கவிதைகள்
Trending

கவிதைகள்- க.ரகுநாதன் 

கவிஞனை காயப்படுத்துவது எப்படி?

ஒரு கவிஞனை
காயப்படுத்துவது எப்படி
என்பது
ஒரு எழுத்தாளனைக்
காயப்படுத்துவது எப்படி
என்பதை அறிவதைப் போல்
அவ்வளவு கடினமானது அல்ல.

எழுத்தாளனின் படைப்பை
வாசிக்கிறீர்கள்
அட்டைகளுக்கிடையே
பக்கங்களுக்கிடையே
பத்திகளுக்கிடையே
வரிகளுக்கிடையே
எழுத்துகளுக்கிடையே
இன்னும் எழுதாத அல்லது
வெளுத்த பகுதிகளில்
கிடந்தலையும்
மௌனங்களுக்கிடையே
வாசித்து வாசித்து
அவன் மனதிற்குள் சென்று
அவன் நினைக்காததை
கேட்டதாகக் கூறி
அவனுக்கெதிரே
படைப்பை திருப்பினால்
காயப்படுவான்.

கவிஞன் அப்படி அல்ல.
அவன் கவிதையை
காணாமலும்
கண்டால் வாசிக்காமலும்
வாசித்தால் ரசிக்காமலும்
ரசித்தால் மௌனமாகவும்
இருந்துவிடலாம்.
அவ்வளவு எளிதானது.

**********

நின்றாடும் தீ

பெருந்தொற்றின்
தீயச்சமின்றி
சாலையோர பிளீச்சிங்
பவுடர் நாற்றத்தில்
சயனித்துக் கிடக்கும்
யாசகனின் பாத்திரத்தில் ஒளிர்கிறது
கடைசிப் பருக்கையின் சுவடு.

நீண்டு செல்லும் சாலையில்
உருண்டு செல்லும் சக்கரமாய்
வயிற்றுள் உருளும்
தீப்பந்தின் கனலை
நெருங்கி வந்து
முன்னம் அணைத்தன
பற்பல பாதங்கள்.

நிகழைக் கடக்க முடியாத
பாதங்கள் எல்லாம்
யாசகம் கேட்டு
வீடுகளுக்குள் யாத்திரை போக
பிளீச்சிங் சுவடுகளில் ஒலிக்கிறது
உயிர் பற்றும்
ஆதி மனதின் கூக்குரல்கள்.

பற்றற்று
எதிர் காற்றில்
நின்றாடுகிறது
எதற்கும் முடங்காத
அவன் வயிற்றுத் தீ.

**********

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button