சிறுகதைகள்
Trending

நீலகண்டன்

கமலதேவி

ஈர உடலைத் தழுவிய காற்றை உணர்ந்த நீலகண்டன், “எங்கியோ மழை பெய்யுது” என்று நினைத்தபடி தக்காளிப் பழங்களைப் பொறுக்கிக் கூடையில் போட்டுக் கொண்டிருந்தார். பக்கத்திலிருந்த மேனகா, “இந்த அழிகாட்டு பழத்த யாரு வாங்குவாப்பா?”என்றாள். மஞ்சளும் பச்சையும் சருகுமாகத் தக்காளிச் செடிகள் வயலெங்கும் படுத்துக் கிடந்தன.

“வாங்க ஆளிருக்கு..சின்ன சைஸ்ன்னாலும் ருசிக்கிற பழம்…நமக்கு வண்டி பெட்ரோல் செலவு கட்டுனா போதும்..”

“நம்ம செய்யற வேலக்கி கூலி..?”

நீலகண்டன் புன்னகைத்தார்.
“கணக்குப் பாடத்துல இருக்குப்பா…இதுக்கு பேரு எதிர்மாறல்,” என்று சொல்லியவாறு வரப்பிலிருந்து குதித்தாள். “ஐ..ஐ..கணக்கு புரிஞ்சிருச்சே…”என்று கைகளை ஆட்டிக் காண்பித்தாள்.

“இதெல்லாம் இருக்கா….மூணாப்பு படிக்கையில வயிறு வீங்கி எங்கப்பாரு போன பிறவு இந்த வயக்காடு தான். வயவேலக்கு கணக்குப் பாக்கக்கூடாது கண்ணு…?” என்றவர் அவள் கன்னத்தை செல்லமாக நிமிண்டினார்.

“இந்தா..மாமா… கேக்கலியா..” என்றபடி பாக்கியம் வரப்பில் ஓடிவந்தாள்.

“மெதுவா..என்ன வெள்ளாமக்காட்டல மாடு மேயற அவசரமா போகுது ..மெதுவா..”

“எங்க அக்கா வூட்டுக்காரருக்கு ஆச்சுபோச்சுன்னு இருக்காம்..தர்மாஸ்பத்திரியில இருந்து வீட்டுக்கு கூட்டிட்டுப் போக சொல்லீட்டாங்களாம்”என்றாள். மேனகா அம்மாவின் பக்கத்தில் கண்களை உருட்டி விழித்தபடி நின்றாள்.

“நேத்து பேசறப்ப உடம்புசூடுன்னு தானே சகல சொன்னாப்ல…”என்று தலைப்பாகை துண்டை அவிழ்த்து உடலைத் துடைத்துக் கொண்டார்.
“நீ இப்பவே போ..பின்னாலயே வர்றேன்..”என்றபடி தக்காளிக் கூடையைத் தூக்கினாள். அது வசமிழந்து மண்ணில் விழுந்தது. பாக்கியத்தின் தலையில் கை வைத்தபடி ,“பதறாம பிள்ளைகளை ஆத்திக் கூட்டிக்கிட்டு வரனும்…”என்ற பின் வரப்பில் தாவி ஏறினார்.

அரசு மருத்துவமனைக் கட்டிலில் படுத்திருந்த ராஜா, “சகல..இங்க என்னக் கொன்னுபுடுவாளுக..வீட்டுக்குக் கூட்டிட்டு போயிரு..”என்றார்.

“கொஞ்சம் பொறுத்துக்கப்பா..வலின்னா வைத்தியம் பாக்கனுமில்ல..”
கடம்பூர் அத்தையின் கைகளைக் கடித்து வைத்திருந்தார். நர்சுகள் ராஜாவின் வசவுகள் பொறுக்காமல் வெளியே நின்று கொண்டிருந்தார்கள்.

நீலகண்டன், “என்னம்மா இவருக்கு? இப்பிடி பேசற ஆளில்ல அவரு. தயவு பண்ணி சொல்லுங்க..”என்று கைகளை கட்டிக் கொண்டு நின்றார்.

“ஈரல் வீணாப் போயி எத்தன வருசமாவுது..”

“ரெண்டு வருசமா மருந்து வாங்கித் திங்கறாப்ல,”
“ம்..அப்ப குடிக்காம இருக்கனுமில்ல..ஆட்டுக்கறி வேணாண்ணு சொல்லியிருக்கோம். கேக்கல..” நீலகண்டன் தலைகுனிந்து கொண்டார்.

“காய்ச்சல்,உள்ளுக்க இருக்கறப் பிரச்சனை எல்லாம் சேந்துக்கிச்சு. கல்லீரல மாத்தனும்..நெறய செலவாகும்..முடியுமா?”

தன் சிறிய ஓட்டு வீட்டின் முன்அறையில் இரண்டு நாட்கள் கயிற்றுக் கட்டிலில் கிடந்த ராஜா மூன்றாம் நாள் கண்திறந்து பசிக்கிறது என்றார்.

ஆராயிக்கிழவி, “சோறு கேக்கறானே..கடங்காரன் வாசல்ல நிக்கிறான். உலக்கய தூக்கி நெலப்படியில போடுங்க புள்ளைங்களா,”என்று பதறினாள்.

“ஏங்கழவி பதறிக் கூட்டற…அதுக்குத்தானே காத்துக் கிடக்குறாப்ல,”

“எஞ்சகல எங்க..எங்க..” என்ற ராஜாவின் குரலை நீலகண்டன் கேட்டும் கேட்காமல் நின்றார்.
“சாவுக்கெடப்புல கூப்புடுறான்..பனமரமாட்டம் நிக்கிறியே…”
“நம்ம சொல் பேச்சுல ஒரு பேச்ச வச்சுகிட்டாரா..இப்பமட்டும் என்னவாம்..” என்றபடி வேட்டியை இழுத்து விட்டுக் கொண்டு கட்டிலின் அருகில் தரையில் ராஜாவின் முகம் பார்த்து அமர்ந்தார்.

“என்னப்பா…ஒன்னுமில்ல சரியாப் போயிரும்..”என்ற நீலகண்டனையே உற்றுப் பார்த்தார் ராஜா. நீலகண்டன் தானாகவே,“அக்கா தங்கச்சிக்கு குறுக்க நம்ம ரெண்டு பேரும் எப்பவுமே நின்னதில்ல…”என்றார். ராஜா பார்வையை மாற்றவில்லை.

“அண்ணியோட சேந்து பிள்ளைய கரையேத்தி விட்டுறேன்” என்றவர் சிறிது நேரம் கழித்து, “இன்னிக்கி நீ சாவக்கெடக்கறன்னு தலையாட்ட முடியாது..எங்கட்டை படுக்கற வர உறுத்திக்கிட்டு கெடக்கும். பயலுகள கையில வளச்சி பிடிக்க முடியாதுப்பா அவனுங்களுக்கு நான் வேணுன்னா கூட இருப்பேன்..”என்றார். ராஜா பிரயத்தனப்பட்டு வலது கையை நீட்டி நீலகண்டனின் தோளைத் தொட்டார்.அவர் குனிந்து தரையைப் பார்த்தபடியிருந்தார்.

எதாச்சுன்னா பாத்துக்கலாம்..போன் போடுங்க என்று உறவுமுறைகள் அனைவரும் ஊர்போய் சேர்ந்த மறுநாள் விடியலில் ராஜா உயிரை விட்டார். பக்கத்திலிருந்திலிருந்த பெரியவீட்டுத் திண்ணைக்குக் கீழே நீலகண்டன் மூன்று ஆட்களைத் துணைக்கு வைத்துக் கொண்டு சமைத்துக் கொண்டிருந்தார். அவருக்கு மூன்றுநாட்களாக உறக்கம் கண்ணாமூச்சி காட்டி ஓடிக் கொண்டிருந்தது. கனத்துக் கிடந்த தலையை உலுக்கிக் கொண்டார். கைகளை ஓங்கிக் குத்திக் கொள்ள வேண்டும் போலிருந்தது.

சோற்றைக் கிண்டிவிட பயல் திணறிக் கொண்டிருப்பதைப் பார்த்த நீலகண்டன் ஆளுயரக்கரண்டியை அவனிமிருந்து வாங்கிக் கிண்டினார். அவரின் தோள்களைப் பார்த்தபடி அவன் நகர்ந்தான். அவன் பார்வையை உணர்ந்தவாறு அவர் கரண்டியைக் கீழே வைத்தார். கல்லடுப்பில் மூன்று புறமும் எரிந்த நெருப்பின் அனலை பார்த்துக் கொண்டு நின்றார். கருத்த உடலை நனைத்துப் பெருகிக் கொண்டிருந்தது வியர்வை.

திருமணமான புதிதில் நீலகண்டனை, மாமனார் வீட்டிலிருந்து நகர்த்தி சென்று ஊரின் எல்லையில் ராஜா , “கலந்துக்கலாமா சகல,”என்றார்.
உடனே நீலகண்டன் நேருக்கு நேராக , “எங்கப்பார நெனச்சி இந்தக்கையில தள்ளி வச்சத தொடலாமாண்ணே?”என்று இடது கையைக் காட்டினார்.

“இல்ல…வேணாம்..”என்று தோளில் தட்டிய ராஜா, “சட்டையக் கழட்டுப்பா,”என்றார்.

“என்னண்ணே..” என்று புன்னகைத்தார்.
“அட..வயல்ல சட்டையோடவா மம்புட்டி பிடிப்ப..”
“அதுக்கில்லண்ணே…”என்று புன்னகைத்தபடி கழட்டினார்.

கண்களை விரித்த சேகர், “மாடு பிடிப்பாப்ல போலயே..”என்று சிரித்தார்.
“அப்பிடி போடு..”என்று ராஜா தோளில் கை போட்டுக் கொண்டார். காத்து போல என்று நீலகண்டனுக்குத் தோன்றியது.

சேகர் அங்கிருந்த பொட்டலத்தைப் பிரித்து, “கறியத் தின்னுப்பா..”என்று நீலகண்டனிடம் நீட்டினார்.

“இதுக்கெல்லாம் எவ்வளவு செலவு ஆவும்..”
ஆளுக்கொரு கணக்கு சொல்ல, நீலகண்டன், “வயலுக்கு மருந்து அடிச்சிரலாம்..”என்றார்.

சேகர் , “ராஜாவுக்கு சகலையப் பாத்தீங்களாப்பா,” என்று சிரித்தார்.
ராஜா போர்வண்டிக்கு சென்று வந்து வீட்டிலிருந்த நாட்களில் அவரை இழுத்துப் பிடிக்க சமையல் வேலைகளுக்கு நீலகண்டன் ஆள் பிடித்தார். மூன்று மைல் தொலைவில் இருவரின் வீடுகளும் இருந்ததால் விலகாமலிருந்தார்கள்.

ராஜா சொல்லச் சொல்ல நீலகண்டன் சமைத்தார். கிடைக்கும் வருமானம் மாடுகளின் தீனிக்கு தாராளமாக இருக்கவும் அவருக்கும் அதில் பிடிப்பு உண்டானது.

வெள்ளாளப்பட்டியில் சமைத்து விட்டு குறுக்கே காட்டுவழியில் நடந்து வருகையில் நீலகண்டனின் வயலையும், வயலோரத்து ஓட்டு வீட்டையும் தூரத்திலிருந்து பார்த்த ராஜா,“உங்கிட்டவாவது ஒரு ஏக்கர் மண்ணு இருக்கவும் மரியாதையா பொழைக்கற..”என்றார்.

“உனக்கு மட்டும் என்ன..கையில தொழில் இருக்கையில..பேருக்கேத்தாப்ல பொழைக்கறதுக்கென்ன..மனசும் ஒடம்பும் ஒன்னா நிக்கனும்..”
விசேச காலங்களில் மாமனார் வீட்டுத் திண்ணையில் உறங்கிக் கொண்டிருக்கும் நீலகண்டனை, இரவில் ராஜா எழுப்பி கையிலிருக்கும் உணவுப் பொட்டலத்தைக் கொடுத்து தண்ணீர் எடுத்து வைப்பதை, வீடு உறக்கம் கலைந்த பாதிக்கண்களால் பார்த்துப் புன்னகைக்கும்.

நீலகண்டனை விட ராஜா உயரம். இயல்பாக நீலகண்டனின் தோளில் கை போடுவார். முதலில் நீலகண்டனுக்கு விதிர்ப்பாகவும் , பின் தான் தன் காளையின் மீது ஓங்கித் தட்டி அதன் மீது கைபோட்டபடி நடப்பதை நினைத்துக் கொள்வார்.

அன்று தம்மப்பட்டி ஜல்லிக்கட்டு முடிந்து நடந்து வந்து கொண்டிருந்தார்கள். நிலவின் ஔி மெல்லிய படலமாக விரிந்து நிற்கும் இரவு அது. இடதுபுறம் பச்சைமலைக் குன்றுகள் நிழலாக எழுந்து நின்றிருந்தன. மெல்லிய தண்காற்று.மேட்டுநிலம் பையப் பைய சரியும் பாதை அது. காளை ஒரே தாளத்தில் நடந்து கொண்டிருக்க அதன் திமில் அசைவு நடனம் போல இருந்தது.

ராஜா,“ஆட்டக்காரனாட்டம் துமில ஆட்டறவன்,”என்று திமிலை ஓங்கித் தட்டினார். காளை சட்டென்று திரும்பிப் பார்த்தது.

“இதென்ன இப்படி பாக்குது..”
“வேத்தாளு தொட்டா தெரியாதா..”
“அது எப்பிடிப்பா சீறி வர்ற காளைக்கு முன்னாடி போய் நிக்கிற..கொழ நடுங்கிறாது..”என்று சிரித்தார்.

“நெசத்துல உள்ளுக்குள்ள முதல்ல பதறும்..இந்தக் காளைய வளக்க வளக்கத்தான் அது கொறஞ்சிது. நீ நாலு நாள் இது கூட இருந்தின்னா தெரியும். என்ன இருந்தாலும் பயம் இருக்கத்தாண்ணே செய்யுது… கொம்பு குத்தின தடம் உடம்புல எத்தனையோ இருக்கு,”

“அது எதுக்குன்னுதான் கேக்கறனே..”
“எல்லாம் ஒரு கிக்கு தான்..”

“ம்..என்ன கண்றாவியோ தெரியல..போய் முன்னாடி நிக்கவும் அது தொரத்துனா நீங்க கொழ நடுங்க நாலு கால் பாய்ச்சல்ல ஓடறதும்..”என்றும் சிரித்தார். அவரின் சிரிப்பு அந்த அரவமற்ற பாதையில் தனியே கேட்டது.

“அட மூக்கனாங்கவுத்த விடு சகல..செறங்கு போயும் சொறி போகாத கையாட்டம்.. கயித்த விட்டின்னா செவனேன்னு தானே நடக்குது..”

“இது என்ன தொழுவத்து பசுவா இல்ல ஒழவுவண்டிமாடா..ம்..குட்டியா இருக்கும் போது பிடிச்ச கைப்பிடிபழக்கத்துக்கு அப்படியே இருக்கனும். ஒருதரம் பிடி இல்லன்னு தெரிஞ்சுட்டா…திமிறி பாக்கத் தொவங்கிரும். விட்டுப் பிடிச்சு சோதிக்கக் கூடாதுண்ணே…”

“நீ சொன்னா சரியா இருக்கும்..நீ தெனவெடுத்தவன்டா. எனக்குத்தான் ராத்தூக்கமில்லாம ஒடம்பு ஊசத்துப் போவுது..”என்று தோளில் கை போட்டுக் கொண்டார்.

“நீ குத்தவைக்கு புகையலக்காரர் வயல ஓட்டுறியா? ரெண்டு வெள்ளாமைக்கு கைக்காசு போட்டு ஓட்டிப்பாரு….தானா தெனவு வந்திரும்,”
“என்னமோ சொல்ற..”
“சின்னவயசுலருந்து வண்டிக்காரனுக்கு கைக்கட்டியே பொழச்சிட்ட..இனிமே முடியாது. உனக்கு முட்டுக் கொடுக்க நானிருக்கேன்”

“பிள்ளைக வளரட்டும்.. நீ மட்டும் என்ன பண்ணுவ,” என்பதோடு பேச்சை நிறுத்தினார்கள்.

நீலகண்டனுக்கு அடிக்கடி தூக்கம் பிடிக்காமலிருக்கும் வழக்கமிருந்தது. ராஜா, “எதுக்கு பித்துப்பய கணக்கா தூக்கத்த தல மேல செமக்கற..எங்கூட வாப்பா,”என்று அழைப்பார். இவர் சிரித்தபடி, “பாக்கியத்துக்கு தூக்கம் வராதன்னிக்கு பேசிக்கிட்டே ராவுல நெலா வெளிச்சத்துல களசெடிகள பிடுங்கிப் போடுவோம்..அது நல்லாருக்கும்,”என்பார்.

கூத்துப் பார்க்கக் காத்துக் கிடந்த அன்று கூத்தாட வந்தவர்களுக்கும் ,ஊர்க்காரர்களுக்கும் பிட்டுக் கொண்டது. பேச்சு நடந்து கொண்டிருக்கையிலேயே இளம்பையன் ஒருவன் கூத்தர்களில் ஒருவரை நோக்கிப் பாய ,சட்டென்று நீலகண்டன் ஒருகையால் அவனைத் தன் கக்கத்தில் அசையாமல் பிடித்தார். பின்னால் வந்த இன்னொருவன் இன்னொருக்கையில் மாட்டிக் கொண்டான்.

பிரச்சனை சரியாகி கூத்து இரவு முழுவதும் நடந்து ஔியெழும் நேரத்தில் முடிக்கப்பட்டது. கடைசியாக சாமிக்கும்,பூமிக்கும்,ராவுக்கும்,பாரத நாயகர்களுக்கும்,ஊருக்கும்,உதிக்கப் போகும் சூரியனுக்கும் நன்றி சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
இரவில் பயல்களிடமிருந்து தப்பித்த கூத்தர், “பாரதக்கதை சொல்ற இடத்துல சூட்சுமமா கதையிலிருக்க யாராச்சும் வருவாங்கன்னு சொல்வாங்க. அந்த வகையில நேத்து ராவுல, நமக்கு இன்னிக்கு பொழுதுக்கு வருபடிக்கு வழி செஞ்சதால, அவருக்கு ஒரு மால…” என்று கழுத்திலிருந்த சாயம் போன மாலையை நீலகண்டன் மடியில் தூக்கி வீசினார். ராஜா அந்த சம்பவத்தை எப்போதும் ஊரில் உறவில் என அனைவரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார்.

சேர்ந்தே திரியும் இவர்களை ஊர் வயசாளிகள் வம்படியாக, “என்ன மாமன் மச்சான்களா,” என்றால், “ ஆள் யாருன்னு தெரியலயா பெரிசு..அக்கா தங்கச்சிய கட்டினவிங்க,” என்பார்கள்.

“பங்காளிகளா..”என்று மீண்டும் கொக்கியைப் போடுவார்கள்.
“இல்லயே.. பங்காளிங்க என்னக்கி பக்கமா இருந்தத பாத்தீரு…நாங்க சகலைக..”என்று காலரை தூக்கி விட்டுக் கொள்வார்கள். ஊர் உறவில் அவர்களை அந்த சகலைப்பயல்களில் ஒருத்தன் என்றே அடையாளம் சொன்னார்கள்.

மாமனாரைக் காடு சேர்த்த அன்று கோடித்துணி எடுத்து வரும் போது நீலகண்டன் வகையறாவை ராஜா அழைக்காமல் பெரும்போக்காக இருந்ததாக ஏற்பட்ட மனஸ்தாபத்தால் இருவரும் முகத்தைப் பார்க்காமல் இருந்தார்கள். ராஜா பார்க்கும் போதெல்லாம் நீலகண்டன் குனிந்தபடி சட்டை கையை சுருட்டிவிட்டுக் கொண்டிருந்தார்.

மாமனார் காடு சேர்ந்து ஒரு ஆண்டு முடிந்த பொங்கலில் பிள்ளை குட்டிகளோடு மாமனார் வீட்டிலிருந்தார்கள்.அன்றிரவு ராஜா, நீலகண்டன் பக்கத்தில் வந்தமர்ந்தார். குனிந்தபடி எழுந்து உட்கார்ந்த நீலகண்டனின் தோளில் கைவைத்து, “கைப்பிடிய சோதிச்சுப் பாக்கக் கூடாது..பாத்தாச்சு.ஒரு வட்டத்துக்கு மேல நீட்டினா பாத மாறிப் போவும் .அன்னிக்கு மேள,பட்டாசு சத்தத்துல நான் கூப்டது கேக்கலயாட்டுக்கு..உங்க வகையறா கோவிச்சுக்கிட்டாங்க..”என்றார்.

தலைநிமிர்ந்த நீலகண்டன், “எருமசாணி..இத அன்னிக்கே சொல்றதுக்கு என்ன?”என்றார்.
“நீதான் ஜல்லிகட்டு சாணியாச்சே …கேக்றதுக்கு என்ன..” என்றதும், ராஜா, “வயசு வந்தப் பிள்ளையாட்டம் குனிஞ்சிக்கிட்டேயிருந்தா..என்னத்த பேச?”என்று சிரித்தார்.

வாசலில் பாய்விரித்துப் படுத்திருந்த ராசம்மா, “ஏம் பாக்கியம்..சாணியா குமியுதே ..உருட்டிப் போட்டா வயலுக்காச்சும் ஆவும்?”என்று சிரித்தாள். பிள்ளைகள் எழுந்து திண்ணையிலிருந்த அவர்களிடம் ஓடிவந்தார்கள்.

சமையல் வேலையை முடித்துவிட்டு நீலகண்டன் பந்தலில் நின்றார். சடங்குகள் முடிந்ததும் பெரியாள் ஒருவர், “ஒருத்தருக்கொருத்தர் அனுசரனையா பாடையத் தூக்குங்கப்பா..” என்றதும் நான்கு புறமும் தூக்கினார்கள். முன்னால் வலதுபுறத்தில் நின்ற நீலகண்டனின் இடதுதோளில் மூங்கில் அழுந்தியது. அந்த எடை ஏதோ ஒருவகையில் ஆசுவாசமாக இருப்பதை உணர்ந்து நீலகண்டன், “அப்பாடா..அப்பாடா,”என்று தனக்குள் முனகியபடி நடந்தார். காட்டிலிருந்து வெயிலில் காய்ந்து ,குளித்த ஈரம் மாறி வீட்டிற்கு வந்து திருநீரு இட்ட பின் உணவிற்காக அமர்ந்தார்கள்.

“ராஜாண்ணன் வைக்கிற குழம்பு கணக்கா இருக்கு”என்று ஒருவர் சட்டென்று சொன்னார்.

“ஆமா..அதே ருசி..”
நீலகண்டன் குனிந்து சோற்றை எடுத்து வாயில் வைத்தார். வெயில் சாய பந்தலில் அமர்ந்திருந்த நீலகண்டனிடம், “புலம்பிக்கிட்டே தூங்காமக் கெடந்தியே இன்னிக்கு மட்டுமாச்சும் தெக்குபக்கமா போலாமா?” என்றார்கள்.

“இன்னிக்கு சகலைய நெனச்சு தள்ளி வைக்கறேன்,”என்று குனிந்தமர்ந்தார். பின் நிமிர்ந்து, “பிள்ளைகளா…பால்தெளிக்க வேணுங்கற சாமானங்களை இப்பவே எடுத்துவச்சிறலாம்.. ..காலையில பறக்க முடியாது..”என்று எழுந்தார். தாழ்வாரத்து மூங்கிலைப் பிடித்தபடி நின்ற பாக்கியம் கண்ணீரோடு, “அப்பா கூப்பிடுதுல்ல..எங்க போனீங்க பிள்ளையளா,”என்று சத்தம் வைத்தாள்.

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button