கவிதைகள்
Trending

கவிதைகள்- இரகுபதி

இரகுபதி

ஒரு வேடிக்கை பார்ப்பவனாக,

ஒரு தேசாந்திரியாக,

ஒரு பார்வையாளனாக,

ஒரு பறவையாக,

ஒரு ஏதேனும் ஒருவனாக

கரை அமர்ந்து கடல் பார்க்கையில்,

இப்பெரும் கடலையும்

உள்வாங்கிக் கொள்கிறது இச்சிறு மனது.

அன்பின் சிறுகூடடைவதில்

திருப்தியடையும் பெரும்மனது போல.

*******************************************

 

எத்தனிமையில்,

எவ்விடத்தில் யார் இருப்பினும்,

ஏதோவொரு தூரத்தில் பேரன்பும்,

பெருங்கடலும் சூழ் உலகிது.

அலையாய்

அவ்வன்பின் கடல் சேர்கையில்,

கரை சேர்கிறோம் நாம்…

**********************************

 

ஆகப்பெருஞ்சுமை அதுவெனயெண்ணி

தன்மென் சிறகைப் பெருவெறுப்பில்

பிய்த்தெறியும் பறவையினெதிரில்,

ஒற்றைச் சிறகொன்று மட்டுமதுகொண்டு

தன்கடுஞ்சிறை தப்பும் பறவையின் மீது

பார்வைபட்ட தருணத்தில்

இதுவரை பிய்த்துத்தெறிந்த

நம்பிக்கைகளைப் பொருக்கியெடுத்து

அதுமுதல் மீண்டு வாழவிருக்கிறது சிறகிழந்த பறவை…

***********************************

 

கண்ணாடி ஜன்னலுக்கு

முன்னும், பின்னும்

மழையும், நானும்.

ஜன்னலின் முன்,

மழை பெய்துகொண்டிருக்கிறது.

ஜன்னலின் பின்,

நான் மழையை உணர்ந்து கொண்டிருக்கிறேன்.

ஜன்னலைக் கடந்த காற்று

எனக்கு மழையாகிறது.

மழை என்பது துளி மட்டுமல்ல, காற்றும்.

************************************

 

உன்னையும், என்னையும், யாரையும் பற்றி

நானென்ன புதியதாய்ச் சொல்லிட ?

நாம்,

கடல் தள்ளிய கடைசி அலை

கரையில் விட்டுச் சென்ற

காற்றடைத்த நுரைகள் மட்டுமே.

****************************************

 

எவ்வளவு

நூற்றாண்டுகளை,

போர்களை,

மனிதர்களை,

மாற்றங்களை,

ஏமாற்றங்களை,

நெடுஞ்சாலைகளை,

விபத்துக்களை,

கனவுகளை,

பொய்களை,

நிஜங்களைக் கடக்க வேண்டியதாயிருக்கிறது.

ஒரு நாளின் ஒரு இரவைக் கடந்து முடிப்பதற்குள்…

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button