கவிதைகள்

ரெட்டைப்பிறவி

முத்துராசா குமார்

இளசான இளநீர்
வழுக்கையை
கிழியாமல் மட்டையில்
வழித்தெடுக்கவும்
பூவுலகின் காதுமடல்கள்
அவை

நொட்டாங்காதும்
சோத்தாங்காதும்
ரெண்டு மரப்பொந்துகள்
அதிகாலையிலும் அந்தியிலும்
ஒரே பறந்தடையும்
சத்தங்கள்

தோடுகளற்ற காதின்
துளைகளில் வெளக்கமாரும்
வேப்பமரமும் செழிப்பாக
வளர்கின்றன

அக்காதினுள் நீங்களும்
இக்காதினுள் நாங்களும்
நுழைந்து காலமாகிறது
குடைந்தபடியே கிடப்போம்
இன்னும் நூறுவருடத்தில்
பாதைத்தெரியும்
முகம் பார்த்துவிடலாம்

பூத்திடாத தென்னங்குருத்துகள்
வளரும் செவிட்டு காதுகளுக்குள்
மண்கவ்வி வந்து போகின்றன செங்குழவிகள்

இறந்த காதுகளின்
இயர்போன் உடைமைகள்
சடலத்தின் வீட்டில் ஒப்படைக்கப்பட்டன.
அந்த உடலின் ஆசைப்படியே
தானம் செய்யப்பட்ட அக்காதுகளின் வழியாகத்தான் இவ்வுலகின் ‘குன்னாங்குன்னாங்குர்ர்ர்ர்…’ ஐ முதன்முதலாக கேட்கிறேன்

எத்தனை துளிகள் விட்டால்
காதுபள்ளம் நிரம்பும்.
புகுந்த எறும்பை சாவடிக்க
தண்ணீர் ஊற்றுகிறேன்
மறுகாதில் இலையையும்
நுழைக்கிறேன்

அப்போதும்
இப்போதும்
எப்போதும்
காதுகள்
ரெட்டைப்பிறவிதான்

மேலும் வாசிக்க

தொடர்புடைய பதிவுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button