யோசித்ததில்லை
பிதாவிடத்திலிருந்து வந்தவனாகையால்
அவரது சாயல் எனக்கு இருக்கிறது
நான் பழங்களை
சுவைப்பேனே தவிர
மரத்தின் இலைகளை
எண்ணிக் கொண்டிருப்பதில்லை
எனது சிரஞ்சீவித்தனத்தைப்
பற்றியெல்லாம் சிந்திக்க
எனக்கு ஞானம் இருந்திருக்கவில்லை
நேற்றுவரை எனது குருதி
நஞ்சு கலக்காததாய் இருந்தது
என்னை அரவணைக்க கடவுள்
ஒரு பெண்ணை சிருஷ்டித்தார்
விலக்கப்பட்ட கனியால்
கவர்ந்திழுக்கப்பட்ட இருவரும்
தனது சந்ததியினரை
நரகத்தின் இருளில் தள்ளியதோடு
மனுசகுமாரனை கைவிடப்பட்ட
உலகத்தில் பிறக்க வைத்தனர்
சுவர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட
ஆதாமின் வாரிசுகள்
ஓய்வு நாளில்
கடவுளைப் பற்றி
சிந்தித்துக் கொண்டிருந்தனர்!
*
தனித்திருக்கும் பொழுதுகளில்
எங்கிருந்தோ வந்துவிடுகின்றன
உன் ஞாபகங்கள்
தூரத்தில் எங்கிருந்தோ
கேட்கும் அந்தப் பாடலில்
கரைந்துவிடுகிறது என் இதயம்
தூறல்தான் எனினும்
முழுவதும் நனைத்துவிடுகிறது
இந்த மழை
தொலைவில் நின்றிருந்தும்
ஏதாவதொரு முறை
கால்களை வந்து
தழுவிச் செல்ல ஆர்ப்பரித்து
வருகிறது இந்த அலை
இடைவெளி அதிகமிருப்பினும்
சருகுகளை அணைத்துக் கொள்ள
காற்று வரத்தான் செய்கிறது
உன்னிடம் சொல்லி இருக்க வேண்டும்
சாலையோரப் பூக்கள்
உன்னை நலம் விசாரித்ததை
ஒவ்வொரு மார்கழியிலும்
உன் வீட்டு கோலத்தை
அலங்கரிக்கின்றது
என் தோட்டத்து பூசணிப்பூ
மின்னலுக்கும் இடிக்கும் நடுவே
ஒரு பேரமைதி
ஒளிந்து கிடக்கிறது
எனக்கு மறுஜென்மம் வேண்டாம்
இந்தப் பிறவியிலேயே
கரைந்துவிட வேண்டும்
உன் காதலில்
இதற்கு முன் ஆயிரம் முறை
நிலவைப் பார்த்திருக்கிறேன்
அப்போதெல்லாம் நீ என்
அருகில் இருக்கவில்லை
இந்த இரவு விடியாமல் போனாலும்
எனக்கு கவலையில்லை
உனது நினைவுகள் புத்தம் புதியதாய்
என்னுள் இருக்கும்போது
நாட்கள் விநாடிகளாகிப் போகும்
விந்தையை இந்தக் காதல்
மட்டும்தான் செய்யும்!