
நிலாக்கள் தூரதூரமாக என்ற தன்வரலாற்றுப் புதினம் உண்மையான வாழ்விற்கு மிக நெருக்கமாக இருக்கிறது. எந்த சாயலுமில்லாத கதைசொல்லியின் உண்மையான குரலைப் போன்ற மொழிநடை. அம்மாக்களின் மடியில் படுத்துக்கொண்டு அவர்களின் கதையை அவர்களே சொல்லக் கேட்பதைப் போன்ற அனுபவத்தை இப்புதினத்தை வாசிக்கையில் அடைவோம். துளியும் விலகிப் போகாத ஒரு நெருக்கமான வாசிப்பனுபவம்.
தந்தையோடு அறிவுப் போகும் என்ற சூழலில் புதினம் துவங்குகிறது. பெரும்பாலும் கிராமங்களில் உறவில், ஊரில் ,பாட்டி ,அத்தை, சித்தி சொன்னதைப் போன்ற கிராமத்து வாழ்க்கைப்பாடுகளே இந்தப் புதினத்தின் கதையம்சமாக இருக்கிறது. கோவில்பட்டியை சுற்றிய நிலக்காட்சிகளின் வசீகரம் வாசிப்பனுபவத்தில் உடன் வந்து கொண்டிருக்கிறது.
இன்று குழந்தைகளுக்கு பெரும்பாலும் ஒரே வாழ்க்கை என்று எனக்குத் தோன்றும். கிராமத்திலும் பிள்ளைகளை வெளியில் பார்ப்பது குறைக்கிறது. எல்லாம் தொலைக்காட்சிகள் முன் தவமிருக்கின்றன. அலைபேசிகள் இப்போது இலவச இணைப்பாக, கண்ணனை உரலில் கட்டிவைத்ததைப் போல பிள்ளைகளை கட்டி வைத்திருக்கின்றன. இந்த ராதேயன்கள் அதை அறுத்துக்கொண்டு வரும் நாட்களுக்காக கதைகள் காத்திருக்கின்றன.
இந்த தன்வரலாற்று புதினத்தில் வரும் பாரததேவியின் அனுபவங்கள் என் கிராமத்து வாழ்வில் இல்லையென்றாலும், அவரின் எழுத்துக்களை கனவாக விரித்தெடுக்க வேண்டுமானவை உள்ளன என்பதால் இந்த நாவல் நல்ல வாசிப்பனுபவத்தைத் தந்தது.
வயிற்றிற்கு இல்லாத வறுமை என்ற போதும் பிள்ளைகளின் இயல்பான மகிழ்ச்சி புதினம் முழுக்க வந்து கொண்டேயிருக்கிறது. பெரிதாக கல்வி, செல்வம் இல்லாத நிலையிலும் அவர்களின் வாழ்வில் எத்தனை சுவைகள் உள்ளன என்று பாரததேவி எழுதியிருக்கிறார். அந்த மனநிலை இன்றைய சூழலில் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நாவலை வாசித்து முடித்தப்பின் மகிழ்ச்சிக்கு காரணியாக எதாவது இருக்க வேண்டும் என்ற இன்றைய மனநிலையை பரிசீலித்துப் பார்க்கத் தோன்றும். ஆனால் நாவலின் அடியில் உறைவது வறுமையும், இழப்பும்,வாழ்க்கைப்பாடுகளுமே.
சுதந்திர இந்தியாவில் காந்தி இறந்த அன்று பிறந்த பாரததேவியின் இந்த தன்வரலாறு என்பது சுந்திரத்திற்கு பின்னான தமிழக கிராமங்களின் விவசாயம், கூலிவாழ்வு சார்ந்த வரலாறாகவும் இயல்பாகவே இருக்கிறது. எழுதப்படாத மக்களின் வரலாறு என்ற அடிப்படையிலும் இந்தப் புதினம் முக்கியத்துவம் பெறுகிறது.
குறிப்பாக சுதந்திரம் கிடைத்த ஆண்டுகளில் கிராமிய பெண்களின் மனநிலை, வாழ்க்கை, குழந்தை வளர்ப்பு, தனிப்பெண்களின் நிலை பற்றிய அறிதலுக்கு இந்த தன்வரலாறு உதவும். தனிப்பெண்ணாக கூலி வாழ்வின் சொற்பபொருளைக் கொண்டு குடும்பத்தை நடத்தும் பாரததேவியின் அம்மா பாத்திரம் குறிப்பிடத்தக்கது. தந்தையுமான தாயின் இயல்பை வெளிப்படையாக எழுதியிருக்கிறார்.
மழையில், வெயிலில், பனியில், காற்றில் இயல்பாக வளரும் மரம் செடி கொடிகளைப் போல குழந்தைகளும் வளர்கிறார்கள். எவ்வளவு கற்றல்கள்! என்று புதினத்தை வாசிக்கையில் வியப்பாக இருந்தது. ஒவ்வொரு நாளும் முன்போல இல்லாத வாழ்வு. புதுபுது சிக்கல்கள். அவற்றை அந்தக் குழந்தைகள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை நேர்த்தியாக எழுதியிருக்கிறார். ஒவ்வொரு அத்தியாயத்திலும் வரும் புதுப்புது நிகழ்வுகள் வாசிப்பை இனிமையாக்குகின்றன.
குழந்தைகளுக்கு நிலாச்சாறு கொடுக்கும் அத்தியாயம். குழந்தைகளுக்கு அடுத்தவர் பொருளை எடுக்கத் தோன்றும் அத்தியாயம். வாத்தை காப்பாற்ற அடிவாங்குவது, பாலுக்காக ஊர்கன்றுகளை நடுநிசியில் அவிழ்த்துவிடும் பாசம் விபரீதத்தில் முடிவது, பாம்பிடம் மாட்டிக்கொள்வது, நடுநிசி தாண்டிய பொழுதில் ஒருசிறுமி அடுத்த ஊரிலிருந்து தனியாக வருவது, பிள்ளைகளாக சேர்ந்து மறைத்த செயலுக்காக மந்திரிக்கும் சாமியாரைக் கண்டு ஊரே பயம் கொள்ள, பிள்ளைகள் தங்களுக்குள் சிரிப்பது என்று நாவலில் அனைத்து அத்தியாயங்களும் வயிற்றுப்பாடுகளுக்கு இடையில் குழந்தைகள் தகவமைத்து வாழ்வதை காட்டுகிறது.
பிணத்தை எப்படி எரிக்கிறார்கள் என்று பாரதாவும் அவள் தோழியும் பார்க்க செல்லும் இடமெல்லாம் வாசிப்பதற்கு அப்படியிருக்கிறது. பதினோரு வயதில் நானும் நண்பர்களும் அந்தமாதிரி சென்றது நினைவிலெழுந்தது. எங்களுக்கு ஒரு பயமும் கிடையாது பேயைப் பார்க்க ஆசையாக வரும் என்று பாரததேவி எழுதுகிறார். அதே ஆசையில்தான் சென்றோம் கடைசியில் மூச்சுத்திணறல்தான் வந்தது.
மழை, வெயில், பசி என்று எதுவானாலும் மரங்களை நோக்கித்தான் ஓடுவோம்.எல்லா மரங்களும் கனிகளைக் கொடுத்து பசி தீர்க்கும் என்று புதினத்தில் வரும் பகுதி நெகிழ்வானது . பின் அவர்களின் உணவுப்பழக்கம். சிறுதானியங்களின் சோறு,கூல்,கஞ்சி வகைகள். குறிப்பாக அந்தப்பகுதியில் ஆமணக்கு எண்ணெய்யை உணவிற்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். கடலைப்பருவத்தில் கடலை. பருவத்தில் கிடைக்கும் தானியங்கள். இத்தனை உடல் உழைப்பிற்கும் இந்த உணவுகளால் தாக்குப்பிடித்தார்களா?! என்று தோன்றியது. வாழ்வின் அனைத்தையும் அள்ளுவது எழுத்தின் நோக்கம் எனும் போது பாரததேவி அந்த வாழ்வின் அனைத்தையும் சொல்லியிருக்கிறார்.
நாவலில் ஏராளமாக மனிதர்களின் வாழ்க்கைச்சித்திரங்கள் வருகின்றன. மனிதர்களின் இயல்புகளை சில வரிகளிலேயே சொல்லி விடுகிறார். தன்பால்யத்தின் ஊரையே நினைவிலிருந்து எடுத்து எழுதியிருக்கிறார். ‘பெண் தன்னை எழுதுதல்’ சமூகத்தின் முன் தன்னை வைப்பது என்பது ஏதோ ஒருவகையில் அகழ்ந்து எடுப்பதை போலத்தான். இன்றும் தன்னை முன்வைக்க தயங்கியபடியேதான் இருக்கிறோம்.
பெண்கள் தமிழில் சங்ககாலத்திலிருந்தே எழுதுகிறார்கள் என்றாலும் ஒப்பீட்டளவில் குறைவு. எங்களைப் போன்றவர்களுக்கு வீட்டில் போலவே இலக்கியத்திலும் தந்தைகளே முன்நிற்கிறார்கள். ‘முன்நிற்பது’ என்பதை தனிப்பட்டமுறையில் வாசகியாக என் மனம் கொள்ளும் ஆதர்சனங்களின் அடிப்படையில் சொல்கிறேன். பாரததேவியின் இந்தப் புதினத்தை வாசிக்கையில் மனநிறைவாக இருந்தது.
இப்புதினத்தில் வாழ்வில் உறவுகள் எதுவரை என்பதைக்கூட அந்தக் குழந்தைகள் எதார்த்தமாக புரிந்துகொள்வதால், வாழ்வின் போக்கில் மனிதர்களின் மேல் கசப்பில்லாமல் மனிதர்களை ஏற்றுக்கொள்ள அவர்களால் முடிகிறது. அனைத்திற்கும் அடியில் நிலத்தடி நீரென சகமனிதஅன்பும், சக உயிர்கள் மீதான அன்பும் கண்ணுக்குத் தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கிறது.
ஒரு இடத்தில் பாலியல் சார்ந்த துன்புறுத்தலை குழந்தைகள் அவர்களாகவே அவ்வளவு எளிதாக புரிந்துகொண்டு தப்பிக்கிறார்கள். குழந்தைகள் ஒன்றாக நட்புடன் இருப்பது அவர்களே அவர்களை காத்துக்கொள்ளும் ஒருவழிமுறை.
குழந்தைகளின் குறும்புகள், ஏமாற்றுவேலைகள்,சுட்டித்தனங்கள்,வயதிற்கு மீறிய கடும் உழைப்பு, வறுமை என அனைத்தையும் கடந்து அவர்களின் வெள்ளந்தியான நேர்மை ஔியென எழுந்துவரும் பகுதிகள் மனதை நெகிழ்விப்பவை. அதோடு தோழமை என்ற பேரன்பு. இன்றைய சூழலில் இருபாலார்க்கும் தங்களின் எதிர்பாலார் என்பவர் ஏதோ ஏலியன்கள் போலத் தெரிகிறார்கள்.
என்அக்கா மகளிடம், “பாப்பா..ஃப்ரண்ட்ஸ் பேரு சொல்லு,”என்றால் பிள்ளைகள் பெயராக சொல்லி முடித்தாள். பசங்கள் ஒருத்தர்கூட இல்லையா என்றதும் அய்ய..நான் நல்லப்பொண்ணு என்றாள். தோழமை என்னும் உறவு சரியாக பேணப்படாததாலேயே இத்தனை சிக்கல்கள்.
எத்தனைக் கற்றாலும், போதித்தாலும் சில மனப்பழக்கங்கள் கைவராது. சகமனிதரை எதிர் உடலாக மட்டும் பார்க்காமல் சகி, சகனாக நினைக்க, பார்க்க, பழக வைக்க தோழமையால் மட்டுமே சொல்லித்தர முடியும். அதுவும் இயல்பாக சிறுபிள்ளையிலிருந்து ஆழ்மனதில் பதிய வேண்டும். இந்தப்புதினமே குழந்தைகளின் தோழமையாலானது. இந்த வகையில் இந்தப் புதினத்தில் தோழமை உண்மையான வாழ்க்கைத் தளத்திலிருந்து எழுந்து, மழுப்பல்கள் இல்லாத ஆண் பெண் தோழமை சாத்தியம்தான் என்று காட்டுகிறது.
புதினத்தின் மொழி பேச்சுமொழி. மூத்தவள் நம்மிடம் கதை சொல்வதைப் போன்ற மொழி. சுவையான கிராமத்து வட்டார மொழி. சேத்திக்காரிங்க, சேத்திக்காரர்கள் என்ற வார்த்தைகள் அழகானவை. ஒவ்வொரு அத்தியாயத்திலும் புதுப்புது வார்த்தைகள். புதினம் தன் சீரான சொல்மொழியால் இயல்பாக நகர்கிறது. தன் நிகழ்வுகளால் நம்மை பிடித்து வைத்துக்கொள்கிறது.
புதினத்தில் நிலமும், இயற்கையும் அன்றாடப்பாடுகளின் வழியே இயல்பாக வருகிறது. நிலவும்,வெயிலும், பகலும், இருளும், மழையும், காடுகளும் அவர்களுடைய பாடுகளுடனேயே வருகின்றன. நிலாக்காலங்களில் இரவில் வேலைக்கு செல்கையில் நிலா கூடவே வரும். மரங்களிடையே இருந்து கண்ணாமூச்சி காட்டும், வீடு வரை துணை வரும், பின் செல்ல மனமில்லாமல் எங்களுடன் விளையாடும், உறங்கும் போது அதை கண்ணில் வைத்து உறங்கிவிடுவேன் என்று பாரததேவி எழுதும் இடத்தில் என் மனதை எந்தப்பக்கம் நிறுத்துவது என்று புத்தகத்தை மூடிவைத்துவிட்டேன்.
ஸ்ரீவில்லப்புத்தூருக்கும் திருவண்ணாமலைக்கும் நடந்து செல்லும் பயணம் அவர்களின் கொண்டாட்டக்காலங்கள்.அன்றைய விவசாயப்பயிர்கள், பருவநிலைகள் என்று அவர்களின் விவசாயம் சார்ந்த வாழ்வின் அனைத்து தகவல்களும் புதினத்தில் உள்ளன.
இந்தப் புதினத்தில் வரும் குதிரைவாலி நெல் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். அன்று மக்களின் அன்றாட உணவுப்பயிர். கிட்டதட்ட ஒரு ஆண்டுப் பயிர். மூன்று மாதத்தில் விளையும். கலப்பினங்கள் வந்ததும் அது காணாமல் போய்விட்டது.
வயசாளிகளிடம் கேட்டால் புன்னகையோடு , “சும்மா நல்ல வெயிலு, நல்ல மழக்கி பத்துமாசம் நின்னு வளந்து இடுப்புக்கு மேல நிக்கும். காளமாடு மூக்கனாங் கயிறில்லாம என்னாடான்னு நம்மள பாத்து நெதானமா நிக்கறாப்ல குப்புன்னு வளந்து நிக்கும். வயலப்பாத்தா எம்பயிரப் பாருங்கடான்னு மீசயமுறுக்கனுன்னு தோணும். அந்த சோறத்தின்னா நாள் முழுக்க வேல செய்யலாம்.. அடுத்தநாள் தண்ணியில கெடந்தாலும் சோறு நெத்தாட்டம் இருக்கும். சீக்கு அண்டாத பயிறு..இப்ப வெளயறதெல்லாம் உங்களாட்டமே நய்.. நய்ன்னு..வயக்காட பாக்கவே கருமமா இருக்கு,”என்கிறார்கள். புதினத்தின் தகவல்களை விரித்தால் நிறைய கதைகள் கிடைக்கின்றன.
வறுமையான வாழ்வில் இருப்பதைக் கொண்டு எப்படி சாமாளிக்கிறார்கள் என்பது நாவலில் நிறைய இடங்களில் வருகிறது. அத்தனை பொருளாதார இக்கட்டுகள் நிறைந்த வாழ்வில், அவ்வளவு உழைக்க நேர்ந்த வாழ்வில், அவ்வளவு ஏமாற்றங்களும், உடல்மன வலிகள் நிறைந்த வாழ்வில் அந்த இளமனங்களில் பெரும்பாலும் கசப்பின் சாயல் இல்லை. மனிதர்கள் மீதான கரிசனமும், அன்பும், உதவும் மனமும் அப்படியே இருக்கின்றன.
இந்த புதினத்தில் தன் பதினேழு வயது வரையான வாழ்வை பாரததேவி எழுதியிருக்கிறார். பாரததேவியின் கடினமான வாழ்விலிருந்து எழுந்த அவரின் வாழ்க்கை பார்வை நேர்மறையானது. குறும்பு, தைரியம், உழைப்பு , சகமனிதர் மீதான நேசம் மூலம் அந்தவாழ்வை இத்தனை அழகானதாக மாற்றிக்கொள்ள முடிந்திருக்கிறது. இந்தப் புதினத்திற்கு முதுதந்தை கி.ராஜநாராயணன் அணிந்துரை எழுதியிருக்கிறார்.
புதினம் துவங்கும் பக்கத்தில் சிறுமியான பாரததேவியின் படம் உள்ளது. அத்தனை குறும்பான முகம். அது புதினத்தைத் துவங்குகையிலேயே மனதினுள் நுழைந்துவிடுகிறது. புதினநிறைவில் இளம்பெண்ணான பாரததேவியின் படம் உள்ளது. புதினம் முடியும்போது அந்தப் படத்திலிருந்து கண்களை அகற்ற கொஞ்ச நேரமாகும். அதற்குள் நாம் நாவலை உள்ளோட்டிப் பார்த்திருப்போம்.
நிலாக்கள் தூரதூரமாக வாசிக்கப்பட வேண்டிய எழுத்து. ஒரு முன்னோடி படைப்பு. நாம் பாரதாவிடமிருந்து நமக்கான அனுபவங்களை எடுத்து நமகேற்ப விரித்துக்கொள்ளலாம்.
சிறுவயதிலிருந்து நான் வாசித்ததை இன்னொருவரை வாசிக்கவைக்க தூண்டில் வீசுவேன். நான் வாசித்த எதையாவது சிலாகித்துப்பேசினால் என்னைத் தெரிந்தவர்கள் ஆளைவிடு என்று நழுவிவிடுவார்கள். ஆனால் மனதின் டார்கெட்டை விடமாட்டேன். இந்த நாவலின் முதல் வாசிப்பின் போது அம்மா என்னிடம் சிக்கிக்கொண்டார். எல்லா வேலையும் செஞ்சுத்தர்றேன்.. படிங்கம்மா என்றதும் அம்மா விழுந்துவிட்டார்.
அடுத்தநாள் காலையில் எழுந்ததும் புத்தகத்தை கொடுத்ததும் அம்மா பீதியாகி பகலில் படிப்பதாக நழுவியவர், புதினத்தை துவங்கியதும் தானே எடுத்து வாசித்துக்கொண்டு, என் வேலைகளை அவ்வப்போது எட்டிப்பார்த்து எனக்கு பீதியை திருப்பி அளித்தார். முடித்ததும் இதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தார். என் இம்சை தாங்காமல் அம்மா வாசித்த நாவல்களில் , அவங்களுக்கு முதன்மையானது நிலாக்கள் தூரதூரமாக. அதுவும் இரண்டு நாட்களுக்குள் வாசித்ததை அவங்களாலேயே நம்பமுடியவில்லை.
தனிமனிதன் என்ற கருத்துக்கு மிக முக்கியத்துவம் அளிக்கும் காலம் இது. நல்லது தான். அதே சமயத்தில் தனியர்களாகி விடக்கூடாது. சகமனிதர் என்பவர் மனதின் நம்பிக்கை. அது குறைந்தும் வரும் சூழலில் இது போன்ற புதினங்கள் வாசிப்பவர்களின் மனநிலையில் புதுஔியாய் உதிக்கவல்லவை. வரலாற்றில் கொஞ்சம் முன்னாடி காந்தி அழைத்தபோது ஒன்றாக திரண்டவர்கள்தானே நாம். பெரிய இன்னல்களில் இணைந்திருந்து வளரும் காலத்தில் தனித்திருப்பதாகத் தோன்றுகிறது. சகமனித அருமை என்பது இந்தப்புதினத்தின் பேசுபொருள்களில் அழகானது.
நாடகத்தனமாக இருந்தாலும் கூட நான் என்னுடனிருப்பவர்களிடம் அதிகமாக சொல்வது ஒன்றுண்டு. ஏதோ ஒருவகையில் அன்பை போதித்தவை மதநூல்கள், அன்பை பேசியவை இதிகாசங்கள் அல்லது அன்போடு முரண்பட்டு அன்பை கண்டுகொண்டவை. இவற்றிற்கு எதிரான அனைத்து இசங்களுக்கும் அதுவே அடிப்படை. அனைத்து உயிர்களுக்கும் அன்புதான் வாழ்தலுக்கான நியாயமும் கூட. அவ்வாறு இல்லை எனில் பூனைக்குட்டிக்கு நாயும், மான்குட்டி சிங்கமும் காப்பாக இருப்பது எதனால்? அன்பு ஒரு இயற்கை உந்துதல்.
இந்தப்புதினம் வாழ்வில் போக்கில் செல்வதனால் இயல்பாகவே அந்தக்கிராமத்து மக்களின் நேசத்தையும் தன்னியல்பிலேயே பிரதிபலிக்கிறது. ஏன் மீண்டும் மீண்டும் இதையே குறிப்பிடுகிறேனென்றால் இன்று நாம் உடல்மனதளவில், சமூக,தேச அளவில் சந்திக்கும் அனைத்து சிக்கல்களுக்கும் எண்ணற்ற காரணிகள் உண்டு. மனித மனம் உணரும் பாதுகாப்பின்மை அந்தக்காரணிகளில் ஒன்று. என் கருத்து சார்ந்த அனைத்து முரண்களும் சாத்தியமே.
நிலாக்கள் தூரதூரமாக என்ற புதினம் வாழ்க்கையின் அத்தனை பக்கங்களோடும் நமக்காக திறந்திருக்கிறது. புரட்டிப்பார்க்க இயன்றவர்கள் வாழ்வில் இன்னொரு தளத்தை உள்வாங்குவதன் மூலம் தான் நிற்கும் தளத்தை அழகாக்கிக் கொள்ளவதற்கான வாய்ப்பை பெறுகிறார்கள்.
நூல்: நிலாக்கள் தூர தூரமாக (நாவல்)
எழுத்தாளர் : பாரததேவி
பதிப்பகம்: தமிழினி
விலை: ரூ.160 /-