
மனிதனுக்குள் ஒரு பழக்கம் உண்டு.சோகம் தழுவும்போதெல்லாம் தனக்குள் சில கேள்விகளை எழுப்பிக் கொள்வான். ஆம். அவை பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும் . “நல்ல ஆடை அணிந்து வந்திருக்கலாமோ?”, “இன்று வெயிலில் போகாமல் இருந்திருக்கலாமோ?”, “முடியை வெட்டாமல் இருந்திருக்கலாமோ?”, “இடையைக் குறைத்திருக்கலாமோ”, “ஊருக்குச் சென்றிருக்கலாமோ?”… இப்படிப்பட்ட கேள்விகள் அவர்களுக்கு எழும்பக் காரணம், வேறொன்றுமில்லை. அவர்களுக்கு ஏற்படும் சோகங்கள்தான். தேர்வில் தோற்பவனுக்கு “படித்திருக்கலாமோ ?”, உண்ணாமல் அலுவலுகம் நுழைந்தவனுக்கு “சாப்பிட்டிருக்கலாமோ?” போன்ற கேள்விகள், காலத்தை மாற்றி அமைப்பதற்கு.அதாவது காலத்தை மாற்றுவதன் மூலம் சில நிகழ்வுகளை மாற்றுவது. சில பெண்களுக்கு ஆணாகப் பிறந்திருக்கலாம் என்றும் சில ஆண்களுக்கு பெண்ணாகப் பிறந்திருக்கலாம் என்றும் தோன்றும்.
ஆனால் காலத்தை மாற்றுவது எப்படி ? அதற்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது . இதுவரை உண்மையில் புலப்படாத அறிவியல் புனைவான டைம் ட்ராவல் தான் . ஆனால் 2018-இல் வெளிவந்த ORIOL PAULO (ஓரியோல் போலோ) – வின் THE MIRAGE ( DURANTE LA TORMENTA) ஸ்பானிய திரைப்படம் சற்றே மாறுபட்டது .இப்படம் பழைய ராபர்ட் ஸிமேக்கிஸின் BACK TO THE FUTURE படத்தைப் போன்று டைம் ட்ராவல் படமல்ல. ஆனால் காலம் கடத்தல் தொடர்புடைய படம்தான் . காலம் கடத்தலை வேறுபட்ட கோணத்தில் சொல்லியிருக்கிறார் PAULO.படத்திற்குள் செல்வதற்கு முன், இயக்குநரைப் பற்றி சிறிய அறிமுகம் தர கடமைப்பட்டிருக்கிறேன். உலக சினிமாவை ரசிக்கும் ஒவ்வொரு ரசிகனுக்கும் ORIOL PAULO-வை தெரியாமல் இருக்காது. திரில்லர் வகைப் படங்களில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர். இன்றும் இவரின் ” THE INVISIBLE GUEST ” , ” THE BODY” , ” JULIA’S EYES” ( எழுத்து மட்டும் ) ஆகிய படங்கள் விறுவிறுப்பான திரைக்கதைக்கு முன்னோடியாக இருக்கின்றன. ஒரு கருவை எடுத்துக் கொண்டு அதில் பலரின் கோணங்களைச் செலுத்தி நேர்மையாக திரைக்கதை நகர்த்துபவர்.
இப்படத்திலும் அதைப் பிரபாதமாக நகர்த்துகிறார் PAULO .கதை ஒரு மின்னலை வைத்துப் பயணிக்கிறது. அந்த மின்னல் என்ன செய்கிறது என்பதுதான் படத்தின் முக்கிய அம்சம். ஆமாம், நீங்கள் யோசிப்பது சரிதான். காலம் கடத்தலை நிகழ்த்துவது இந்த மின்னல்தான்.இந்த ஒன்றை மட்டும் வைத்து இப்படத்தை FANTASY வகை படமென்றெல்லாம் குறிப்பிட முடியாது. அவரின் வழக்கமான படங்களைப் போல திரில்லர் வகைப் படம்தான் .ஒவ்வொரு காட்சி அமைப்பிற்கும் ஏதோ ஒரு காரணத்தை வைத்திருக்கிறார் PAULO.
ஒரு வீட்டில் ஒரு கொலை நடக்கிறது ( கதையை ALFRED HITCHCOCK வகைப் படங்களைப் போல் கற்பனை செய்து கொள்ள வேண்டாம். ) அதனை அதன் பக்கத்து வீட்டிலுள்ள ஒரு பையன் பார்த்துவிடுகிறான். அந்தப் பையன் கொலையின் ஐந்து நிமிடத்திற்கு முன் தன் GUITAR- ல் அவன் வாசிப்பதை ரெகார்ட் செய்து தொலைக்காட்சியின் மூலம் காண்கிறான். பெரும் மாற்றத்திற்கு உதவுகிறது அந்த தொலைக்காட்சி . பிறகு கொலைக்காரனால் அவனும் இறந்துவிடுகிறான் .அப்பொழுது அங்கு வரும் இடியானது ஒரு மாயம் செய்துவிட்டு கிளம்புகின்றது.
இருபத்தி ஐந்து ஆண்டுகள் கழித்து அந்த பையன் இருந்த வீட்டிற்கு ஒரு குடும்பம் குடி வருகிறது. அங்கு வந்தவுடனே அங்கிருந்த ஒருவர் மூலம் அந்தப் பையனைப் பற்றியும் அங்கு நடந்த கொலையில் கொலைகாரன் சிறை சென்றிருப்பதையும் அந்தத் தம்பதிகள் அறிந்து கொள்கின்றனர். அந்த வீட்டில் இன்னமும் அந்தப் பையன் பயன்படுத்திய தொலைக்காட்சி இருக்கிறது. அதே நாளில் இருபத்தி ஐந்து வருடத்திற்கு முன்பு தான் அவன் இறந்திருக்கிறான் .அன்றிரவு அதேபோல் இடியின் மூலம் இருபத்தி ஐந்து வருடங்கள் அங்கு நடந்ததை மின்னல் அப்படியே அப்பட்டமாக ஒளிபரப்புகிறது. கணவனும் மகளும் தூங்கிக்கொண்டிருக்க மனைவி ( ADRIANA UGARTE ) மட்டும் அதைக் காண்கிறாள்.அவனது மரணத்தை அவனிடம் கூறி அவனைக் காப்பாற்றுகிறாள். அவளுக்குள் ஒரு உயிரைக் காப்பாற்றிய நல்லுணர்வு வருகிறது . ஆனால் இங்குதான் PAULO தனது அறிவுக் கூர்மையை நிருபிக்கிறார். அன்று இறந்தவன் இன்று உயிரோடு இருந்தால் காலம் மாறியிருக்கும் அல்லவா ? ஆமாம் முழுவதும் மாறிவிட்டது .
விழித்துப் பார்த்தால் கதாநாயகி அவள் வேலை பார்த்த மருத்துவமனையில் சிறந்த மருத்துவராக இருக்கிறாள் .ஆனால் அவள் ஒரு மருத்துவராக பயிற்சி செய்யவேயில்லை. ( காலத்தின் மாற்றம் இது.) உதவியாளராகத்தான் வேலை செய்து கொண்டிருந்தாள். அவள் குடும்பத்தைத் தேடுகிறாள். குழந்தையின் பள்ளியில் அப்படி ஒரு குழந்தையே இல்லை.யாரும் இவள் சொல்வதை நம்பத் தயாராக இல்லை. இறந்த காலத்து பையனைக் காப்பாற்றியதால் காலம் மாறியிருக்கிறது என்றால் யார்தான் காது கொடுத்துக் கேட்பார்கள்? அவள் கணவனும் நீ யாரென்று கேட்டுவிட்டான்.பிள்ளையையும் அவனுக்குத் தெரியவில்லை. அப்படியென்றால் அந்தப் பையனைக் கொன்றால்தான் காலம் மாறுமல்லவா? அவனை முதலில் தேட வேண்டுமில்லையா? அவனைக் கண்டுபிடித்து தன் குடும்பத்தை மீட்பதே மீதிக்கதை. கதாநாயகியின் வேதனை ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் அதைவிட இரண்டு மடங்கு வேதனையை அந்தப் பையனுடைய வாழ்வு கொண்டிருக்கிறது.
தன் உயிரைக் காப்பாற்றியது எதிர்காலத்தின் பெண் என்பதை தன் தாயிடமும் நண்பனிடமும் கூறுகிறான். ஆனால் யாரும் நம்பவில்லை.அவனின் வேதனை யாருக்கும் புரியவில்லை. அவளைப் பார்த்துவிட வேண்டுமென்ற ஆசையையும் அவள் மீதான அன்பையும் யாரும் உணரவில்லை. அதைவிடக் கொடிய விடயமென்றால் அந்தக் கொலைகாரன் இந்த காலத்தில் சிறை செல்லவில்லை. அவன் அவளைப் பார்த்தானா? கொலையை உலகத்திற்கு வெளிச்சம் போட்டானா? அவளால் மீண்டும் அழியப் போகிறானா? நம் மனதில் குழப்பத்தை மூழ்கவிட்டு PAULO சிறப்பாக திரைக்கதையை நகர்த்துகிறார்.
THE MACHINIST ( 2004) படத்திற்கு பெரும் புகழ் கண்ட XAVI GIMENEZ தான் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவரே PAULO வின் முந்தைய படமான ( THE INVISIBLE GUEST ) படத்திற்கும் ஒளிப்பதிவு செய்திருந்தார். ரொமான்ஸ் காட்சிகள், உணர்வு பூர்வமான காட்சிகள் என எல்லாவற்றிலும் சிறப்பான ஒளிப்பதிவை வெளிப்படுத்தியிருக்கிறார் XAVI. குறிப்பாக மேல் மாடியிலிருந்து ஒரு கதாபாத்திரம் கீழே விழும்படியான காட்சியை ஸ்லொவ் மோஷன் ஷாட் மூலம் மனக்கிளர்ச்சியை ஒரே இடத்தில் மையப் படுத்துகிறார். சில முக்கிய காட்சிகள் இருளிலே வருவதைக் கூட அழகாக கையாண்டிருக்கிறார். கதாநாயகி ஒரு ஆண் காவலரிடம் பேசும் ஒரு இரவுக் காட்சியில் அங்கே இருக்கும் டிஸ்கோ லைட்களும் காவல் வண்டியின் லைட்களும் மின்னுகிற காட்சி அற்புதம். மின்னல் காட்சிகளும் இரவுக் காட்சிகளும் படத்திற்கு பெரிய பலம். திரைக்கதைக்கு LARA SENDIM, PAULO வுடன் சேர்ந்து சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். PAULO வுடன் இவர் சேர்ந்து THE BODY படத்திலும் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
ADRIANA UGARTE – வின் நடிப்பு மிக இயல்பாக கதையோடு மிதந்து கொண்டேயிருக்கிறது. ஒரு பிடியில் மாட்டிக் கொண்டு படும் தவிப்பை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். படத்தொகுப்பை பற்றிச் சொல்வதென்றால் சஸ்பென்ஸ் அவிழும் காட்சியைச் சொல்லலாம். FLASHBACK போன்று வரும் அந்தப் பகுதி ஒரு நிமிடத்திற்கும் குறைவாகத்தான் இருக்கும். மிகப் பிரமாதமான CUTS அவை. வழக்கம் போலவே PAULO படத்தில் வரும் இசை இப்படத்திற்கும் கூடுதல் எனர்ஜி. காஸ்டிங் ( CASTING) இப்படத்திற்கும் கை கொடுத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் இன்றளவும் CASTING என்பது முக்கிய கதாபாத்திரத்திற்கு மட்டும் நடப்பது வருத்தமான ஒன்றே.
குறைகள் இல்லாமல் படங்கள் இருக்க முடியாது . சில SPOILERS கூறவும் கடமைப் பட்டிருக்கிறேன். படத்தின் முடிவு PAULO வின் முந்தைய படங்களைப் போல மனதைக் கவரவில்லை. தமிழ்ப் படங்களில் மாஸ் காட்சிகள் இருக்கும் அல்லவா ? அது போலவே THE INVISBLE GUEST படத்தில் நடித்த ANA WAGENER- யை ஒரு மாஸ் காட்சிக்கு பயன்படுத்தியிருக்கிறார். நல்லவா இருக்கு ? ” உலகம் முழுவதும் உனக்கான ரசிகர்கள் இருக்கிறோம், நீ இப்படி பண்ணலாமா தலைவா?” என்று கேள்வி எழுப்ப வேண்டும் போல இருந்தது அக்காட்சி. படத்தில் வரும் முக்கிய கொலை செய்யும் கதாபாத்திரம் மந்தமாகவே இருக்கிறார். கதையிலும் நடிப்பிலும். அவரின் கதாபாத்திர வடிவமைப்பு வலுவாக அமையவில்லை.
இவையனைத்தும் கடலில் வீசியெறியப்பட்ட ஒரு சிறிய கல் போன்றதுதான். பெரிய பாதிப்பு இல்லை. ORIOL PAULO அமெரிக்காவில் பிறந்திருந்தால் பெரிய இயக்குநராக போற்றப்பட்டிருப்பார். அவர் நிச்சயம் ஒரு ஹாலிவுட் படமெடுப்பார் என்று எதிர்ப்பார்க்கிறோம். மொத்தத்தில் THE MIRAGE ( DURANTE LA TORMENTA) திரைப்படம் அவரது படைப்புகளில் முக்கிய படமாகப் போற்றப்படும். திரைப்பட ரசிகர்கள் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்.
இவரது THE INVISBLE GUEST படம் ஹிந்தியில் டாப்சீ, அமிதாப் பச்சன் நடித்து BADLA என்று வெளியாகி வெற்றி கண்டது. மேலும் இவரது மற்ற படங்களையும் அவரவர் மொழியில் இந்திய ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது குறிப்பிடத்தக்கது.